Saturday 30 May 2020

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (60-66)


60: போராளிகளுக்குப் பயிற்சி முகாம்!
1983-இல் ஏற்பட்ட இனக் கலவரத்தையொட்டிய தீர்வுகாண பேச்சுவார்த்தைக்கு ஜெயவர்த்தனா உடன்படமாட்டார். அப்படி உடன்பட வைக்க வேண்டுமானால் ரகசியமான மாற்றுத் திட்டம் ஒன்றையும் செயல்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று, பிரதமர் இந்திரா காந்தியின் கொள்கை வகுப்பாளர்களான பாதுகாப்பு ஆலோசகர் ராமேஷ்வர் நாத் காவ் மற்றும் பிரதமரின் அலுவலக நிர்வாகிகள் நினைத்தனர்.

பலவகையிலும் ஆலோசித்து பிரதமர் இந்திரா காந்தியின் பார்வைக்குப் பாதுகாப்பு ஆலோசகர் காவ் "மிகவும் ரகசியம்' என்று எழுதப்பட்ட ஒரு கோப்பை வைத்தார். அந்தக் கோப்பில் இருந்த செய்தி இதுதான்: "ஜெயவர்த்தனா, இலங்கைப் பிரச்னையைத் தீர்க்க ராணுவ நடவடிக்கையே தீர்வு என்று செயல்பட்டால் பிரதமர் இந்திராவுக்கு இருவகையில் பாதிப்பு ஏற்படும். ஒன்று அரசியல் நெருக்கடி, மற்றது தெற்கில் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்படப்போகும் ஆபத்து.
அரசியல் நெருக்கடி என்பது தமிழகத்தில் இருந்து உருவாகும். கூட்டணியின் புதிய நண்பரான எம்.ஜி.ஆர். நெருக்குதல் கொடுப்பார். தமிழகத்தில் மக்கள் இலங்கைப் பிரச்னையால் கொதிப்படைந்து இருக்கிறார்கள். இலங்கை மீது இந்தியா படையெடுத்துத் தாக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இரண்டாவது, அமெரிக்கா பக்கம் சாய்ந்துள்ள ஜே.ஆர். ஜெயவர்த்தனா ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு கண்டுவிட்டால் அது இந்தியாவின் தெற்கே, பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கும். இது கவனத்துடன் அணுக வேண்டிய பிரச்னை - என்று குறிப்பிட்டதுடன், ஜெயவர்த்தனாவை வழிக்குக் கொண்டுவர வேண்டுமானால் பேச்சுவார்த்தை என்ற உத்திக்கிடையே போராளிக் குழுக்களுக்குத் தேவையான பயிற்சியைக் கொடுத்து அவர்களை பலசாலிகளாகவும் உருவாக்க வேண்டும்' - என்றும் தெரிவித்திருந்தார், காவ்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் ஆலோசனைகள் பெறப்பட்டு, அவர்கள் இலங்கையில் முகாமிட்டிருக்கும் நேரத்தில், இரு வழிகளில்தான் ஜெயவர்த்தனாவைப் பணியவைக்க முடியும் என்று இந்திராவும் நம்பினார். காரணம் கிழக்கு பாகிஸ்தானில் கிடைத்த வெற்றி. முக்தி வாகினி என்கிற போராளிக் குழுவினர் அதற்குப் பயன்பட்டனர்.
அதேபோன்ற "ரகசியத்திட்டப்படி' செயல்படுமாறு தனது "மூன்றாவது ஏஜென்சிக்கு' உத்தரவிட்டார். பேச்சுவார்த்தை நடக்கும் அதே வேளையில் போராளிக் குழுக்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து அவர்களை பலமுள்ளவர்களாக மாற்ற வேண்டும் என்பதே அந்த ரகசியத் திட்டமாகும். இந்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஜெயவர்த்தனாவை பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்குமாறு நெருக்குதல் அளிக்க வேண்டும். அப்படி அவர் ஒத்துக் கொள்ளவில்லையென்றால், அவரது நாடு சிதறுண்டு போகும் என்று உணர்த்தவே பயிற்சித் திட்டம் என கொள்கைத் திட்டம் உருவாயிற்று. (வேலுப்பிள்ளை பிரபாகரன் - டி. சபாரத்தினம் நஹய்ஞ்ஹம் ர்ழ்ஞ்)
இதனைத் தொடர்ந்து இந்திரா காந்தி, எம்.ஜி.ஆரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, நாம் அரசியல் ரீதியாக ஜெயவர்த்தனாவை பேச்சுவார்த்தை நடத்த நிர்பந்திக்கும் அதேவேளையில், போராளிக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சியும் அளித்து, அவர்களைத் தகுதியானவர்களாக மாற்ற வேண்டும் - என்று கூறியதாகத் தெரிகிறது.
எம்.ஜி.ஆருக்கு இந்த அணுகுமுறை திருப்தி தரவில்லை. அவர், ""இது போதாது; இலங்கை மீது படையெடுக்க வேண்டும் என்பதே தமிழர்களின் உள்ளக்கிடக்கை'' என்றார்.
""அப்படியென்றால் தமிழர்களின் நிலை என்ன ஆகும்? அவர்கள் ஏற்கெனவே சிங்களவர் பிடியில் உள்ளனர். காமினி திசநாயக்கா என்கிற அமைச்சர் பேசியதை நாம் கவனிக்க வேண்டும்: எங்கள் மீது படையெடுக்க இந்தியாவுக்கு 24 மணி நேரம் தேவைப்படும் என்றால், அனைத்து தமிழச்சிகளையும் - தமிழ் சிசுக்களையும் - குழந்தைகளையும் கொன்று முடிக்க எங்களுக்கும் அதே 24 மணி நேரம் போதும் என்று பேசியிருக்கிறார்'' எனக் கூறி முதல்வர் எம்.ஜி.ஆரை சமாதானப்படுத்தினார் பிரதமர் இந்திரா காந்தி.
எம்.ஜி.ஆர். இந்திராவின் நிலைப்பாட்டிற்குச் சம்மதம் தெரிவித்து, பயிற்சி அளிப்பதற்கான வேலையில் உடனே ஈடுபடுவதாக கூறினார். (பண்ருட்டி ராமசந்திரன் நியூஸ்டுடே மே 2000-இல் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து)
மூன்றாவது ஏஜென்சிக்கு பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் காவ் தலைமை ஏற்கவும், பிரதமரின் அலுவலக இயக்குநர் சங்கரன் நாயர், "ரா' அமைப்பின் தலைவர் கிரிஷ் சந்திர சக்சேனா உள்ளிட்ட குழுவினர் அவரின் கீழ் இயங்கவும் ஆரம்பித்தனர். போராளிக் குழுக்களுக்கு பயிற்றுவிக்கும் பொறுப்பு "ரா'வின் சென்னை அதிகாரியாக இருந்த டி.ஐ.ஜி. உன்னிகிருஷ்ணனுக்கு அளிக்கப்பட்டது. (இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்னையும் - எல்.டி.டி.ஈ. வெளியீடு பக்-10) அவருக்கு உதவி செய்யும் இலங்கைத் தமிழராக சந்திரகாசன் (தந்தை செல்வாவின் இரண்டாவது மகன்) இருந்தார். குட்டிமணி, தங்கதுரை ஆகிய இருவருக்கும் இவர் வழக்கறிஞராக இருந்ததால், குழுக்களின் நிலையை அறிந்தவர் என்பதால், இந்தப் பணி வழங்கப்பட்டது. (ஆதாரம்: அதே வெளியீடு)
பயிற்சி பெறப்போகும் முதல் குழுவாக "டெலோ' அமைந்தது. டி.ஐ.ஜி. உன்னிகிருஷ்ணன் இதனைத் தேர்வு செய்வதற்கு காரணம் இந்தியா சொல்வதை நிறைவேற்றும் ஓர் இயக்கமாக அது இருந்தது என்பதுதான் (ஊழ்ர்ய்ற்ப்ண்ய்ங் 1985) ஈ.பி.எல்.ஆர்.எஃப். இயக்கம் இடதுசாரி என்பதாலும் ஈராஸ் இயக்கம் சிறு குழு என்றும் ஒதுக்கப்பட்டது.
இதன் பின்னர் இவ்விரு இயக்கங்களின் யாழ்ப்பாண அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் ""இந்தப் பயிற்சியை இயக்கத்தவர் பெறாவிட்டால் அழிந்து போவோம்'' என்று கூறினார்கள். "அப்படியென்றால் ஈழம் கோரிக்கையைக் கைவிடச் சொல்லி இந்தியா சொன்னால் என்ன செய்வீர்கள்' என்று எதிர்க்கேள்வி கேட்கப்பட்டது. "இதுதான் நிலைப்பாடு என்றால் நமது இயக்கத்தவர்கள் டெலோவில் இணைந்து விடுவார்கள். இங்குள்ள இளைஞர்களுக்கு வாழ்வே இல்லை. அவர்கள் எதையாவது செய்துவிட்டு சாகத் துடிக்கிறார்கள்' என்று கூறினர்.
இவ்வகையில் வாக்குவாதங்கள் இயக்கங்களிடையே நடைபெற்ற நிலையில் ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்க நிர்வாகிகள் உன்னிகிருஷ்ணனைச் சந்தித்து பயிற்சிக்கு இசைந்தார்கள். (வேலுப்பிள்ளை பிரபாகரன் - டி.சபாரத்தினம் நஹய்ஞ்ஹம் ர்ழ்ஞ்)
பிளாட் இயக்கத் தலைவர் உமா மகேஸ்வரனை சந்திரகாசன் தொடர்பு கொண்டபோது, "ரா' என்னிடம் நேரில் தொடர்பு கொண்டால் பேசுகிறேன்'' என்று கூறிவிட்டார். உமா மகேஸ்வரன் இதற்கு சொன்ன காரணம் "சந்திரகாசன் நம்பிக்கைக்குரியவர் அல்ல; அவர் ஒரு சி.ஐ.ஏ. ஏஜென்ட்' - என்பதாகும். பின்னர் உமா மகேஸ்வரனும் இப்பயிற்சித் திட்டத்தில் இணைந்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அப்போது சென்னையில் இல்லை. பேபி சுப்பிரமணியம், சீலன் இருவர் மட்டுமே சென்னையில் இருந்தனர். மதுரையிலும் மேட்டூர் கொளத்தூரிலும் சென்னையிலுமாக நடைபெற்று வந்த இவர்களின் பயிற்சி முகாம்களுக்குப் பொறுப்பு ஏற்று அவர்கள் சென்னையில் இருந்தனர்.
பேபி சுப்பிரமணியத்தை சந்திரகாசன் தொடர்பு கொண்டார். அவர் மூலம் பிரபாகரனுக்குச் செய்தி அனுப்பிய போது ""இந்தியா உதவாக்கரைப் பேர்வழிகளுக்குப் பயிற்சி அளித்து ஊக்குவிக்கும் செயலில் ஈடுபடுகிறது. டெலோ 1981-இல் இருந்து களத்திலேயே இல்லை. ஈரோசும் அப்படித்தான். ஈரோஸ் குழுவினர் தானாக எதையும் செய்யவும் மாட்டார்கள்; மற்றவர்கள் செய்தால் அதைச் செய்ய விடவும் மாட்டார்கள்'' என்று கருத்து தெரிவித்த பிரபாகரன் "ரா' பிரிவினர் என்னை நேரடியாகத் தொடர்பு கொண்டால் யோசிக்கலாம் என்று கூறிவிட்டார்.
ஆனால் சென்னையில் நடைபெறும் நிகழ்வுகளை சரியான கோணத்தில் அணுகி, தனக்குத் தகவல் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் பிரபாகரன், லண்டனில் இருந்த பாலசிங்கத்தை சென்னை செல்லச் சொன்னார். பாலசிங்கத்தின் வரவுக்குப் பிறகு சில தொடர் மாற்றங்கள் நிகழ்ந்தன.
61 : பிரபாகரனின் சென்னை வருகை!
பாலசிங்கமும் அவரது மனைவி அடேலும் சென்னை வந்து இறங்கினர். அவர்களை வரவேற்ற பேபி சுப்பிரமணியம் இருவரையும் சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார். தற்போதைய நிலையை பேபி, பாலசிங்கத்துக்கு விளக்கினார்.
பாலசிங்கம் The Liberation Tigers and the Freedom Struggle என்ற பிரசுரத்துக்கானவற்றை எழுதினார். அதில் இயக்கத்தின் கொள்கை, பயிற்சி அளிப்பது, தாக்குதல், நிதி சேகரிப்பு முதலானவை இடம் பெற்றிருந்தன. பாலசிங்கம் தங்குவதற்கென சாந்தோமில் இரண்டு அறை கொண்ட வீடும் எடுக்கப்பட்டது. தமிழக உளவுத் துறை அதிகாரிகள் பாலசிங்கத்திடம் தொடர்பு கொண்டு அவரை "ரா' அதிகாரிகள் முன் நிறுத்தினர்.
இந்த உரையாடலுக்குப் பின்னர், பிரபாகரன் சென்னை வருவதன் அவசியம் குறித்து தகவல் அனுப்பினார். ஏற்கெனவே பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஜாமீனில் இருந்து தப்பிய காரணத்துக்காக கைது செய்யும் முயற்சி ஏதும் இதில் இருக்குமோ என ரகுவும், மாத்தையாவும் சந்தேகம் கிளப்பினர்.
எனவே முதலில் அவ்விருவரும் தமிழகம் வந்து பாலசிங்கத்திடம் விவாதித்தனர். தற்போதைய அரசியல் சூழலில் தமிழகப் போலீஸôர் அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என்று பாலசிங்கம் உறுதி கூறினார்.
தொடர்ந்து பிரபாகரன், ""ஜெயவர்த்தனாவின் அமெரிக்க ஆதரவுப் போக்கு காரணமாகவே, இந்தியா இயக்கங்களுக்கு பயிற்சியும் ஆயுதமும் அளிக்க முன் வருகிறது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா வந்தால், அவரின் ரஷிய ஆதரவுப் போக்கு வெளிப்பட்டால் இந்தியாவின் நிலைமை மாறிவிடும் என்பதுதான் எங்கள் சந்தேகம். நமக்கோ ஈழம் வேண்டும். இந்தியாவின் ஆயுதப் பயிற்சியை நாம் பெறாது போனால் ஏனைய அமைப்புகளின் ராணுவ பலத்துக்கு ஈடுகொடுக்க முடியாது நாம் அழிந்து போக நேரிடும். எமது அழிவு தமிழீழ மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக முடியும். எனவே இந்திய அரசு காலந்தாழ்த்தி எம்மை அணுகி, எமக்கு வரையறுக்கப்பட்ட அளவில் உதவியும் - பயிற்சியும் தர முன்வந்ததை ஏற்றுக் கொள்வோம்'' (இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்னையும் - எல்.டி.டி.ஈ. வெளியீடு - 1987) என்று கூறியதுடன் சென்னைக்கு வரவும் சம்மதித்தார்.
இதையொட்டி பிரபாகரன் தமிழகம் வந்தார் "ஒரு நள்ளிரவில் பாண்டிச்சேரியில் "ரா' அதிகாரிகளை பிரபாகரன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பிரபாகரன் பாலசிங்கம் மற்றும் "ரா' அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். சந்திப்பு முடிந்ததும் தம்பியும் (பிரபாகரன்), பாலுவும் சிரித்த முகத்துடன் வெளியே வந்தனர்' என்று அடேல் பாலசிங்கம் எழுதிய பட்ங் ஜ்ண்ப்ப் ற்ர் ஊழ்ங்ங்க்ர்ம்நூலில் குறிப்பு உள்ளது.
இந்தச் செய்தியை உறுதிப்படுத்துவது போன்று பிரபாகரன் வரலாற்றை எழுதியுள்ள நாராயணசாமியும் தனது நூலில், ""டெலோ இயக்கத்தினருக்கு பயிற்சி அளிப்பது குறித்து தனது கோபத்தை பிரபாகரன் வெளிப்படுத்தி அதற்கான காரணகாரியங்களையும் விளக்கினார். பிரபாகரனை வசப்படுத்தும் நோக்கில் "ரா' அதிகாரிகள் அவருக்கு சந்திப்பின் நினைவாக ஒரு பரிசு என்று கூறி 7.6 ம்ம் ஜெர்மன் லுகர் துப்பாக்கியை பரிசாக அளித்தார்கள்'' என்று கூறியிருக்கிறார்.
எல்.டி.டி.ஈ.-யைச் சேர்ந்த 200 பேருக்கு பயிற்சி அளிக்க முடிவானது. இதுகுறித்து பிரபாகரன் கூறுகையில், "500 பேர் கொண்ட மந்தையை வைத்திருப்பதற்குப் பதிலாக, கட்டுப்பாடும் மன உறுதியும், துணிச்சலும் கொண்ட 50 பேர் போதுமானது' என்றார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிகளுக்கு டேராடூன், தில்லி உள்ளிட்ட வடஇந்தியாவின் பல பகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பல பகுதிகளில் பல இடங்களில் மற்றவர்களுக்குப் பயிற்சி அளித்தார்கள். அவர்களுக்கான தங்குமிடம் உணவு போன்ற வசதிகளை தமிழக அரசு செய்தது. உணவுக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள ரேஷன் பொருள்கள் வழங்க ஏற்பாடாகியிருந்தது, வெளியூர் செல்ல போக்குவரத்து வசதியும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது.
பயிற்சி பெற்ற போராளிகளின் எண்ணிக்கை போதாது என்று மூன்றாவது ஏஜென்சி மூலம் இந்திரா உணர்ந்ததும், ஒவ்வொரு குழுவினரும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி "ஆட்கள்' சேர்த்தார்கள். இவையெல்லாம் யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாகவே நடந்ததால், அதிபர் ஜெயவர்த்தனாவை அச்சப்பட வைத்தது.
62. ஐ.நா. சபையில் பண்ருட்டி ராமச்சந்திரன்!
பிரதமர் இந்திராவும் இந்திய அரசும் இலங்கைப் பிரச்னையைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கி இருப்பதும், தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயாராவதையும் பார்த்த ஜெயவர்த்தன அரசு நிஜமாகவே பயப்படத் தொடங்கியது.
போதாக்குறைக்கு, இலங்கை இனப் பிரச்னை ஐ.நா.வில் பெருமளவில் விவாதிக்கப்பட்ட சம்பவமும் ஜெயவர்த்தனாவை நெருக்கிற்று.
1961-இல் இதேபோன்று தமிழர்கள் தாக்கப்பட்டபோது, "இலங்கையில் தமிழினமும், தமிழ் மொழியும் பூண்டோடு அழிக்கப்படுவதில் இருந்து காப்பாற்ற - உண்மை நிலை அறிய ஒரு குழுவை அனுப்பவும் - காலதாமதமின்றி ஐ.நா. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தமிழர்கள் வேண்டிக் கொள்கின்றனர்' என்று அண்ணா ஐக்கிய நாடுகள் சபைக்கு வேண்டுகோள் விடுத்துக் கடிதம் அனுப்பினார்.
அதேநிலையைப் பின்பற்றி, இலங்கை இனப்படுகொலையை ஐ.நா. மன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று பிரதமர் இந்திரா காந்தியை முதல்வர் எம்.ஜி.ஆர். வலியுறுத்தி வந்தார். எம்.ஜி.ஆரின் இந்தக் கோரிக்கையை ஏற்று, இந்திரா காந்தி தனது தலைமையில் ஒரு குழு சென்று ஐ.நா.வில் முறையிடுவது என்று முடிவெடுத்தார். அக்குழுவில் தமிழகத்தின் சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரனையும் இடம்பெற வைத்தார், முதல்வர் எம்.ஜி.ஆர்.
பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான குழுவில் ஜி.பார்த்தசாரதி, பி.சி.அலெக்சாண்டர், பண்ருட்டி ராமச்சந்திரன், வைகுந்தவாசன் மற்றும் வெளிவிவகாரத் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் இடம்பெற்றனர். இந்திரா காந்தி அமெரிக்காவில் ஐந்து நாட்கள் தங்கி, ஐ.நா. கூட்டத்திற்கு வந்திருந்த நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள் தூதர்கள் அனைவரையும் சந்தித்து இலங்கை பிரச்னைத் தொடர்பாக விளக்கினார். அமெரிக்காவில் உள்ள தமிழ்ப் பிரமுகர்களைச் சந்தித்து உரையாடவும் நேரம் ஒதுக்கி, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பெரஸ் டி.கொய்லர் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்கு இலங்கை இனப் பிரச்னையில் என்ன இருக்கிறது என்பதே அப்போதுதான் புரியவந்தது. இந்தியா-இலங்கை என இரு நாடுகளின் பிரச்னையாக மட்டுமே இருந்த இலங்கைத் தமிழர் பிரச்னை - உலகம் முழுவதும் சர்ச்சை செய்யப்படும் மனித உரிமை மீறல் மற்றும் இனப்படுகொலை சம்பந்தப்பட்டதாக மாறியது அப்போதுதான்.
1983 அக்டோபரில் தொடங்கி 84 நாட்கள் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் 70 நாட்கள் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்துகொண்டு இலங்கை இனப் பிரச்னைகளை விளக்கினார். "மக்களாட்சி நெறியினைக் கொள்கையாக ஏற்றுள்ள இலங்கையில், தமிழர்களின் பாதுகாப்புக்கும் சட்டபூர்வமான உரிமைகளுக்கும் உறுதி அளிக்கப்பட்டு, மற்ற குடிமக்களுக்குச் சமமாக, முழுமையாகக் குடியுரிமை வழங்குவதன் மூலம் மட்டுமே, இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு, அமைதியாக, ஆனந்தமாக வாழ்ந்திட சுமுகமான தீர்வுகாண இலங்கை அரசு முன்வர வேண்டும்'' என்று நம்பிக்கை தெரிவித்தார். (அக். 21, 1983)
பண்ருட்டி ராமச்சந்திரன் மேலும் கூறுகையில், "மலையகத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியானது நமீபியாவில், தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்கள் கருப்பின மக்களுக்கு இழைத்த கொடுமைகளைப் போன்றது' என்று விளக்கினார்.
இப்படிக் கூறியதும் இலங்கை பிரதிநிதி ஐ.பி. ஃபொன்úஸகா, "இந்தியாவில் நெல்லி' பகுதியில் இஸ்லாமியருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளின்போது உங்களின் உள்நாட்டுப் பிரச்னையில் இலங்கை தலையிட்டதா? நீங்கள் மட்டும் எங்கள் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிடுகிறீர்களே? என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், "இந்தியாவில் ஏற்படும் இதுபோன்ற பிரச்னைகளில் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்வதில்லை. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் அரசு செயல்படுகிறது அவர்களைப் பாதுகாக்க ஆவன செய்கிறது. உங்கள் நாட்டின் நிலைமை தலைகீழாக அல்லவா இருக்கிறது? இலங்கையில் நடப்பது இனப் படுகொலை. அதனால் அகதிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள். அவர்கள் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்கள். லட்சக்கணக்கில் தோட்டத் தொழிலாளர்களாக குடியுரிமை இல்லாமல் அவர்கள் பல நூற்றாண்டு காலமாக அவதிப்படுகிறவர்கள்' என்று எடுத்துரைத்தார்.
"இலங்கையில் இருந்து இனப்படுகொலை காரணமாக லட்சக்கணக்கில் அகதிகள் ஓடிவருகிறார்கள் என்றும் இதனால் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் திடீர் செலவுகளையும், விவரமாக எடுத்துரைத்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
இவரது உரை ஐ.நா. மன்றத்தில் பிரெஞ்சு, ரஷிய, சீன, அரபி, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் உடனடியாக மொழிபெயர்க்கபட்டபோது, பிரதிநிதிகள் அதிர்ச்சியில் உறைந்தார்கள். இலங்கைப் பிரதிநிதி ஃபொன்úஸகா வெட்கித் தலைகுனிந்தார்.
ஐ.நா. சபை பொதுச் செயலாளர் ஃபெரஸ் டி. கொய்லர், இலங்கையில் தமிழர் பிரச்னை என்பது மனித உரிமைகள் மீறலாக இருக்கிறது' என்பதை ஒப்புக்கொண்டார்.
ஐ.நா. சபையில் தமிழர் பிரச்னையை எடுத்துக்கூறி, அது வெற்றியடைந்ததையொட்டி தமிழகம் திரும்பிய பண்ருட்டி ராமச்சந்திரனை, முதல்வர் எம்.ஜி.ஆர். விமான நிலையம் சென்று, ஊர்வலமாக அழைத்து வந்தார்.
இலங்கை இனப் பிரச்னை ஐ.நா. வரை சென்றதும், போராளிக் குழுக்களுக்கு பயிற்சி அளித்து ஆயுதம் மற்றும் நிதியுதவி அளித்த செய்கையும் ஜெயவர்த்தனாவைத் தமிழர்த் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு இணங்கி வர வைத்தன.
63: ஜெயவர்த்தனா தில்லி வந்தார்!
இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் பி.வி. நரசிம்மராவ் நடத்திய பேச்சுவார்த்தையையொட்டி கொழும்பிலிருந்த அகதிகள் முகாம்களில் இருந்தவர்களை யாழ்ப்பாணம் கொண்டு செல்ல இந்தியாவில் இருந்து பயணிகள் கப்பல் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெயவர்த்தனாவின் தம்பி எச்.டபிள்யூ. ஜெயவர்த்தனா புது தில்லி வந்தார்.
தமிழர் - சிங்களவர் இடையே சமாதானம் பேச, இந்தியா நடுவராக இருப்பது குறித்தும், நிவாரணப் பணிகளில் ஈடுபட ஏற்படும் செலவுத் தொகைக்கான நிதியுதவி பெறுவது குறித்தும் அவர் பேச்சு நடத்தினார். அவரிடம் பத்து லட்சம் டாலர் இந்தியா வழங்குவதாகப் பிரதமர் இந்திரா காந்தி சம்மதம் தெரிவித்தார்.
இதன் பின்னர், ஜே.ஆர். ஜெயவர்த்தன இலங்கை நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி, தமிழர்த் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அப்பேச்சுவார்த்தை ஐந்து அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் தெரிவித்ததுடன், அதன் விவரத்தையும் வெளியிட்டார்.
அதன்படி, ஓரளவு சுயாட்சியுடன் கூடிய, திட்டமிடப்பட்ட அபிவிருத்தி சபைகளை அமைப்பது; வன்முறைகளில் ஈடுபட மாட்டோம் என உறுதியளித்தல், மன்னிப்பு வழங்குவது குறித்து பேசுதல்; யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படை நடமாட்டத்தை நிறுத்தி வைப்பதுடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது; தமிழ்மொழியையும் தேசிய மொழியாக அறிவிப்பது; தமிழர் விடுதலைக் கூட்டணி பிரிவினைக் கோரிக்கையை கைவிடுவதும், தடுப்புக் காவலில் உள்ளோரை விடுவிப்பதும் என அவர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியானதுமே இந்திரா காந்தி "இந்த அம்சங்கள் தமிழர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதாக அமையாது' என்று கருத்துத் தெரிவித்து, "அதே சமயம் இலங்கையின் ஒருமைப்பாட்டை ஆதரிப்பதாகவும்' கூறியதுடன் இலங்கை உள் விவகாரங்களில் "இந்தியா, தலையிடாது - மத்தியஸ்தர் பொறுப்பை மட்டுமே வகிக்கும்' - என்றும் உறுதிபட ஜெயவர்த்தனாவிடம் தெரிவித்தார்.
தொடர் நிகழ்வுகளாக இலங்கைத் தமிழர்த் தலைவர்களை இந்திரா காந்தி மீண்டும் சந்தித்து உரையாடினார். "ஒவ்வொரு தமிழ் இளைஞனுக்கும் ராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தோட்டப் பகுதிகளை தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும்' என்றும் வலியுறுத்தி வந்த தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எஸ். தொண்டைமான் உள்பட பலரும் இந்த உரையாடலில் கலந்துகொண்டனர்.
இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் செப்டம்பர் 1, 1983 அன்று, பிரதமர் இந்திரா காந்தி, "தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் - இலங்கை அரசாங்கம் இடையே பேச்சுவார்த்தை நடத்த வசதியாக, இந்தியா தூதுவர் ஒருவரை அனுப்ப இருப்பதாக' அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ. அமிர்தலிங்கம், "நிபந்தனைகள் எதையும் அரசு விதிக்கவில்லை என்றால் - அப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளத் தயார்' - எனத் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் அ.அமிர்தலிங்கத்தை பத்திரிகையாளர்கள் சந்தித்த போது, "பேச்சுவார்த்தைகளில் எங்களது கட்சி நம்பிக்கை இழந்தபோதிலும் - இந்தியாவின் நடுவர் முயற்சிக்கு மதிப்பளித்து வந்திருப்பதாகவும்' அவர் கூறினார்.
புது தில்லியில் இந்திரா காந்தியையும் வெளியுறவுத் துறை அமைச்சர் பி.வி. நரசிம்மராவையும் அ. அமிர்தலிங்கம் சந்தித்தார். அவர் தரப்பில் வலியுறுத்தப்பட்டவை என்னவென்று தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்திரா காந்தியின் சிறப்புத் தூதராக, இந்திய வெளி விவகார கொள்கை வகுப்புக் கமிஷனின் தலைவராக இருந்த ஜி. பார்த்தசாரதி கொழும்பு சென்றார். அவர் இந்திரா காந்தியின் செய்தியாகக் கொண்டு சென்றது என்னவென்றால், "பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பாகவும், அது முடியும் வரையிலும் இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில், மக்கள் அச்சமின்றி வாழ ஏற்ற பாதுகாப்புச் சூழலை உருவாக்குவது அவசியம்' - என வலியுறுத்தியதாக யூகச் செய்திகள் வெளியாயின.
இது தவிர, ஜி.பார்த்தசாரதி மேலும் இரு தடவைகள் கொழும்புப் பயணம் மேற்கொண்டார். அவரின் இரண்டாவது விஜயத்தின் போது (நவம்பர் 2-ஆம் தேதி) அவருக்கு அங்கே ஒரு சங்கடம் நேர்ந்தது. அதே நாளில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் கொங்டா பெய் மற்றும் அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதர் வால்ரஸ் ஆகிய இருவரும் இலங்கைக்கு வந்திருந்தனர். இந்தச் செய்கை வல்லரசு நாடுகள் இலங்கைக்கு அனுசரணையாக இருப்பதை, இந்தியாவுக்கு உணர்த்துவதாக அமைந்தது.
அதைவிடவும் இலங்கை மீது இந்தியா அதிரடியாகப் போர் தொடுத்துவிடுமோ என்ற அச்சமும் ஜெயவர்த்தனாவுக்கு இருந்தது என்று இலங்கைப் பத்திரிகைகளே அப்போது கருத்து தெரிவித்தன.
முன்பு ஜெயவர்த்தனாவால் அறிவிக்கப்பட்ட ஐந்து அம்சங்களுடன், (அ) தமிழர்ப் பகுதிகளை ஒன்றிணைக்கும் பிரதேச சபை (ஆ) காவல் துறை சம்பந்தமான அதிகாரத்தை பிரதேச சபையிடம் ஒப்படைப்பது (இ) மத்திய அரசாங்க சேவையிலும் ராணுவத்திலும் மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தல் (ஈ) இனக் கலவரத்தின்போது ஏற்பட்ட இழப்புகளுக்கு நட்ட ஈடு வழங்குதல் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்தியது.
இவ்வகையான மாற்றங்களுடனும், 26 ஜூலை 1957-இல் ஏற்பட்ட பண்டா - செல்வா உடன்படிக்கை மற்றும் 24 மார்ச் 1965-இல் ஏற்பட்ட டட்லி - செல்வா உடன்படிக்கையின் அடிப்படையிலும் அனைத்துக் கட்சி மாநாட்டில் வைப்பதற்கென 14 அம்சத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த திட்ட வரையறை, புது தில்லியில் 1983 நவம்பர் 21-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற இருந்த காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, அதற்கு முன்பாக புது தில்லி வந்திருந்த எஸ்.தொண்டைமான், அ.அமிர்தலிங்கம் ஆகிய மூவருடனும் தனித்தனியே நடத்திய பேச்சுவார்த்தைகளின் மூலமாக உருவானதாகும். இதனை உருவாக்குவதில் ஜி. பார்த்தசாரதியின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.
இந்திரா காந்தியால் உருவாக்கப்பட்ட 14 அம்சத் திட்ட வரைவு இலங்கை அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டது:
64: 14-அம்சத் திட்ட வரைவு!
இலங்கையில் ஈழத் தமிழ் அகதிகள் 1983, டிசம்பர் 1-ஆம் தேதிய ஜனாதிபதியின் கூற்றின் ஆறாம் பத்தியின் நியதிகளின்படி கொழும்பு, புதுதில்லி கலந்துரையாடல்களின் முடிவாலெழுந்த பின்வரும் பிரேரணைகள் அனைத்துக் கட்சிகள் மாநாட்டிற்கு கருத்தில் எடுத்துக் கொள்வதற்குப் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. இப்பிரேரணைகள் இலங்கையின் ஐக்கியம், முழுமை தொடர்பானவையாகும்; அத்துடன் அனைத்துக் கட்சிகள் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதற்கு அடிப்படையாக அமைவனவாகும்.
1. மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் தீர்மானங்களால் அவை உடன்பட்டு, அந்த மாவட்டத்தினுள்ளே நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பினால் (மக்கள் தீர்ப்பினால்) அங்கீகரிக்கப்படின், ஒரு மாகாணத்திலுள்ள மாவட்ட அபிவிருத்திச் சபைகள் ஒன்று அல்லது ஒன்றுக்கு அதிகமான பிரதேச சபைகளாக இணைவதற்கு அனுமதிக்கப்படுதல்.
2. முறையே வடக்கு மாகாணத்தினதும் கிழக்கு மாகாணத்தினதும் மாவட்ட சபைகளைப் பொறுத்தவரை, பெரும்பான்மை உறுப்பினர்கள் ராஜினாமா செய்தமை காரணமாக, அவை இயங்காதிருப்பதனால் அந்த ஒவ்வொரு மாகாணத்தினுள்ளும் அவைகளின் இணைப்பை ஏற்றுக் கொள்ளல்.
3. தீர்மானிக்கப்படுமிடத்து, ஒவ்வொரு பிரதேசமும் ஒவ்வொரு பிரதேச சபையைக் கொண்டிருக்கும். ஒரு பிரதேச சபையில், பெரும்பான்மை வகிக்கும் கட்சியின் தலைவர் அந்தப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக ஜனாதிபதியால் முறைமையாக நியமிக்கப்படும் மரபு நிலை நிறுத்தப்படும். பிரதேசத்திற்கான ஓர் அமைச்சர் குழுவை முதல் அமைச்சர் அமைப்பார்.
4. ஜனாதிபதியும் பாராளுமன்றமும் பிரதேசங்களுக்குக் கை மாற்றம் செய்யப்படாத எல்லா விஷயங்களுக்கும், அத்துடன், பொதுவாக முழுக் குடியரசினதும் இறைமை, முழுமை, ஐக்கியம், பாதுகாப்பு, வளர்ச்சி, அபிவிருத்தி ஆகியவற்றைப் பாதுகாத்தல் தொடர்பான மற்றெல்லா விஷயங்களுக்கும் முழு மொத்தமான பொறுப்பைத் தொடர்ந்து வகிப்பர்.
5. பிரதேசத்தின் சட்ட அதிகாரம் பிரதேச சபைகளுக்கு உரிமையாக்கப்படும். அவை பிரதேசத்தின் உள்ளகச் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுதல், நீதி நிர்வாகம், சமூக, பொருளாதார அபிவிருத்தி கலாசார விஷயங்கள், காணிக் கொள்கை ஆகியன உள்பட, சில விதித் துரைத்த நிரற்படுத்தப்பட்ட விஷயங்கள் தொடர்பாகச் சட்டங்களை ஆக்கவும் நிறைவேற்றி அதிகாரங்களைச் செயற்படுத்தவும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும். பிரதேசங்களுக்குக் குறித்தொதுக்கப்பட வேண்டிய விஷயங்களின் நிரல் விவரமாகத் தயாரிக்கப்படும்.
6. வரிகள், தீர்வைகள் அல்லது கட்டணங்கள் ஆகியவற்றை அளவிடுவதற்கும் பிரதேச சபைகள் அதிகாரம் பெற்றிருக்கும். அத்துடன், கடன்கள் வாயிலாக வளங்களைத் திரட்டுவதற்கும், அந்த வரும்படிகள் குடியரசால் கொடுக்கப்படும் மானியங்கள், ஒதுக்கீடுகள், உதவித் தொகைகள் ஆகியன கொண்ட அந்தக் குறிப்பிட்ட பிரதேசத்திற்கெனத் தாபிக்கப்படும் திரட்டிய நிதியமொன்றில் வரவு வைக்கப்படும். காலத்துக்குக் காலம் நியமிக்கப்படும் பிரதிநிதித்துவ நிதி ஆணைக்குழுவின் விதப் புரைகளின் பேரில் நிதி வளங்கள் பிரதேசங்களுக்குப் பங்கீடு செய்யப்படும்.
7. ஒவ்வொரு பிரதேசத்திலும் மேல் நீதி மன்றங்களின் அமைப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். இலங்கையின் உயர் நீதிமன்றம், முன் முறையீடுகளை ஏற்று ஆராய்தலையும், அரசியல் யாப்புச் சார்ந்த சட்ட அதிகாரத்தையும் செயற்படுத்தும்.
8. (அ) பிரதேசத்தின் அலுவலர்களையும் ஏனைய பகிரங்க ஊழியர்களையும் (ஆ) பிரதேசத்துக்குத் துறைமாற்றுக்காளாத்தக்க அத்தகைய ஏனைய அலுவலர்களையும் பகிரங்க ஊழியர்களையும் உள்ளடக்கியதாக ஒவ்வொரு பிரதேசமும் பிரதேச சேவை ஒன்றினைக் கொண்டிருக்கும், ஆட்சேர்ப்புக்கும், பிரதேச சேவையின் உறுப்பினர் தொடர்பான ஒழுக்காற்று அதிகாரிகளைச் செயற்படுத்துவதற்கும் பிரதேச பகிரங்க சேவை ஆணைக்குழு ஒன்றை ஒவ்வொரு பிரதேசமும் கொண்டிருக்கும்.
9. இலங்கையின் ஆயுதப்படைகள் தேசிய இனத்தின் நிலையைப் போதுமானளவு பிரதிபலிப்பனவாக இருக்கும். வடக்கு, கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ளகப் பாதுகாப்புக்கான போலீஸ் சேவைகள் அந்தப் பிரதேசங்களின் இனத்தின் அமைப்பைப் பிரதிபலிப்பனவாகவும் இருக்கும்.
10. திருகோணமலைத் துறையையும், துறைமுகத்தையும் நிர்வகிப்பதற்கு மத்திய அரசின் கீழ் துறைமுக அதிகாரி சபை ஒன்று நிறுவப்படும். துறைமுக அதிகார சபையின் நிர்வாகத்தின் கீழ் வருவதற்கான விஷயங்களும் சபைக்குக் குறித்தொதுக்கப்படும் அதிகாரங்களும் மேலும் ஆராயப்படும்.
11. காணி நிர்ணயம் பற்றிய ஒரு தேசியக் கொள்கை, காணிக் குடியேற்றத்தை எந்த அடிப்படையில் அரசு மேற்கொள்ளல் ஆகியன ஆய்ந்து நிறைவேற்றப்பட வேண்டியனவாகும். பெரிய செயற்றிட்டங்கள் மேல் உடன்பாடு ஏற்படுதற்கு உட்பட்டுக் குடிநிலைச் சம நிலையை மாற்றாதவாறு இனவிகித சமத்தை அடிப்படையாகக் கொண்டு குடியேற்றத் திட்டங்கள் யாவும் அமைதல் வேண்டும்.
12. அரச கரும மொழியான சிங்களம், தேசிய மொழியான தமிழ் ஆகியவை தொடர்பான அரசியல் யாப்பையும் ஏனைய சட்டங்களையும் அத்துடன், தேசியக் கொடி, தேசிய கீதம் ஆகியவை தொடர்பான அதே போன்ற சட்டங்களையும் ஏற்றுக் கொள்ளப்படுதலும் நடைமுறைப்படுத்தலும் அவசியம்.
13. தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவைப்படக்கூடிய அரசியலமைப்பு மாற்றங்களையும் சட்ட மாற்றங்களையும் தயாரிப்பதற்கு மாநாடு ஒரு குழுவை நியமித்தல் வேண்டும். அரசாங்கம் தனது செயலகத்தையும் அவசியமான சட்ட அலுவலகங்களையும் வழங்கும்.
14. சட்டவாக்க நடவடிக்கைக்காகப் பாராளுமன்றத்துக்குச் சமர்பிக்கப்படுதற்கு முன்னர், அனைத்துக் கட்சிகள் மாநாட்டுக் கருத்து இணைக்கங்களே ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவினாலும் அநேகமாக ஏனைய கட்சிகளது நிறைவேற்றுச் சபைகளினாலும் கருத்துக் கெடுத்துக் கொள்ளப்படும்.
இந்தப் 14-அம்சத் திட்ட வரைவு ஏற்றுக் கொள்ளப்பட்டு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், இலங்கையில் இத்தனை ரத்தம் சிந்தப்பட்டிருக்காது. ஒரு தேசம் என்கிற கட்டுக்குள் சிங்களரும் தமிழரும் ஒற்றுமையாக சம உரிமைகளுடன் வாழ்ந்திருக்க முடியும். ஆனால், அதுவல்லவே சிங்கள இனவாத அரசின் நோக்கம். தில்லியில் இந்திரா காந்தி அம்மையாரிடம் நல்ல பிள்ளைகளாகத் தலையை ஆட்டிவிட்டு வந்தவர்கள், கொழும்பு திரும்பியபோது தங்கள் சுய உருவத்தைக் காட்டத் தொடங்கி விட்டனர்!
65: ஜெயவர்த்தனாவின் புதிய 14 அம்சத் திட்டம்
அதுநாள்வரை "அனைத்துக் கட்சி மாநாடு' என்று சொல்லப்பட்ட இந்த அமைவு 10.1.1984 அன்று கொழும்பில் தொடங்கியபோது, "வட்டமேஜை மாநாடு' என்று பெயரிடப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி, பிரதமர் இந்திரா காந்திக்குச் சொல்லப்பட்ட, காட்டப்பட்ட - ஒப்புதல் பெறப்பட்ட 14 அம்சத் திட்ட வரைவு மாற்றப்பட்டு புதிய 14 அம்சத் திட்ட வரைவின் கீழ் விவாதம் நடைபெறும் திடீர் என அறிவிக்கப்பட்டது.
எனவே, இந்த மாநாட்டில் பங்கேற்க இயலாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணி கூறிவிட்டது. "நிபந்தனைகள் விதிக்கப்படா விட்டால் கலந்து கொள்வதாக ஏற்கெனவே கூறியிருந்தோம். புதிய 14 அம்சக் கோரிக்கையில் முதல் அம்சமே எங்களை வெளியேற்றப் போதுமானதாக உள்ளது' என்று கூட்டணி கூறி வெளியேறியது.
இலங்கை அரசு கெஜட்டில் வெளியான புதிய 14 அம்சத் திட்ட வரைவு வருமாறு:
1984-ல் அனைத்து கட்சி மாநாட்டில் கவனிப்பதற்கான நிகழ்ச்சி நிரலினை உருவாக்குவதற்காக பின்வரும் நகல் பிரேரணைகளை உபயோகிக்கலாம் என்ற தலைப்புடன் தயாரிக்கப்பட்ட "ஆ' இணைப்பு (அய்ய்ங்ஷ்ன்ழ்ங்-ஆ) ஒரு 14 அம்ச திட்டம் ஆகும்.
1. ""தனிநாடு'' கோரிக்கையை கைவிடுதல்.
2. ஒவ்வொரு மாகாணத்திலுமுள்ள கவுன்சிலால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஒரு சர்வஜன வாக்கெடுப்பிலும் ஊர்ஜிதம் செய்யப்பட்ட பிறகு (அந்த மாவட்டங்கள் கொண்டதாக) பிரதேச சபைகள் ஏற்படுத்துவது.
3. மேலே கூறியபடி அமைக்கப்படும் பிரதேச சபைகள் ஒவ்வொன்றிலும் பெரும்பான்மையை பெறுகிற கட்சியின் தலைவர், அந்த பிரதேசத்திற்கு முதலமைச்சராக, குடியரசு தலைவரால் நியமிக்கப்படுதல் என்ற ஒரு மரபு ஏற்படுத்தப்படும். அப்படி நியமிக்கப்படும் முதலமைச்சர் சபை அங்கத்தவர் குழுவுடன் தமது பணிகளைச் செய்வது.
4. ""பிரதேசங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்படாத'' விடயங்கள் யாவற்றிலும் குடியரசு தலைவரும் பாராளுமன்றமும் தொடர்ச்சியாக தம் பொறுப்பினை வைத்துக் கொள்வதாக அமையும். தேசம் முழுவதையும் பற்றிய குடியரசின் இறைமை, தேசத்தின் ஐக்கியம், வளர்ச்சி, அபிவிருத்தி போன்றவை குடியரசு தலைவரது பொறுப்பிலும், பாராளுமன்ற தலைவரது பொறுப்பிலும் இருக்கும்.
5. பிரதேசங்களுக்கு அதிகாரம் மாற்றிக் கொடுத்து ஒதுக்கப்படுகின்ற விடயங்கள் அடங்கிய ஒரு பட்டியலில் விவர நுணுக்கங்கள் ஆராயப்படும்.
அந்த பட்டியலில் உள்ள விடயங்கள் சம்பந்தமாக சட்டம் இயற்றவும், நிர்வகிக்கவும் பிரதேச சபைகளுக்கு அதிகாரம் தரப்படும்.
அந்த பட்டியலில் உள்ள விடயங்கள் சம்பந்தமாக சட்டம் இயற்றழும், நிர்வகிக்கவும் பிரதேச சபைகளுக்கு அதிகாரம் தரப்படும்.
வரிகள் விதிக்கவும், தீர்வைகள், கட்டணங்கள் விதிக்கவும், கடன் பத்திர வெளியீடு மூலம் கடன் பெறவும், மத்திய அரசிடமிருந்து மானியம், நிதி ஒதுக்கீடுகள் பெறவும் சபைக்கு அதிகாரம் உண்டு.
6. திருகோணமலை துறைமுகத்தின் நிர்வாகம் மத்திய அரசிடமே இருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளுதல்.
7. ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு மேல் நீதிமன்றம் இருக்கும். தேசம் முழுவதுக்குமாக ஓர் உயர் நீதிமன்றம் இருக்கும். இந்த உயர் நீதிமன்றம் அரசியலமைப்பு பற்றிய வழக்குகளிலும் தீர்ப்பளிக்கும் அதிகாரங்களுடன் வேறு சில சிறப்பு அதிகாரங்களும் கொண்டதாக இருக்கும்.
8. பிரதேச ஊழியர், உத்தியோக வர்க்கம் ஒன்று ஏற்படுத்தப்படும். அது அந்த பிரதேச அரசினால் நியமிக்கப்படுவோர் விடயத்திலும், அந்த பிரதேசத்திற்கு மத்திய அரசினால் அனுப்பப்படும் உத்தியோகத்தர் விடயத்திலும் அதிகாரம் உள்ளதாக இருக்கும்.
9. பிரதேச தேர்வாணைக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். ஊழியர்களை தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கான ஒழுக்காற்று அதிகாரங்களை செயல்படுத்துவது போன்ற அதிகாரங்கள் அந்த தேர்வாணைக் குழுவிடமிருக்கும்.
10. இலங்கையின் உத்தியோக வர்க்கத்திலும், பாதுகாப்பு படையிலும் ஒவ்வொரு இனமும் அதன் ஜனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ற வகையில் இடம் பெறும்.
11. உள்நாட்டு பாதுகாப்பிற்கான போலீஸ் படையில் அந்த பிரதேசத்து ஜனத்தொகையிலுள்ள விகிதாசாரத்தை பிரதிபலிப்பதாக இருக்கும்.
12. புதிய குடியேற்றங்கள் ஏற்படுத்துவது நாடு தழுவிய ஒரு கொள்கை உருவாக்கப்படும்.
13. அரச கரும மொழியான சிங்கள மொழி, தேசிய மொழியான தமிழ் இரண்டையும் பற்றி அரசியலமைப்பு ஷரத்துகளும் சட்டங்களும் ஒப்புக் கொள்ளப்படும், செயல்படுத்தப்படும். தேசிய கீதம், தேசியக் கொடி பற்றிய சட்டங்களும் அப்படியே.
14. அரசியல் லட்சியங்களுக்காக வன்செயல்கள், பயங்கரச் செயல்கள் கையாளப்படுவது எதிர்க்கப்படும் என்பதில் ஒற்றுமை காணப்படும்.
- இவ்வாறு புதிய 14 அம்சத் திட்டவரைவு கூறியது.
இவ்விரு இணைப்புகளுக்கும் (அய்ய்ங்ஷ்ன்ழ்ங்) இடையே முக்கிய மாற்றங்கள் பல இருக்கின்றன. இரண்டாவதாக வெளியிடப்பட்ட "ஆ' அதாவது இணைப்பில்,
(1) ஒரே மாகாணமாக வடக்கு - கிழக்குப் பகுதிகள் இல்லை என்றும் அவை தனித்தனியே இருக்கும் என்று கூறுகிறது.
(2) சட்டம் ஒழுங்கு பற்றிய குறிப்பில் பின் இணைப்பில் மாகாணம் சார்ந்ததாகக் கூறப்படவில்லை.
(3) குடியேற்றங்கள் தொடர்பான அதிகாரம் மைய அரசிடமே இருக்கும் என்கிறது இரண்டாவது இணைப்பு.
இவ்வகையான மாற்றங்கள் தமிழர்களின் விருப்பங்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்றும் அமிர்தலிங்கம் குற்றம் சாட்டினார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியினரை இம்மாநாட்டில் பங்கேற்க வைப்பதில் ஜி. பார்த்தசாரதி பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். முடிவில் கூட்டணி சார்பில் அ. அமிர்தலிங்கம், எம். சிவசிதம்பரம், ஆர். சம்பந்தன் கலந்துகொண்டனர். அரசியல் கட்சிகள் மட்டுமே பங்கு பெறும் என்று சொல்லப்பட்டிருந்ததற்கு மாறாக சமயப் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.
ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஆர். பிரேமதசா, எம்.சி.எம். கலீல், திருமதி ஆர்.என். புலேந்திரன், தமிழர் காங்கிரஸ் சார்பில் ஜி.ஜி. பொன்னம்பலம் (ஜூனியர்) வி.சி. மோதிலால் நேரு, டி. மகேந்திரராச - இ.த.அ.ச. (சமஷ்டி) சார்பில் ஜி. கணேசலிங்கம், பி.எஸ். சூசைதாசன், எம்.ஏ. மகதூப் - இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் எஸ். தொண்டமான், ஜே. பெரியசுந்தரம், எம்.எஸ். செல்லசாமி - கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.பி. சில்வா, பீட்டர் கெனமன், சரத் முத்தெடுவக, ஐ.தொ.கா. சார்பில் ஏ. அஸிஸ், ஜி. குணதாசா, ஜெய சிங்கா, பி.ஆர்.ஏ. செüமிய மூர்த்தி, எஸ்.எஸ்.எல்.பி. சார்பில் டாக்டர் கொல்வின் ஆர்.டி. சில்வா, பெர்னார்ட் சொய்சா, எஸ். செந்தில்நாதன் மற்றும் மகா சங்கம், கிறிஸ்துவ குழு, இந்துக் குழு என மூன்று மூன்று பேர், அரசு சார்பில் அதுலத் முதலி, கே.டபிள்யூ. தேவநாயகம், எம்.எச். முகமது பங்கேற்றனர். இது தவிர சிறப்பு அழைப்பாளர்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.
முதல் நாள் நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், ஜேவிபியும் கலந்துகொள்ளாவிட்டாலும் அதன் அங்கத்தினரில் பலர் அடுத்தடுத்த கூட்டங்களில் பங்கேற்றனர். ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவோ இதில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று கூறிவிட்டார். ஜேவிபியின் பிரதிநிதியான தினேஷ் குணவர்த்தனா மாநாட்டில் இருந்து விலகிக் கொண்டார். தங்களது கருத்து ஏற்கப்படவில்லை என்று அவர் காரணம் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ "இம்மாநாட்டின் மூலம் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை என்றால், தேர்தலைச் சந்திக்க வேண்டும்' என்று கூறியது. அதன்படி பண்டார நாயக்கா "இலங்கையின் சகல கட்சிகளும் ஏற்கத்தக்க ஓர் ஒப்பந்தத்தை நாட்டின் எல்லைக்குள் விவாதித்துத் தீர்மானிக்க வேண்டுமே தவிர அயல்நாட்டின் தலையீடு அல்லது வற்புறுத்தலின்பேரில் எடுக்க முடியாது'' என்றார்.
இவ்வாறாக முதலில் தயாரிக்கப்பட்ட 14 அம்சத் திட்டம் கைவிடப்பட்டு, அதில் மாற்றம் செய்து தமிழர்களின் எண்ணங்கள் நிராசையாக்கப்பட்ட திட்டங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஓராண்டு (ஜனவரியில் தொடங்கி டிசம்பர் வரை) பேச்சுவார்த்தை நாடகம் திடீர் என முடிவு எதுவும் எடுக்காமலே முடிவுற்றுவிட்டது. (பெüத்த சிங்களமும் சிறுபான்மையினரும் - சந்தியா பிள்ளை கீதபொன்கலன்)
இந்த ஓராண்டு பேச்சுவார்த்தை காலங்களில் போராளிக் குழுக்கள் பல இடங்களில் தாக்குதலைத் தொடுத்தன. சிங்களவ குடியேற்றங்களிலும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டன.
இந்நிலையில், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தனது மெய்க்காப்பாளர்கள் சத்வந்த் சிங், பியாந்த் சிங், கேகார் சிங் ஆகியோரால் 1984 அக்.31-இல் சுடப்பட்டு இறந்தார். இவரின் திடீர் மறைவு ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. காரணம் ஜெயவர்த்தனாவுக்கு இந்திரா காந்தி எப்போதுமே சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். இந்திரா என்ன செய்வாரோ என்ற பயமே ஜெயவர்த்தனாவை அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இஸ்ரேலுக்கும், சீனாவுக்கும் ஓட வைத்தது. இந்த பயம் என்பது மனப்பிரமையால் வந்ததல்ல.
பிரதமர் இந்திரா காந்தி சென்னை கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியது பொருள் பொதிந்தது என்று ஜெயவர்த்தனா நம்பினார். அந்த உரையின் ஒரு பகுதி வருமாறு:
"இலங்கையில் காட்டுமிராண்டித்தனமாக செயல்கள் மீண்டும் நடைபெறாதவாறு இருக்க, நடவடிக்கை எடுக்கப்படும். தமிழர்களுக்கும் இந்திய வம்சாவளித் தமிழருக்கும் இலங்கையில் நடைபெறும் கொடுமைகள் குறஇத்து கவலைப்படுகிறேன். உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், காட்டுமிராண்டிச் செயல்கள் மீண்டும் ஏற்படாமலிருப்பதற்கும் அறிக்கைகள் வெளியிடுவதைவிட எவ்வாறு இயங்க வேண்டும் என்பதையே சிந்திக்க வேண்டும்' (2.1.1983) என்று கூறியிருந்தார்.
இந்தப் பேச்சுதான் ஜெயவர்த்தனாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது; அந்த அச்சம் அகன்ற நிம்மதியில் அவர் பேச்சுவார்த்தை என்று போக்குக் காட்டிக் கொண்டே ராணுவத் தளவாடங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தனர்.
1984-ஆம் ஆண்டு இறுதியில் தேசிய பாதுகாப்பு இயக்கம் ஒன்றை ஏற்படுத்தி, லலித் அதுலத் முதலி கையில் ஒப்படைத்தார். அவர் பொறுப்பு ஏற்றதும் - பயிற்சி பெற்ற ஒவ்வொரு புலிக்கும் 100 வீரர்கள் வீதம் இங்கே பயிற்சி அளிக்கப்படுவார்கள், என்று இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதேநேரம் புத்தத்துறவிகளும், பயங்கரவாதத்தை ஒழிக்கும்வரை எந்தத் தீர்வும் சிங்களவருக்குத் தேவையில்லை என்று வீராவேசம் காட்டினர். சிங்கள இனவாத பத்திரிகைகளோ, "1985-ஆம் ஆண்டு தை மாதம் புலிகள் சுதந்திர நாடு பிரகடனம் செய்யப் போவதாக' செய்தி வெளியிட்டு சிங்களவருக்கு வெறி ஏற்றின.
இவ்வாறாக ஜெயவர்த்தனாவின் பேச்சுவார்த்தையின் நாடகம் அற்ப ஆயுளில் முடிந்து போனது.
66: விடுதலை அமைப்புகள் ஒன்றுபட்டன!
சிங்கள பேரினவாதத்தை வீழ்த்த வேண்டும் என்றால் இயக்கங்கள் ஒன்றாக இணைய வேண்டியது அவசியம் என்ற கருத்து ஈழத்தில் மட்டுமல்ல - தமிழ்நாட்டில் மட்டுமல்ல - உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் விருப்பமாக இருந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஐக்கியம்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியாக (14.5.1972) மலர்ந்தது.
அதேபோன்று ஆயுதப் போராளிகளின் அமைப்புகள் 37 என்பது இலங்கை அரசின் கணிப்பு. அதிலும் முன்னிலையில் இருப்பது எல்.டி.டி.ஈ., டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ், பிளாட் ஆகிய அமைப்புகள்தான். இவ்வமைப்புகள் ஒன்றிணைய வேண்டும் என்று பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
"அருளர்' என அழைக்கப்படும் அருட்பிரகாசம் அனைத்து இயக்கங்களையும் ஒன்றிணைக்க பலகட்ட பேச்சுவார்த்தைகளை இயக்கங்களிடையே நடத்தினார். தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அ. அமிர்தலிங்கமும் முயன்றார். ஆனால் கூடிக் கலைவது என்பதே தொடர்ந்தது.
பத்மநாபாவின் முயற்சியால் ஈழ தேசிய முன்னணி (உங்ப்ஹம் சஹற்ண்ர்ய்ஹப் ஊழ்ர்ய்ற்-உசஊ) உருவாக்கப்பட்டது. இதில் ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப். டெலோ இயக்கங்கள் அங்கம் வகித்தன.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இதில் இணையாமல் இருந்தார். அதனால் இம்முயற்சியை விடுதலைப் புலிகள் அமைப்புத் தலைவர் பிரபாகரன் விரும்பவில்லை என்ற கருத்து பரவலாக எழுந்தது. இந்நிலையில் இந்நிகழ்வை அறிவது அவசியம்.
"1981-இல், புலிகள் இயக்கம் கலைக்கப்பட்டு தங்கதுரை, குட்டிமணி ஆகியோருடன் இணைந்து செயல்பட பிரபாகரன் முடிவெடுத்தார். 1981-இல், நீர்வேலி வங்கிக் கொள்ளையில், "டெலோ' இயக்கம் ஈடுபட்டு வெற்றியடைந்தது. இதன் காரணமாக போலீஸ் கெடுபிடி கடுமையானதும் தங்கதுரை, குட்டிமணி ஆகியோர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லும் வழியில் சிங்களப் போலீஸôரிடம் பிடிபட்டார்கள். பிரபாகரனும் மற்றவர்களும் தப்பித்தனர்.
தங்கதுரை, குட்டிமணி ஆகியோருக்கும் பிரபாகரனுக்குமிடையே இருந்த நல்லுறவு, அவர்கள் சிறைப்பட்ட பிறகு மற்றவர்களிடம் இருக்கவில்லை. தங்கதுரை, குட்டிமணி ஆகியோரை சிறையிலிருந்து தப்புவிக்க பிரபாகரன் வகுத்த திட்டத்தைச் செயல்படுத்துவதில் "டெலோ' இயக்கத்தைச் சேர்ந்த மற்றவர்கள் தயக்கம் காட்டினார்கள்.
எனவே பிரபாகரனும் அவரது தோழர்களும் 1981-ஆம் ஆண்டின் இறுதியில் "டெலோ'விலிருந்து பிரிந்தார்கள். டெலோவிலிருந்தபோது சிங்களப் போலீஸôரிடமிருந்து பறிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பணத்தை டெலோவிடமே பிரபாகரன் ஒப்படைத்தார். (பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் (1988)--பழ. நெடுமாறன்)
மேற்கண்ட சம்பவம் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறது. ஆயுதப் போராட்டக் குழுக்கள் ஒன்றிணைவது என்பதில் பிரபாகரனுக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அப்படிப்பட்ட முயற்சிகளுக்கு அவர் தடையாக இருக்க விரும்பவில்லை என்பதுதான் உண்மை.
1984-ஆம் ஆண்டில் டாக்டர் பஞ்சாட்சாரம் நியூயார்க்கில் உலகத் தமிழ் மாநாடு ஒன்றினைக் கூட்டினார். அதன் நோக்கம் இலங்கை போராளி இயக்கங்களை ஒன்றிணைப்பதுதான். டாக்டர் பஞ்சாட்சாரத்தின் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து பிரபாகரன் எழுதிய கடிதத்தில்,
""விடுதலை இயக்கங்களை ஒன்றிணைத்து தேசிய அரசியல் ராணுவத் தலைமையை உருவாக்குவது மாநாட்டின் நோக்கங்களில் ஒன்று என்பதாகத் தெரிகிறது. இவ்வித ஒற்றுமை முயற்சிகள் தமிழீழத்தில் மேற்கொள்ளப்படுவதையே விரும்புகிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரபாகரன் அக்கடிதத்தில் தெரிவித்திருந்த இன்னொரு கருத்து, ""தமிழ்நாட்டிலோ, வெளிநாடுகளிலோ இருந்து கொண்டு ஒற்றுமையைப் பற்றிப் பேசாமல் நேரடியாகக் களத்திற்கு வந்து ஒன்றுபட்டுப் போராடுவதற்கு சகல குழுக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்'' என்பதாகும்.
அதுமட்டுமின்றி, ""ஒற்றுமைக்கு நல்லெண்ணச் சூழல் அவசியம். ஒருவரையொருவர் விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். நம்மிடையே உள்ள வெறுப்புணர்வைக் களைய வேண்டும். சொல் அளவில் இல்லாமல் சகோதர விரோத யுத்தம் நடத்துவதை நிறுத்த வேண்டும். ஆகவே சகல புரட்சிகர விடுதலை அமைப்புகளுக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள், போர்க்களத்தில் குதியுங்கள். நமது பொது எதிரியை ஒன்றிணைந்து எதிர்ப்போம். அப்போது முழு தேசமுமே நமக்கு பக்கபலமாக நிற்கும். (பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்--பழ. நெடுமாறன்)
இக்கடிதம் நியூயார்க் மாநாட்டில் வாசிக்கப்பட்டதும் பத்திரிகைகளிலும் அக்கருத்து வெளியாகி நல்ல பலனைத் தந்தது. 1985-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழீழ இயக்கத் தலைவர் வே. பிரபாகரன், தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் (டெலோ) சிறி சபாரத்தினம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எஃப்.) தலைவர் கா. பத்மநாபா, ஈழப்புரட்சி அமைப்பு (ஈரோஸ்) தலைவர் வே. பாலகுமார் ஆகியோர் ஒன்று கூடி ஓர் அறிக்கையினை வெளியிட்டனர்.
"தமிழீழப் போராட்டத்தில் புதிய திருப்பம்! விடுதலை அமைப்புகள் ஒன்றுபட்டன!!' என்று தலைப்பிட்ட அவ்வறிக்கையில், ஈழத் தமிழ் பேசும் மக்களின் தேசிய சுதந்திரப் போராட்டத்தை நடத்துவதில் ஒன்றுபட்டுச் செயல்பட ஈழத் தேசிய விடுதலை முன்னணியும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் முடிவு செய்துள்ளன என்று தெளிவாக்கப்பட்டிருந்தது.
1984-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்ட ஈழத் தேசிய விடுதலை முன்னணி, விடுதலைப்புலிகள் தவிர மூன்று முக்கிய விடுதலை அணிகளின் கூட்டமைப்பாகும். தமிழீழ விடுதலை இயக்கம் (பஉகஞ) ஈழப் புரட்சி அமைப்பு (உதஞந) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (உடதகஊ) ஆகியவை இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
புரட்சிகர ஆயுதப் போராட்டப் பாதையைத் தழுவிக் களத்தில் போராடும் இந்த நான்கு விடுதலை இயக்கங்கள் மத்தியில் ஒருமைப்பாடு ஏற்பட்டது தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும்.
ஈழத்தமிழரின் சுதந்திரப் போரில் ஒரு திருப்புமுனையாக அமைந்த இந்நிகழ்ச்சி புரட்சிகர சக்திகளை ஒன்றிணைத்து ஆயுதப் போராட்டத்தை ஒருமுகப்படுத்தி வலுப்படுத்த வழிகோலியது' என்று குறிப்பிட்ட அறிக்கை, இக்குழுக்களின் ஒன்றிணைப்பான அணிக்கு ஈழத் தேசிய விடுதலை முன்னணி (உங்ப்ஹம் சஹற்ண்ர்ய்ஹப் கண்க்ஷங்ழ்ஹற்ண்ர்ய் ஊழ்ர்ய்ற் -உசகஊ) என்று பெயரிட்டுக் கொண்டதோடு, கீழ்க்காணும் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றுபட்டுச் செயல்படுவது எனவும் தீர்மானித்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அவை வருமாறு:-
1. ஸ்ரீலங்கா ஆதிக்கத்திலிருந்தும், அடக்குமுறையிலிருந்தும் எமது தாயகத்தின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் வென்றெடுத்தல்.
2. இலங்கைவாழ் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுகின்ற தனியரசைத் தவிர்த்த வேறெந்த குறைந்தபட்ச சமரசத் திட்டத்தையும் அங்கீகரிப்பதில்லை.
3. பரந்துபட்ட மக்களின் பங்களிப்போடு பரிணாமம் பெறும் வெகுஜன ஆயுதப் போராட்டத்தை (மக்கள் போராட்டத்தை) எமது போராட்டப் பாதையாகக் கொள்ளுதல்.
4. தேசிய சுதந்திரப் போராட்டத்தோடு, சோஷலிசப் புரட்சியையும் முன்னெடுத்து, சுதந்திரத் தமிழ்நாட்டில் சோஷலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்.
5. உலக ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து எமது தேசத்தைப் பூரணமாக விடுவித்து, அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடித்தல்.
""தற்போது ஒப்புக் கொள்ளப்பட்ட குறைந்தபட்ச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் முக்கிய அரசியல் பிரச்னை குறித்து ஒன்று கூடிக் கலந்தாலோசித்து முடிவெடுப்பது என்றும், ஸ்ரீலங்கா அரசுப் படைகளுக்கெதிரான எமது ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை ஒன்றுபடுத்திச் செயற்படுத்துவதெனவும் தீர்மானித்துள்ளோம்.
எமது இந்த ஒருமைப்பாடு விரிவுபட்டு வலுப்பெற ஒத்துழைப்பும் ஆதரவும் தருமாறு எமது மக்களின் விடுதலையில் அபிமானம் கொண்ட சகல தமிழ் மக்களையும் வேண்டிக் கொள்கிறோம்''--இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
"இயக்கங்களுக்கிடையே ஐக்கியம் ஏற்பட்டதும் சிங்கள அரசு மிகவும் பயந்துபோனது. 1986-ஆம் ஆண்டு, ஜூலை 28-ஆம் தேதி, ஈ.பி.ஆர்.எல்.எஃப்.-ம், எல்.டி.டி.ஈ.-யும் இணைந்து யாழ்ப்பாண கோட்டை மீது தாக்குதல் தொடுத்தது. இத்தாக்குதலில் லெப். கர்னல் விக்கிரம நாயக்காவும், செனிவரட்னாவும் கொல்லப்பட்டு, கர்னல் கப்பு ஆராய்ச்சியும் கேப்டன் ஜெயவர்த்தனாவும் வேறு ஒருவரும் படுகாயம் அடைந்தனர். இவை தவிர எவ்வளவோ பட்டியல் போட முடியாத தாக்குதல்களையும் இந்த ஒன்றிணைப்பு அணி நடத்தியது. (ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்--புஷ்பராஜா)
உலகத் தமிழர்கள் மத்தியிலும் இந்த இணைப்பு முயற்சி நல்லதொரு நிறைவை அளித்தது.
 
மூலம்: தினமணி
ஆக்கம்: பாவை சந்திரன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.