Saturday 30 May 2020

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (111-117)

111: புலேந்திரன், குமரப்பா தற்கொலை!
சிங்களக் கடற்படையினரால் ஆயுதம் கடத்துவதாகக் கூறி, படகைச் சுற்றி வளைத்துக் கைது செய்யப்பட்ட குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டோர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அமைதிப்படைத் தலைவருக்கும், இந்திய தூதுவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று அவர்கள் சொன்னதை சிங்களக் கடற்படையினர் சட்டை செய்வதாக இல்லை.

அவர்கள் அனைவரும் பலாலி ராணுவ முகாமுக்குக் கொண்டுவரப்பட்டு, காவலில் வைக்கப்பட்டனர். அவர்களுக்கு விலங்கு பூட்ட வேண்டும் என்று சிங்களத் தளபதி வலியுறுத்தினார். ஆனால் அம்முடிவை அமைதிப்படை ஏற்கவில்லை.
கைதானவர்களில் புலேந்திரன் இருப்பதை அடையாளம் கண்ட இலங்கை கடற்படை பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்தது. காரணம், ஏப்ரல் 1987-இல் திருகோணமலையில் நடைபெற்ற வாகனத் தகர்ப்பு சம்பவத்தில் சிங்களர்கள் இறந்ததையொட்டி, விடுதலைப்புலிகளின் திருகோணமலை தளபதி புலேந்திரன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. எனவே அவரையும் மற்றவர்களையும் கொழும்புவுக்குக் கொண்டு செல்ல இலங்கை கடற்படை விரும்பியது. பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலியும் அவர்களை உடனே கொழும்பு கொண்டு வரும்படி உத்தரவிட்டார்.
இதுகுறித்து அறிந்ததும் மாத்தையா, இந்திய அமைதிப்படைத் தளபதிகளிடம் பேசினார். ""அனைத்துப் போராளிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் கைது செய்வது - ஒப்பந்த மீறலாகும். அவர்கள் ஆயுதம் எதுவும் கடத்தவில்லை. தங்கள் பாதுகாப்புக்கு என்று துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். இதுவும் கூடத் தளபதிகளுக்கு அனுமதிக்கப்பட்ட சலுகைதான். இந்த நிலையில் அவர்களை விடுவிப்பது அமைதிப்படையின் பொறுப்பாகும்' என்று வாதிட்டார்.
அமைதிப்படையினரும் சிங்களக் கடற்படையினர் செய்தது சரியில்லை என்று கூறி, அவர்களை விடுவிக்க முயற்சி எடுக்கிறோம் என்று உறுதி கூறினர்.
இது குறித்து பழ.நெடுமாறன் எழுதியுள்ள நூலில், மாத்தையா தன்னிடம் சொன்ன தகவல்களைப் பதிவு செய்துள்ளார். அதில் மாத்தையா சொல்கிறார்:
""நானும் நடேசனும் ராணுவ முகாமுக்குச் சென்று எங்களது தோழர்களைப் பார்த்தோம். அவர்கள் யாரும் எதைப்பற்றியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். பின்பு எல்லாரையும் வீடியோ படம் எடுத்தோம். அவரவர் தம் குடும்பத்தினருக்குக் கடிதம் எழுதிக் கொடுத்தார்கள்.
புலேந்திரன் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், "எல்லாச் சோதனைகளிலும் வென்றிருக்கிறேன். இதிலும் நிச்சயமாக வெல்வேன். இல்லாவிட்டால் லட்சியத்திற்காகச் சாவேன்' என்று எழுதியிருந்தார்.
குமரப்பா தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில், "அவர் எப்போதும் விரும்பிப் படிக்கும் பாடல் ஒன்றை நினைவுப்படுத்தி' எழுதியிருந்தார்.
கரன் என்ற தோழர் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், "மகனை ஒரு மாலுமியாக' ஆக்குமாறு குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களது விருப்பங்களை எழுதிக் கொடுத்தனர்.
இதற்கிடையில், இந்திய அமைதிப்படை இவர்களுக்கு உணவு கொண்டு வந்தது. அவ்வுணவை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். எனவே, அவர்களுக்கு வெளியே இருந்து உணவு வரவழைத்துக் கொடுத்தேன்.
பின்னர் மேஜர் ஹர்கிரத் சிங்கைச் சந்தித்தேன். அவர் நியாயங்களை உணர்ந்து பேசினார். ஆனாலும் இந்தியத் தூதுவர் தீட்சித்திடம் இருந்து வந்த செய்தியை அவர் தெரிவித்தார். "இடைக்கால அரசை விடுதலைப்புலிகள் ஒப்புக் கொண்டால், அனைவரையும் விடுதலை செய்வதாக தீட்சித் கூறுகிறார்' என்று அவர் தெரிவித்தார்.
எங்களை நிர்ப்பந்தப்படுத்தி இடைக்கால அரசை ஏற்கவைக்க முயலுகிறார்கள் என்பது புரிந்தது. நிபந்தனை என்றால் அது தேவையில்லை. ஒப்பந்தப்படி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. பொதுமன்னிப்பு வழங்கிய நிலையில் கைது நடவடிக்கை அத்துமீறல் என்று சொல்லவேண்டும் என்று வலியுறுத்தினோம். எங்கள் வசமுள்ள சிங்களக் கைதிகள் 8 பேரையும் விடுதலை செய்கிறோம். பதிலுக்கு எங்கள் தோழர்களை விடுதலை செய்யுங்கள்' என்று கேட்டோம்.
இதற்கும் அவர்கள் தரப்பிலிருந்து சரியான பதில் இல்லை. இதன்பின் பிரபாகரன் என் மூலம், ஹர்கிரத் சிங்கிற்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
"எமது பிராந்தியத் தளபதிகளையும் மற்றும் முக்கிய உறுப்பினர்களையும் ஸ்ரீலங்கா ஆயுதப்படையினர் கைது செய்து காவலில் வைத்திருப்பது இந்திய - இலங்கை உடன்படிக்கையின் அடிப்படை அம்சத்தையே மீறுவதாக அமைகிறது.
உடன்படிக்கையின்படி இலங்கைக் குடியரசுத் தலைவர் எமக்குப் பொதுமன்னிப்பு வழங்கியிருக்கிறார். இந்திய அரசு எமக்குப் பாதுகாப்பு தருவதென உறுதிமொழி அளித்துள்ளது.
இப்பொழுது சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் எமது வீரர்கள் எந்தவொரு குற்றச் செயலையும் செய்யவில்லை. அவர்கள் தென்னிந்தியாவிலுள்ள விடுதலைப் புலிகள் அலுவலகத்திலிருந்த ஆவணங்களையும் புத்தகங்களையும் இங்கு கொண்டு வருவதற்காகச் சென்றனர். ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இது தொடர்பாக இந்தியக் கடற்படையினரிடம் உதவி கோரியிருந்தோம். ஆனால் அவர்கள் இவ்விஷயத்தில் எதுவித முடிவும் எடுக்காத நிலையில், எமது சொந்தப்படகில் ஆவணங்களையும் புத்தகங்களையும் கொண்டுவரத் தீர்மானித்தோம்.
எமது தளபதிகள் சொந்தப் பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை மட்டும் வைத்திருந்தனர். இப்பொழுது எமது தளபதிகளும் முக்கிய உறுப்பினர்களும் பலாலி விமான தளத்தில் அமைதிப்படையின் மேற்பார்வையுடன் ஸ்ரீலங்கா ராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அமைதிப்படையினர் இவர்களுடைய பாதுகாப்பிற்கு உறுதியளிக்கவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இவர்களை ஸ்ரீலங்கா ராணுவம் கொழும்பு கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது.
ஸ்ரீலங்கா படையினர் அவர்களை பலாத்காரமாகக் கொழும்புக்குக் கொண்டு செல்ல முயன்றால், அவர்கள் சயனைட் அருந்தி தம்மைத்தாமே அழித்துக் கொள்வார்கள்.
இவ்விதமான துர்ப்பாக்கிய சம்பவம் நிகழுமானால் அதனால் எழக்கூடிய பாரதூரமான விளைவுகளுக்கு இந்திய அமைதிப் படையே பொறுப்பேற்க வேண்டும்.
எமது தளபதிகளும், முக்கிய உறுப்பினர்களும் இறக்க நேரிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் யுத்த நிறுத்தத்தைத் தொடரப்போவதில்லை. தமிழ்ப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இந்திய அமைதிப்படையினருக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம். அமைதியையும், இன ஒற்றுமையையும் நிலைநாட்டுவதில் உறுதிகொண்டிருக்கும் இந்திய அரசும், இந்திய அமைதிப் படையினரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எமது உறுப்பினர்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய ஆவன செய்யவேண்டும்'' என்று அந்தக் கடிதத்தில் வேண்டுகோள் விடப்பட்டிருந்தது.
இக்கடிதத்தை ஹர்கிரத் சிங்கிடம் சேர்த்தபோது அவருடன் பிரிகேடியர் ஃபெர்னாண்டஸ் மற்றும் மொழிபெயர்ப்பாளர் பெரியசாமி இருந்தனர்.
நிலைமை அவர்களுக்குக் கவலையளித்தது. இவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஹெலிகாப்டர் ஆயத்த நிலையில் இருந்தது. இதுகுறித்து கேட்டபோது, பயிற்சிக்காக அவ்வாறு செய்வதாகக் கூறப்பட்டது.
நான் கோபமுற்று, "எங்கள் தோழர்களை இங்கிருந்து கொழும்பு கொண்டு போனால், அடுத்த முறை அவர்களது உடல்களை எடுத்துச் செல்லவே வருவேன்' என்று கூறினேன்.
தீபிந்தர்சிங் தில்லிக்குச் செய்தி அனுப்பினார். தில்லியில் ஜெயவர்த்தனாவின் செல்வாக்கே கொடிகட்டிப் பறந்தது.
மறுநாள் பகல் இரண்டு மணியளவில் 17 தோழர்களுக்கு இந்திய அமைதிப்படை அளித்த பாதுகாப்பு விலக்கப்பட்ட நிலையில், ஸ்ரீலங்கா படையினர் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். இது என்ன மாற்றம் என்று வினவியபோது, பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றிருந்த லெப்.கர்னல் பிரார், "இப் பிரச்னையில் நாங்கள் தலையிடக்கூடாதென தில்லியிலிருந்து ஆணை வந்துள்ளது' என்றார்.
அதற்குமேல் ஹர்கிரத் சிங்கால் எதையும் செய்யமுடியவில்லை.
மாலை 5 மணிக்கு சிங்கள வீரர்கள் புலிகள் இருந்த அறையின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைய முயன்றபோது, 17 புலிகளும் சயனைட் குப்பிகளைக் கடித்தனர். சில விநாடிகளில் 12 பேர் உயிர்கள் பிரிந்தன. எஞ்சிய 5 பேரும் எப்படியோ பிழைத்துக் கொண்டனர். மறுநாள் மாலை 4 மணியளவில் 12 பேர் உடல்களும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டன' இவ்வாறு மாத்தையா குறிப்பிட்டிருந்தார்.
112: எம்.ஜி.ஆர். வெளியிட்ட அஞ்சலி!
மாத்தையாவிடம் ஒப்படைக்கப்பட்ட தளபதிகள் புலேந்திரன், குமரப்பா மற்றும் முக்கிய உறுப்பினர்களான அப்துல்லா, ரகு, தவக்குமார், நளன், அன்பழகன், பழனி, ஆனந்தகுமார், ரெஜினால்ட், கரன், மிரேஷ் ஆகியோரின் உடல்களில் மிக மோசமான இரத்தக் காயங்களுடன் இருவர் உடல்கள் இருந்தன.
அவை குமரப்பா, புலேந்திரன், உடல்கள்தான். ஏராளமான காயங்கள். அவர்கள் உயிர்போன பின்னும் சிங்கள வெறியர்களின் ஆத்திரம் தீரவில்லை. கொத்திக் குதறிப் போட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து மாத்தையா, பழ. நெடுமாறனிடம் மேலும் கூறியதாவது:
""12 தோழர்களின் உடல்களைப் பார்த்த எங்கள் தலைவர் பிரபாகரன் கலங்கினார். இளம் வயதிலிருந்து அவர்களோடு பழக்கம். துக்கம் மேலோங்க அது வெஞ்சினமாக மாறிற்று. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிதைக்கு எங்கள் தலைவர் தீ வைத்தபோது எங்கள் நெஞ்சங்களும் கனன்று எழுந்தன. இனி எங்களையும், எங்கள் மக்களையும் பாதுகாக்க இந்திய அமைதிப் படையை நம்பிப் பயனில்லை. நாங்கள் ஆயுதம் தூக்கினோம். எங்கள் பாதுகாப்புக்காகத்தான் இவ்வாறு செய்தோம். இரு அரசுகளும் எங்களை அழிப்பது என்று முடிவெடுத்தபோது நாங்கள் மானமுடன் வாழவும் சாகவும் ஒரே வழி போராட்டம்தான். அடிமைகளாகக் கொல்லப்படுவதைவிடப் போராடி இறப்பது எவ்வளவோ மேல் என உறுதி பூண்டோம்'' என்றார் மாத்தையா.
ஜெயவர்த்தனா விரும்பியது இதைத்தான். இந்திரா அம்மையார் பயிற்சி கொடுத்தார். ஆயுதம் கொடுத்தார். எனவே இந்திராவை எதிரியாகக் கருதினார் ஜெயவர்த்தனா. ஆனால் பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் மாற்றுக் கருத்துக்கிடையே நட்பு பூண்டார்; ஒப்பந்தம் போட்டார். தான் செய்ய வேண்டிய வேலையை இந்தியப் படையிடம் தள்ளிவிட்டார். இந்திரா காந்தியின் மொழியில் சொல்வது என்றால் ஜெயவர்த்தனா என்கிற கிழட்டுக் குள்ளநரியின் ராஜதந்திரம் வென்றுவிட்டது.
இந்தச் சம்பவம் என்பது தற்செயல் அல்ல. "செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து இலங்கை கடற்படை, இந்தியக் கப்பல் படையுடன் சேர்ந்து ரோந்து சுற்றப் போகிறோம்' என்று தீட்சித், ஹர்கிரத் சிங்கிடம் செப்டம்பர் 11 அன்று கூறியதை இங்கே நினைவில் கொள்வது தகும்.
அதுமட்டுமின்றி 17 புலிகளை, சிங்களக் கடற்படையினர் சுற்றி வளைத்தபோது, அந்தச் செய்தியை ஹர்கிரத் சிங், தீட்சித்திடம் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அப்போது அவர் சிறிய விடுமுறையில் இந்தியாவில் இருந்தார். இதைக்கேட்டபோது தீட்சித் சொன்னது, "நான் கொழும்பு திரும்பியதும் இதுகுறித்து உயர்ந்த பட்ச நடவடிக்கை எடுக்கிறேன்' என்பதாகும்.
அக்டோபர் 3-ஆம் தேதி லெப். ஜெனரல் தீபிந்தர் சிங் சென்னையிலிருந்து கொழும்பு சென்றார். அங்கு அவரும் தூதுவர் தீட்சித்தும் ஜெயவர்த்தனாவைச் சந்தித்து வற்புறுத்தியும் எதுவும் நடக்கவில்லை. மாறாக, ஹர்கிரத் சிங்கை திருகோணமலைக்கு உடனே சென்று அங்கு பாதுகாப்பைப் பலப்படுத்த உத்தரவிட்டார்.
புலேந்திரன் கைதால் அங்கு பிரச்னை எழும் என்ற கணிப்பில் பிறந்த உத்தரவு அது. மறுநாள் தீபிந்தர் சிங் கொழும்பிலிருந்து திருகோணமலை வந்து ஹர்கிரத் சிங்கிடம், "இலங்கை அரசு 17 பேரையும் விடுவிக்க மறுக்கிறது' என்று கூறியதாக அவர் தனது நூலில் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, இதே சம்பவத்தை தீட்சித் தான் எழுதிய நூலில் வேறு விதமாக எழுதியிருப்பதாக ஹர்கிரத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
தீட்சித் கூறியிருப்பதாவது, "பலாலி விமான தளத்தில் போராளிகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கச் சொன்னதாகவும், அக்டோபர் 2,3-ல் இதுகுறித்து மேஜர் எதுவும் பேசவில்லை என்றும், அன்றாடம் எழுதும் ரஹழ் க்ண்ஹழ்ஹ்’-ல் இதுகுறித்து எழுதவில்லை' என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே தீபிந்தர் சிங் அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டு, போராளிகளை எக்காரணம் கொண்டும் கொழும்புக்கு அனுப்பக் கூடாது என்று சொன்னதாகவும், தான் தில்லியில் இருப்பதாகவும் தெரிவித்ததாக அந்நூலில் எழுதியுள்ளதாக ஹர்கிரத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகார் குறித்து ஹர்கிரத் சிங் தனது நூலில் மேலும் கூறுகையில், "ராஜதந்திர அலுவல் முறையில் ஏற்பட்ட தோல்வியால் இவ்வாறு திசை திருப்பப்படுகிறது. 17 போராளிகளைப் பாதுகாக்கவில்லை என்பது சரியல்ல. நான் எனது மேல் அதிகாரியிடம் போராளிகள் கொழும்பு செல்வதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினேன். அதுமட்டுமின்றி இந்தியத் தூதுவர் உடனே கொழும்பு சென்று, இலங்கை அரசுத் தரப்பில், உயர்மட்டத்தில் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கண்ட தகவல்களில் முரண்பாடுகள் உண்டென்றாலும் ஈழத்தமிழர் பிரச்னையில் "இந்திய மேலிடத்தின்' பொதுவான அணுகுமுறை என்னவென்பது இதன்மூலம் புரிய வரும்.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஈழத் தமிழ் மக்களின் போராட்டங்களைப் பற்றிய அக்கறையுடன் இருந்தார் என்பதற்கு ஓர் உதாரணம் திலீபன் மறைவுக்கு அவர், விடுத்த இரங்கல் செய்தியாகும்.
அவரது இரங்கல் செய்தியில், "திலீபன் அவர்கள் இந்திய அரசுக்கு ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து பட்டினிப் போர் தொடங்கி 12 நாட்கள் ஒரு சொட்டு நீர் கூட குடிக்காமல் 26.9.87-இல் மடிந்து போனார் என்பதை அறிந்து வருந்துகிறேன். எனது சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவிக்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.
அதேபோன்று புலேந்திரன், குமரப்பா மரணத்துக்கும் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து அறிக்கை வெளியிட்டார். அவ்வறிக்கையில், ""தங்களால் கைது செய்யப்பட்ட 17 விடுதலைப் புலிகளையும் இலங்கைக் கடற்படை இந்திய அமைதிப் படையிடம் ஒப்படைத்து இருக்குமானால் அவர்களுள் 12 பேர் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்கள். வன்முறைகளும் வெடித்து இருக்காது.
இந்திய-இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் இடைக்கால அரசு ஒன்று ஏற்பட வேண்டிய நேரத்தில் வன்முறைகள் வெடித்ததும், அதில் இந்திய அமைதிப் படையும் விடுதலைப் புலிகளும் இறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதும் கவலைக்குரியது.
இந்தக் கடினமான பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு காணத் தொடர்ந்து முயற்சி மேற்கொள்வேன். தமிழக அரசு இதுபற்றி எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு தருமாறு தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்'' (11.10.1987 செய்தித்தாள்கள்) என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிக்கை இந்திய அரசைச் சங்கடத்தில் ஆழ்த்தியது.
113: போர் நிறுத்தம்: எம்.ஜி.ஆர். வலியுறுத்தல்!
ஜெயவர்த்தனாவை இந்தியத் தரப்பினர் சந்தித்தபோது, புலிகள் மீது போர் தொடுக்காவிட்டால் ஒப்பந்தம் ரத்தாகும் என்று அவர் மிரட்டினார். இந்தியத் தரப்பினர் திகைத்து, தில்லிக்கு தகவல் அளித்தனர்.
குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டோரை விடுவிப்பது குறித்து தீபிந்தர் சிங் தனது நூலில் வெளிப்படுத்தி உள்ளார். அதன் விவரம் வருமாறு:
கொழும்பு சென்று ஜெனரல் ரணதுங்கே, ஜெயவர்த்தனா உள்ளிட்டவர்களைச் சந்தித்து, கைதானவர்களை விடுவிக்கும்படி தீபிந்தர்சிங் கோரினார். ஜெயவர்த்தனா கோபமுற்று, "இந்திய ராணுவ பலம் எவ்வளவு? வலிமை வாய்ந்த ராணுவம் என்று கூறி வருகிறீர்கள். உங்களால் விடுதலைப் புலிகளை ஒடுக்க முடியவில்லையே ஏன்? எங்கள் நாட்டில் எதிர்க்கட்சிகளும்- எங்களது கட்சியினரும் கூட உங்களை இந்தியாவுக்குத் திரும்ப அனுப்பும்படி வற்புறுத்துகிறார்கள்' என்று கோபத்துடன் கூறினார்.
""அமைதியாகப் பிரச்னையைத் தீர்ப்பதற்காகத்தான் நாங்கள் வந்துள்ளோம். மேலும் படைப் பிரிவுகள் வந்ததும் எங்கள் பணியை மேற்கொள்வோம்'' என்றார் தீபிந்தர் சிங்.
அக்டோபர் 6-ஆம் தேதி ஜெனரல் சுந்தர்ஜி யாழ்ப்பாணம் வந்தார். "புலிகளுடன் போர் தேவையில்லை. நிலைமை சாதகமாக இல்லை. போர் என்றால் 20 ஆண்டுகள் நீடிக்கும்' என்று அவரிடம் தீபிந்தர் சிங் தெரிவித்தார்.
"தோல்வி மனப்பான்மையால் பேசக் கூடாது' என்று அவர் கூறினார்.
"யதார்த்தமான நிலையைக் கூறுகிறேன்' என்றார் தீபிந்தர் சிங்.
விடுதலைப் புலிகளை ஒடுக்கும்படி கூறிவிட்டு, சுந்தர்ஜி கொழும்பு சென்றார்.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் கே.சி. பந்த், இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி சுந்தர்ஜி ஆகிய இருவரும் இருபுறமும் அமர்ந்திருக்க, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜெயவர்த்தனா. சில அறிவிப்புகளை அப்போது அவர் வெளியிட்டார்.
(அ) வடக்கு-கிழக்கு மாநிலத்திற்கு இடைக்கால நிர்வாக சபை (அரசு) இனி மேல் கிடையாது.
(ஆ) விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
(இ) பிரபாகரனை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துத் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும்.
(ஈ) கிழக்கு மாநிலத்தில் உள்ள சிங்களவர்களுக்கு இந்திய அமைதிப் படை மீது நம்பிக்கை இல்லாததால், அவர்களைப் பாதுகாக்க, இலங்கை ராணுவப் படை அங்கே அனுப்பப்படும்.
(உ) இலங்கையில் உள்ள இந்திய அமைதிப் படை இனி, எனது ஆணைப்படிதான் செயற்படும்.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பது ஜெயவர்த்தனாவின் புதிய அறிவிப்பால் அடியோடு தகர்க்கப்பட்டது. ஜெயவர்த்தனாவின் இருபுறமும் அமர்ந்திருந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் கே.சி. பந்தோ, ஜெனரல் சுந்தர்ஜியோ மாற்றுக் கருத்து எதுவும் கூறாமலும், ஒப்பந்தத்தில் இல்லாத இந்த அறிவிப்புக்கு எதிர்த்துக் குரல் கொடுக்காமலும் இருந்தனர். அவர்களது மௌனம்- ஜெயவர்த்தனாவின் அதிகாரத்திற்குக் கட்டுப்படுவதான சம்மதமாகி விட்டது. இந்தியாவும் கூட இது குறித்து அந்த நாளிலோ, அதற்கடுத்த வாரத்திலோ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவே இல்லை.
இந்திய அமைதிப் படையின் நோக்கம், இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதுதான் என்று இருந்த நிலை மாறி, பிற இயக்கங்களுக்கு மீண்டும் ஆயுதங்கள் அளித்து, பயிற்சியும் அளிக்கப்பட்ட பிறகு, அவர்களிடையே மோதல்கள் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாததானது. அமைதிப் படை எல்லாக் குழுவினருக்கும் பொதுவானது என்ற நிலையில் ஏற்பட்ட இம்மாற்றத்தால் வந்த விளைவு இது.
நாளடைவில் விடுதலைப் புலிகளுக்கு மக்களிடையே இருக்கிற நம்பிக்கை மற்றும் செல்வாக்கை முறியடிக்கவும், அதற்கான பிரசாரத்தில் ஈடுபடவும் அமைதிப் படைக்குப் பணிக்கப்பட்டது. இந்த உத்தரவு அமைதிப் படைத் தளபதிகளுக்கு உவப்பாக இல்லை. இருந்தாலும் அவர்களால் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை. முடிவு எடுக்கும் அதிகாரம் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரகத்துக்கு மாற்றப்பட்டது.
புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட போராளிகளின் மரணத்தைத் தொடர்ந்து, "பிரபாகரன் கைது' என்ற செய்தி பரப்பப்பட்டு, அவை பத்திரிகைகளிலும் வெளியாயிற்று.
இந்தச் செய்தியை மறுத்து பழ. நெடுமாறன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்தனர். இந்தத் தகவலை அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கும் ஃபேக்ஸ் மூலம் தெரிவித்தனர். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். அனுமதியுடன் அ.இ.அ.தி.மு.க.வும் கலந்துகொண்டது.
விடுதலைப் புலிகளுடனான அமைதிப் படையின் போரை நிறுத்தி, அவர்களுடன் மீண்டும் பேச்சு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி- அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் போட்டதுடன், அதனை வலியுறுத்தி 17.10.1987 அன்று கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தம் செய்வது என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதை வலியுறுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்த நிலையிலேயே மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டார். அவ்வறிக்கையில்,
""சிங்கள அரசிடமிருந்து 12 பேர்களை மீட்க வாய்ப்பு இருந்தும் இந்திய அமைதிப் படை முயற்சி எடுக்கவில்லை. மாறாக, ஈழத் தமிழர்களுக்குப் பல வழிகளில் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டது. வன்முறையும் பெருமளவில் வெடித்தது.
இந்திய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தி தமிழகம் முழுவதும் 17.10.1987 அன்று முழு அடைப்புக்கு ஆதரவு அளித்து, தமிழக மக்கள் கடைகளை அடைத்து தமிழக மக்களின் ஒருமித்த உணர்வை உலகுக்குத் தெரிவிக்க வேண்டும்- என்றும், எம்.ஜி.ஆர். அதில் கேட்டுக் கொண்டிருந்தார். (16.10.1987 விடுதலை; எம்.ஜி.ஆரும் ஈழத்தமிழரும்: வே. தங்கநேயன் நூலில் வந்தவாறு)
114: அமைதிப்படையின் முதல் தாக்குதல்!
ஆளும் கட்சியின் ஆதரவுடன் நடந்த அந்த முழு அடைப்பு, தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருந்தது.
முழு அடைப்பு நாளன்று கா.காளிமுத்து அளித்த பேட்டியில், ""சிங்கள ராணுவம் விடுதலைப் புலிகளைக் கைது செய்து சித்திரவதைக்கு ஆளாக்க முற்பட்ட நிலையிலும் அதைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்திய ராணுவத்திற்கு, பிரபாகரனை ஆயுதத்தைக் கீழே போடச் சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது?'' என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ""பிரபாகரனுக்கு ஏதும் நேர்ந்தால் தமிழகம் தாங்காது என்றும், தமிழ் மாநிலம் ரத்தக் களறியாக மாறும் என்றும் தமிழ்நாட்டு இளைஞர்களை ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய அரசியல் நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கி விடக் கூடாது; இதை முதல்வரின் கருத்தாகத் தெரிவிக்கிறேன்'' என்றும் அவர் கூறினார். (16.10.1987 விடுதலை; எம்.ஜி.ஆரும் ஈழத்தமிழரும்: வே.தங்கநேயன் நூலில் வந்தவாறு).
அ.இ.அ.தி.மு.க. சார்பில், அவ்வியக்கத்தின் 16-வது ஆண்டு விழாக் கூட்டங்களில், ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், ராஜீவ் காந்திக்கு எம்.ஜி.ஆர். எழுதிய கடிதத்துக்கு மதிப்பளித்து போர் நிறுத்த அறிவிப்பு வெளியிடுமாறும் வற்புறுத்தப்பட்டது.
மேலும் அக் கூட்டங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா அழைத்துப் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க.வின் இப்போக்கு இந்தியத் தலைமைக்கு ஒவ்வாத ஒன்றாக ஆனது. மத்திய அமைச்சரவையின் அரசியல் குழு கூட்டப்பட்டு, அதில் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும், அந்த யோசனை மறுக்கப்பட்டது என்றும் அறிக்கை வெளியிட்டதும் அசாதாரணமானது.
தொடர்ந்து சென்னையில் வசித்து வரும் கிட்டுவை கைது செய்து சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர். இந்த உத்தரவுக்கு இணங்கவில்லை. வேண்டுமானால் அவரை வீட்டுக் காவலில் வைக்கலாம் என்று வீட்டுக் காவலில் வைத்தார்.
வீட்டுக் காவலில் கிட்டு வைக்கப்பட்டாலும், பழ.நெடுமாறன், கி.வீரமணி உள்ளிட்டோர் சந்திக்கவும், தினசரி பத்திரிகையாளர்கள் சந்திக்கவும் தமிழகப் போலீஸôர் எந்தத் தடையையும் விதிக்கவில்லை (பழ.நெடுமாறனிடம் நேர்காணல்).
"இந்த நிலையில் பிரதமர் ராஜீவ் காந்தி அமெரிக்கா சென்றார். அப்போது அவரைச் சந்திக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். அவரிடம் அளிப்பதற்கான ஒரு குறிப்பைத் தயார் செய்து அனுப்பும்படி எம்.ஜி.ஆரிடமிருந்து தகவல் வந்ததாக எனக்குச் செய்தி அனுப்பினார்கள்.
அந்த வேண்டுகோளுக்கிணங்க நானும், கி.வீரமணியும் குறிப்புகள் எழுதி ஃபாக்ஸ் மூலம் அனுப்பினோம். தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் எம்.ஜி.ஆர். வாஷிங்டன் பறந்து சென்றார். அங்கு ராஜீவ் காந்தியைச் சந்தித்து போர் நிறுத்தம் செய்யும்படியும், பிரபாகரனுடன் பேசும்படியும் வேண்டிக்கொண்டார். ஆனால் எம்.ஜி.ஆரின் கோரிக்கையை ராஜீவ் ஏற்கவில்லை.
மனம்நொந்த நிலையில் எம்.ஜி.ஆர். சென்னை திரும்பினார்.
இலங்கையிலோ, ஜெயவர்த்தனாவின் பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு எல்லாமே தலைகீழாகி விட்டது. இந்தியாவிலிருந்து மேலும் துருப்புகள் வந்து இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் குவிந்தன. இவையெல்லாம் தில்லித் தலைமையின் உத்தரவுக்கிணங்க சுந்தர்ஜி செய்த ஏற்பாடுகள் ஆகும்.
துருப்புகள் வந்து இறங்கிய பின்னர்தான், சென்னைக் கோட்டையிலிருந்த அமைதிப்படை அலுவலகத்துக்கும் யாழ் பலாலியில் உள்ள பிராந்திய அலுவலகத்துக்கும் தெரியவந்தது.
விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் தொடுக்குமாறு சென்னையின் அமைதிப்படை அலுவலகத்துக்குத் தகவல் வந்தது. அதன் பின்னர் தீபிந்தர் சிங் விடுதலைப் புலித் தலைவர்களை ஒருமுறை சந்திப்பது என்று முடிவெடுத்தார். யாழ்ப்பாணம் சென்றார். அதே யாழ் பல்கலை மைதானத்தில் வந்து இறங்கி, அவர்களது அலுவலகத்தில் மாத்தையாவைச் சந்தித்தார்.
போராளிகள் இறுக்கமான முகத்துடன் காணப்பட்டனர். நகரங்களில் கூட மக்கள் கூட்டமில்லை. ஓரிருவர் தென்பட்ட போதிலும் அவர்கள் முகமும் இருண்டிருந்ததைக் கண்டார், தீபிந்தர் சிங்.
மாத்தையா வழக்கம்போல வணக்கம் தெரிவித்தார்; அதில் சுரத்தில்லை. தீபிந்தர் சிங் பிரபாகரனைப் பற்றி கேட்டார். அவர் வெளியேறிவிட்டதாக மாத்தையா தெரிவித்தார். தலைமறைவாகிவிட்டார் என்று எடுத்துக் கொள்ளலாமா என்றார். மாத்தையா பதில் பேசவில்லை.
இந்த நிலையைத் தேர்ந்தெடுத்ததால் இழப்புகள் நிச்சயம் இருக்கும் - மற்றவர்களுக்கும் சிரமங்கள் ஏற்படுமே என்றார். மாத்தையா, ""நாங்கள் சாவதற்குத் தயாராகி விட்டோம். எப்போதோ அந்த முடிவு எடுத்தாகிவிட்டது. சுயமரியாதையை இழந்து நாங்கள் வாழ விரும்பவில்லை'' என்றார்.
இங்குள்ள ராணுவப் படைக்கும் - அவர்களது உயிர்களுக்கும் நாங்கள் பொறுப்பானவர்கள். விடுதலைப் புலிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று தீபிந்தர் சிங் கேட்டுக்கொண்டார். மாத்தையா அவரது கையைப் பிடித்து குலுக்கினார். மரபு ரீதியான குலுக்கல்; நட்பு மறைந்துவிட்டது என்பதை தீபிந்தர் சிங் உணர்ந்தார்.
அமைதிப் படையின் முதல் தாக்குதல் விடுதலைப் புலிகளின் ஆதரவுப் பத்திரிகைகளான முரசொலி, ஈழமுரசு ஆகியவற்றின் அலுவலகம் மற்றும் அச்சகங்கள் மீதுதான் நடந்தது. அவை தாக்கி அழிக்கப்பட்டன. அங்கிருந்தோர் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று கொக்குவில்லில் இருந்த விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியான நிதர்சனம் தாக்கி அழிக்கப்பட்டது. தாவடியில் இருந்த வானொலி நிலையமும் தாக்குதலுக்கு ஆளானது. ஆக, புலிகளின் பிரசார சாதனங்கள் நிர்மூலமாக்கப்பட்டன.
இதுவரை இருந்த தளபதிகளை ஓரம் கட்டும் முயற்சியாக, சில சம்பவங்கள் நடந்தன. ஹர்கிரத் சிங்குக்கு அடுத்த நிலையில் இருந்த ஏ.எஸ். கல்கத், வீரர்களுக்கு "வகுப்பு' நடத்த ஆரம்பித்தார். வவுனியா முகாமுக்குத் தற்செயலாக வந்த ஹர்கிரத் சிங் இந்த அத்துமீறலைக் கண்டு கொதித்தெழுந்து அவரை அங்கிருந்து அகற்றினார். ஆனால் ராணுவத் தலைமையின் பரிவு கல்கத் பக்கமே இருந்தது.
ராணுவத் தளபதி சுந்தர்ஜி, இந்தியத் தூதரின் உத்தரவுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று தளபதிகளுக்கு அறிவுறுத்தினார். தளபதிகளும் இந்த செயல்பாட்டை ஏற்க வேண்டிவந்தது.
யாழ் நகரின் பல இடங்களில் அதிரடியாகப் போராளிகள் மீது தாக்குதல்களும் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
115: எம்.ஜி.ஆர்.மறைவு - புலிகள் அஞ்சலி
தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவமனையில் இருந்து 31-10-1987 அன்று சென்னை திரும்பியதும், அரசுப் பணிகளுக்காகச் சில நாட்களை ஒதுக்கியதுபோக, 4-11-1987 அன்று விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கினார். அதன்படி கிட்டு, பேபி சுப்ரமணியம், ரகீம் உள்ளிட்டோர் அவரைச் சந்தித்து தமிழீழத்தில் நடப்பது குறித்து விளக்கினார்கள் (விடுதலை 5-11-1987).
9-11-1987 அன்று தமிழக சட்டமன்றம் கூட இருந்த நேரத்தில், தமிழக சட்டமன்றத்தில் இந்திய அமைதிப்படை போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று பழ.நெடுமாறனும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணியும் அறிக்கை வெளியிட்டார்கள். கட்சித் தலைவர்களையும் அவர்கள் சந்தித்துப் பேசினார்கள். இதே கோரிக்கையை பல்வேறு கட்சித் தலைவர்களும் அறிக்கை மூலம் அரசை வலியுறுத்தினார்கள்.
இப்படியொரு தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் வந்துவிடக்கூடும் என்ற ஐயத்திலும் அப்படியொரு தீர்மானம் வந்துவிடக்கூடாது என்கிற பதற்றத்துடனும் மத்திய அரசு, வெளிநாட்டு இணையமைச்சர் நட்வர்சிங்கை சென்னைக்கு அனுப்பி வைத்தது. அவரின் இந்த வருகை, சமீபத்தில் நடந்த ராஜீவ்-ஜெயவர்த்தனா சந்திப்பையொட்டிய தகவல்களை முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கவே என்று பின்னர் கூறப்பட்டது.
ஆனால் பழ.நெடுமாறன் தனது நூலில், "சட்டமன்றத்தில் இந்திய அரசுக்குத் தர்மசங்கடம் ஏற்படுத்தும் தீர்மானம் எதுவும் நிறைவேற்றிடவேண்டாம் என முதல்வர் எம்.ஜி.ஆரிடம் வேண்டிக்கொள்வதற்காகவே நட்வர்சிங் வந்தார். பிரதமரின் விருப்பத்தைத் தெரிவித்தார். தமிழக மக்களின் கொதிப்புணர்வை அவரிடம் எம்.ஜி.ஆர். சுட்டிக்காட்டினார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று சட்டமன்றத்தில் தீர்மானம் எதையும் எம்.ஜி.ஆர். நிறைவேற்றாவிட்டாலும் தமிழ் மக்களின் மனநிலையைத் தில்லி உணரும்படி செய்தார். பிரபாகரனுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர். மேற்கொண்டுள்ள நிலையில் இருந்து அவரை மாற்ற நட்வர்சிங் மூலம் ராஜீவ் மேற்கொண்ட கடைசி முயற்சியும் தோல்வி அடைந்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பழ.நெடுமாறன் குறிப்பிடுவதாவது- "இதன் பின் அதிக காலம் எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கவில்லை. பிரபாகரனின் பிரதிநிதிகள் அவ்வப்போது அவரைச் சந்தித்து நிலைமைகளை விளக்கி வந்தனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் அவர் செய்து வந்தார். அவர் காலமாவதற்கு முதல்நாள் கூட ஒரு பெருந்தொகையைப் புலிகளுக்கு அளிக்க விரும்பி அவர்களுக்குச் சொல்லியனுப்பினார்.
வழக்கமாகப் பிரபாகரன் சார்பில் அவரைச் சந்திப்பவர் சென்னையில் இல்லாத காரணத்தினால் வேறொருவர் சென்றார். குறிப்பிட்டவரையே அனுப்பும்படி எம்.ஜி.ஆர். கூறிவிட்டார். வெளியூரில் இருந்த அந்த குறிப்பிட்ட தோழர் சென்னைக்கு விரைந்து வந்து எம்.ஜி.ஆரைச் சந்திப்பதற்குள் காலதேவன் அவரைக் கவர்ந்து சென்றுவிட்டான்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உலகெங்கும் வாழும் தமிழர்களை உலுக்கிய எம்.ஜி.ஆரின் மறைவு விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் உலுக்கியது. பிரபாகரன் தனது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டார்:
""ஈழத்தில் தமிழினம் அநாதையாக ஆதரவின்றித் தவித்துக் கொண்டிருக்கையில் உதவிக்கரம் நீட்டி உறுதியாகத் துணைநின்ற புரட்சித் தலைவரே, தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவும் ஊக்கமும் கொடுத்த செயல்வீரரே, தங்களது இழப்பு என்பது வேதனைச் சகதியில் சிக்கிக் கிடக்கும் தமிழீழ மக்கள் மார்பில் தீ மூட்டுவது போலுள்ளது.
என்மீது கொண்டிருந்த அன்பையும் ஈழ இயக்கத்தின் மீது தாங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் மறைமுகமாக எமக்குச் செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.
தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்'' (விடுதலை 25/26-12-1987/ எம்.ஜி.ஆரும் ஈழத் தமிழரும்-வே.தங்கநேயன்).
எம்.ஜி.ஆர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் செய்த உதவிகள் குறித்து சிங்கள எழுத்தாளர் ரோகண குணரத்னவும் தான் எழுதிய "இந்தியன் இன்டர்வென்ஷன் இன் ஸ்ரீலங்கா' (பக்கம்-182-இல்) என்னும் நூலில்,
""தமிழ்நாட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பு வகித்த "ரா' அதிகாரி சந்திரசேகரன், ராஜீவ் காந்தி சார்பில் எம்.ஜி.ஆரைச் சந்தித்தார். எம்.ஜி.ஆர். உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. ராஜீவ் சொல்லியனுப்பியவற்றை அவர் வெளியிட்டார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எம்.ஜி.ஆர்., "விடுதலைப் புலிகளை யாழ்ப்பாணத்தில் வீழ்ந்துவிட விட்டுவிடாதீர்கள். விடுதலைப் புலிகள் கண்டிப்பாகக் காப்பாற்றப்படவேண்டும்' என்று கதறினாரென குறிப்பிடுள்ளார்.
"பிள்ளையில்லாத எம்.ஜி.ஆர். பிரபாகரனைத் தன்னுடைய மகனாகவே கருதி வாஞ்சை செலுத்தினார் எனக் கூறுவதில் தவறில்லை' என பழ.நெடுமாறன் குறிப்பிடுகிறார்.
இந்திய - இலங்கை ஒப்பந்தம் என்பது இனி அமைதிக்கான நடைமுறை சாத்தியமற்றதான நிலையை ஜெயவர்த்தனாவின் பேட்டி தோற்றுவித்தது. அதற்கு முன்பாக இந்த ஒப்பந்தத்தை அவரது அமைச்சரவையில் வெளிப்படையாக ஆதரித்தவர் இருவர் மட்டுமே. ஒருவர், காமினி திஸ்ஸநாயக்கா; மற்றொருவர் ரோனி டி மெல் ஆவர். பிரதமர் பிரேமதாசா உள்ளிட்ட அமைச்சர்கள் கலகக்கொடியைத் தொடர்ந்து தூக்கியபடியே இருந்தனர். சிங்களப் பேரினவாதத்தைத் தூக்கிப்பிடித்த புத்தபிக்குகள் மற்றும் மதவெறியர்கள் மட்டுமன்றி, மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜே.வி.பி.யும் "இந்தியப்படையே வெளியேறு' என்று! வீதிக்கு வந்து போராடியது.
போராளிகளில் விடுதலைப் புலிகள் தவிர்த்து பெரும்பாலான இயக்கங்கள் திம்புவில் குறிப்பிட்ட தங்களது உயிர்க்கொள்கையான 5 அம்சத்தை மறந்து ஒப்பந்தத்தை ஆதரித்தனர். விடுதலைப் புலிகளோ நிர்பந்தம் காரணமாகவும், இந்தியாவுடன் ஒரு யுத்தம் தவிர்க்கும் எண்ணத்திலும் ஒப்பந்தத்தை ஏற்றனர் என்பதையும் முந்தைய பகுதிகளில் பார்த்தோம்.
இந்த ஒப்பந்தம் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருந்ததற்கு அடிப்படைக் காரணமே, இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களுக்கு, ஈழத் தமிழர்களின் அடிநாதமான தமிழ்த் தேசியம் என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாததுதான். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரதமர் ராஜீவ் காந்தியும், ஜெயவர்த்தனாவும் தங்கள் தங்கள் நலனில் அக்கறை கொண்டு தமிழ்த் தேசியம் என்ற அடிநாதத்தை பூமிக்கடியில் புதைக்க முற்பட்டதுதான்!
இந்தத் தமிழ்த் தேசியம் என்பது என்னவென்று கலாநிதி அ.க.மனோகரன் "இலங்கை தேசிய இனமுரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும்' என்னும் தனது ஆய்வு நூலில், ""தமிழ்த் தேசிய வாதம் ஒருபோதும் வெறும் புத்திஜீவிகளின் ஓர் எண்ணக் கருவாக இருந்ததில்லை. அவ்வாறிருக்குமாயின் அதற்கு உயிரோட்டம் இருந்திருக்காது. அது வெறும் உணர்ச்சியின் வெளிப்பாடுமல்ல. அவ்வாறிருக்குமாயின் அது நீண்டகாலம் தளராது தொடர்ந்திருக்க முடியாது. மேலும், அது வெறுமனே உணவையும் உடையையும் உறைவிடத்தையும் அவர்கள் உயிர்வாழ்வதற்கான பொருள்சார்ந்த நிலைமைகளையும் ஒரு மக்களுக்கு உறுதிப்படுத்துகின்ற ஒரு விடயமுமில்லை. அவ்வாறு கூறுதல் தமிழ் தேசியவாதத்துக்கு அதன் வளமான கலாசார மரபுரிமையை மறுப்பதற்கு ஒப்பானதாகும். தமிழ் தேசியவாதம் இவை அனைத்தையும் அதிலும் விடக் கூடியனவற்றையும் உள்ளடக்கியது. அது இவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து ஒருங்கிணைக்கப்பட்ட முழுமையான விகிதாசாரங்களின் கூட்டுத் தொகையைவிட அதிகமான ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட முழுமை. எதிர்ப்பு - வேறுபடுத்தல் - கூட்டுழைப்பு என்ற நீடித்த சிக்கலான செயல்முறையின் ஊடாக உருப்பெற்ற ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட முழுமை'' என்று குறிப்பிடுகிறார்.
இலங்கைத் தமிழ் தேசியவாதம் என்பதை ஏற்று, அதில் உறுதிப்பாடுடன் நம்பிக்கை கொண்டு, அதனை 13-வது சட்டத் திருத்தத்திலும் சேர்த்து, அதனை நிறைவேற்றுவதில் ராஜீவ் காந்தி முன்னின்று செயல்பட்டிருந்தால், நிலைமை முற்றிலும் வேறுபட்டிருக்கும். ஆனால், ராஜீவ் காந்திக்கே, தமிழ் தேசியம் என்பதில் நம்பிக்கையே இல்லை. அப்படியொரு நம்பிக்கை இருந்திருந்தால் மட்டுமே மேற்கண்ட யாவும் நிகழ்ந்திருக்கக் கூடும்.
இதற்கு முட்டுக்கட்டை போட்டவர்களில் "ரா' அமைப்பினர் முன்னணியில் இருந்தனர். அடுத்த நிலையில் ஒருவகை தந்திர மனிதராக ஜெயவர்த்தனா. இவர்கள் போட்ட தூபம்தான் ராஜீவ் காந்தியைத் தமிழ் தேசியத்துக்கு எதிராகத் திருப்பியது. இலங்கையில் தமிழ் தேசியம் பலம் பெற்றால், அது இந்தியாவில் தமிழ்நாட்டில் எதிரொலிக்கும் என்று பயமுறுத்தினார்கள். அது காரணமாகவே, தேசியத்தை ஆதரிக்கும் ராஜீவ், மொழிவாரி தேசியத்துக்கு எதிரானவராக இருந்தார்.
"நாங்கள் சொல்வதற்கு மட்டுமே கட்டுப்படுங்கள்' என்ற மேலாதிக்கமே இந்தியாவிடம் இருந்தது என்பது புஷ்பராஜாவின் கருத்து. விடுதலைப் புலிகள் உள்பட அனைத்து இயக்கங்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தான் விரும்பியதைச் செய்யும் குழுக்களாக, அவ்வியக்கங்களை வைத்திருக்க விரும்பியதே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று.
இவை எல்லாவற்றையும்விட, விடுதலைப் புலிகளைச் சம்மதிக்க வைக்க, ஜூலை 28, 29 அதிகாலை அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி, அதாவது எழுதப்படாத ஒப்பந்தம் நிறைவேற்றப்படாததும் ஒரு காரணமாயிற்று.
அந்த எழுதப்படாத ஒப்பந்த விவரம் என்ன?
116: எழுதப்படாத ஒப்பந்தத்தின் விளைவுகள்
இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாவதற்கு முந்தின நாள் (28.7.1987) நடைபெற்ற ராஜீவ்-பிரபாகரன் சந்திப்பில் எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று உருவானதாக பின்னாளில் பேசப்பட்டது; எழுதப்பட்டது. அதுகுறித்து இங்கு அறிவது அவசியமாகிறது.
வடக்கு, கிழக்கு இடைக்கால அரசொன்றை அமைப்பதுடன், அந்த அரசில் விடுதலைப் புலிகளே பெரும்பான்மை வகிப்பார்கள் என்று ராஜீவ் உறுதியளித்ததுடன், அதில் பிற அமைப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியபோது பிரபாகரன் மறுத்ததாகவும், பின்னர் ஈரோஸ், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஆகியவற்றிற்கு பிரதிநிதித்துவம் அளிக்க சம்மதித்தார் என்றும் பாலசிங்கம் தனது "விடுதலை' நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இடைக்கால ஆட்சி, அதன் நிர்வாக அமைப்பு, அதன் அதிகாரம், செயல்பாடு, நிதி ஆதாரம் ஆகியவை தொடர்பாக ஜெயவர்த்தனாவுடன் பேசித் தீர்ப்பது என்றும் அப்போது உறுதியளிக்கப்பட்டதாகவும் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
அதுவரை தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றமோ புதிதாகக் காவல் நிலையமோ அமையக் கூடாது என்றும் பிரபாகரன் வலியுறுத்தினார். யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் அதுநாள் வரை வரிவசூலிப்பில் ஈடுபட்டதாகவும், ஒப்பந்தத்திற்குப் பிறகு அந்தச் செயல் தடை செய்யப்படும் என்று கூறியதுடன், ஆயுதம் கையளிப்பு உள்ளிட்ட இறுதிக்கட்ட பிரச்னைக்கு ராஜீவ் வந்தார்.
அதன் விவரம் பாலசிங்கம் எழுதிய "விடுதலை' நூலில் வெளிவந்தபடி இங்கே தரப்படுகிறது:
""யாழ்ப்பாணத்தில் பொதுமக்களிடமிருந்து கட்டாய வரி வசூலிப்பு செய்வதாக ஜெயவர்த்தனா அரசு புலிகள் மீது குற்றம் சுமத்துகிறது. வரி வசூலிப்பை நிறுத்த முடியாதா எனக் கேட்டார் ராஜீவ் காந்தி. அந்த வரிப்பணம் எமது இயக்கத்தின் நிர்வாகச் செலவுக்கே பயன்படுத்தப்படுகின்றது. அந்தத் தொகையை இந்திய அரசு எமக்குத் தருவதானால் வரி அறவிடுவதை நிறுத்தலாம் என்றார் பிரபாகரன்.
""மாதம் எவ்வளவு பணத்தை வரியாகப் பெறுகின்றீர்கள்'' என ராஜீவ் கேட்க, ""இலங்கை நாணயப்படி ஒரு கோடி ரூபாய் வரை திரட்டுகிறோம்'' என்றார் பிரபாகரன்.
""அப்படியென்றால் இந்திய நாணயப்படி ஐம்பது லட்சம் ரூபாய் வரை வரும். அந்தப் பணத்தை நான் கொடுக்கிறேன்'' என்றார் ராஜீவ்.
இறுதியாக ஆயுதக் கையளிப்பு விவகாரம் எழுந்தது. ""ஆயுதங்கள் முழுவதையும் கையளிக்குமாறு நாம் கேட்கவில்லை. நல்லெண்ண சமிக்ஞையாக சிறு தொகை ஆயுதங்களைக் கையளித்தால் போதும். பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பாக இந்திய அமைதிப் படை வடகிழக்கில் செயல்படும். சிங்கள ஆயுதப் படைகளுடன் போர் நிறுத்தம் தொடர்ந்து இருக்கும். இந்தச் சூழ்நிலையில் உங்களுக்குப் போராயுதங்கள் தேவைப்படாது அல்லவா?'' என்றார் இந்தியப் பிரதமர்.
பிரபாகரன் பதிலளிக்கவில்லை. ஆழமாக சிந்தித்தபடி இருந்தார்.
திடீரெனக் குறுக்கிட்டார் பண்ருட்டியார். ""எதற்காக யோசிக்க வேண்டும்? இந்தியா கொடுத்த ஆயுதங்களில் பழைய, பாவிக்க முடியாத, துருப்பிடித்த ஆயுதங்கள் சிலவற்றை கொடுத்தால் போச்சு'' என்றார்.
""இந்தியா கொடுத்த ஆயுதங்கள் எல்லாமே அப்படித்தான்'' என்று கிண்டலாக பதிலளித்தார் பிரபாகரன்.
""பரவாயில்லையே, அதில் சிலவற்றைக் கொடுங்கள். தேவை ஏற்படும்பொழுது இந்திய அரசு புதிய ஆயுதங்களை தரும் அல்லவா?'' என்றார் அமைச்சர் பண்ருட்டியார்.
தான் கூறியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ராஜீவிடம் சொன்னார். அதை ஆமோதிப்பது போலப் பிரதமரும் தலையசைத்தார்.
அப்பொழுது அதிகாலை (28.7.1987) இரண்டு மணி இருக்கும். அன்று (29.7.1987) காலை ஒன்பது மணியளவில் புது தில்லியிலிருந்து கொழும்பு புறப்பட இருந்தார் ராஜீவ் காந்தி.
பிற்பகல் மூன்று மணிக்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாக இருந்தது. புலிகளின் தலைவர் பிரபாகருடன் ஏதோ ஒரு சுமுகமான இணக்கப்பாட்டிற்கு வந்ததுபோல மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் ராஜீவ்.
பிரபாகரனுக்கு மனதில் மகிழ்ச்சி இல்லை. அவரது முகத்தில் அது தெளிவாகத் தெரிந்தது. தூக்கமின்மையால் எல்லோருமே சோர்ந்து போய் இருந்தோம். கூட்டம் முடியும் கட்டத்திற்கு வந்துவிட்டது.
அப்பொழுது நான் அமைச்சர் பண்ருட்டியிடம் கேட்டேன். ""ராஜீவ்-பிரபா ரகசிய ஒப்பந்தம் எனப் பல விஷயங்களை கதைத்தோம். பிரதம மந்திரியும் பல வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார். இதை எல்லாம் சுருக்கமாக எழுத்தில் இட்டு, அவரிடமிருந்து கைச்சாத்துப் பெற்றால் என்ன?'' என்றேன்.
பண்ருட்டியார் சிறிது நேரம் யோசித்தார். ""இந்த ரகசிய உடன்பாட்டில் சர்ச்சைக்குரிய பல விஷயங்கள் இருக்கின்றன அல்லவா? பண விவகாரங்கள் இருக்கின்றன. ஆயுதக் கையளிப்புப் பிரச்னை இருக்கிறது. இதெல்லாம் அம்பலத்திற்கு வந்தால் இந்தியாவிலும் இலங்கையிலும் பெரும் அரசியல் சூறாவளியே ஏற்படும். உங்களுக்கு பிரதமரிடம் நம்பிக்கையில்லையா? இது ஒரு எங்ய்ற்ப்ங்ம்ங்ய் அஞ்ழ்ங்ங்ம்ங்ய்ற் இரு பெரும் மனிதர்களின் எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டுமே?'' என்றார் அமைச்சர். ராஜீவ் காந்திக்கும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார்.
""நீங்கள் எதற்கும் கவலை கொள்ளத் தேவையில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நான் நிறைவேற்றுவேன். அமைச்சர் சொல்வது போன்று இது ஒரு எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டும்'' என்றார் ராஜீவ் காந்தி.
இறுதிக் கட்டத்தில் நான் (பாலசிங்கம்) அவருடன் முரண்பட விரும்பவில்லை. முடிவாக எமது தடுப்புக் காவல் பற்றி முறையிட்டோம். பிரபாகரன் மீதான தடுப்புக் காவலை அகற்றி, அவரைத் தமிழீழம் அனுப்புவதற்கு உடனே ஒழுங்கு செய்வதாக உறுதி அளித்தார் ராஜீவ்.
ராஜீவ் காந்தியின் இல்லத்திலிருந்து அசோகா விடுதிக்கு நாம் போய்ச் சேர அதிகாலை மூன்று மணியாகிவிட்டது.
""அண்ணா, இருந்து பாருங்கோ, இந்த ரகசிய ஒப்பந்தமும் வாக்குறுதிகளும் ஒன்றுமே நிறைவேறப் போவதில்லை. இதெல்லாம் ஒரு ஏமாற்று வித்தை'' என்று விரக்தியோடு கூறிவிட்டு தனது அறைக்குள் நுழைந்தார் பிரபாகரன்.
எனது அறைக்குள் சென்றபோது, விழித்தபடி காத்திருந்த திலீபன் விடியும் வரை என்னைத் தூங்கவிடவில்லை. ராஜீவ்-பிரபா சந்திப்பு பற்றியும், இருவருக்கும் மத்தியில் செய்து கொள்ளப்பட்ட ரகசிய ஒப்பந்தம் பற்றியும் விவரமாக திலீபனுக்குச் சொன்னேன்.
மிகவும் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தான். ""அண்ணன் என்ன சொல்கிறார்'' என்று கேட்டான்.
""பிரபாவுக்கு திருப்தி இல்லை. நம்பிக்கையுமில்லை. இந்த வாக்குறுதிகள் ஒன்றுமே நிறைவேறப் போவதில்லை என்று உறுதியாகச் சொல்கிறார்'' என்றேன்.
ஆழமாக சிந்தித்தபடியிருந்த திலீபன், ""அண்ணன் சொல்வதுதான் நடக்கும்'' என்றான்.
உண்மையில் அப்படியேதான் நடந்தது. ராஜீவ்-பிரபா ரகசிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இடைக்கால நிர்வாக அரசும் உருவாக்கப்படவில்லை''
இவ்வாறு அன்டன் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் 2000-ஆம் ஆண்டில் நூலாகும் வரை விடுதலைப் புலிகள் தரப்பில் வெளியிடப்படாத ரகசியமாகவே இது இருந்தது.
இதற்கு முன்பாக லண்டனில் இருந்து வெளிவரும் லண்டன் அப்சர்வர் ஏப்ரல். 30, 1989ல் எழுதப்படாத ஒப்பந்தம் குறித்து வெளியிட்டுள்ளதாக, ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தைச் சேர்ந்த புஷ்பராஜா- தனது, ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலில் தெரிவித்திருக்கிறார்.
பின்நாளில் லெப். ஜெனரல் தீபிந்தர் சிங் ஈழ மண்ணில் அமைதிப் படைப் பணிக்காக சென்று திரும்பியது குறித்த தனது அனுபவங்களை பட்ங் ஐடஓஊ ஐச நதஐ கஅசஓஅஎனும் தலைப்பில் திரிசூல் பப்ளிகேஷன்ஸ் மூலமாக வெளியிட்டார். அந்த நூலின் பக். 66-67-இல் இப்படியொரு எழுதப்படாத ஒப்பந்தம் இருப்பதாக புலிகள் தெரிவித்து அதனை எழுத்துமூலமாக கேட்கிறார்கள் என்றும் மேலிடத்துக்குத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
"முறிந்த பனை' என்னும் நூலில் ராஜீவ் காந்தியும், பண்ருட்டி ராமச்சந்திரனும் தங்களது எல்லைகளை மீறி இவ்வாறான வாக்குறுதியை அளித்திருக்கமுடியாது என்று வாதிட்ட நிலையில் அடுத்த பத்தியிலேயே அந்நூலின் வாசகம் முரண்பாட்டைக் கொண்டிருக்கிறது.
எழுதப்படாத ஒப்பந்தம் குறித்த செய்திகள் அடங்கிய அறிக்கை முதன்முதலாக சண்டே லண்டன் அப்சர்வரில் (1988, ஏப்ரல் 3-ஆம் தேதி) வெளிவந்தது. கொழும்பிலிருந்து அதன் சிறப்புச் செய்தியாளரால் எழுதப்பட்ட அக்கட்டுரை, தீட்சித்தையே மேற்கோள் காட்டி எழுதப்பட்டிருந்ததாகவும் கூறுகிறது.
இந்தச் செய்திக் கட்டுரையில், பாலசிங்கம் சொன்னதைவிடவும் கூடுதலான தகவல்கள் உண்டு.
இடைக்கால நிர்வாக சபையின் நிதியாதாரத்துக்கு இந்தியா பெருமதிப்பிலான தொகையை வழங்க இருந்ததாகவும் கூட அது கூறியது. இந்தத் தொகை வடக்கு கிழக்குப் பகுதிகளின் மறு சீரமைப்புக்காகப் பயன்படுத்தப்பட இருந்தது என்றும் கூறப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளின் போராளிகளைப் பயன்படுத்தி, ஒரு தமிழ் போலீஸ் படை உருவாக்கப்படும் என்றும் உறுதியளித்ததாகவும் அதில் தகவகள் உண்டு. இவைகளையெல்லாம் கூறிவிட்டு, "முறிந்த பனை' மேலும் சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
அந்தக் கேள்விகளுக்கான விடைகளை விடுதலைப் புலிகள் தரப்பில் அளிக்கத் தேவையில்லாத அளவுக்கு, இந்திய அமைதிப் படையின் தளபதிகளாக இருந்த தீபிந்தர் சிங் மற்றும் ஹர்கிரத் சிங் எழுதிய நூல்களில் ஏராளமாக உள்ளன.
இந்த எழுதப்படாத ஒப்பந்தத்தில் கண்டுள்ளவாறு விடுதலைப் புலிகள் விஷயத்தில் எதுவும் நடக்காத காரணத்தால்தான் திலீபன் உண்ணாவிரதமும் அதனைத் தொடர்ந்து அவரது மரணமும் நடைபெற்றது. திலீபனின் 5 அம்சக் கோரிக்கைகளில் கூட இந்த விஷயம் வெளிப்படையாகக் கூறப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
117: அமைதிப்படையின் ஷெல் தாக்குதல்
என்ன பிழை நடந்தது? எல்லாரது வாழ்வின் பெறுமதியை மதிப்பிழக்கச் செய்வதற்கு' - என்று முறிந்தபனையில் ஒரு வாசகம் உள்ளது. வேதனையின் விளிம்பில் எழுந்த வாசகம் இது. இன முரண்பாடுகள் மற்றும் அடக்குமுறைகள் தோன்றும்போது உலகெங்கும் இவ்வாறு, குரல் எழுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய இந்திய அமைதிப் படையின் செயல்பாடுகள் இரண்டே மாதங்களில், அதாவது, அக்டோபர் இரண்டாவது வாரத்தில் எல்லாமே தலைகீழாகி விட்டது.
காரணம் என்ன?
"பெüத்த சிங்களரும் சிறுபான்மையினரும்' என்னும் ஆய்வு நூலில் சந்தியா பிள்ளை கீதபொன்கலன் இச் சூழ்நிலை குறித்து எழுதியுள்ளார். அவை வருமாறு:
""புனர்வாழ்வுக்கென திட்டமிட்டு செயலாற்ற முற்படும்போது இவ்விதப் போக்குகளின் தன்மைகளை உணர்ந்த நிலையிலேயே நாம் இயங்கத் தயாராக இருக்க வேண்டும். ஆக்கப்பூர்வமாக இயங்குவதற்கு முன்பாக துன்பத்தின் எல்லைக்கு எம்மைக் கொண்டு சேர்த்த காரணங்களை ஆராய்ந்து அவற்றுக்கு உறுதுணையாக நின்ற அமைப்பு முறைகளை நீக்கிக் கொள்ள வேண்டும்.
இதனை மறந்த நிலையில் எவ்வித நல்ல நோக்கத்துடனும் ஆரம்பிக்கும் புனர்வாழ்வு செயல்திட்டமும் நன்மைகளை விளைவிக்க மாட்டாது. உறுதியற்ற நிலை மட்டுமே நிலவும். பெறும் நன்மைகளும் தற்காலிகத் தன்மையுடையனவாக மட்டுமே இருக்கும். பூகம்பத்தின் அடிமட்டத்தை ஒத்ததாக இருக்கும். விரைவில் பொங்கியெழுந்து, திட்டமிட்டிருந்தவை எல்லாம் அதன் கொதிப்பிழம்பில் அழிந்து போய்விடும். இயற்கையில் நாம் காணும் அழிவல்ல; மனிதரால் கடைப்பிடித்த கொள்கைகளின் விளைவாகவே அவை ஏற்படுகின்றன'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் யதார்த்தம்.
விடுதலைப் புலிகள் ஆதரவுப் பத்திரிகைகளான ஈழமுரசு, முரசொலி ஆகியவற்றின் அலுவலகங்களைத் தாக்கி, அதன் செய்தியாளர்களை, அச்சக ஊழியர்களைக் கைது செய்தது, அவ்வியக்கத்திற்கு விடப்பட்ட எச்சரிக்கை. எனவே, விடுதலைப் புலிகளின் எதிர் நடவடிக்கையை எதிர்நோக்கி, அமைதிப் படை காத்திருந்தது போன்று இருந்தது.
மழைக்காலம் தொடங்கும் நேரம், நவராத்திரி கொண்டாடும் நேரம். இந்திய அமைதிப்படைத் திடீர் தாக்குதலைத் தொடுத்ததற்கு ஜெயவர்த்தனா கொடுத்த நெருக்கடியே முதல் காரணமாகிறது. இத் தாக்குதலை எதிர்த்துப் போராடுவதா, இல்லை... ஆயுதங்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டு நிபந்தனையற்ற சரணாகதியடைவதா என இவ்விரு கேள்விகளே போராளிகளிடையே இருந்தது.
இதுகுறித்து பழ.நெடுமாறன் தனது நூலில் கூறுகையில், ""இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் குழம்பினார்கள். மாபெரும் இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போரிடுவதா? நம்மால் தாக்குப்பிடிக்க முடியுமா என்றும், இப்போது ஆயுதங்களை கொடுத்துவிட்டு, சமரசம் செய்துகொள்வது என்றும், பின்னர் தகுந்த நேரத்தில் போராட்டத்தைத் தொடங்குவது என்றும் சிலர் ஆலோசனை கூறியதுண்டு. ஆனால் போராடுவது என்று "தம்பி' முடிவெடுத்தார். இதற்கான காரணத்தையும் பிரபாகரன் பின்நாளில் பேசும்போது தெரிவித்ததான தகவல் ஒன்றையும் கூறியுள்ளார்.
அதில், "இந்தியாவுடன் மோதலைத் தவிர்க்க எவ்வளவோ முயன்றேன். ஆனால் ஒவ்வொரு முயற்சியையும் இந்திய அரசு உதறித் தள்ளியது. இடைக்கால அரசமைப்பதில் விட்டுக்கொடுத்தேன். ஆனால் ஜெயவர்த்தனாவுடன் சேர்ந்து கொண்டு எங்களை ஏமாற்றவே இந்திய அரசு முயன்றது. இதன் விளைவாக திலீபன், புலேந்திரன், குமரப்பா உள்ளிட்டோரைப் பறிகொடுத்தோம். அவர்கள் நினைத்திருந்தால் இவர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.
காலத்திற்கேற்பவும், சூழ்நிலைக்கேற்பவும் நான் செயல்படுகிறேன். எந்தப் பிரச்னையிலும் அர்த்தமற்ற பிடிவாதத்தை ஒருபோதும் கடைபிடித்ததில்லை' என்று பிரபாகரன் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில், விடுதலைப் போராளிகள் ஆயுதம் தரித்த நிலையில், அமைதிப் படை முகாம்கள் எதிரே திரண்டனர். என்ன நடக்குமோ என்று மக்கள் அஞ்சினர்; பதை பதைத்தனர்.
யாழ் கோட்டையின் பக்கத்தில் முதல் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. தொடர்ந்து யாழ் நகரின் பல பகுதிகளில் "ஷெல்' தாக்குதல்கள் ஆரம்பமாயின. அப்போதும் கூட ஒரு பகுதி மக்கள் இந்த "ஷெல்லை' இந்தியப் படை வீசி இருக்காது என்றும், இலங்கைப் படையே போட்டிருக்கும் என்றும், ஏனென்றால் புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் மரணத்துக்குப் பதிலடியாக 8 சிங்கள வீரர்களும் கொல்லப்பட்டு, காவல் நிலையம் அருகே வீசப்பட்டிருந்ததால், இந்த "ஷெல்' தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என்றும் மக்கள் எண்ணினர்.
1987-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பொதுமக்கள் நிறைந்த பகுதிகளில் இலங்கை ராணுவம் குண்டு வீசி தாக்குவதை அப்போது, இந்தியத் தூதரகம் கடுமையாகக் கண்டித்தது. இப்போது, அதே வேலையை இந்திய அமைதிப் படை செய்தபோது, தூதரகம் ஒரு பார்வையாளரைப் போன்றே நடந்து கொண்டது.
அமைதிப் படையையும் அது ஆற்றப்போகிற பணியையும் குறித்து, இனப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் என்றே உலக நாடுகள் நினைத்தன. ஆனால் நடந்ததோ வேறு. மக்கள் நிறைந்த பகுதியில் "ஷெல்' தாக்குதல் குறித்து கண்டனம் எழுந்தபோது, "நகரத்தை - அது எந்த நகரமானாலும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்றால் "ஷெல்' தாக்குதல் என்பது நடைபெற்றே ஆக வேண்டும் என்று ராணுவத் தரப்பில் கூறப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தி விமானத் தாக்குதலை இலங்கை நடத்தியபோது, அதைக் கண்டித்த ராஜீவ் காந்தியை, "பஞ்சாபில் என்ன நடந்தது; நடக்கிறது என்று இந்தியா திரும்பிப் பார்க்கட்டும்' என்று இலங்கைப் பத்திரிகைகள் சுட்டிக்காட்டி, கண்டனம் தெரிவித்தன. அப்போது ராஜீவ் காந்தி, "இலங்கை அரசைப் போன்று இந்திய அரசு தன் சொந்த மக்களின் மீது குண்டுமழை பொழிந்ததில்லை' என்று கூறியிருந்தார். ஆனால் இன்று என்ன நிலை என்று சர்வதேச சமூகம் கேள்வி எழுப்பிற்று.
இவ்வகையான தாக்குதல் செய்தியை ரூபவாகினியை விடவும், இந்தியத் தொலைக்காட்சி மற்றும் சென்னை வானொலி முந்திக் கொண்டு அறிவித்தன. யாழ் கோட்டையிலும், தெல்லிப்பளையிலும் அமைதிப் படையினர் மீது புலிகள் தாக்குதல் தொடுத்ததாகவும், தெல்லிப்பளை தாக்குதலில் தாக்குண்டது மெட்றாஸ் ரெஜிமெண்ட் என்றும், இதில் 5 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் செய்தி வெளியிடப்பட்டது.
ஆனால், ஈழமுரசு, முரசொலி அலுவலகங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது குறித்தோ, அதன் செய்தியாளர்கள், அச்சக ஊழியர்கள் கைது செய்யப்பட்டது குறித்தோ, நிதர்சனம் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையம் தாக்கப்பட்டது குறித்தோ, பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்தோ எந்த செய்தியும், இந் நிறுவனச் செய்திகளில் இடம்பெறவில்லை.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.