Sunday 31 May 2020

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 166 - 169

166: நார்வேயின் சமாதான முயற்சி!
"ஈழ வரலாற்றில், சமாதானப் பேச்சுவார்த்தையில் நார்வே நாடு கலந்துகொண்டது தற்செயலாக ஏற்பட்ட ஒரு திருப்பம் என்றுதான் கூறவேண்டும். அமெரிக்கா-சோவியத் நாடுகளிடையே நிழல்யுத்தம் நிலவி வந்த நிலையிலும்கூட, மேற்கத்திய நாடுகளின் பக்கமே இருந்தபோதிலும், ரஷியாவுடன் நார்வேக்கு எந்தப் பிணக்கும் இல்லை. அதேபோன்று, ஸ்வீடன், பின்லாந்து போன்ற அண்டை நாடுகளுடனும் மோதல் கிடையாது.

உலகின் எந்தப் பகுதியிலும் ராணுவத்துறையிலோ, அரசியல்துறையிலோ தந்திரோபாய அக்கறை கொண்டிராத சிறிய நாடு. மத்திய கிழக்குத் தகராறு, பாலஸ்தீன-இஸ்ரேல் முரண்பாடு, குவாட்டமாலா பிரச்னை போன்றவற்றில் ஈடுபட்டதால் நார்வே உலகெங்கும் பேசப்படும் நாடாக மாறியது' என்கிறார் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைப் பணிகளில் ஈடுபட்ட எரிக் சோல்ஹைம் (இலங்கையில் சமாதானம் பேசுதல்-அடையாளம் வெளியீடு, பக்.436). அந்நூலில் எரிக் சோல்ஹைம் தனது நாட்டைப் பற்றிக் குறிப்பிடுகையில், "நார்வே ராணுவரீதியாக ஒரு வல்லரசாக இல்லாவிடினும், உலகில் சமாதானச் சூழலை ஏற்படுத்த முனைந்த, செல்வாக்கைக் கொண்ட ஒரு வளமான நாடு' என்கிறார். நார்வே நாட்டின் அரசியலில் இவர் முக்கியமானவராவார். வெளிவிவகார அமைச்சகத்தில் பங்குபெற்று, அதன் ஆலோசகராக இலங்கை அலுவலகத்தில் பணிபுரிந்தவர் எரிக் சோல்ஹைம். இவரை, நார்வே அரசு, புலிகள்-இலங்கை அரசுடன் பேச்சு நடத்தும் ஒரு சமரசப் பேச்சாளராக அறிவித்தது.
இலங்கை இனப் பிரச்னையில் சுமுகத் தீர்வு காண்பதற்கான முயற்சியின் ஒரு வேலைத்திட்டமாக வன்னிப் பகுதியின் வடபகுதியிலுள்ள மல்லாவி என்கிற இடத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை 31-10-2000 அன்று சோல்ஹைம் சந்தித்தார். அவருடன் இலங்கைக்கான நார்வே தூதுவரான ஜான் வெஸ்ட்போர்க், நார்வேயின் வெளியுறவுச் செயலக நிர்வாக அதிகாரியான செல்வி ஜெர்ஸ்தி ட்ரோம்ஸ்டல் ஆகியோரும் சென்றிருந்தனர். பிரபாகரனுக்கும் இவர்களுக்குமிடையே இரண்டு மணி நேரம் ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனையின்போது, "சந்திரிகா, இனப் பிரச்னையைப் போரின் மூலமே தீர்க்கமுடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளவர். பொதுவாக சமாதானப் பேச்சு போர்ச்சூழலில் நடைபெற முடியாது. அங்கு அமைதி நிலவ வேண்டும். போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும். விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை நீக்கப்படவேண்டும். பொருள்கள் தாராளமாகக் கிடைக்கப் பெறவேண்டும். இதன் பின்னணியில் அமைகிற பேச்சே வெற்றி பெறும். இருந்தாலும் புலிகள் சமாதானப் பேச்சில் ஈடுபடத் தயாராக இருக்கிறார்கள்-நான் தயாராக இருக்கிறேன்' என்று பிரபாகரன் தெரிவித்தார்.
நன்றி கூறி விடைபெற்ற நார்வே குழு, நேரடியாகக் கொழும்பு சென்றது. அதிபர் சந்திரிகாவிடம் பிரபாகரன் கூறியதைத் தெரிவித்தனர். அவரோ, பேச்சு நடத்த விருப்பம் தெரிவித்த நிலையிலும், போர் நிறுத்தம் அறிவிக்க முடியாது என்றும், போருக்கிடையே பேசலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.
இருப்பினும் நார்வே தூதர்கள் தங்களது முயற்சிகளில் இருந்து பின்வாங்காமல், பிரபாகரனுக்கு அந்நாட்டின் வெளிவிவகாரத்துக்கான துணையமைச்சர் ரேமண்ட் ஜான்சன் புரிந்துணர்வு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.
அக் கடிதத்தில், "18 மாதங்களாக ஸ்ரீலங்காவின் அதிபர் சந்திரிகா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரிடமும், புலிகளின் பேச்சாளரான அன்டன் பாலசிங்கத்திடமும் தொடர்புகொண்டு பேசியதில், பேச்சுவார்த்தைக்கு இணக்கம் காட்டப்பட்டதற்கு நன்றி தெரிவித்ததுடன், மிகுந்த கவனத்துடன் மனிதநேயத்துக்கான புரிந்துணர்வு திட்டம் ஒன்றினை அனுப்பியுள்ளதாக' குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் சில திட்டங்களுக்கான குறிப்புகளும் இணைக்கப்பட்டிருந்தன. அதில் பேச்சுவார்த்தைக்கான இணக்கமான சூழலை உருவாக்கும் யோசனைகள் இருதரப்பும் ஏற்கும் விதமாக பொதுவாகக் கூறப்பட்டிருந்தன.
அதில், வன்னிப் பகுதியில் ஆயுதக் குவிப்பு கூடாது என்றும், மக்களின் அன்றாடத் தேவைகளுக்குண்டான பொருள்கள் தாராளமாகக் கிடைக்க அரசு வழிசெய்ய வேண்டும் என்றும், ஏ-9 தேசிய நெடுஞ்சாலையில் மேலும் ஒரு செக் பாய்ண்டில் பொருள்கள் வந்து இறங்க வழி செய்யவேண்டும் என்றும், இவ்வாறு பொருள்கள் குவிக்கும்போதும், விநியோகிக்கும்போதும் புலிகள் ஆயுதப் பிரயோகம் செய்யலாகாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
புலிகள் தரப்பில் வே.பிரபாகரன் 27, நவம்பர் 2000 அன்று தான் ஆற்றிய மாவீரர் தின உரையில், "நார்வே நாட்டின் புரிந்துணர்வை ஏற்பதாகவும், இந்த விஷயத்தில் ஸ்ரீலங்கா அரசின் எண்ணங்களுக்கேற்ப எங்களது செயலும் இருக்கும்' என்றும் கூறியிருந்தார்.
சந்திரிகா இதற்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை. ஆனால், பிரதமரும் ராணுவத் தளபதியும் வெவ்வேறு குரல்களில் பேசி, பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லை என்று கருத்து தெரிவித்தனர். ஆனால், பிரபாகரன் சமாதானப் பேச்சில் ஆர்வம் கொண்டிருப்பதாகக் கூறி, கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு, ஒரு மாதம் போர்நிறுத்தம் செய்வதாகவும் டிசம்பர் 24-ஆம் தேதி அறிவித்தார். சந்திரிகா, அப்போதும் எதுவும் பேசவில்லை. மாறாக சிங்கள ராணுவம் வழக்கம்போல் ஆங்காங்கு சிறுசிறு தாக்குதல்களை நடத்திக்கொண்டே இருந்தது. இந்த வகையான எரிச்சல் மூட்டும் நடவடிக்கைகளை பிரபாகரன் சகித்துக்கொண்டதுடன், மேலும் 3 மாதம் போர்நிறுத்தம் என்றார் (வார் அண்ட் பீஸ்-அன்டன் பாலசிங்கம், பக்.344).
பிரபாகரனின் போர்நிறுத்த அறிவிப்புகளை அதிபரின் செயலகம் முற்றிலுமாக நிராகரித்து, போருக்கு இடையேதான் பேச்சு என்பதைத் தெரிவித்தது. போர்நிறுத்தம் முடிந்ததும் பிரபாகரன் 24, ஏப்ரல் 2001 அன்று ஓர் அறிக்கையினை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், "போர்நிறுத்தம் அறிவித்த நான்கு மாதங்களில் 160 போராளிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 400 பேருக்கு மேற்பட்டவர்கள் படுகாயத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். முல்லைத்தீவு, திருகோணமலையில் மக்கள் வாழும் பகுதிகளில், தொடர்ந்து வான்வழியாக குண்டுவீச்சு நடத்தப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் பெருமளவில் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களது உடைமைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. சிங்கள ராணுவத்தின் இந்தச் செயல் எங்களை, எங்களது போராளிகளை உசுப்பிவிடத் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்தக் காலத்தில் சிங்களக் கடற்படை, வான்படைகளுக்கு ஏராளமான அளவில் ஆயுதங்கள் வாங்கிக் குவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையிலும் நார்வே நாட்டின் சமாதான முயற்சிகளை மதிக்கும் வகையில் அவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். ஒத்துழைப்பு கொடுப்போம். அதே வேளையில், எங்களது போர்நிறுத்தத்தை இதற்கு மேலும் நீட்டிப்பது எவ்வாறு?' என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதே நாளில் (ஏப்ரல் 24) சிங்கள ராணுவம் "அக்னி ஜ்வாலா' என்ற பெயரில் ஆனையிறவுப் பகுதியில் முப்படைகளைக் கொண்டும் தாக்குதலைத் தொடுத்தது. ஆனையிறவுத் தளத்தை மீண்டும் கைப்பற்றுவது இத் தாக்குதலின் நோக்கமாக இருந்தது. சிங்கள ராணுவத்தின் 52, 53 மற்றும் 55-வது படைப் பிரிவுகளில் உள்ள 12 ஆயிரம் துருப்புகள் ஒருசேரத் தாக்கின.
இந்த நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்குபவராக பாதுகாப்புத்துறை அமைச்சர் அநுருத்த ரத்தவத்தே பலாலி விமானதளத்தில் வந்து தங்கியிருந்தார். எதிர்பார்த்த எதிர்த் தாக்குதல் இல்லை. ராணுவத்தினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்தனர். ராணுவத்தினரை முன்னேறவிட்டு, திடும்மென புலிகள் ராணுவத்தினரைத் தாக்கினர்.
எதிர்பாராத இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் திகைப்புற்று, சிதைந்து ஓடினர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்திறங்கிய கடற்படையினர் மீதும் சரமாரித் தாக்குதல் நடத்தப்பட்டது. "அக்னி ஜ்வாலை' அணைந்து போனது என்று குறிப்பிட்ட பாலசிங்கம், 600 வீரர்களை இழந்து, 2 ஆயிரம் பேர் படுகாயமுற்று ஓடியதாகவும் தனது நூலான வார் அண்ட் பீஸில் (பக்.349) குறிப்பிட்டுள்ளார்.
167: ரணில் பிரதமரானார்!
புலிகளிடம் இழந்த ஆனையிறவை மீண்டும் கைப்பற்றி விடுவோம் என்ற நினைப்பில், பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்தவத்தே கொழும்பிலிருந்து ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களை விமானத்தில் கூட்டி வந்திருந்தார். அவர்களனைவரும் பலாலி விமானதளத்தில் உள்ள ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.
உயிரிழந்த, காயம்பட்ட, கண்ணிவெடியில் கால்களை இழந்தவர்களை நூற்றுக்கணக்கில் கொண்டு செல்ல, பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு அவை பயன்படுத்தப்பட்டன. போதாக்குறைக்கு கொழும்பிலிருந்து மேலும் விமானங்கள் வரவழைக்கப்பட்டு வீரர்களை ஏற்றி அனுப்புவதைப் பத்திரிகையாளர்கள் நேரில் கண்டு திகைத்தனர். அவர்களில் பலரும் தாங்கள் எழுதிய கட்டுரைகளுக்கு இட்டிருந்த தலைப்பு: "அக்னி ஜ்வாலை நெருப்பை கக்காதது ஏன்?' என்பதாகும்.
இலங்கை ராணுவத்துக்குக் கடுமையான இழப்பு ஏற்பட்டபிறகும் சந்திரிகா, நார்வே சமரசத்தை ஏற்கவில்லை. நார்வே நாட்டுக்கு முன்பாக, வாஜ்பாய் அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்று, ஜஸ்வந்த் சிங்கை கொழும்புக்கு அனுப்பி வைத்தது.
இக்காலத்தில், விடுதலைப் புலிகளின் தலைவருடனான சந்திப்புக்கு இந்தியப் பிரதமர் வாஜ்பாய்க்குத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ரா முயன்றார். சந்திக்கலாம், என்ன தகவல் வேண்டுமோ அதைப் பெற்றுத்தர முடியும்; ஆனால் பிரபாகரனிடம் தமிழீழக் கோரிக்கையைக் கைவிடச் சொல்லக்கூடாது என்று பிரஜேஷ் மிஸ்ராவிடம் சொல்லி, அதற்கு அவர் உறுதிகொடுத்த பின்பு, அவ்வாறு கேட்கமாட்டோம் என்று பிரஜேஷ் சொன்னபிறகு பிரபாகரனிடம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா விதித்த தடையை நீக்கினால் நல்லது என்கிற பிரபாகரனின் விருப்பத்திற்கு, தடைக்கும் பேச்சுக்கும் சம்பந்தமில்லை என்று பிர்ஜேஷ் மிஸ்ரா விளக்கமளித்தார். இந்திய சமரச முயற்சிக்கு ஒத்துக்கொண்டதைப் பிரபாகரன் 2, ஜூன் 2000-இல் பிரஜேஷ் மிஸ்ராவுக்கு தெரிவித்தபின்னர்தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங் கொழும்பு சென்றார். சந்திரிகாவிடம் பேசினார்.
இந்தியாவின் சமரச முயற்சிக்கு சந்திரிகா ஒத்துக்கொள்ளாததால், அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டது. இந்த முயற்சிகளில் இந்திய சட்ட அமைச்சர் ஜனா கிருஷ்ணமூர்த்தி, மறவன்புலவு க.சச்சிதானந்தம், காசி.ஆனந்தன், பழ.நெடுமாறன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அதேபோன்று இங்கிலாந்தும் சமரச முயற்சியில் ஈடுபட முயன்று, எதிர் எதிரான சிங்களக் கட்சிகளிடையே இனப் பிரச்னையில் ஒத்த கருத்தை உருவாக்க முயன்றது. இந்தத் திட்டத்துக்கும் சந்திரிகா முன்வரவில்லை.
இவ்வாறே நார்வேயின் சமரச முயற்சியையும் அவர் புறந்தள்ளிவிட முயல்வது வெளிப்படையாகத் தெரிந்தது. விடுதலைப் புலிகள் சந்திரிகாவுக்கு ஒரு பாடத்தைச் சொல்ல விரும்பினார்கள்.
"1983-ஜூலை படுகொலை நினவுநாளி'ல், ஜூலை 24, 2001 அன்று அதிகாலை, விடுதலைப் புலிகளின் அதிரடிப்படைப் பிரிவைச் சேர்ந்த 14 பேர் கொழும்புக்கு வடக்கே உள்ள கட்டுநாயக்கா விமானப்படை தளத்தை முற்றுகையிட்டனர். புலிகளின் உளவுப் பிரிவு பல மாதங்களாக திரட்டிய தகவல்களின் அடிப்படையில், போராளிகள் ராணுவ வீரர்களின் சீருடையில் உள்ளே நுழைந்தனர்.
அடுத்த சில நிமிடங்களில், 8 விமானப்படை விமானங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. அதிர்ந்த விமானப்படை வீரர்களுக்கும் போராளிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. விமானப்படைத் தளத்தையொட்டிதான் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையமும் இருந்தது. போராளிகள் அங்கும் நுழைந்து 3 பயணிகள் விமானங்களைத் தாக்கி அழித்தனர். அதுதவிர இரு இடங்களிலும் சேர்த்து 16 சிறு போர்விமானங்களும், ஹெலிகாப்டர்களும் குண்டு வீசித் தகர்க்கப்பட்டன.
விமானங்கள் தாக்குதலுக்குள்ளானதும், அடுத்த சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கில் வீரர்கள் அங்கே குவிந்தனர். அவர்கள், 14 புலிகளையும் சுற்றிவளைத்து தாக்கிய நிலையிலும், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானங்களை அழித்த அவர்களில் சிலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சிலர் சயனைட் குப்பி கடித்து உயிர்துறந்தனர்.
இந்தச் சம்பவம் இலங்கை மட்டுமன்றி உலகம் முழுவதும் பரவி, பரபரப்புக்குள்ளானது. இதன் உடனடித் தாக்கமாக சுற்றுலாப் பயணிகள் அச்சம் கொண்டு, இலங்கைப் பயணத்தை ரத்து செய்ததில் முடிந்தது. இன்னொரு விளைவாக, வெளிநாட்டு முதலீடுகள் குறைந்தன.
இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில், "தொடர் யுத்தம் காரணமாக, பொருளாதாரம் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. வளர்ச்சித் திட்டங்களுக்குப் போகவேண்டிய நிதி, யுத்தச் செலவுகளுக்கும், ஆயுதங்களுக்குமே திருப்பிவிடப்படுகிறது' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது (வார் அண்ட் பீஸ்-அன்டன் பாலசிங்கம், பக்.352).
ஆனையிறவு மீட்பில் பலத்த அடிவாங்கிய சந்திரிகா, அரசியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், ராணுவரீதியாகவும் கடும் நெருக்கடிக்கும், தொடர் விமர்சனங்களுக்கும் ஆளானார். இதற்கு மேலும் அழிவைச் சந்திக்க முடியாது என்று முடிவெடுத்த சந்திரிகா, லட்சுமண் கதிர்காமரை அழைத்து, நார்வே நாட்டின் சமாதான முயற்சிகளைப் புதுப்பிக்கும்படி உத்தரவிட்டார்.
லட்சுமண் கதிர்காமர், நார்வேயின் இலங்கைக்கான தூதுவர் ஜான் வெஸ்ட்போர்க்கைத் தொடர்பு கொண்டார். அவர் முந்தைய முயற்சிகளில் காயமடைந்த விடுதலைப் புலிகளிடம் தொடர்பு கொள்வதில் உள்ள சிரமங்களை விளக்கினார். இருப்பினும் இதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக ஜான் வெஸ்ட்போர்க் தெரிவித்து, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனைத் தொடர்பு கொண்டபோது, அவர், விடுதலைப் புலிகள் மீதான தடையையும், பொருளாதாரத் தடையையும் விலக்குவதுடன் இருதரப்பு போர்நிறுத்தத்துக்கான அறிவிப்பை வெளியிடுவதும் அவசியம் என வலியுறுத்தினார். ஆனால், சந்திரிகா இந்த நிபந்தனைகளுக்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதே வேளையில், நார்வே நாட்டிலும் ஆட்சிமாற்றம் நிகழ்ந்திருந்தது. தொழில்கட்சி அரசு பதவி விலகி, கன்சர்வேடிவ் கட்சியும், கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியும் இணைந்த அரசு பதவியேற்று, அதன் பிரதமராக கே.எம்.பாண்டெவிக் மற்றும் புதிய வெளியுறத்துறை அமைச்சராக ஜான் பீட்டர்சன் பொறுப்பேற்றதும், இலங்கை சமாதான முயற்சிகளின் தூதுவராக எரிக் சோல்ஹைம் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் ரணில் விக்ரமசிங்கே இருக்கும்போது, தனது தேர்தல் அறிக்கையில் "அமைதி, அமைதி மட்டுமே தனது கட்சியின் முக்கிய அம்சமாக இருக்கும். முந்தைய அரசின் தவறான அணுகுமுறைகளால் ஏற்பட்ட போரின் விளைவாக அல்லலுற்ற நாம், ஒன்றிணைந்த இலங்கையில் அனைவரும் ஏற்கும் வகையிலான சமரசத் திட்டத்தை முன்வைத்து, நாட்டில் அமைதியை நிலைநாட்டுவோம். சமாதானப் பேச்சைத் தொடர்வோம். விடுதலைப் புலிகளை அரவணைத்துச் செல்வோம். அனைவரும் ஏற்றால் நாட்டின் அரசியலமைப்பில் தேவைப்படும் மாற்றங்களை ஏற்படுத்தி, ஒருங்கிணைந்த புதிய இலங்கையைப் படைப்போம். வடக்கு-கிழக்கில் இடைக்கால அரசு ஒன்றை அமைக்கவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களை அவர்களது பகுதியிலேயே மீண்டும் குடியமர்த்தவும், "கமிஷன்' ஒன்றையும் அமைப்போம். முதற்கட்டமாக அங்குள்ள மக்களின் அன்றாடத் தேவைக்குண்டான அனைத்துப் பொருள்களும் தினசரி கிடைக்கும் வகையான சூழலை உருவாக்கித் தருவோம்' என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார்.
இதேபோன்று, வே.பிரபாகரன் 27, நவம்பர் 2001 மாவீரர் நாள் உரையில், "ராணுவமயம் என்றும் அதன் மூலமே தீர்வு என்றும் நம்பிக்கை கொண்ட அடக்குமுறையாளர்களை சிங்கள மக்கள் அடையாளம் கண்டு இத் தேர்தலில் ஒதுக்கவேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். அவ்வுரையில் அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் சிங்களவர்களின் எதிரிகளல்ல. அவர்களுக்கெதிராகவும் நாங்கள் போராடவில்லை. சிங்களப் பேரினவாதிகளையும், பேரினவாத அரசியலாளர்களையும் மட்டுமே எதிர்க்கிறோம். இவர்களால்தான் தமிழ்-சிங்கள மோதல்கள் உருவாகின்றன. எங்களுக்கு நன்றாகத் தெரியும், போர் என்பது தமிழர்களை மட்டுமல்ல, அது சிங்களவர்களையும் பாதிக்கிறது என்று. போர் வெறியால், அடக்குமுறையால், அப்பாவி சிங்கள இளைஞர்கள் பெருமளவில் உயிரிழந்திருக்கின்றனர். எனவே இத் தீவில் நிரந்தரமான அமைதியை ஏற்படுத்தவல்ல, தமிழர்களுக்குரிய நல்ல தீர்வைத் தரக்கூடியவர்களையே அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் அணி பெரும்பான்மை பலம் பெற்றது. 5, டிசம்பர் 2001-இல் ரணில் பிரதமரானார். புலிகள் வழக்கம்போல் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு ஒரு மாதம் போர்நிறுத்தம் அறிவித்தார்கள். புதிய பிரதமரான ரணிலும் பதிலுக்கு போர்நிறுத்தம் அறிவித்தார்.
168: போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது!
இலங்கை அரசியல் சட்டப்படி அதிபர்தான் பாதுகாப்புக்கும் அமைச்சராவார். பாதுகாப்பு அமைச்சர் என்று சொல்லப்படும் அமைச்சர்கள் வெறுமனே துணை பாதுகாப்பு அமைச்சர் என்றுதான் அழைக்கப்படுவர்.
எனவே பிரதமர் ரணிலின் உத்தரவை, அதிபர் சந்திரிகா புறம் தள்ளினார். முப்படைகளுக்கும் தலைவர் என்ற முறையில் தளபதிகளும் சந்திரிகாவின் பேச்சையே கேட்டனர். போர்நிறுத்த அறிவிப்பு வெளியிடும் முன்பு தன்னிடம் அனுமதி பெறவில்லை என்றும் சந்திரிகா குற்றம்சாட்டினார்.
ஆனால், சமாதானத் தேவதை என்றும், அமைதித் தேவதை என்றும் லட்சுமண் கதிர்காமரின் வெளியுறவுத்துறையால் பிரசாரப்படுத்தப்பட்டிருந்த சந்திரிகா உலகளவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
ரணில் ஆட்சிப் பொறுப்பேற்றதும், செய்த இன்னொரு நகர்வாக, "நார்வே நாட்டின் சமாதான முயற்சிகளுக்கு அனுசரணையாக இருப்பேன்' என்று அறிவித்தது ஆகும். அதுமட்டுமன்றி தமிழர்கள் பகுதியில், சந்திரிகாவால் விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை 15, ஜனவரி 2002 முதல் நீக்குவதாகவும் அறிவித்தார்.
விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன் நார்வே நாட்டின் புதிய பிரதமர் கே.எம். பாண்டெவிக்கிற்கு ஒரு கடிதம் எழுதி, விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே கடந்த இரண்டரையாண்டு காலமாக சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நார்வே நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்ததுடன், அந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு, தமிழீழத்தில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு நல்லது வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அக்கடிதத்தில், சமாதான முயற்சிகளுக்கு ஒத்திசைவாக விடுதலைப் புலிகள் அமைப்பு நடந்து கொள்ளும் என்றும் உறுதியளித்திருந்தார்.
ஜனவரி முதலாம் தேதி எழுதப்பட்ட இக் கடிதத்திற்கு நார்வே நாட்டின் பிரதமர் கே.எம். பாண்டெவிக் உடனடியாகப் பதில் எழுதி, சமாதான முயற்சிகளை அரசு சார்பில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பாட்டர்சன் மற்றும் அரசுச் செயலாளர் விதார் ஹெல்கசன் ஆகியோர் மேற்பார்வையிடுவர் என்றும் தெரிவித்திருந்தார். இதன் பின்னணியில் நார்வே நாட்டு சமாதானக் குழுவினர் புலிகள் மற்றும் அரசிடம் போர் நிறுத்தம் குறித்த தங்களது திட்டங்களை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர் (ஜனவரி 7). இதனையொட்டி லண்டனில் இருந்த அன்டன் பாலசிங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான வரைவுத் திட்டத்தை எழுதவும், நார்வே நாட்டுக் குழுவினரிடம் தொடர்பு கொள்ளவும் பணிக்கப்பட்டார்.
வன்னிப் பகுதியில் இருந்த அன்டன் பாலசிங்கம் லண்டன் சென்றது எவ்வாறு என்பது இங்கு அறிவது அவசியமாகும். வன்னியில் இருந்த அன்டன் பாலசிங்கத்தின் இடது சிறுநீரகம் முற்றிலுமாகப் பழுது ஆனதால், அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவது அவசியம் என்று புலிகளின் மருத்துவரான சூரி கருத்து தெரிவித்தார்.
இதனையொட்டி லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், நார்வே நாட்டு அரசு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டனர். இறுதியில் எரிக் சோல்ஹைமையும் அணுகினர். இலங்கையின் நார்வே நாட்டுத் தூதரகமும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் சந்திரிகா அரசைத் தொடர்பு கொண்டு, தாங்கள் அனுமதித்தால் அன்டன் பாலசிங்கத்துக்கு சிகிச்சையளிக்கத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தனர். சந்திரிகா மனிதாபிமானமற்ற முறையில், புலிகள் இயக்கத்துக்கு சில நிபந்தனைகளை விதித்தார். அவை:
1) வடக்கு-கிழக்கில் அரசு நிர்வாகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் புலிகள் ஈடுபடக் கூடாது. 2) வான் மற்றும் கடல் வழியாக அந்தப் பிரதேசத்திற்கு முகாம்களுக்கு செய்யப்படும் விநியோகத்திற்குக் குந்தகம் இழைக்கக் கூடாது. 3) நாடு முழுவதும் உள்ள அரசு சொத்துகளைத் தாக்கியழிக்கக் கூடாது. 4) தடுத்து வைத்திருக்கும் எல்லாப் போர்க் கைதிகளையும் (செஞ்சிலுவைச் சங்கம் அறிந்த மற்றும் அறியாத) விடுவிக்க வேண்டும். 5) புலிகள் படையில் 18 வயதுக்குள்ளான போராளிகளை அதிலிருந்து விலக்கி பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தப்பட்டன.
"இந்தக் கோரிக்கைகள் ராணுவ ரீதியானவை. இதற்கும் நோயுற்ற பாலசிங்கத்தை சிகிச்சைக்கு அனுமதிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே நானும் பாலாவும் இந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டோம்' (சுதந்திர வேட்கை- அடேல் பாலசிங்கம்) என்று தனது நூலில் குறிப்பிட்ட அடேல், மாற்று வழியில் கப்பல் மூலம், தென் கிழக்கு ஆசிய நாடொன்றில் யாருமறியாமல் ரகசியமாக சிறுநீரகத்தை அகற்றும் சிகிச்சை மேற்கொண்டு, பின்னர் அங்கிருந்த லண்டன் தூதுவர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட்டது என்றும், அடேல் பாலசிங்கத்துக்கு ஆஸ்திரேலிய தூதுரகம் மூலமாக புதிய பாஸ்போர்ட் பெற்று, சிகிச்சை மேற்கொண்ட நாட்டின் உயர் அதிகாரிகளான நண்பர்களின் உதவியால் லண்டன் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
லண்டன் மருத்துவர்கள் மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதை அங்கீகரிக்கவில்லை. இந்த சமயத்தில்தான் நார்வே நாட்டுச் சமாதானக் குழுவினர் லண்டனில் பாலசிங்கத்தைச் சந்திப்பது நேர்ந்தது.
இதன் பின்னர் நார்வே நாட்டு தூதுக் குழுவினர், தங்கள் நாட்டு மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, மாற்றுச் சிறுநீரகம் பொருத்தலாம். ஆனால் அந்தச் சிறுநீரகத்தின் செயல்பாடு குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டுமே இருக்கும் என்று தெரிவித்தனர்.
இதன்படி, வேறு வழியின்றி, பாலசிங்கத்துக்கு நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. அங்கு சில மாதங்கள் தங்கி ஓய்வு எடுத்த பின்னர் பாலசிங்கம் தம்பதியினர் லண்டன் திரும்பினர்.
லண்டனிலிருந்த பாலசிங்கத்தை சமாதான முயற்சி தொடர்பாக விதார் ஹெல்கசன், எரிக் சோல்ஹைம், ஜான் வெஸ்ட்போர்க், ஜெர்ஸ்தி ட்ரோம்ஸ்டல் உள்ளிட்ட தூதுக் குழுவினர் சந்தித்தது இவ்வாறுதான். இருதரப்பிலும் பல தடவைகள் பேச்சு நடத்தி ஒரு வரைவுத் திட்டத்தைத் தயாரித்தனர்.
22 பிப்ரவரி, 2002 அன்று போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. கிளிநொச்சியில் இருந்தபடி இந்த ஒப்பந்தத்தில் வே. பிரபாகரன் முதல் கையெழுத்திட்டார். தொடர்ந்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வவுனியாவுக்கு வந்திருந்து கையெழுத்திட்டார்.
இதேநேரத்தில், நார்வே நாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பீட்டர்சன் குழுவினர் ஆஸ்லோ நகரில், பத்திரிகையாளர் சந்திப்பின் போது, விடுதலைப் புலிகள்- இலங்கை அரசுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதான செய்தியை உலகுக்கு அறிவித்தனர். இதுகுறித்து ஜான் பீட்டர்சன் விளக்குகையில் தெரிவித்ததாவது:
"இதுவரை நடந்த யுத்தங்களின் மூலம் இலங்கையில் 60 ஆயிரம் உயிர்கள் பலியாகி இருக்கின்றன. பல லட்சக்கணக்கானோர் பல்வேறு வகையில் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். எனவே, இந்நிலையில் சமாதானப் பேச்சும், போர்நிறுத்தமும் அவசியமாகிறது. இதன்மூலம் இலங்கையில் தமிழர்கள் மட்டுமின்றி முஸ்லிம்கள், சிங்களர்கள் மற்றும் அனைத்து பிரிவினரும் இயல்பு வாழ்க்கை வாழ உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் போர் நிறுத்தத்தைக் கண்காணிக்க நார்வே நாட்டுத் தலைமையில் சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அக்குழு, போர் நிறுத்ததைக் கண்காணிக்கும்.
ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்கள் எடுத்த மிகவும் துணிச்சலான நடவடிக்கை ஆகும். அதாவது சமாதானத்துக்காக எடுத்திருக்கிறார்கள். சமாதானம் என்பது நீண்டபாதை. அது கரடு முரடானது. பார்க்க சுலபமானது. ஆனால் உண்மை அதுவல்ல. இருதரப்பினருக்கும் ஓர் அர்ப்பணிப்பு உணர்வும் ஈடுபாடும் இருந்தால் மட்டுமே இந்த நீண்ட பாதையைக் கடக்க முடியும்.
ஒளிமயமான எதிர்காலம் எங்கள் முன் தென்படுகிறது. எங்களது பயணத்தில் வெற்றியடைவோம் என்று உறுதியாக நம்புகிறோம்.
இந்த ஒப்பந்தம் மூன்று அம்சங்களை உள்ளடக்கி உள்ளது. 1) போராளிகளோ அரசோ ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது; அவர்கள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். 2) இலங்கையின் அனைத்து இன மக்களும் இயல்பு வாழ்க்கை வாழ அனுமதிக்கப்பட்டு, பேதமின்றி அனைத்துப் பிரிவினருக்கும் உண்டான உரிமைகள் சலுகைகளை அடையப் பாடுப்படுவது. 3) போர் நிறுத்தக் காலத்தில் இவைகளைக் கண்காணிக்க நார்வே தலைமையில் கண்காணிப்புக் குழு மேற்பார்வை இடுவது- ஆகியவை அடங்கும்.
புலிகள்- அரசுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் அறிந்து தமிழர்கள் மட்டுமன்றி உலக நாடுகள் மத்தியிலும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியது.
ஆனால் சந்திரிகாவோ இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கை இது என்றும் இதுகுறித்த "முன் அனுமதி'யைத் தன்னிடம் பெறவில்லை என்றும் கடுமையான விமர்சனங்களில் இறங்கினார்.
இதுகுறித்து நார்வே நாட்டு சமாதானத் தூதுவர் எரிக் சோல்ஹைம் பின்னர் அளித்த பேட்டியொன்றில் குறிப்பிடுகையில், "அப்போதைய காலப் பகுதியில் பல்வேறு கஷ்டங்கள் இருந்த போதிலும் அரசுக்கும் புலிகளுக்கும் ஏற்படுத்தப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையானது, 1983-ல் ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு முதன்முதலாக ஏற்பட்ட உறுதியான- அமைதியான- சூழ்நிலையை உருவாக்கியது. அதுவே அப்போது எங்களது சாதனையாக இருந்தது.' (இலங்கையில் சமாதானம் பேசுதல்- குமார் ரூபசிங்கவுக்கு அளித்த பேட்டியில். பக். 443) என்று தெரிவித்துள்ளார்.
169: உலகைக் கவர்ந்த பிரபாகரன் பேட்டி!
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு அதை நடைமுறைப்படுத்துகிற விஷயங்களில் ஏற்பட்ட சுணக்கங்களை நார்வே சமரசக் குழுவினரின் கவனத்திற்கு பாலசிங்கம் கொண்டு வந்தார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் பிரபாகரனின் ஆலோசனைகளை நேரடியாகப் பெறவேண்டிய நிலையில் இருப்பதாகவும், பாதுகாப்புச் சூழ்நிலை கருதி இந்தப் பேச்சுவார்த்தைகளை கொழும்பில் அல்லாமல் வேறு ஒரு நாட்டில் நடத்துவது சரியாக இருக்கும் என்றும் பாலசிங்கம் கருத்துத் தெரிவித்தார்.
பிரபாகரனுடன் கருத்துப் பரிமாற்றம் செய்ய அடேலும், பாலசிங்கமும் வன்னி செல்வதற்கு இன்னொரு நாட்டின் உதவி தேவைப்பட்டது. மாலத்தீவு கடல் சுற்றுலாவுக்கான விமானங்களைக் கொண்டிருப்பதால், அந்த நாட்டின் உதவி அணுகப்பட்டு, மாலத்தீவு சென்று, விமான நிலையத்தின் அருகே மார்ச் 24-இல் ஓட்டலில் இரவு தங்கினர். பாலசிங்கம் குழுவினர் கடற்படை விமானத்தில் புறப்பட்டு வன்னிப் பகுதியை அடைந்தனர்.
அன்றைய தினமே பிரபாகரனுடன் விரிவாகப் பேசிய நிலையில், மாலையில் வந்த நார்வே குழுவினருடன் பேச்சு நடத்தப்பட்டது. இக் குழுவினருடன் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுப் பொறுப்பாளர் ஜெனரல் ட்ரான்ட் ஃப்ரோகோவுட் மற்றும் ஃபின்லாந்தைச் சேர்ந்த ஒருவரும் கலந்துகொண்டனர்.
பேச்சினூடே வவுனியா-கிளிநொச்சி வழியாகச் செல்லும் ஏ-9 தேசிய நெடுஞ்சாலை ஏப்ரல் 8-ஆம் தேதியிலிருந்து திறக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். பிரபாகரன் ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் நிறைவேற்றப்படுவதில் சுணக்கம் தென்படுகிறது என்று குறிப்பிட்டார். அப்போது பிரதமர் எல்லா அம்சங்களையும் நிறைவேற்ற உறுதி பூண்டிருப்பதாக நார்வே குழுவினர் தெரிவித்தனர். ஏ-9 தேசிய நெடுஞ்சாலை ஏப்ரல் 8-ஆம் தேதி திறக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் இயக்க வரலாற்றில் ஏப்ரல் 10, 2002 ஒரு முக்கியமான நாளாகும். அன்றைய தினம் வே. பிரபாகரன் இலங்கைப் பத்திரிகையாளர்கள் மட்டுமன்றி உலகிலுள்ள அனைத்துப் பத்திரிகையாளர்களையும் கிளிநொச்சியில் சந்தித்தார். தூயவன் அறிவியல் கல்லூரியில் இம் மாநாடு நடைபெற்றது. பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்ற வளாகம் மட்டுமன்றி, அந்தப் பகுதி முழுவதுமே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
குறிப்பிட்ட நேரத்தில் வே.பிரபாகரன் அரங்கத்துக்கு வந்தார். அவருடன் அன்டன் பாலசிங்கம், அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப. தமிழ்ச் செல்வன், தென்பகுதித் தளபதிகள் கருணா, பதுமன் ஆகியோரும் வந்தனர்.
விடுதலைப் புலிகளின் 25 ஆண்டு காலத்தில் இவ்வளவு பெரிய பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டியது இதுவே முதல் முறை.
மாலை 4.30 மணிக்குதான் கூட்டம் என்ற போதிலும், பத்திரிகையாளர்கள் அதிகாலையிலிருந்தே வர ஆரம்பித்துவிட்டனர்.
பல்வேறு வகையான கேள்விகளுக்கும் பொறுமையுடன் பதிலளித்த பிரபாகரன் எந்தக் கட்டத்திலும் உணர்ச்சி வசப்படவில்லை என்பது பத்திரிகையாளர்களின் மதிப்பீடு ஆகும். இங்கே சில கேள்விகளும் பிரபாகரன் அளித்த பதில்கள் வருமாறு:
கேள்வி: ""தனிநாடு கோரிக்கையை கைவிட்டு விட்டீர்களா?''
பதில்: ""1977-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தமிழீழக் கொள்கைக்கு ஆதரவாக எங்கள் மக்கள் தீர்ப்பு அளித்தனர். மக்கள் அளித்த அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் நாங்கள் இப்போது போராடி வருகிறோம். எங்களுடைய தனிநாடு கோரிக்கையைக் கைவிடுவதற்குச் சரியான சூழ்நிலைகள் இன்னமும் உருவாகவில்லை.''
""போர்நிறுத்தம் குறித்து என்ன சொல்கிறீர்கள்?''
""அமைதிக்கான எங்கள் அர்ப்பணிப்பில் நாங்கள் உண்மையாக இருக்கிறோம். அமைதி வேண்டும் என்பதில் நாங்கள் தீவிரமாக இருக்கிற காரணத்தினாலேதான், நாங்களாகவே முன்வந்து நான்கு மாத காலம் போர்நிறுத்தம் செய்தோம்.''
""கடந்த காலத்தில் நடைபெற்ற சமாதானப் பேச்சு போல இந்தப் பேச்சுவார்த்தையும் தடம்புரண்டு விடுமா?''
""முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைப் போன்று இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடையாது. முதலாவதாக இந்தப் பேச்சுவார்த்தையில் தொடர்பாளராக நார்வே நாடு உள்ளது. இரண்டாவதாகப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அமைதி வேண்டும் என்பதில் உண்மையான அக்கறை கொண்டிருக்கிறார்.''
""அமைதிக்கான விலை என்னவென்று தீர்மானமாகிவிட்டதா?''
""எங்களுடைய தனிநாடு கோரிக்கையை நாங்கள் கைவிட வேண்டும் என்பது அதன் விலையானால், அதற்குச் சரியான மாற்றுத் திட்டத்தினை இலங்கை அரசு அளிக்க வேண்டும். அதைப் பார்த்துதான் எங்களுடைய கோரிக்கையை நாங்கள் கைவிடுவதா இல்லையா என்பதை முடிவு செய்வோம்.''
""உங்களை பயங்கரவாதிகள் என்று கூறி அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் தடை செய்துள்ளனவே?''
""நாங்கள் பயங்கரவாதிகள் அல்லர். நாங்கள் சுதந்திரத்துக்காகப் போராடும் போராளிகள். பயங்கரவாதத்துக்கும் சுதந்திரப் போராட்டத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை விளக்க சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும். இதுவரை இதற்கான விளக்கத்தை யாராலும் அளிக்க முடியவில்லை.''
""இனப் பிரச்னைக்கு எவ்வாறு தீர்வு காணவேண்டும் என்று கூறுவீர்களா?''
""திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் மட்டும் இனப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.''
""இலங்கை அரசு அவ்வாறு தீர்வு காணுமா?''
""திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் இனப் பிரச்னைக்குத் தீர்வு காணும் திட்டத்தை சிங்கள அரசுதான் அளிக்கவேண்டும். சுயநிர்ணய உரிமைப் பிரச்னையில் தனது அரசியல் சட்டத்திலேயே விளக்கம் தந்த நாடு தென் ஆப்பிரிக்கா. தேசிய இனப் பிரச்னைக்குத் தனது அரசியல் சட்டத்தில் விளக்கம் தந்த நாடு ஸ்பெயின். கனடா நாடும் தனது நாட்டிலுள்ள சிறுபான்மை இனங்களின் பிரச்னைக்குத் தீர்வு கண்டுள்ளது. இந் நாடுகளைப் போன்று இனப் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டிய கடமை சிங்கள அரசுக்கும் உண்டு.''
""உங்கள் இயக்கம் மீது தடை இருக்கிறதே? எப்படிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பீர்கள்?''
""தடை நீக்கப்பட்டபிறகு பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்.''
""ஏ-9 தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்டுள்ளதே?''
""நன்றி சொல்கிறோம்.''
""சமாதானப் பேச்சு பற்றி உலகத் தமிழர்களின் கண்ணோட்டம்?''
""நீண்ட காலத்துக்குப் பிறகு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறோம். எல்லா நாடுகளிலும் உள்ள அனைத்து தமிழர்களின் ஆதரவும் எம் பக்கம் இருக்கவேண்டும்.''
""உங்களிடம் ராணுவக் கைதிகள் உள்ளனரா?''
""சிறிய அளவிலான தொகையினர்தான் கைதிகளாக உள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக, அவர்களைத் தங்கள் குடும்பத்துடன் தொடர்பு கொள்வதற்கான ஒழுங்குகள் நீண்டகாலமாகவே செய்து தரப்பட்டுள்ளன.''
மூலம்: தினமணி
பிரசுரித்த நாள்: Oct 02, 2009 1:42:24 GMT

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.