Saturday 30 May 2020

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (137-142)

137: பிரபாகரன் கொலையுண்டதாகப் புரளி!

அமிர்தலிங்கத்தின் கொலையை இந்திய அமைதிப் படை பிரசார நோக்கிற்காகப் பயன்படுத்திக் கொண்டது. அமைதிப் படை இருக்கும்போதே கொலை நிகழ்கிறது என்றால், அமைதிப் படை இல்லாத நிலையை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று கூறியது.
ஆனால் உண்மையில் இந்தக் கொலை என்பது கொழும்பு நகரில், இலங்கையின் தலைநகரில் நடந்திருக்கிறது. அமைதிப் படை இருப்பதோ வடக்கு-கிழக்கில். இருந்தாலும் மேற்கண்ட வாதம் முன்னெடுக்கப்பட்டது.

புலிகளை இந்தக் கொலையில் சம்பந்தப்படுத்தியதன் நோக்கம் என்னவென்றால், திம்பு பேச்சின் மீது வைத்த அடிப்படைக் கொள்கைகளைப் புறக்கணித்தது குறித்தும், நாடாளுமன்றத் தேர்தலில் பங்கு பெறுவது குறித்தும் புலிகள் தமிழர் விடுதலைக் கூட்டணியை விமர்சித்திருந்த காரணத்தால், கொலையில் தொடர்பிருக்கலாம் என்று வாதிடப்பட்டது.
ஆனால் லண்டனில் இருந்த புலிகளின் அலுவலகம், "அமிர்தலிங்கம் கொலையில் தங்களுக்குத் தொடர்பில்லை' என்று மறுத்தது.
அமிர்தலிங்கம் கொலை நடந்த அதே வாரத்தில் "பிளாட்' இயக்கத் தலைவர் முகுந்தன் என்கிற உமா மகேசுவரனும் கொழும்பில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு கட்சியின் உட்பூசல்தான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், அவர் இந்திய உளவுப் பிரிவையும் அதன் செயல்பாட்டையும் "டைம்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் மூலம் அம்பலப்படுத்தியிருந்த நேரத்தில் அவரது கொலை நடந்ததால், பல்வேறு யூகச் செய்திகள் வெளியாயின.
பிரேமதாசாவின் ஜூலை கெடுவைத் தொடர்ந்து, அமைதிப் படை முல்லைத் தீவுப் பகுதிகளில் ஏராளமான துருப்புகளை இறக்கி, கடுமையாகத் தாக்கியது. விடுதலைப் புலிகள் 1989 ஆகஸ்ட் மாதம் 9 மற்றும் 21 ஆகிய தேதிகளில் வெளியிட்ட மூன்று அறிக்கைகளின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் அமைதிப் படையினால் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதிப் படையினர் வைத்த கண்ணி வெடியால் மதியாமதி, ஆனந்தப் புளியங்குளம் வீதியில் உள்ள நொச்சிகுளத்தில் ஆறு பேர் இறந்தனர் என்றும்,
கிழக்கு மாகாணத்தில் அகதிகள் முகாம்களிலிருந்து திரும்பவும் தத்தமது இடங்களுக்கு அனுப்பப்பட்ட மக்கள் மீன்பிடித் தடையாலும், விவசாயம் செய்ய ஏற்பட்ட தடையாலும் எதுவும் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர்கள் அகதிகளாக இருந்தபோது கொடுக்கப்பட்ட நிவாரணமும் நிறுத்தப்பட்டுவிட்டது. தவிர்க்கமுடியாமல் பயிர் செய்தால், தடையை மீறி செய்யப்பட்ட விவசாயம் என்று கூறி அவை எரிக்கப்படுகின்றன.
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா, ஆத்தியடி, மணற்காடு, பச்சையடிக்கல், கல்லடைப்பு, சுங்கான்குழி, வல்வெட்டுவான், சின்னத்தீவு, பாலத்தடி, மதிரடியச்சேனை ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட விவசாயப் பயிர்கள் இவ்வாறு எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
உள்ளூர்க் கடைகளையும் மூடும்படி உத்தரவிடப்பட்டுவிட்டது. காரணம் குறிப்பிட்ட அளவுதான் பொருட்கள் வாங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அதிகப்படியான பொருட்கள் வாங்கினால், அவை மறைந்திருக்கும் கொரில்லாப் படையினருக்குச் செல்லும் என்று தவறாகக் கருதப்பட்டது. அதிகப்படியான பொருள்கள் தேவையென்றால் ஈபிஆர்எல்எஃப், ஈஎன்டிஎல்எஃப், டெலோ இயக்க அலுவலகங்களில் அனுமதிச்சீட்டுப் பெற வேண்டும் என்ற நெருக்கடியும் கொடுக்கப்பட்டது.
வடக்கு-கிழக்கு மாகாண அரசின் முதலமைச்சர் வரதராஜ பெருமாள், இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி அரசு நடக்கத் தவறினால் தனி அரசான ஈழப் பிரகடனத்தைச் செய்யப் போவதாக அறிவித்தார். அறிக்கையில் அவர் மேலும் கூறுகையில், "அமைதிப் படையோடு, தமிழ் தேசிய ராணுவமும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும்' என்றும் கூறினார்.
விடுதலைப் புலிகள் மரபு ரீதியான தாக்குதலின்றி கொரில்லாத் தாக்குதலில் ஈடுபட்ட போதிலும், அவர்களுக்கு உடனடியாக ஆயுதங்கள் தேவைப்பட்டன. இந்த ஆயுதத் தேவைக்காகவே அவர்கள் அமைதிப் படை இலக்குகளைத் தாக்கி அழித்து, ஆயுதங்களைக் கைப்பற்றிச் சென்றார்கள். ஆயுதமின்றி புலிகள் மறைவிடங்களில் பதுங்கினார்கள்.
இந்த நிலையில் அதிரடிச் செய்தியாக விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன் மாத்தையாவினால் கொலை செய்யப்பட்டார் என்று செய்திகள் வெளியாயின. இந்தத் தகவல் தமிழகத்தின் பாரம்பரியப் பத்திரிகையிலேயே முக்கியச் செய்தியாக வெளியாயிற்று. இந்தச் செய்தியை வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள் உறுதி செய்ததாகவும் அப்பத்திரிகை மேற்கோள் காட்டியது.
லெப். ஜெனரல் தீபிந்தர் சிங் ஓய்வு பெற்றதும் அமைதிப் படையின் பொறுப்பை ஏற்ற அமர்ஜித் சிங் கல்கத் என்கிற ஏ.எஸ். கல்கத் ஓர் அரசியல்வாதியைப் போன்று அறிக்கைகள் விடுபவர் என்று விமர்சிக்கப்பட்டவர். இவருக்குச் சரியான இணையாக பார்த்தசாரதி என்கிற மக்கள் தொடர்பு அதிகாரி. இவர், சென்னை நட்சத்திர ஓட்டலில் பத்திரிகையாளர்களை அழைத்து விருந்தளித்துக் கொண்டே இருப்பார்.
இவ்வாறான சென்னைப் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், "கல்கத்- நீங்கள் இதுவரை சுட்டு வீழ்த்திய புலிகளின் எண்ணிக்கை பல ஆயிரம் வருகிறதே; புலிகளிடமிருந்து கைப்பற்றியதாக நீங்கள் கூறும் ஆயுதங்களைக் கணக்கிட்டால் அது சிங்களப் படையின் ஆயுதத்தைவிட அதிகம் இருக்கும் போலிருக்கிறதே' என்று செய்தியாளர்களில் ஒருவர் கேட்டதும், அவர் வாயடைத்துப் போனார். (பழ. நெடுமாறன் தனது நூலில்)
அதேபோன்று "பிரபாகரனை வளைத்து விட்டோம் இனி தப்ப முடியாது' என்று பேட்டியளித்ததும், இந்தியப் பத்திரிகைகள் மட்டுமன்றி, உலகப் பத்திரிகைகளும் இந்தச் செய்தியை பெரிய அளவில் வெளியிட்டன. ஆனால், அப்படியொரு நிகழ்ச்சி நடைபெறவே இல்லை.
இப்பொழுதும் கூட பிரபாகரன் கொல்லப்பட்டதான செய்தியும், கல்கத் பரப்பிய செய்தியாக இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளே அதிகம் இருந்தன. ஆனால், இவ்வகைப் பிரசாரத்தைப் புறக்கணித்துவிடவும் முடியாது என்று அப்போது கூறப்பட்டது.
காரணம், இதுபோன்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அதில் பிரபாகரன் தனக்கேயுரிய சாதுர்ய நடவடிக்கைகளால் தப்பியிருக்கலாம் என்பதும், வரலாற்றைக் கூர்ந்து நோக்குகிறவர்களின் கருத்தாக இருந்தது. அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் கொலைகள், முகுந்தன் என்கிற உமா மகேஸ்வரன் கொலை, மாத்தையாவினால் பிரபாகரன் கொலையானதாக வந்த பத்திரிகைச் செய்தி- ஆகிய இம் மூன்றும் ஒரே மூளையில் உதித்தவையாகவும் இருக்கலாம் என்ற கருத்தும் அப்போது முன்வைக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளினதும், பிரபாகரனினதுமான தேவை எவ்வாறு உணரப்பட்டது என்ற கேள்விக்கு "முறிந்தபனை' நூலின் 517 மற்றும் 518-ஆம் பக்கத்தில் விடை உள்ளது. அவை வருமாறு:
""கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் அரசியல் அரங்கில் புலிகளே பிரதான பாத்திரத்தை வகித்து வந்திருக்கிறார்கள். தமிழ் பிரதேசங்களில் இவர்கள் நடத்திய யுத்தம் உலகின் நாலாவது பெரிய ராணுவமும் அதன் உள்ளூர் சகபாடிகளும் சேர்ந்து நடத்திய கொடூரமான பழிவாங்கும் நடவடிக்கைகளும், ஈவிரக்கமற்ற படுகொலைகளும் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் கசப்பையும், வேதனையையும் பெருகிடச் செய்து, அதுவே ஆட்கள் தொடர்ந்து போய் புலிகளிடம் சேர்வதற்கான மூலாதாரமாகத் திகழ்ந்தது.
புலிகளின் யுத்த தந்திரோபாயங்களில் மக்கள் பிரமைகள் கலைந்தவர்களாய் இருந்தாலும் தமிழ் லட்சியத்தின் காவலர்களாகவே புலிகள் பெரிதும் இனங் காணப்பட்டிருந்தனர். இந்திய அமைதிப் படை குறித்து நடைமுறை சாத்தியமான சிறந்த நிலைப்பாட்டை புலிகள் கைக்கொண்டிருக்க வேண்டும் என்று மக்கள் கருதியிருந்ததோடு, ஒருங்கிணைந்த வட, கிழக்கு மாகாணங்களில் அமையவிருக்கும் மாகாண சபையிலும் புலிகளே தலைவர்களாக வருவதையும் கண்டு மகிழ மக்கள் விரும்பியிருந்தனர் என்று கூறுவதும் சரியானதேயாகும்'' என்று கூறுகிறது அந்த நூல். மேலும் அந்நூலில், "சமூகத்தின் ஒரு பகுதியினர் புலிகள் மீது நம்பிக்கை வைத்து, ஒத்துழைப்பும் நல்கிக் கொண்டிருந்தனர்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், புலிகளின் தலைவர் இறந்ததாக வந்த பத்திரிகைச் செய்தி, மக்களைத் திகைப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.
138: வல்வெட்டித் துறை படுகொலை!
இந்திய அமைதிப் படையின் செயல்பாடுகளில் கடும் கண்டனத்துக்கு ஆளான சம்பவம் வல்வெட்டித் துறைப் படுகொலை ஆகும். இந்தப் படுகொலை நிகழ்ச்சிகளை, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் சம்பவத்துடனும், அமெரிக்காவின் வியட்நாம் போர்க் காலத்தில் நடைபெற்ற மயிலாய் சம்பவத்துடனும் உலகப் பத்திரிகைகள் ஒப்பீடு செய்கின்றன.
பல நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்படவும், 123 வீடுகள் அடியோடு நாசமாக்கப்படவும், 45 கடைகள் எரித்து சாம்பலாக்கப்படவும், 62 வாகனங்கள், 12 மீன்பிடிப் படகுகள், 176 மீன்பிடி வலைகள் எரிக்கப்படவும், தங்க நகைகள், பெருந்தொகையான பணம், மின்னணுப் பொருள்களை அப்பகுதி மக்கள் இழக்கவும் காரணமான சம்பவத்தின் ஆரம்பம் என்பது வல்வெட்டித்துறை சந்தைப் பகுதியில் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் நடந்த மோதல்தான்.
இந்த மோதல் காரணமாக அமைதிப் படையைச் சேர்ந்த 6 படைவீரர்கள் இறந்தனர். 11 பேர் காயமுற்றனர். இதனால் கொதிப்புற்ற, வல்வெட்டித்துறையைச் சுற்றியிருந்த மூன்று முகாம்களிலும் முடங்கியிருந்த ராணுவத்தினர், வல்வெட்டித் துறையைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். அந்தப் பகுதியில் 3 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன் காரணமாக ஊரில் உள்ள ஆண்களும், பெண்களும் வீட்டினுள்ளேயே முடங்கிக் கிடந்தனர். சிலர் மினி தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு ஊரடங்கு காரணமாக வீட்டிலும், மற்ற இடங்களிலும் முடங்கிக் கிடந்தவர்களை வீட்டினுள் புகுந்தும், அவர்களை வெளியே இழுத்து வந்து போட்டும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர், அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காயம்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க அங்கு முகாமிட்டிருந்த பிரான்ஸ் நாட்டு மருத்துவக் குழுவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ஊர்ச் சந்திப்பில், பொது இடங்களில் கும்பல், கும்பலாக சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் சிதறிக் கிடக்க, அவர்களது உடல்கள் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம், "அமைதிப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடைபெற்ற மோதலில் எதிர்பாராதவிதமாக பொதுமக்கள் 24 பேர் கொல்லப்பட்டனர்; புலிகளின் தாக்குதல் விளைவாக வீடுகளும், கடைகளும் சேதமடைந்தன. மோதலில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்' என்று இந்திய வானொலியிலும், தொலைக்காட்சியிலும் செய்தி ஒலி, ஒளி பரப்பானதுடன் முடித்துக் கொள்ளப்பட்டது.
ஆனால் இச் சம்பவம் பூதாகரமான நிகழ்ச்சியாக மாறியது எப்போது என்றால் இந்தப் படுகொலைகளும், சேதங்களும் குறித்து லண்டன் நாளிதழான "த சன்டே டெலிகிராப்' 13.8.1989-இல் அதன் தில்லி நிருபர் ஜெரிமி காவ்ரன் மற்றும் லண்டன் வெளியீடான "ஃபைனான்ஸியல் டைம்ஸி'ன் தில்லி நிருபர் டேவிட் ஹவுஸ்கோ, இந்தியப் பத்திரிகையான "த ஸ்டேட்ஸ்மன்' (18-8-1989) நாளிதழ்களில் தலையங்கம் மற்றும் செய்திகள் வெளியிட்டதன் காரணமாகவே வெளியுலகுக்குத் தெரியவந்தன. இந்தியன் எக்ஸ்பிரஸ் (24.8.1989) தலையங்கம் தவிர, அதன் கொழும்பு நிருபர் ரீட்டா செபஸ்தியான் அரைப்பக்க அளவில் மிகப்பெரிய செய்திக் கட்டுரை ஒன்றினைஐடஓஊ ஹற்ழ்ர்ஸ்ரீண்ற்ண்ங்ள் ர்ய் ஸ்ரீண்ஸ்ண்ப்ண்ஹய்ள்: ஙஹள்ள்ஹஸ்ரீழ்ங் ஹற் டர்ண்ய்ற் டங்க்ழ்ர் என்ற தலைப்பில் வெளியிட்டு அதிர்ச்சியூட்டியிருந்தார்.
ஹிந்து நாளிதழ் (2.8.1989) இந்தச் செய்தியை ஆறே வரிகளில் புலிகள் -அமைதிப் படை மோதலில் 23 பேர் மரணம் என்று தெரிவித்தது. அதே பத்திரிகையின் தில்லி நிருபர் கே.கே. கட்டியால் 12.8.1989 தேதியிட்ட செய்தியில், மோதலின்போது புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர் என்று செய்தி வெளியிட்டார். ஹிந்து நிறுவனத்தின் துணைப் பத்திரிகையான ஃப்ரண்ட்லைனில் (ஆக. 19-செப்.1, 1989) ஈரோஸ் இயக்கத் தலைவர் வி. பாலகுமார் கூறியதாக வந்த செய்தியில், மோதலில் பொதுமக்கள் 70 பேருக்கு மேல் இறந்ததாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டதாகவும், அங்கு நேரில் சென்று பார்த்தபோது அந்த நிகழ்ச்சி படுபயங்கரமாக இருந்ததாக அவர் தெரிவித்ததாகவும், அதன் செய்தியாளர் டி.எஸ். சுப்ரமணியன் வெளியிட்டிருந்தார்.
மேற்கண்ட செய்திகளின் நறுக்குகள் (ஸ்ரீன்ற்ற்ண்ய்ஞ்ள்) மூலம் அந்தந்தப் பத்திரிகைகளின் பார்வைகள் வெளியாகின்றன. ஆனால், அச் செய்திகளின் மூலம் தெரியவருவது என்னவென்றால், உண்மைகளை அவர்களால் மறைக்க முடியவில்லை என்பதுதான்.
இந்த நிகழ்வுகளின்போது நடந்த, தாக்குதலில் மக்கள் நலன் புரியும் குழுவின் செயலாளராக இருந்து வந்த ஆனந்தராஜாவும் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அவரைக் குற்றுயிரும், குலையுயிருமாகக் கொண்டுவந்து மருத்துவமனையில் போடப்பட்டபின்னர், அமைதிப் படைத் தளபதிகளான பிரிகேடியர் சங்கர் பிரசாத், கர்னல் அவுஜியா, கர்னல் சர்மா மற்றும் டாக்டர் கேப்டன் சவுத்ரி முதலானோர் அவரை நன்கு அறிந்திருந்த நிலையிலும், ஒப்புக்கு மட்டுமே அனுதாபம் தெரிவித்து விசாரித்தனர்.
முடிவில் அவர்கள் ஒவ்வொருவரும், ""விடுதலைப் புலிகளின் ஆயுதக் கிடங்கு மற்றும் அவர்கள் ஒளிந்திருக்கும் இடங்களைக் காட்டுங்கள். நீங்கள் இதற்காகப் பயப்பட வேண்டாம், உங்கள் முகத்தில் கருப்புத் துணி போர்த்திதான் நாங்கள் அழைத்துச் செல்வோம், அதன்பின்னர் நீங்களும், உங்கள் குடும்பமும் இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்படுவீர்கள். உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் உறுதி தருகிறோம்'' என்று வற்புறுத்தியும் அவர் மசியவில்லை.
பின்னர் மறுநாள் மயக்கம் தெளிந்ததும் "காங்கேயன்துறை முகாமுக்குப் போவதைத் தவிர்க்க விரும்பினால் உண்மைகளைச் சொல்லி விடுங்கள்' என்று மிரட்டினர். (காங்கேயன்துறை முகாம் என்பது கொடிய சித்ரவதை முகாம் ஆகும்.) அப்படியும் அவர் பதிலளிக்கவில்லை.
இதனிடையே அவர் மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும், இலங்கையின் இந்தியத் தூதுவர் எல்.எல். மெஹ்ரோத்ராவுக்கு (அதுவரை தூதுவராக இருந்த ஜே.என். தீட்சித் விடுவிக்கப்பட்டிருந்தார்) வல்வெட்டித்துறைக் கொடுமைகள் குறித்து எழுதி, "இந்த அவலங்களை இந்தியப் பிரதமருக்கு தெரியப்படுத்துங்கள். இவ்வகையான சம்பவங்கள் உலகில் எங்குமே நடக்கக் கூடாது என்றும் சொல்லுங்கள்' என வற்புறுத்தி எழுதினார் (21.8.1989).
அதேபோன்ற கடிதம் ஒன்றை, இலங்கை அதிபர் பிரேமதாசாவுக்கும் எழுதினார். தொடர்ந்து அவர் இந்தியாவுக்கு ரகசியமாக வந்து தமிழகத் தலைவர்கள், இந்தியத் தலைவர்களைச் சந்தித்து வல்வெட்டித் துறை படுகொலைச் சம்பவத்தை விவரித்தார்.
இதில் முகம் கொடுத்து ஒத்துழைத்த வட இந்தியத் தலைவர்களில் ஒருவரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்தச் சம்பவத்தை "இந்தியாவின் மயிலாய்' என்று விவரித்து, இந்தக் கொடுமைகளை நூல் வடிவில் அதாவது, இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் தனது முன்னுரையுடன் வெளியிட்டார். இதன் பின்னரே இந்தச் சம்பவம் குறித்து, இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் செய்தி பரவி, அமைதிப் படை செயல்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் இந்தியாவிலும் அமைதிப் படை இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. திமுக உள்ளிட்ட கட்சிகள் பொய்ச் செய்தி வெளியிடும் தொலைக்காட்சி நிலையச் செய்திகளைக் கண்டித்து "டிவி பெட்டி உடைக்கும்' போராட்டத்தை நடத்தினர்.
139: வி.ஆர்.கிருஷ்ணய்யரின் குற்றச்சாட்டு!
பிரேமதாசாவின் அரசியல் நெருக்கடிகளுக்குப் பதிலாக, விடுதலைப் புலிகளின் மீது தாக்குதல் தொடுத்த அமைதிப் படையையும், தமிழ் தேசிய ராணுவத்தையும் தாக்குப் பிடிக்க வேண்டுமானால், ஆயுதங்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் பாலசிங்கமும் அமைச்சர் ஹமீதும் நடத்திய பேச்சுவார்த்தையின் தொடர் நிகழ்வாக, புலிகளின் தேவைகளுக்கு முல்லைத் தீவு மாவட்ட மணலாறு பகுதியில் உள்ள முகாம் வழியாக ஆயுத உதவி வழங்கப்பட்டதாக அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அமைதிப் படையைத் திரும்பப் பெறுவது தொடர்பாக, பிரேமதாசா விடுத்த கெடு நெருங்கி வந்தது. ஆனால் இந்தியா இது குறித்து அமைதியாகவே இருந்தது.
இந்நிலையில் அமைதிப் படை இலங்கையைவிட்டு வெளியேறவேண்டும் என்று இந்தியாவிலிருந்தும் குரல்கள் கனத்து ஒலித்தன. இந்தக் குரல்கள் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், முன்னாள் மேஜர் ஜெனரல் கரியப்பா உள்ளிட்டவர்களிடமிருந்தும், பத்திரிகைத் தலையங்கங்கள் மூலமாகவும் எழுந்தன.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கருத்து வருமாறு:
கொள்கைப் பிடிப்புள்ள தேசபக்தரான அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு முன்னால் எப்போதும் இருந்திராத அளவுக்கு, ஸ்ரீலங்காவுக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிற ஒரு தமிழ்த் தலைவனை நாம் பறி கொடுத்தோம். இந்த அதிபயங்கரமான வன்முறைச் செயலால் நான் அதிர்ந்து போனேன்.
அதைவிடவும் அதிபயங்கரமான சோகம் வேறு ஒன்று உண்டு. அமைதிகாக்கும் இந்தியப் படைக்கு ஆதரவான குரல்கள், இந்தப் படுகொலையை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வதுதான். கொழும்புவில் வைத்து அமிர்தலிங்கத்தைப் படுகொலை செய்திருப்பதால், இந்திய ராணுவம் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருக்கவேண்டும் என்பது அவர்களுடைய நியாயத்துக்குப் புறம்பான வாதம்.
அமைதிப் படைக்கு ஆதரவாகச் செயல்படும் குழுவினர், கொழும்புவிலுள்ள தமிழ்மக்களின் உயிர்களைக் காப்பதற்காக இந்திய ராணுவம், கொழும்புவை நோக்கிப் படையெடுக்கவேண்டும் என்றும் கேட்கக்கூடும். அமிர்தலிங்கம் படுகொலை என்பதை ஒரு சாக்காக வைத்து இந்தியா-ஸ்ரீலங்கா இடையே ஒரு போர் மூளவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
அமைதி காக்கும் இந்தியப் படையினர் யாழ்ப்பாணத்திலேயே இருக்கவேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானதாகவும் இருக்கலாம்; அல்லது மோசமான சிந்தனையாகவும் இருக்கலாம். ஆனால் கொழும்புவில் நடந்த படுகொலைக்கும் அதற்கும் தொடர்பு இல்லை.
கடுமையான நீதித்துறை நடவடிக்கைகளுக்குக் காத்திராமல், தில்லி தன்னுடைய அமைதிப் படை அணிகளை ஐரோப்பாவுக்கு அனுப்பியோ, அல்லது இந்தியாவுக்குள்ளே தேடியலைந்தோ புலிகளைத் தேடிப் பிடித்துச் சுட்டுத் தள்ள வேண்டும் என்பதே இதன் பொருள். ஆனால் இந்தவிதமான அசட்டுத்தனமான பிரசாரம் இந்தியாவுக்குள்ளேயே செய்யப்படுகிறது. இதைப் பரப்புகிறவர்களுக்கே இந்தக் கோரிக்கையில் உள்ள முரண்பாடுகள் நன்கு தெரியும்.
ஆனால் நியாயத்தை ஒதுக்கிவிட்டு, வெறியைத் தூண்டிவிடவே விரும்புகிறார்கள். அதன்மூலம், ஓர் அடிமையான நிர்வாக அமைப்பை உருவாக்குதற்காக அமைதிப் படை யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருக்கவேண்டும் என்பதும், அந்த அமைப்பு நாளாவட்டத்தில் பனிபோல் மறைந்துபோய்விடும் என்றும், அதைப் பாதுகாப்பது பாக் நீரிணைக்கு இப்பால் உள்ள ஜவான்களின் கடமையாக இருக்கவேண்டுமென்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.
அண்மையில், பிரபலமான ராஜீவ் விசுவாசியும் அமைதிப் படை ஆதரவாளருமான ஒருவர், ஸ்ரீலங்கா அரசுக்கே எதிரான முறையில் இந்திய ராணுவம், அங்கேயே பணியாற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். ஏனென்றால் அமிர்தலிங்கத்தைப் புலிகள்தான் படுகொலை செய்திருக்கிறார்கள். இப்படி அவர் தமக்குத் தாமே நிரூபணமானதாகக் கருதிக்கொண்டு பேசியிருக்கிறார்.
இப்படி ஒரு கூச்சலைக் காலிஸ்தான் பயங்கரவாத ஆதரவாளர்களோ, இந்தியாவுக்கு எதிரான காஷ்மீர் தலைவர்களோ, பாகிஸ்தானில் போய் எழுப்பமுடியுமானால், எந்த இந்தியனாவது பொறுத்துக்கொண்டு பேசாமலிருக்க முடியுமா? இந்தமாதிரியான தில்லி ராஜதந்திரம் இந்தியா-ஸ்ரீலங்கா நல்லுறவை சுமுகமாக மேம்படுத்துமா? ஸ்ரீலங்காவின் ஒற்றுமையிலும் உறுதித்தன்மையிலும் இந்தியாவுக்கு ஆழமான அக்கறை உண்டு என்று 1987 ஜூலை 31-இல் ராஜீவ் காந்தி நாடாளுமன்றத்தில் சொன்னார். அவர்களே வரவழைத்த படைகளைத் திரும்ப அனுப்ப, அல்லது வெளியேறச் சொல்லும்போது அப்படிச் செய்ய மறுப்பதும் நம்பிக்கைத் துரோகமான செயலாகும்.
புலிகளின் பங்களிப்பு இல்லாமல் இந்த இனப் பிரச்னையைத் தீர்த்துவைக்க முடியாது. மக்களிடம் அவர்களுக்குள்ள பரவலான செல்வாக்குக்கும் மதிப்பளிக்கவேண்டும். 1983-இல் படுமோசமான படுகொலைகள் நடந்தபோது சிங்களக் காட்டுமிராண்டிகளை அதிவீரத்தோடு எதிர்த்துப் போரிட்டவர்கள் அவர்கள்.
இந்த இடத்தில், யாழ்ப்பாணத்தில் இந்தியா செய்யவேண்டியதென்ன என்பது பற்றி இன்னும் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
தமிழ்ப் பகுதியில் உள்ள மக்களுக்கு அதிகாரம் வழங்குவது சம்பந்தமாக, இந்தியாவையும் மற்ற உலகநாடுகளையும் ஜனாதிபதி ஜெயவர்த்தனா ஏமாற்றுகிறார் என்று அமிர்தலிங்கத்துக்கு அதிருப்தி. யதார்த்தமான சட்டமன்ற அதிகாரத்தை மாற்றி வழங்குவது பற்றிக் கொழும்புவை தில்லி நிர்ப்பந்திக்கவில்லை என்றும் அவருக்கு வருத்தம். 1987 ஜூலை முதல், ஜெயவர்த்தனா பதவி துறக்கும் வரையில் இதுதான் நிலவரம். தமிழர்களுக்குச் சுய ஆட்சி உரிமை அல்லது ஒதுக்கிவிடமுடியாத அதிகார மாற்றம் -இவை பற்றி ஒருமுறைகூட ராஜீவ் காந்தி வலியுறுத்தியதில்லை. இதே பெருமாளும் அவருக்கு முன்னால் அவருடைய கட்சிச் செயலாளர் பத்மநாபாவும், ஜனாதிபதி ஜெயவர்த்தனா தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது பற்றி தில்லியிலுள்ளவர்களிடம் பலமுறை முறையிட்டும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டது. "ஆபரேஷன் பவன்' திட்டத்தின்படி, டெல்லித் தலைமையிடம் காடுகளில் உள்ள புலிகளைத் தேடிச் சரண் அடையவைக்கும் முயற்சியில் ஆட்களை வேட்டையாடும் காரியமாகவே நடைபெற்றது. இதே நேரத்தில் எண்ணிக்கையில் அடங்காத தமிழர்கள் செத்தார்கள். தெரிவிக்கப்பட்டதை விடவும் அதிக எண்ணிக்கையில் ஜவான்களும் உயிரிழந்தார்கள். அறிவிக்கப்படாத யாழ் போரில், இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய உண்மையே காவு கொடுக்கப்பட்டுவிட்டது.
இதுதான் பலன். ஸ்ரீலங்காவைப் பற்றி தில்லி தருகிற தகவல்கள் மட்டுமே நம்மிடம் உள்ளன. வெளிப்படுத்தப்படுகிற கருத்தின் விளைவாகவே பெரிய எதிர்ப்புகள் நிகழ்கின்றன. சமீபகாலம் வரை பத்திரிகைச் செய்திகளில் மிகவும் குறைவான கவனத்தையே அமைதிப்படை பெற்றிருந்தது என்பது ஓர் ஆச்சரியம். ஸ்ரீலங்காவில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி சராசரி இந்தியனுக்கு எதையும் தெரிந்துகொள்ள வழியில்லை. நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதே நிலைதான். அதிகாரபூர்வமானதாகத் தரப்படும் செய்திகள் மட்டும்தான்.
முன்னாள் இந்திய ஹைகமிஷனரை "இந்தியாவின் வைசிராய்' என்பதாகக்கூட இலங்கையர்கள் குறிப்பிடுவதாகச் சொன்னார்.
நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு தமிழ் மாநாட்டில் நான் உடனிருக்க, சுப்ரமணியம் சுவாமியிடம் இந்திய ராணுவத்தினரின் அட்டூழியங்களைப் பற்றி விசாரிக்க ஒரு கமிஷன் ஏற்படுத்தவேண்டும் என்றுகூடக் கோரிக்கை வைத்தார்கள்.
சென்ற ஆண்டு லண்டன் மகாநாட்டில் என்னிடம், இந்த ராணுவ ஆக்கிரமிப்புக் கொடுமையைப் பற்றிக் கண்ணால் கண்டவர்களின் சாட்சியங்களும் அஃபிடவிட்டுகளும் தரப்பட்டன. ஹைகமிஷன் தருகிற செய்தியறிக்கைகளை வெறுமனே கேட்டுக்கொண்டிருக்காமல், எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளக்கூடிய உரிமை நமக்கு இருக்கிறது.
யாழ்ப்பாணம் உயர்நிலைப்பள்ளி ஒன்றின் தலைமையாசிரியராக இருந்த கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவரை நான் ஓராண்டுக்கு முன்னால் நியூஜெர்ஸியில் சந்தித்தேன். தமிழ்க்குடிமக்களை, பொறுப்பற்ற முறையில் பயங்கரமாகத் துன்புறுத்திய அமைதிப்படையின் செயல்களை, அங்கே நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர் விவரித்தார். அவர்கள் புலிகளை விரட்டித் தேடியிருக்கலாம். அந்த நடவடிக்கையில் சந்தேகப்பட்டவர்களையெல்லாம் அவர்கள் சுட்டிருக்கக்கூடும்.
அமைதிப் படை என்பது, அவர்களுக்குள்ளேயே சட்டதிட்டங்களை உடைய அமைப்பு என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் விரும்புகிறவரை ஆட்களைக் காவலில் வைத்திருக்கலாம். அடித்து உதைக்கலாம். மாஜிஸ்திரேட் முன்னால் கொண்டுபோய் நிறுத்தவேண்டிய அவசியமில்லை. நாகரிகமான மக்களாட்சி முறைக்கு மேம்பட்டவர்களாகவே அவர்கள் நடந்துகொண்டார்கள்.
கொழும்பு பாரிஸ்டர் ஒருவர் என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்டபோது நான் அதிர்ச்சியடைந்தேன். ஹேபியஸ் கார்ப்பஸ் -ஆள்கொணர்வு மனுக்களின் மீது உச்சநீதிமன்றமே நோட்டீஸ் அனுப்பியும், அமைதிப்படை தரப்பிலிருந்து எந்தப் பதிலும் கிடையாது என்று அவர் சொன்னார்.
நம்முடைய வீரர்கள்,காக்கி உடையில் நம்முடைய தூதர்களாக இயங்கவேண்டியவர்கள், சட்டத்துக்கு அடங்காதவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது. ஸ்ரீலங்காவின் உச்சநீதிமன்றம் என்பது அமைதிப்படையினருக்கு வெறும் காகிதப் புலியா?
தவறான தகவல்களின் அடிப்படையில் இது திரித்துக் கூறப்பட்டதாகவும் இருக்கலாம். அப்படியானால் இதற்கு விடை, இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதிகளைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்வதுதான். அவர்கள் நம்முடைய ஜவான்கள் மீதும் அதிகாரிகள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும். -என்று வி.ஆர்.கிருஷ்ணய்யர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். (தமிழ் வாய்ஸ் இன்டர்நேஷனல்-செப்டம்பர் 1989).
140: தலையங்க விமர்சனங்கள் !
இன்று இலங்கையில் இந்திய அமைதிப் படைக்கு நண்பர்கள் எவருமே இல்லை. வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளும், தெற்கில் ஜனதா விமுக்தி பெருமுனாவும்ம், நடுவில் இலங்கை அரசும் ஏதாவது ஒரு விஷயத்தில் ஒற்றுமையைக் காண்பிக்கிறார்கள் என்றால் அது இந்தியப் படை கூடிய விரைவில் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்பதில்தான். இக்கோரிக்கையை இவர்கள் அனைவரும் மறைக்காமல் கூறிவருவது இந்தியாவுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இந்த நிலைக்கு இலங்கையிலுள்ளவர்களைக் குறை கூறுவதைவிட, நாம் அங்கு எதற்காகச் சென்றோம், இப்போது அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று நம்மையே கேட்டுக் கொண்டால் தெளிவு பிறக்கும்.
போதாக்குறைக்கு இந்தியப்படையின் பாதுகாப்பில் உயிர் வாழ்ந்துவரும் வடகிழக்கு மாகாண அரசு கூட இந்தியப் படையினருக்கு எதிராக ஈழ மாணவர்களும், ஆசிரியர்களும் நடத்திவரும் கிளர்ச்சியை ஆதரித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றிவிட்டது. காற்று எந்தப்பக்கம் அடிக்கிறது என்று இந்தியத் தூதுவருக்கு இப்பொழுதாவது தெரிந்திருக்கும் என்று நம்பலாமா?
இலங்கையின் ஒற்றுமைப் பிரச்னையை அந்த நாட்டின் அரசியல் தலைவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அந்த நாட்டின் இறையாண்மையை மதிக்கும் வகையில் இந்தியா தன் துருப்புகளை அங்கிருந்து கூடிய விரைவில் விலக்கிக் கொள்வது அனைவருக்கும் திருப்தியளிப்பதாகவும் இருக்கும்; தெற்காசியாவில் சமாதானத்தை நிலைநிறுத்தவும் வழிவகுக்கும். -- தினமணி -தலையங்கம் 20-6-89
சந்திரன் ஒரு முறை தேய்ந்து வளர்வதற்குள் சரித்திரம் படைத்துவிட்டுச் சடுதியில் தாயகம் திரும்பிவிடும் என்ற நம்பிக்கையோடு சென்ற இந்திய ராணுவம் இன்றுவரை முழுதாகத் திரும்பவில்லை.
தமிழ் ஈழம் என்ற தாரக மந்திரத்தையும், இயந்திரத் துப்பாக்கிகளையும் ஆயுதங்களாக்கிக் கொண்ட பிரபாகரனின் புலிகள் விடுதலை அல்லது வீரமரணம் என்றிருந்த போது, மற்ற தமிழ்ப் போராளிகளின் துணையோடு, தேர்தலை நடத்தி, அமைதி அங்கே திரும்பி விட்டதாக வெற்றி பெற்ற வரதராஜப் பெருமாளே சொன்னபோதும், அதில் அத்தனை பேருக்கும் நம்பிக்கை ஏற்படவில்லை.
இன்னும் விடுதலைப் புலிகள் காட்டிலேயே பதுங்கி இருப்பதாலும், ஆட்சிக்கு வந்த தமிழர் அரசாங்கத்துக்கு இந்தியப் படையைத் திரும்ப அனுப்பும் தைரியம் வராததாலும், வடக்கு கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்குச் சிங்கள ராணுவத்தின் மீது முழுமையான நம்பிக்கை ஏற்படாததாலும், அமைதி ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
அமைதி காக்கும் படை இந்தியா திரும்பிவிட்டால், அமைதி மேலும் காத்திருக்காமல் இலங்கைக்குத் திரும்பிவிடும். -- சாவி -26-4-89
அந்நிய மண்ணில், அந்த நாட்டு அரசின் அனுமதியின்றி நமது படைகள் இருந்தால் ஆக்கிரமிப்பாளராகத்தான் நம்மை உலகம் கருதும்!
விடுதலைப் புலிகளுடன் நமது படைகளை மோதச் செய்ததும், வடகிழக்கு மாகாணக் கவுன்சிலுக்கு ஒரு பொம்மை அரசு அமைத்ததும் எதிர் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் இந்திய அரசு அடுத்தடுத்துச் செய்த தவறான காரியங்கள்! வெறும் வீம்புக்காகத் தொடர்
ந்து தவறுகளைச் செய்யப் போகிறோமா அல்லது விவேகத்துடன் உண்மை நிலையைப் புரிந்து கொண்டு செயல்படப் போகிறோமா? இதுதான் இன்றைய மிகப் பெரிய கேள்வி. -- ஆனந்தவிகடன் -தலையங்கம், 25-6-89
"இந்திய அமைதிப் படை, நாடு திரும்ப இதுதான் நல்ல நேரம்' என்று ஓர் இந்தியப் படை உயர் அதிகாரி கூறினார். ராணுவ ரீதியாக எல்.டி.டி.ஈ. தோற்கடிக்கப்பட்டுவிட்டாலும் அந்த இயக்கம் தலைமறைவாக இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இந்திய அமைதிப் படை திரும்பினால், திரும்பவும் விடுதலைப் புலிகள் தங்களை உறுதியாக்கிக் கொண்டு ஸ்ரீலங்காப் படைகளை மோதத் தொடங்கி விடுவார்கள் என்றே பாதுகாப்பு ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். அதுமட்டுமல்ல - குறுகிய காலத்துக்குள் அதன் பின்பு அவர்கள் தனிநாடு அமைத்தும் விடுவார்களாம்'. -- ஜி.கே. சிங் -த வீக், 4-2-1989
இனி, ஸ்ரீலங்காவில் செய்ய வேண்டியவை அரசியல் தொடர்பானவையே. இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இன்றைய நிலையை விரைவாகவும்-சரியாகவும் அளவிட வேண்டும். ஸ்ரீலங்கா அரசோடும் அங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளோடும் தொடர்பு கொண்டும்-இந்தியப் பொதுமக்களின் கருத்தினைக் கலந்தும் இந்தியப் படையை நம் நாட்டுக்குத் திருப்பி அழைப்பது பற்றி அவர்கள் ஆலோசனை செய்ய வேண்டும். -- த ஹிந்து -தலையங்கம், 18-2-1989
நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பது தெரியாமல் காட்டுப் பகுதியில் ஒரு போராட்டக் குழுவைத் துரத்திக் கொண்டு திரிய வேண்டிய தேவை இல்லை என்றே அமைதிப் படை கருதுகிறது. இப்படையினர் குழம்பிப் போய் இருக்கிறார்கள். "இனியும் அங்கே செய்ய என்ன இருக்கிறது?' என்றுதான் களைத்துப் போன இந்திய ஜவான்கள் கேட்கிறார்கள். தங்கள் கடமை முடிந்துவிட்டது என்றும் - நாட்டை அந்த மக்களிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேற வேண்டியதுதான் என்றும் இந்தியப் படையினர் கருதுகிறார்கள்.
தன் நட்பு நாடுகளுக்கும்-அண்டை நாடுகளுக்கும் உதவ வேண்டியது இந்தியாவின் கடமையே. பிராந்திய அரசியலில் இந்தியா ஓரளவு தியாகம் செய்யவேண்டும் என்பதும் உண்மைதான். ஆனால் எதற்கும் ஓர் எல்லைக்கு உட்பட்டே எந்தத் தலையீடும் இருக்க முடியும். அதற்கு மேலும் போனால்-பிரச்னையில் நுழையும்போது ஏற்பட்ட சிரமத்தைவிட-பிரச்னையிலிருந்து வெளியே வர அதிக சிரமப்பட வேண்டியிருக்கும்.
இந்திய அமைதிப்படை, ஸ்ரீலங்காவில் உள்ளவர்களைப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்திவிட்டுதான் வெளியேற வேண்டும். ஸ்ரீலங்காவில் தொடர்ந்து இந்திய அமைதிப் படை இருக்கவோ சண்டை போடவோ எந்தக் காரணமும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா இதற்கு மேலும் தன் படைவீரர்களையும் பணத்தையும் அங்கே வீணாக அழித்துக் கொண்டிருக்க முடியாது. -- பிரிகேடியர் ஏ.சி. கரியப்பா (ஓய்வுபெற்ற படைத் தளபதி 20-2-1989
வெளிநாட்டுக் கொள்கையில் இந்தியா தனது பாதுகாப்பைப் பற்றிக் கவனிக்க வேண்டியதுதான். ஆனால் -இன்று -தன் அரசியல் -பொருளாதார நிலைமையை உணர்ந்து ஸ்ரீலங்காவில் உள்ள சம்பந்தப்பட்டவர்களிடமே -அமைதி உடன்படிக்கையை நிறைவேற்றும் சுமையை ஒப்படைத்துவிட்டு -குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் நம் படைகளைத் திருப்பி அழைப்பது பற்றி இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்க வேண்டும். --ஃபிரண்டலைன் -தலையங்கம், மார்ச் 4-17, 1989
வடக்கு -கிழக்கில் இந்தியாவின் உதவியோடு அதிகாரத்தைக் கைப்பற்றியதோடு -தமிழ்க் குழுக்கள் இந்திய அமைதிப் படை இலங்கையை விட்டு வெளியேறக்கூடாது என்கிறார்கள். ஆனால்- இந்தியா எத்தனை காலத்துக்கு அவர்களைத் தாங்கமுடியும்? தென் வியட்நாமில் அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் சோவியத்தும் படித்த பாடத்தை தங்கள் நாட்டுக்கு வெளியே படைகளை வைத்திருக்கும் எந்த அரசும் மறந்துவிடக் கூடாது. காலத்தை இன்னும் இழுத்துக்கொண்டிருக்காமல் -கொழும்போடு புதுடில்லி உறுதியாகப் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியப் படைகள் மரியாதையோடு விரைவில் நாடு திரும்ப வழிவகுக்க வேண்டும். --டெக்கான் ஹெரால்ட் - தலையங்கம்
இந்தியாவிலும் ஸ்ரீலங்காவிலும் பெரும்பாலானோர் இந்திய அமைதிப் படை, தன் வேலையை விரைவில் முடித்து நாடு திரும்ப வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.
திடீரென்று இப்படையைத் திரும்பப் பெறுவது வடக்கிலும் தெற்கிலும் பாதுகாப்பைப் பொறுத்தவரை சிக்கலை உருவாக்கும். விடுதலைப் புலிகள் தீவிரமாக இருக்கும் பகுதிக்கு ஸ்ரீலங்காப் படையை அனுப்ப வேண்டிவரும். என்ன இருந்தாலும் இந்திய அமைதிப் படை தொடர்ந்து இங்கே (இலங்கையில்) நெடுங்காலம் இருக்க முடியாது. அப்படி 45,000-க்கு அதிகமான இந்தியப் படை வீரர்கள் இங்கே தொடர்ந்து இருந்தால் -ஸ்ரீலங்காவில் அவர்கள் நிரந்தரமாக இருக்கப் போகிறார்கள் என்ற கருத்து வலுப்பெற்றுவிடும்.
இந்திய -ஸ்ரீலங்கா அரசுகள் விரைவில் இப்படை திரும்புவதற்கு உரிய ஒரு காலத்தை வரையறை செய்ய வேண்டும்.
எமது கருத்து இதுதான்:- தன்னுடைய மண்ணில் இந்திய அமைதிப் படை சண்டை போடுவதை ஸ்ரீலங்கா மக்கள் நீண்டகாலம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. --த ஐலண்ட் -தலையங்கம், 13-3-1989 (இலங்கை ஆங்கில நாளிதழ்)
141: அமைதிப்படை வெளியேறத் தொடங்கியது!
இந்தியா, அமைதிப்படை வெளியேறுவது குறித்து மெüனம் சாதித்த நிலையில் பிரேமதாசா இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அமைதிப்படை திரும்புவதற்கான அட்டவணையை இறுதி செய்ய குழுவொன்றை தில்லிக்கு அனுப்பினார்.
இந்தக் குழு, ஜூலை 29-ஆம் தேதி தில்லி சென்றடைந்தது. எ.சி.எஸ். ஹமீது தலைமையில் இலங்கையின் தூதுவர் கலாநிதி ஸ்டான்லி கல்பகே, பிரட்மன் வீரக்கூன், சுனில் டிசில்வா, டபிள்யூ.டி. ஜயசிங்கா, ஃபீலிக்ஸ் டயஸ், அபே சிங்கா ஆகியோர் சென்றிருந்தனர். இந்திய அரசுத் தரப்பில் பி.வி. நரசிம்மராவ், கே.சி. பந்த் ஆகியோர் முன்னிலையில் நடத்தப்பட்ட, இந்தப் பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 4-இல் முடிவுற்றது. அமைதிப்படையை திரும்ப அழைக்க அட்டவணை, புலிகளுக்கு எதிரான செயல்களை முடிவுக்குக் கொண்டு வருதல், இந்திய-இலங்கை ஒப்பந்தம் நடைமுறைப்படுத்துவது, வடக்கு-கிழக்கில் மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது ஆகியவை குறித்துப் பேசி இறுதி செய்யப்பட்டது.
படைகளைத் திரும்பப் பெறுவது என்பது 1989 டிசம்பர் 31- ஆம் தேதிக்குள் முடிவுறும்படி பார்த்துக் கொள்ளப்பட்டதானது பிரேமதாசாவுக்கு நிம்மதியளிக்கிற நடவடிக்கையாக அமைந்தது. செப்டம்பர் 20-இல், அமைதிப்படை தனது தாக்குதலை நிறுத்த ஒத்துக்கொண்ட அதே வேளை "பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் கமிட்டி' உருவாக்கப்பட்டு, அதில் ஸ்ரீலங்கா பாதுகாப்புச் செயலாளர், அமைதிப்படைத் தளபதி, முதலமைச்சர் வரதராஜ பெருமாள் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்திய அமைதிப்படை வெளியேறிய பிறகு, வடக்கு கிழக்கில் ஏற்படவிருக்கும் அரசியல் நெருக்கடியைச் சமாளிக்க, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிக் குழுவுடன் அரசு நடவடிக்கைகளை மேம்படுத்துவது ஆய்வுக்குரியதானது.
எனவே, பிரேமதாசா "புலிகள் அரசியல் இயக்கம் ஒன்றை ஏற்படுத்துவது குறித்து யோசிக்கும்படி' பாலசிங்கத்திடம் தெரிவித்தார்.
புலிகளின் நோக்கம் சுதந்திரத் தமிழீழம்; பிரேமதாசாவின் நோக்கமோ ஒற்றையாட்சியின் கீழ், அரசமைப்புச் சட்டத்துக்கு ஏற்ப வடக்கு - கிழக்கில் தீர்வு. இவையிரண்டும் சாத்தியமாக வேண்டுமானால் இருவரில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்க வேண்டும். ஆனால் இருவரும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்தனர். எனினும், இந்த அம்சத்தை யாரும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. "அமைதிப்படை வெளியேறிய பிறகு வடக்கு-கிழக்கு நிர்வாகம் அமைதியான முறையில் புலிகளுக்கு கைமாற்றப்படுமா' என்று ஹமீதிடம் வினவினார், பாலசிங்கம். "ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து புலிகள் இயங்கினால் அது சாத்தியம்' என்றார் ஹமீது: (ஆதாரம்: சுதந்திர வேட்கை, பக். 327).
அரசியல் பிரிவு அமைப்பதற்கான அனுமதியை பிரபாகரனிடம் பாலசிங்கம் ஏற்கெனவே பெற்றிருந்தார். அதன் கட்டமைப்பு, விதிகள் யாவும் பிரபாகரனிடம் விவாதித்தபடி உருவாக்கப்பட்டன. அமைப்புக்கு "விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி' என்று பெயரிடப்பட்டது. மகேந்திரா ராசா என்கிற மாத்தையா கட்சியின் தலைவராகவும், யோகரத்தினம் யோகி செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
அரசியல் கட்சிக்கான விதிப்படி பல்வேறு பிரிவு மக்களைப் பிரதிநிதிப்படுத்தவும், பங்கெடுக்கவும் விதிகள் வகுக்கப்பட்டு, கட்சியின் பெயர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. புலிகளின் சின்னத்தைப் பதிவு செய்வதில் முரண்பாடுகள் எழுந்தன. அதில் சிறு மாற்றம் செய்யப்பட்டு அச் சின்னமும் பதிவு செய்யப்பட்டது.
இவ்வகையான நிகழ்வுகளால், பிரேமதாசா மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார். புலிகளை அரசியல் நீரோட்டத்தில் இணைத்துவிட்டதாக அவர் நினைத்தார். தனது தந்திரம் வென்றதாகவும் கருதினார். ஆகஸ்ட் 12-இல் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்திலும் "விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி' என்கிற அரசியல் கட்சியை இடம்பெறச் செய்தார். ஆனால் இந்தக் கூட்டத்தில் பிரச்னைகளைத் தீர்க்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இச்சமயத்தில், குறிப்பிடத்தக்க இரு உயிரிழப்புகள் தமிழீழப் பகுதியில் ஏற்பட்டன. காந்தியக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட, தமிழர் புனர்வாழ்வுக் கழக நிறுவனர்களில் ஒருவரான கே.கந்தசாமி கடத்தப்பட்டார். அதுகுறித்த சர்ச்சை எழுந்து விவாதிக்கப்பட்ட நிலையில், அவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
அதேபோன்று "முறிந்தபனை' நூலாசிரியர் மூவருள் ஒருவரான ராஜனி திராணகமவின் கொலையும் நேர்ந்தது. ராஜனியின் கொலைச் சம்பவம் படித்தவர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இவ்விரு கொலைகளுக்கும் எந்த இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜீவ்-பிரேமதாசா உடன்பாட்டின்படி 1989 அக்டோபர் இரண்டாம் வாரத்தில், அமைதிப் படைகள் திரும்ப அனுப்பும் பணி தொடங்கப்பட்டது. ஒவ்வொரு படைப் பிரிவும், அதன் ஆயுதத் தளவாடங்களுடன் படிப்படியாக கிளம்பத் தொடங்கின. இந்த நேரத்தில், தமிழ் தேசிய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் கிழக்கு மாவட்டத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தில் அந்தந்த முகாம்களில் குடியேறியதும் நடந்தது.
142: மாவீரர் தினக் கொண்டாட்டம் ஏன் ?
தமிழகப் பத்திரிகைகளில், நவம்பர் 26-ஆம் நாள், விடுதலைப் புலிகள் தலைவர் பிறந்தநாள் என்றும், அதனைச் சிறப்பாகக் கொண்டாட, புலிகள் புதிய தாக்குதலை நடத்த இருப்பதாகவும் செய்தி வெளியாயிற்று. "உண்மையில் பிரபாகரன் எப்போதுமே தனது பிறந்தநாளைக் கொண்டாடியவரல்ல. தான் மட்டுமன்றி மற்றவர்களையும் பிறந்தநாள் கொண்டாட அனுமதித்ததில்லை' என்கிறார், பழ.நெடுமாறன் (தமிழீழம் சிவக்கிறது பக்-271).
உண்மையில் நடந்ததென்ன?
1989-ஆம் ஆண்டு நவம்பர் 27-இல், மாவீரர் தினம் கொண்டாடவே அனுமதிக்கப்பட்டது. இந்த நாள், விடுதலைப் போராளிகளில், முதன்முதலில் வீரமரணமடைந்த சங்கரின் நினைவுநாள் ஆகும். இந்த நாளில், போர்க்களத்தில் உயிர்நீத்தவர்கள் மற்றும் வீரத் தியாகம் புரிந்த லெப்டினன்ட் கர்னல்கள் விக்டர் ஓஸ்கா, பொன்னம்மான், இராதா, திலீபன், புலேந்திரன், குமரப்பா, சந்தோஷம், பாண்டியன், இம்ரான், ஜானி, மதி, நவம், ரீகன், கிரேஸி போர்க், சுபன், வேணு, சஹா, சூட்டி, ஜாய், குட்டிஸ்ரீ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நினைவில் வாழும் புலிகளுக்கு சிறப்பான முறையில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
மணலாற்றுக் காட்டில் பதுங்கியிருந்து போரை நடத்தியபோது பிரபாகரன், இந்த முடிவினை மேற்கொண்டார். இந்த முடிவினைத் தமிழீழமெங்கும் நிறைவேற்றவும் ஆணையிட்டார்.
இதுகுறித்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன், பழ.நெடுமாறனிடம் விவரிக்கையில், இந்திய ராணுவத்துடன் நாங்கள் நடத்திய போரில் எந்த இடத்தில் எங்கள் தோழர்கள் விழுந்தார்களோ, அவர்களை அங்கேயே புதைத்து கல்லறை எழுப்பியிருக்கிறோம். போர்க் காலத்தில் அவர்களின் உடல்களைப் பெற்றோரிடமோ, உறவினர்களிடமோ ஒப்படைக்க முடியாது போனதால், ஏற்பட்ட முடிவல்ல; இறந்த மாவீரர்களின் விருப்பமும் இதுவே ஆகும்.
இந்திய அமைதிப் படையை எதிர்த்து நடத்திய "ஓயாத அலைகள்' என்கிற போரில் எங்களுக்கு அடைக்கலம் தந்தது இந்த காடே ஆகும். இந்தக் காட்டினை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம். எங்கள் தோழர்களுக்கு எந்தக் காடு அடைக்கலம் தந்ததோ, எந்தக் காட்டில் எதிரிகளுடன் போரிட்டு வீரத்தை நிலைநிறுத்தினோமோ, அந்தக் காட்டிலேதான் எங்களைப் புதைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பியதில் வியப்பு ஏதுமில்லை. மணலாற்றுக் காட்டுக்குள் தங்கியிருந்து போராடிய புலிகள் தாங்கள் எங்கே சென்று போராடி வீரமரணம் அடைந்தாலும் தங்கள் உடலை மணலாற்றுக் காடுகளில்தான் புதைக்க வேண்டும் என்று நேரிலும், எழுத்துமூலமாகவும் எனக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்கள் என்று கூறியுள்ளார்.
இதுதவிர தமிழீழத்தின் பிற பகுதிகளிலும் மாவீரர்கள் கல்லறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கல்லறைக்கு "மாவீரர் துயிலும் இடங்கள்' என்று பெயரிடப்பட்டுள்ளன.
மறைந்த தன்னுடைய தோழர்கள் குறித்து வே.பிரபாகரன் கூறியதாக பழ.நெடுமாறன் பதிவு செய்துள்ள வரிகள் ஒவ்வொன்றும் பல்வேறு அர்த்தங்களைச் சுமந்து நிற்கின்றன. அவை:
எமது விடுதலை வரலாறு மாவீரர்களின் ரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுடைய இறப்புகள் அர்த்தமற்ற இறப்புகள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது வரலாற்றை இயக்கும் உந்துசக்திகளாக அமைந்துவிட்டன. அந்த மாவீரர்கள் காலத்தால் அழியாதவர்கள். சுதந்திரச் சிற்பிகள். எமது மண்ணிலே ஒரு மாபெரும் எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காகவும் பாதுகாப்புக்காகவும் தமது இன்னுயிரை ஈந்தவர்கள் அவர்கள்.
இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக எமது இதயக் கோயிலிலே பூசிக்கப்பட வேண்டியவர்கள். ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு சாதாரண மனிதன் அல்லன். அவன் ஒரு லட்சியவாதி. ஓர் உயர்ந்த லட்சியத்துக்காக வாழ்பவன். தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன். மற்றவர்களுடைய விடிவுக்காகவும் விமோசனத்துக்காகவும் வாழும் சுயநலமற்ற, பற்றற்ற அவன் வாழ்க்கை உன்னதமானது; அர்த்தம் உள்ளது. சுதந்திரம் என்ற உன்னத லட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அளிக்கத் துணிகிறான்.
எனவே விடுதலை வீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள், அசாதாரணப் பிறவிகள் என்று பிரபாகரன் பெருமிதத்துடன் கூறியுள்ளார். (தமிழீழம் சிவக்கிறது -பக்.277-278).
முதன்முதலாக அனுசரிக்கப்படும் மாவீரர் தினத்தில் கலந்துகொள்ளவென்று பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், யோகி மூவரும் விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் மட்டக்களப்பு நகரத்துக்கு கொழும்பிலிருந்து சென்றார்கள். அங்கிருந்து அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவிலுக்குக் கார் மூலம் சென்றனர்.
மக்கள் அமைதிப்படையின் பிடியிலிருந்து விடுபட்டிருந்த நேரம். வழியெங்கும் மக்கள் இவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். எங்கும் புலிகளின் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறந்தன. குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைய இவர்களுக்கு இரட்டிப்பு நேரம் பிடித்ததாகவும், கூட்டம் நடைபெறும் இடங்களில் மக்கள் நீண்டநேரம் காத்திருந்ததாகவும் அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு குறிப்பிடவேண்டிய இன்னோர் செய்தி, கிட்டுவுக்கு செயற்கைக் கால் பொருத்த லண்டன் பயணம் மேற்கொள்வதாக இருந்தது. எனவே அவர் ஹெலிகாப்டரில் வன்னிக்காட்டிலிருந்து கொழும்பு வந்தார். கிட்டுவை நீண்ட காலமாகக் காதலித்து வந்த மருத்துவ மாணவி சிந்தியா கொழும்புவுக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களின் திருமணம் எளிய முறையில் பாலசிங்கம் குழுவினர் தங்கியிருந்த ஹில்டன் ஓட்டலிலேயே நடைபெற்றது.
முதலில் கிட்டுவும், பின்னர் சிந்தியாவும் லண்டன் சென்றனர்.
மாவீரர் நினைவு நாளில், அதாவது 26-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி அடித்ததும், மாவீரர் துயிலும் இடங்களில் கூடி, தளபதிகள் முதல் சுடரை ஏற்ற, மணியோசை முழங்கும். அடுத்து மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள், தோழர்கள் என கல்லறைக்கு நெய் விளக்கு ஏற்றி வணங்குவார்கள். இது பின்னர் ஒவ்வோர் ஆண்டும் நடைமுறைக்கு வந்தது.
இந்த நாளுக்கு அடுத்த நாள் நவம்பர் 28-ஆம் நாள், விடுதலைப் புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பெண்புலி அனிதாவுக்கு வீர அஞ்சலி வெளியிடப்பட்டது.
வன்னி, மன்னார், யாழ்ப் பிராந்தியங்களில் புலிகளுக்குத் தேவையான உணவு-பொருள்கள்-தளவாடங்கள் சேர்ப்பது என்பது எளிது. தமிழீழத்தின் நிலப்பரப்பில் இரண்டாயிரம் சதுர மைலில் பெரும்பகுதி, தமிழீழத்தில் எல்லை மாவட்டங்களாக கிழக்குப் பிராந்தியத்தைச் சார்ந்ததாகும். இங்கே சிங்களக் குடிகள் மட்டுமன்றி, போலீஸ், ராணுவம் சார்ந்த முகாம்களும் எண்ணிலடங்காத அளவில் உள்ளன. இத்தகைய சூழலில் புலிகளுக்கு உணவு சேகரிப்பதும் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதும் பெரும் பிரச்னையாக இருந்தது. சிறிதளவு கவனக்குறைவும் ஏற்பட்டாலும் கொரில்லாப் புலிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுவிடும்.
இந்தக் கத்திமேல் நடக்கிற வித்தையை லெப்டினன்ட் அனிதா மேற்கொண்டு வந்தார். அசாத்திய நிர்வாகத் திறமைகள் மிகுந்த இவர், ஆரையம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எண்பதாயிரம் முஸ்லிம்கள், இரண்டு லட்சத்து எண்பதாயிரம் தமிழர்கள் வாழுகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றிவந்த அனிதா 28-11-1988 அன்று ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தவரால் அடையாளம் காட்டப்பட்டு களுவாஞ்சிக்குடியில் வைத்துக் கைது செய்யப்பட்டார். விசாரணை இடத்திற்குக் கொண்டு செல்லப்படும்போது, உயிருடன் இருக்கக்கூடாது என்ற முடிவில் சயனைட் உட்கொண்டு வீரமரணத்தைத் தழுவினார். இவரின் ஓராண்டு நினைவு நாளையொட்டி, அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிழக்குப் பிராந்தியத்தைப் பொறுத்தவரையில் வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட முதல் கொரில்லா வீராங்கனை அனிதா ஆவார். அனிதா உள்பட வீரமரணத்தைத் தழுவிய பெண்புலிகளின் எண்ணிக்கை 23 என்றும் அவ்வறிக்கையில் (28-11-1989) குறிப்பிடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.