Saturday 30 May 2020

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (123-130)


ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (123-169)
ஆக்கம்: பாவை சந்திரன்
பிரபாகரன் எழுதிய கடிதங்களின் தொடர்ச்சியாக சென்னையில் தங்கியிருந்த கிட்டு பத்திரிகையாளர்களுக்கு அவ்வப்போது விடுதலைப் புலிகளின் நிலை குறித்து பேட்டியளித்தார்~

"டைம்ஸ் ஆப் இந்தியா'வின் துணை பத்திரிகைகளில் ஒன்றான "இல்லஸ்ட்ரேடட் வீக்லி' என்ற வார இதழின் செய்தியாளர் கே.பி.சுனிலுக்கு அளித்த பேட்டி சில உண்மைகளையும், இந்திய அரசுக்கு நல்லிணக்கச் செய்திகளையும் அளித்தது.
பிரபாகரனிடம் பேட்டியொன்றுக்கு ஏற்பாடு செய்யும்படிதான் கிட்டுவிடம் கூறப்பட்டது. அதன்பேரில் கேள்விகளைக் கேட்டு வாங்கிய கிட்டு, சில நாள்கள் கழித்து பிரபாகரன் பேட்டியாக இல்லாமல் பொதுவான விடுதலைப் புலிகளின் அமைப்பு தருவதான பேட்டியாகப் பதில் அளிக்கப்பட்டிருந்தது. எனவே அந்தப் பதில்களுக்கு கிட்டு பதில் என்றே வெளியிடப்பட்டது. நீண்ட பேட்டியில் ஒரு சில கேள்விகளும் அதற்குப் பெறப்பட்ட பதிலும் வருமாறு:
கேள்வி: ஜூலை 29 மற்றும் செப்டம்பர் 28 பேச்சுவார்த்தைகளின்போது விடுதலைப் புலிகளுக்கும், இந்திய அரசுப் பிரதிநிதிகளுக்கும் ஏற்பட்ட உடன்பாட்டின் விவரங்கள்?
கிட்டு பதில்: ஜூலை 29-இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. சிறீலங்கா - இந்திய அரசுகளுக்கிடையே உடன்பாடு கையெழுத்தானது. பிரதமர் ராஜீவ் சந்திக்க விரும்பியதாலேயே எமது தலைவர் பிரபாகரன் தில்லி சென்றார். ஒப்பந்தத்தின் சாராம்சம் அவசர அவசரமாகக் காட்டப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்கவில்லை. ஆனால் இந்த ஒப்பந்தத்தின் இணைப்பில் அடங்கிய இந்தியாவின் பாதுகாப்பு வெளிநாட்டுக் கொள்கைகள் அடங்கிய விஷயங்களை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். இலங்கையின் இனப்பிரச்னை குறித்த ஒப்பந்தத்தில் கண்டுள்ள விஷயங்கள் எங்கள்மீது திணிக்கப்பட்ட ஒன்றாகும்.
நீண்டகால நோக்கில் தந்திரோபாய ரீதியாக இந்தியா தமிழீழத்தின் நண்பன் என்னும் நோக்கிலும், எமக்கு அப்பாற்பட்ட சக்தியாக நிலைமை எம் மீது திணிக்கப்பட்டதாலும் நாம் இந்த ஒப்பந்தத்திற்கு உடன்படுகிறோம். இது இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாகப் பொருள்படாது. இந்த ஒப்பந்தம் திம்புப் பேச்சுவார்த்தையில் கூறப்பட்ட எங்களின் உயிர்க் கொள்கையான நான்கு அம்ச அடிப்படைக் கொள்கைகளை உள்ளடக்கவில்லை. இதனாலேயே இந்த ஒப்பந்தத்தை எம்மால் ஏற்க முடியாதிருக்கிறது. ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனாவும் அளித்த பேட்டி, சுதுமலையில் எமது தலைவர் அளித்த உரை, 15-8-87-இல் "இந்தியா டூடே' பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி அனைத்தும் சான்று பகர்கின்றன.
ஒப்பந்தத்தின் முழுமையான அமலாக்கத்திற்கு ஆதரவு தருகின்றோம் எனும் நிலையில் பாரதப் பிரதமர் எமக்குச் சில உறுதிமொழிகளை அளித்தார்:
1. தமிழ் மக்கள், போராளிகளின் முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்.
2. தமிழீழ விடுதலைப் புலிகளைப் பெரும்பான்மையாக உள்ளடக்கிய இடைக்கால அரசை ஏற்படுத்துதல்.
3. இடைக்கால அரசு
(1) அகதிகளை மீளக் குடியேற்றுதல், (2) யுத்த அழிவுகளினால் பாதிக்கப்பட்ட சகலருக்கும் புனர்வாழ்வு அளித்தல், (3) தமிழ் போலீஸ் படையை நிர்மாணித்தல் போன்ற பணிகளுக்குப் பொறுப்பாக இருக்கும் என்பனவே அவ்வுறுதிமொழிகளாகும். ஆனால் நாம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தொடங்கியவுடன் நடந்ததோ வேறு. பாரதப் பிரதமர் எமக்கு வாக்குறுதி தந்ததற்கு எதிர்மாறாக விளைவுகள் இடம்பெற்றன.
(அ) வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் நான்கு மடங்கு வேகத்தில் நடைபெற்றன. (ஆ) அரசியல் கைதிகள் பெருந்தொகையானோர் விடுவிக்கப்படாதது. (இ) சிறீலங்கா ராணுவம் தனியார் வீடுகள், பொதுக் கட்டடங்கள், பாடசாலைகள் போன்றவைகளில் இருந்து வெளியேறாதது. (ஈ) இடைக்கால அரசு உருவாக்கப்படாமல் காலந்தாழ்த்தப்பட்டது. (உ) அதேவேளை சிங்கள போலீஸ் நிலையங்கள் அவசர அவசரமாக வடக்கு, கிழக்கில் ஸ்தாபிக்கப்பட்டது.
(ஊ) புனர்வாழ்வும், யுத்த அழிவு நிவாரணங்களும் சிங்கள மக்களுக்கே திட்டமிட்டு வழங்கப்பட்டது போன்ற அபாயகரமான சூழ்நிலைகளை உடனடியாகத் தடுக்க வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டது. இந்திய அரசுக்கு 24 மணிநேர முன்னறிவித்தல் அவகாசத்துடன் 5 அம்சக் கோரிக்கைகளைக் கொண்ட திலீபனின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டது.
இறுதியில் தமிழ் மக்களின் எழுச்சிக்கும், திலீபனின் உயிர்த் தியாகத்திற்கும் அடிபணிந்து செப்டம்பர் 28, 1987-இல் எம்முடன் உடன்பாட்டிற்கு வந்தது.
1) தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இவ் ஒப்பந்தத்தின் அமலாக்கத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குதல் வேண்டும்.
2) எஞ்சியிருக்கும் ஆயுதங்களைக் கையளித்தல். (இடைக்கால அரசு ஏற்பட்டவுடன்)
3) இந்திய அரசுக்கு எதிரான எமது பிரசாரத்தை நிறுத்துதல்.
என்ற முன்நிபந்தனைகளோடு திலீபனின் ஐந்து அம்சக் கோரிக்கைகளை இந்திய அரசு ஏற்று, விடுதலைப் புலிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட இடைக்கால அரசு ஒன்றை நிறுவ எம்முடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டது. இவ் ஒப்பந்தத்தில் இந்தியத் தரப்பில் தூதுவர் ஜே.என். தீட்சித்தும், எமது தரப்பில் பிரதித் தலைவர் மாத்தையாவும் கையெழுத்திட்டனர்.
கேள்வி: கடந்த ஐந்து மாதங்களில் நடந்துள்ள விஷயங்களை, நிகழ்ச்சிகளை நீங்கள் கணிப்பது எப்படி? இந்திய ராணுவத்தின் தொகையும், தளவாடங்களும் அங்கு குவிக்கப்பட்டிருப்பது; இந்தியத் தொடர்பு சாதனங்களின் செயற்பாடுகள்?
கிட்டு: கடந்த 5 மாதங்களில் தமிழ் மக்கள் பட்ட துயரம் வேறு எந்தக் காலத்திலும் காணாத ஒன்றாகும்.
ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளும் கொடுக்கப்பட்டதாக பொய்யைக் கூறி ஏமாற்ற இரு அரசுகளுக்கும் நாம் இடைஞ்சலாக இருக்கிறோம். தமிழ் மக்கள் எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் எமக்கு அவர்கள் அளிக்கும் ஆதரவும் எம்மை ஜனநாயகப் பாதையால் ஒடுக்க முடியாது என்பதை இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் சில ராஜதந்திரிகளும், ஜே.ஆர். ஜெயவர்த்தனா அரசும் உணர்ந்து கொண்டன. யுத்தம் ஒன்றின் மூலமே எம்மை அழிக்கலாம் என்றும் அதுவும் ஒரு சில நாட்களில் காரியத்தை முடித்து நியாயப்படுத்தலாம் என்றும் நம்பினர்.
எம்மை வலுவில் ஒரு சண்டைக்கு இழுப்பதற்காகவே பதினேழு பேரைக் கைது செய்து கொழும்புக்கு அனுப்பும் நாடகத்தை ஆடினர். எமது தன்னுரிமைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் நாம் சண்டையிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டோம். உண்மையில் நாம் இந்தியாவிற்கு எதிரான யுத்தத்திற்கு என்றுமே தயாராக இருக்காதது மாத்திரமின்றி அதை விரும்பவுமில்லை.
கனரக பீரங்கிகள், டாங்கிகளை ஏற்கெனவே திட்டமிட்டு குவித்து வைத்திருந்த அமைதிப் படை யாழ்ப்பாணக் குடா நாட்டைக் கைப்பற்ற ஒரு எதிரி நாட்டின் மீது படையெடுப்பதுபோல் முழுப் பலத்துடன் இறங்கினார்கள். தமது ஒரு கை கட்டப்பட்ட நிலையில் தாம் சண்டையிட்டதாக இந்தியத் தளபதிகள் கூறுவது தவறு. போராளிகளின் வீரமும், தியாகமும், எமது யுத்த தந்திரமும், எம் ராணுவ வேவுத் திறனும், மக்களின் எல்லையில்லாத ஆதரவும், ஒடுக்குமுறைக்கு எதிரான உண்மையான எழுச்சியும்தான் போர்முனைகளில் எமக்கு வெற்றியைக் குவித்தன.
பெருந்தொகையான ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்ததனால்தான் நாம் இந்திய ராணுவத்தை திணறடித்தோம் என்பதை மறுக்கின்றோம். யாழ்குடா நாட்டின் கட்டுப்பாட்டை ஒரு மாதத்தின் பின் நாம் இழந்தாலும் ராணுவ ரீதியில் எமக்கு வெற்றியான சண்டையாகவே நாம் கருதுகின்றோம். தொடர்ந்து எமது பாதுகாப்பிற்காக கொரில்லாப் போராட்டதை தொடரக்கூடிய நிலையிலும் இருக்கின்றோம்.
முன்னெப்பொழுதும் இல்லாதவாறு தமிழ் மக்கள் எம்மீது அனுதாபமும், ஆதரவும் கொண்டிருக்கின்றார்கள். அதேநேரம் இந்திய ராணுவம் தமிழ் மக்களைத் தொல்லைப்படுத்தி, பயமுறுத்தி, நிம்மதியற்ற வாழ்க்கையின் எல்லைக்குத் தள்ளிக்கொண்டு போகின்றது. இந்திய ராணுவத்தின் பெருந்தொகையான எண்ணிக்கை எமது நாட்டு மக்களின் அன்றாடக் கலாசார வாழ்க்கையைப் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு ராணுவச் சூழ்நிலைக்குள் வாழாத, வாழ்க்கைப்பட விரும்பாத எமது மக்கள் இந்திய ராணுவத்தை ஓர் ஆக்கிரமிப்பாளனாக உணரத் தலைப்பட்டுள்ளனர். தமது உள்ளக்குமுறல்களை அடக்கி வைத்திருக்கும் எம் மக்கள் வியட்னாமின் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தியப் படைகள் தமது எண்ணிக்கைகளைக் குறைத்து பழைய நிலைக்குத் திரும்பும் நடவடிக்கைதான் எதிர்காலத்தில் தமிழ் மக்களுடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்தும் வாய்ப்பாகும்.
இந்தியாவின் மக்கள் தொடர்பு சாதனங்களில் இந்திய அரசுக்கும் ஆளும் கட்சிக்கும் கட்டுப்பட்டவை மிகவும் பாரதூரமாக எம்மீது அபாண்டங்களை அள்ளித் தெளிக்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் எமது நிலைப்பாடு பற்றிய விஷயத்தைக் கொச்சைப்படுத்துகிறார்கள். தமிழ் மக்கள் கேட்ட உரிமைகளைவிட அதிகப்படியான உரிமைகளை இவ் ஒப்பந்தம் கொடுத்துள்ளதாகக் கூறுவது தவறு. எமது நாட்டில் இரண்டு தினசரிப் பத்திரிகை அலுவலகங்களை பட்டப் பகலில் வெடி வைத்துத் தகர்க்க இந்திய ராணுவத்திற்கு உத்தரவிட்ட இந்திய அரசின் தொடர்பு சாதனங்களிடமிருந்து நாம் எதனை எதிர்பார்க்க முடியும்?
ஆனால் இந்தியாவின் பெரும்பாலான சுதந்திரமான பத்திரிகைகளுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். நாட்டுப்பற்று எனக் கூறி உண்மையை மறைக்காமல் நேர்மையாக உள்ளதை உள்ளபடி கூற இப்பத்திரிகைகள் முயன்றுள்ளன. இது இந்தியப் பத்திரிகைகளின் சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும்.
124: இந்தியாவின் தயவு வேண்டும்!
கிட்டு தனது பேட்டியில், விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத் தமிழ் மக்களின் வருங்காலம் பற்றி எல்லாம் விரிவாகவே விளக்க முற்பட்டார். இந்திய அமைதிப் படை வெளியேற வேண்டும் என்று தாங்கள் கூறவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
கேள்வி: பேச்சுவார்த்தை வெற்றிபெறும்போது,
விடுதலைப் புலிகளின் எதிர்கால நடவடிக்கைகள், நோக்குகள் யாவை? பிற போராளிக் குழுக்கள், இந்திய அரசு, ராணுவம், தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன பற்றியவை?
கிட்டு பதில்: பேச்சுவார்த்தை ஒன்று வெற்றிகரமாக நிறைவேறும்போது,
அ) யுத்த நிறுத்தம் நிரந்தரமாக்கப்படும்.
ஆ) எமது ஆயுதங்கள் இந்தியப் படையிடம் கையளிக்கப்படும்.
இ) இந்தியப்படைகளின் வடக்கு, கிழக்கில் எதிர்கால நிலைகளில் இணக்கம்.
ஈ) தமிழ் மக்களின் நிரந்தரப் பாதுகாப்பு, யுத்த அழிவு நிவாரணங்கள் போன்ற அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தும் விடயங்களில் இணக்கம்.
உ) செப்டம்பர் 28-ல் ஏற்பட்ட, தீட்சித்-பிரபாகரன் உடன்பாட்டின் எதிர்கால வடிவங்களின் இணக்கம்.
ஊ) தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளை நிறைவு செய்யும் கொள்கைகளை ஒப்பந்தத்தில் திட்டவட்டமாக குறிப்பிட்டு உள்ளடக்கவும், சில மாற்றங்களை இந்திய அரசு கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளவும் இணக்கம் காணல்.
எ) ஒப்பந்த விதிகளுக்கமைய தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் வைக்கப்படும் அதிகூடிய அதிகாரங்களைக் கொண்ட வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபையை அமைக்க இலங்கை அரசு சட்டமியற்றவும், அதற்கான புதிய அரசியல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றச் செய்யவும் இந்திய அரசுடன் இணக்கம் காணல்.
ஏ) இவ்வாறு அமையப்போகும் மாகாண சபைக்கான தேர்தல் வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்குத் தேவையான அடிப்படை ஆண்டைத் தீர்மானித்தல்.
இவைபோன்ற விஷயங்களில் இணக்கமும், தீர்வும் கண்டிருப்போம் என்பதைக் குறிப்பிடுகின்றோம்.
நீண்டகாலப் போரின் அழிவுகளால் அவதிப்பட்டிருக்கும் எம் மக்களுக்கு நிம்மதி தேவை. இந்த இடைக்கால அமைப்பில் மக்கள் பயன் அடைய நாம் பாடுபடுவோம். எமது எதிர்கால அரசியலைப் பொறுத்தமட்டில் நாம் வைத்த நான்கு அம்சக் கோரிக்கைகள் ஏற்கப்படும்வரை சகலவிதமான ஜனநாயக வடிவங்களிலும் மக்களை அணிதிரட்டிப் போராடுவோம்.
இந்திய மக்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் இடையில் ஒரு நட்புப் பாலத்தை அமைக்க முயல்வோம். இந்திய அரசு எமது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவைக்க, இந்திய மக்களிடம் ஆதரவு திரட்டுவோம்.
ஆயுதங்களைக் கையளித்த நிலையில் சிங்கள ஊர்க்காவல் படையினரிடமிருந்தும், சிறீலங்கா ராணுவத்தினரிடமிருந்தும் எமது மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இந்திய ராணுவத்திடமே ஒப்படைக்கப்படும். வடக்கு, கிழக்கின் எல்லைப் புறங்களிலுள்ள தமிழ் மக்களைப் பாதுகாக்க இந்திய ராணுவம் செயல்பட வேண்டி ஏற்படலாம்.
தமிழீழ விடுதலைப் புலிகளும், ஈரோஸýம் திட்டவட்டமாக இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. அதேசமயம் பிற இயக்கங்கள் எனப்படும் குழுக்களும் தமிழர் விடுதலைக்கூட்டணியும் தமது அடிப்படை அரசியற் கொள்கைகளை மண்ணில் புதைத்து தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளன. இவர்களை தமிழ் மக்கள் அரசியல் சக்திகளாகக் கணிப்பதை விட்டுவிட்டார்கள். ஒரு பேச்சுவார்த்தையின் வெற்றிக்குப் பிறகு அமையும் தேர்தலில் இவர்கள் மக்களைச் சந்திப்பதில் எமக்கு ஆட்சேபணையில்லை. இவர்களுக்குப் பதில் கொடுக்க தமிழ் மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
கேள்வி: இலங்கையில் இந்திய அரசின் செயற்பாடுகளை, பிடிப்பை மட்டுப்படுத்திக்கொண்டு இந்திய ராணுவம் படிப்படியாக வெளியேற வேண்டியதை கருத்தில் கொண்டு விடுதலைப் புலிகள் செயற்படுவார்களா?
கிட்டு: இந்திய ராணுவத்தை வெளியேற்றுவது-வெளியேற்ற முடிவெடுப்பது என்பது ஒரு பிரதான அரசியல் கோட்பாடாகும். அப்படிப்பட்ட ஓர் அரசியல் கொள்கையை இன்னமும் நாம் வகுக்கவில்லை. வகுக்கவும் மாட்டோம் என நம்புகின்றோம். ஆனால் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக வசிக்கும் இடங்களில் இந்திய ராணுவத்தின் நடமாட்டமும் முகாம்களும் தேவையில்லை எனக் கருதுகின்றோம். அதே வேளை தமிழ் மக்கள் சிங்களக் குண்டர்களால் தாக்கப்படும் எல்லைப்புறங்களிலும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கும் இடங்களிலும் இந்திய ராணுவம் பாதுகாப்பளிக்க வேண்டிய தேவை உண்டு.
கேள்வி: மக்களின் தினசரி வாழ்க்கையில் ராணுவம் தலையிடாமலிருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
கிட்டு: ஆம்! எந்த ஒரு நாட்டில், மக்கள், தினசரி வாழ்க்கையில் ராணுவம் தலையிடுவதை விரும்புவார்கள்? பாதுகாப்பு இல்லை எனக் கருதும் இடங்களில் நிலைமை வேறு.
கேள்வி: இந்தியத் தலையீடு நிற்க வேண்டுமானால், இந்தியா இதை ஒரு கெüரவப் பிரச்னையாகக் கருதாமலிருக்க வேண்டுமானால் அதற்கு நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?
கிட்டு: இந்தியத் தலையீடு நிற்க வேண்டுமென்று இன்னமும் நாம் கூறவில்லை. 40 ஆண்டு காலமாக பெüத்த சிங்கள இனவாத அரசாங்கங்களால், தமிழர்கள் ஏமாற்றப்பட்ட காரணத்தால், எமது உரிமைகளை வென்றிட, இந்தியாவின் தயவு எமக்கு வேண்டும். ஆரம்பத்தில் நடுநிலையாளனாக இருந்த இந்தியா இன்று ஒப்பந்தத்தின் பங்காளனாக மாறிவிட்டது. இந்து சமுத்திர வல்லாதிக்கத்தை நிலைநாட்டவும் தமது பாதுகாப்பைத் திடப்படுத்தவும் இந்திய ராஜதந்திரிகளின் அவசர முடிவே இவ்வொப்பந்தம். தமிழ் மக்களின் தேசிய விடுதலை வேட்கையின் ஆழத்தையும், அதன் வரலாற்றுப் பின்னணியையும் ஆழமாக உணரத் தவறிவிட்டதால் ஏற்பட்ட பிழை இந்த அவசர ஒப்பந்தம்!
இதன் பின்னர் அமைதிப்படையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. இதற்கு முன்பாக புனே வந்த ராஜீவ் காந்தி, ராணுவ மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த வீரர்களைப் பார்க்காமல் சென்றது குறித்து விமர்சனம் எழுந்தது. அதன்பொருட்டு ராஜீவ் காந்தி இன்னொரு நிகழ்ச்சிக்காக வந்தபொழுது ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இலங்கை வடக்குப் பகுதியின் பிரச்னைகளைத் தீர்க்க ராணுவ நடவடிக்கை சரியாகாது என்று, முன்னர் தெரிவித்ததை தீபிந்தர் சிங் நினைவூட்டினார். விடுதலைப்புலிகளுடன் பேசித் தீர்வு காணுவதே சரியாக இருக்குமென்றும், அப்போது அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
சில வாரங்களில், தீபிந்தர் சிங், திருமணம் ஒன்றுக்காக சண்டிகர் செல்லவிருந்தபோது, ஏ.எஸ். கல்கத்திடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தார். பணி மூப்பு மற்றும் பொறுப்பு வழியாக அவர் அந்த உயர்வைப் பெற இருந்தார். அதுமட்டுமன்றி அந்தப் பணியை அவர் மிகவும் விரும்பினார்.
தீபிந்தர் சிங் சண்டிகரில் இருந்தபோதுதான், சர்தேஷ் பாண்டே நியமனமும், ஹர்கிரத் சிங் வெளியேற்றமும் நடைபெற்றது.
இதுகுறித்து பின்னொரு நாளில் ஜெனரல் சுந்தர்ஜியிடம் பேசிக் கொண்டிருந்தபோது இந்தப் பணிமாற்றம் சரியானதுதானா என்று வினவினார். அதற்கு சுந்தர்ஜி, "அவரது பணி மாற்றம் எனக்குப் பிறகு ஏப்ரலில் தளபதியாக வரவிருக்கும் வி.என். சர்மாவின் விருப்பம்' என்று பதிலளித்தார்.
இந்நிலையில் தீபிந்தர் சிங் பிப்ரவரி 28-இல் பணியிலிருந்து ஓய்வு பெற இருந்தார். 1988-ஆம் ஆண்டு, லீப் ஆண்டு ஆனதால் பிப்ரவரி 29-இல் பணி ஓய்வு பெற்றார். இதனையொட்டி அவருக்குப் பல்வேறு பிரிவு உபசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தெற்குப் பகுதி பிரிவின் தளபதியானதால், இந்தியாவின் மிகப்பெரும் பகுதிக்கு அவர் பொறுப்பானவராக இருந்தார். புனேயிலிருந்து யாழ்ப்பாணம் வரை மிகப் பெரிய பரப்புக்கு தளபதி. எனவே பிரிவு உபசார விருந்தில் காலையில்- ஊட்டி வெல்லிங்டன்- மதிய விருந்து பலாலி (யாழ்ப்பாணம்)- இரவு விருந்து சென்னை. மறுநாள் காலை சென்னையில் காலை உணவு- மதியம் திருகோணமலை- இரவு கொழும்பு என்று நான்கு நாட்கள் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கொழும்பில் நடைபெற்ற விருந்தில் ஜெயவர்த்தனாவும் கலந்துகொண்டார். அவர் தீபிந்தர் சிங்கிடம், "ஓய்வு பெற்றதும் என்ன செய்யப் போவதாக' கேட்டார். "பஞ்சாபை ஒட்டியுள்ள பாஞ்ச்குலாவில் தங்கப் போகிறேன்' என்று தீபிந்தர் சிங் தெரிவித்தார். "பஞ்சாப், இந்தியாவில் ஆபத்தான இடமாயிற்றே' என்று கருத்து தெரிவித்தபோது, "அது எனது ஊர்; சொந்த மண்! மேலும் கொழும்பை விட பஞ்சாப் பரவாயில்லை' என்றார். ஜெயவர்த்தனா பதில் பேசவில்லை. (தீபிந்தர் சிங் தனது நூலில்)
தீபிந்தர் சிங்கைத் தொடர்ந்து ஏப்ரலில் ஜெனரல் சுந்தர்ஜியும் ஓய்வுபெற்றார்.
125: அன்னை பூபதியின் உண்ணாவிரதம்
நாவலடியில் உள்ள அன்னை பூபதி நினைவு மண்டபம் கிழக்கு மாவட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு என மாவட்டங்கள் இருந்த நிலையில், சிங்களக் குடியேற்றத்தினால் மேலும் ஒரு மாவட்டமாக அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டு, சிங்களப் பெயர் வைத்து, "திகாடுமல்லை' என்ற நாடாளுமன்றத் தொகுதியாக உருப்பெற்றது. இந்த மட்டக்களப்பு மாவட்டம் தமிழீழப் பகுதியின் நெற்களஞ்சியமாகும்.
இம்மாவட்டத்தில் அமைதிப்படை 1988 ஜனவரி 2-இல் பெரியதொரு அளவில் தனது தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. இந்தத் தேடுதல் வேட்டையில் புலிகள் என்று கூறி 2500 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அழைத்துப் போகப்பட்டார்கள். இவர்களில் 800 பேர் காங்கேயன்துறை முகாமில் அடைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ளோர் விவரம் அறியக் கிடைக்கவில்லை.
இவர்களில் விடுதலையானவர்கள் வெகு சிலரே. பெரும்பாலோர் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தத் தேடுதல் வேட்டையில் இளைஞர்களுக்கு அடுத்தபடியாக, பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களில் வயது வித்தியாசமே இல்லையென்பது வேதனை தரும் விஷயமாகும்.
இதன் ஆரம்பம், "மட்டக்களப்பு நகரின் வெள்ளைப்பாலத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த இரு இளம்பெண்களை விரட்டிப் பிடித்து, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டதுதான். இதுவே முதல் சம்பவம்' என்று பழ.நெடுமாறன் தனது நூலில் கூறியுள்ளார்.
இந்தப் பாலியல் பலாத்காரத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று "முறிந்தபனை' நூல் விரிவாக விளக்கியிருக்கிறது. அதாவது பக்.365-லிருந்து 370 வரையும், 377-லிருந்து 412 வரையும் எழுதப்பட்டுள்ள பக்கங்களில் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டோம் என வயதுக்கு வராத மற்றும் பேரிளம் பெண்கள் பேட்டியளித்திருக்கிறார்கள். ரத்தமும், நிணமும், கண்ணீரும், கம்பலையும், கதறலும், பைத்தியமும் பிடித்த நிலையுமான சம்பவங்களின் பதிவுகள் இப்பக்கங்களில் பதியப்பட்டுள்ளன.
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்களின் நிலை என்ன?
"நமது சமூகத்தில் தன்னுடைய சுய விருப்பத்துக்கு எதிராக ஓர் இளம்பெண்ணின் கன்னித்தன்மை அழிக்கப்பட்டு விடுமானால், அவள் திருமணம் செய்வதை நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. அப்பெண் திருமணமானவளாக இருந்தால், அவள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. ஆகையால், பாலியல் வன்முறைக்குள்ளானவர்கள் தங்கள் துன்பங்களையும், மனக்காயங்களையும் மெüனமாகத் தமக்குள்ளேயே விழுங்கிக்கொண்டு, குறித்த சம்பவங்களைப் பற்றிப் புகார் செய்ய முன் வருவதில்லை.
""பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள் சமூகக் களங்கத்தையும் ராணுவ அச்சுறுத்தலையும் மீறி, புகார் செய்தபோது அவர்கள் போராளிகளுடன் தொடர்பு கொண்டவர்களாக இருந்ததால்தான் இவ்வாறு புகார் செய்வதற்கு தைரியம் வந்திருக்கிறது.. என்று கூறி அவர்கள் மேலும் காவலுக்குட்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள்'' - என்று "முறிந்தபனை' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கும் மேலாக, கடுமையான வார்த்தைகள் சி.புஷ்பராஜாவின், "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற நூலில் காணப்படுகின்றன. (நாம் மென்மையான விமர்சனத்தை மட்டும் எடுத்துக்கொண்டுள்ளோம்.) பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாவது பெண் புலிகள் என்று சொல்லப்பட்டும், ஆயுதம் தேடுகிறோம் என்று பெண்களைத் தீண்டுகிற செயலும் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது (பக்.459 - 460).
இச்செயல்கள் மட்டக்களப்பில் அதிகரித்த நிலையில், தாய்மார்கள் கொதித்து எழுந்தனர். இதுகுறித்து பழ.நெடுமாறன் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதன் சுருக்கம் வருமாறு:
"திலீபன் வழியைப் பின்பற்றி அன்னையர் முன்னணி உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக "உடனடியாகப் போர் நிறுத்தம் மற்றும் புலிகளுடன் பேச்சு வார்த்தை' மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
இக் கோரிக்கை பயனளிக்காது போகவே, மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் கோயில் எதிரே அன்னையர் முன்னணி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியது. மாவட்டம் முழுவதும் பெண்களும் மாணவிகளும் இதில் பெருமளவில் பங்கேற்றனர்'.
அந்தக் கூட்டம் அதிகரிக்கவே, சிங்களக் காவல்படை, சந்தையில் திரண்டிருந்த பெண்களைச் சுற்றிவளைத்துத் தாக்கத் தொடங்கியது. பெண்களும் குழந்தைகளும் பலத்த காயத்துக்கு ஆளானார்கள். கலைந்தோடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. அமைதிப் படையினர் இந்த அடக்குமுறையை வேடிக்கை பார்த்தார்களே ஒழிய கட்டுப்படுத்தவில்லை.
இதன் எதிரொலியாக, அன்னையர் முன்னணி - அடையாள உண்ணாவிரதத்தைத் தொடர் உண்ணாவிரதமாக்கியது. இதன் எழுச்சி கண்டதும், பிரதமர் ராஜீவ் காந்தி "அமைதிப்படை தமிழ் மக்களுக்கு எதிராகப் போராடவில்லை; புலிகளுக்கு எதிராகவே பேராடுகிறது' என்றார்.
அன்னையர் முன்னணியினரைப் பேச்சு வார்த்தைக்கு அமைதிப்படை அழைத்தது. பிரிகேடியர் சந்தேஷ் கலந்துகொண்டு, "புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் - அதன்பின்னரே பேச்சுவார்த்தை' என்றார்.
அன்னையர் முன்னணியினரோ, ""எங்கள் நகைகளைக் கொடுத்து, எங்களைக் காக்க, எமது பிள்ளைகள் வாங்கிய ஆயுதங்களைக் கேட்பதற்கு நீங்கள் யார்'' என்று கேட்டனர்.
பேச்சுவார்த்தை முறிந்தது; பலனில்லை. பிப்ரவரி 10-ஆம் தேதியன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.
இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜே.என்.தீட்சித் நேரடியாகப் பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டு, "புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்' என்று மீண்டும் வலியுறுத்தினர். பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை.
மாறாக, அந்தப் பகுதியை ராணுவம் சுற்றிவளைத்தது. ராணுவ முகாம் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டது. பிப்ரவரி 12,13,14 நாள்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பெண்கள் பயப்படவில்லை. எழுந்தும் செல்லவில்லை. மேலும் மேலும் கூடினர்.
அன்னையர் முன்னணியின் ஆலோசகர் கிங்ஸ்லி இராசநாயகம் கடுமையான தாக்குதலுக்கு ஆளானார். முகாமுக்கும் கொண்டு செல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்தையொட்டி, அன்னையர் முன்னணி முன்னிலும் கடுமையான முடிவுகளை எடுத்தது. சாகும்வரை உண்ணாவிரதம் என்கிற முடிவுக்கு வந்தது. யார் முதலில் உண்ணாவிரதம் இருப்பது என்பது குறித்து கடும்போட்டி நிலவியது. இரு பிள்ளைகளை சிங்கள அடக்குமுறைக் கொடுமைக்கு பறிகொடுத்த அன்னை பூபதி முன்னுரிமை கோரினார். அன்னம்மா டேவிட்டும் உரிமை கோரினார். சீட்டுக்குலுக்கிப்போட்டதில், அன்னமா டேவிட் தேர்வானார்.
1988-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் நாள் அன்னம்மா மாமாங்கப் பிள்ளையார் கோயில் முன்பாக சாகும்வரை தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அன்னம்மா டேவிட் இறந்தால், அமைப்பாளர்கள் மீது வழக்குப் போடப்படும் என அமைதிப்படை மிரட்டியது. ஆனாலும் உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில், அவரின் மகன்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் அரசியல் ஆதாயம் தேட, பலவந்தமாகத் தங்களது தாயாரை உண்ணாவிரதத்தில் ஈடுபடுத்தி உள்ளார்கள் என்று எழுதி வாங்கப்பட்டது. இந்தக் கடிதத்தை ஆதாரமாகக் காட்டி அன்னம்மா டேவிட் தூக்கிச் செல்லப்பட்டார்.
இதன் பின்னர், அன்னை பூபதி களத்தில் குதித்தார். அவர் உண்ணாவிரதம் இருக்கும் முன்பாக, தனது சுயவிருப்பம் காரணமாக உண்ணாவிரதம் இருப்பதாகவும், கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வதாகவும், சுயநினைவு இழந்தால் என் குடும்பத்தார் என்னைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்றும், முக்கியமாகத் தூக்கிச் செல்லக்கூடாது என்றும் மரணசாசனம் எழுதிக்கொடுத்தார்.
13-10-1988 அன்று உண்ணாவிரதம் தொடங்கினார். மாமாங்கத் திடல் மக்கள் கூட்டத்தால் நிறைந்தது. அமைதிப்படையைக் குறித்து எங்கும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மற்ற இயக்கங்கள் துணைகொண்டு பூபதி அம்மாளைத் தூக்கிச்செல்லும் முயற்சியும், துப்பாக்கியால் சுட்டும், பதற்றம் ஏற்படுத்தும் முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன.
மட்டக்களப்பை நோக்கி உலகப் பத்திரிகையாளர்கள் குவிந்தனர். பூபதி அம்மாளின் உண்ணாவிரதத்துக்குக் காரணமானவர்கள் என்று கூறப்பட்டு, இலங்கைத் தமிழாசிரியர் வணசிங்கா, கிறிஸ்தவ பாதிரியார் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ ஆகியோருடன் ஏற்கெனவே கைதாதி விடுதலைபெற்ற கிங்ஸ்லி இராசநாயகாவும் கைது செய்யப்பட்டனர்.
அன்னை பூபதியின் கணவர் கணபதிப் பிள்ளையை அழைத்து மிரட்டிப் பார்த்தார்கள். அவர் பணியவில்லை. லட்சியம் ஒன்றுக்காக அவர் விருப்பப்பட்டு இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் என்று பதிலளித்தார். பூபதி அம்மாள் 13-10-1988 அன்று, உண்ணாவிரதத்தின் 31-ஆம் நாளில் மரணமுற்றார்.
அவரது இறுதி ஊர்வலம் தடைசெய்யப்பட்டது. அவரது உடலை எடுத்துச்செல்ல அமைதிப்படை, சிங்களக் காவல்படை இரண்டும் முயன்றன. பூபதி அம்மாளின் உடல், அன்னையர் முன்னணியால் மறைத்து வைக்கப்பட்டு, திடீரென ஊர்வலம் தொடங்கியது. நாவலடி கடற்கரை எங்கும் மனிதத் தலைகளாகவே காட்சியளித்தது. ஒரு பக்கம் கடல்; மறுபக்கம் மக்கள் கடல்!
"தமிழீழப் பெண்டிரின் எழுச்சியின் வடிவமாக பூபதி அம்மாள் என்றும் திகழ்வார்' என்று பழ.நெடுமாறன் அந்தக் கட்டுரையை முடித்துள்ளார்.
126: வடக்கு-கிழக்கு மாகாணத் தேர்தல்
இந்திய அமைதிப் படையின் பணி குறித்து உலகப் பத்திரிகையாளர்களும், இந்தியப் பத்திரிகையாளர்களும் தங்கள் விமர்சனங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். ஆசியா வீக், டைம், நியூஸ்வீக் ஆகிய சர்வதேசப் பத்திரிகைகளும், இந்தியாவின் இந்தியா டுடே, சண்டே இதழ்களும் வெளியிட்ட செய்திகள் பெரும்பாலும் அமைதிப் படையின் செயல்பாடுகளைக் கண்டித்தன என்றே சொல்லவேண்டும்.
நல்லூர் கந்தசாமி கோயிலில் 50 ஆயிரம் பேர் அடைபட்டு, உணவுக்கும், படுத்துறங்கவும், இயற்கை உபாதைகளைக் கழிக்கவும் மக்கள் படும் துன்பங்கள் படங்களுடன் வெளியாயிற்று. சண்டே இதழ் விடுதலைப் புலிகளின் நிலையை மறைமுகமாக ஆதரித்தும், இந்தியா டுடே, இந்திய ராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்புகளுக்குக் கண்டனம் தெரிவித்தும் அட்டைப் படத்துடன் செய்திக் கட்டுரைகளை வெளியிட்டன. லண்டனில் இருந்து வெளி வரும் பத்திரிகைகளோ, ராஜதந்திர ரீதியில் தங்களது விமர்சனக் கட்டுரைகளை வெளியிட்டன.
இவ்வாறான செய்திகளின் மூலம் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் வன்னியின் காட்டுப் பகுதியில் முகாம் அமைத்து கொரில்லாத் தாக்குதலைத் தொடர்கிறார்கள் என்றும், பிரபாகரனின் மனைவி மதிவதனி, குழந்தைகள் உள்ளிட்டவர்கள் நல்லூர் கந்தசாமி கோயிலில் மக்களோடு மக்களாக அடைபட்டிருக்கிறார்கள் என்றும் தெரிய வந்தது.
சாவகச்சேரி சந்தையில் வீசப்பட்ட குண்டுகளால் ஏற்பட்ட நாசமும், யாழ்ப்பாணம் மருத்துவமனை குண்டுவீச்சு அவலமும் உலகின் கண்களுக்குத் தெரியவந்தது.
டைம் பத்திரிகை, அகதி முகாம் மீது குண்டு வீசித் தாக்கியதை படங்களுடன் வெளியிட்டிருந்தது. இந்தியா டுடே, இந்தியச் சிப்பாய் உயிரிழப்பைப் பெரிதாக்கி தனிக்கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இவையெல்லாமாகச் சேர்ந்து, இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் ரகளையை ஏற்படுத்தியது. இதற்கான அரசு பதிலால் உறுப்பினர்கள் கோபமுற்று அவையைவிட்டு வெளியேறினர்.
இலங்கையின் கனவுக் கதாநாயகன் விஜயகுமாரதுங்கா, ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவின் மகள் சந்திரிகாவின் கணவர். வடக்கின் இனப் பிரச்னைக்குத் தீர்வு காண பல முயற்சிகளை மேற்கொண்டவர். அரசே எதிர்த்தும் யாழ்ப்பாணப் பயணம் மேற்கொண்டதன் மூலம் சிங்களக் கைதிகள் விடுவிக்கப்படவும் காரணமாக இருந்தவர். அப்போது கிட்டு, யாழ் தளபதியாக இருந்து விஜயகுமாரதுங்காவையும் புத்த பிக்குகளையும் வரவேற்றார்.
விஜயகுமாரதுங்காவின் அரசியல் மற்றும் வடக்கு-தெற்குக்குப் பாலமாகச் செயல்படும் தன்மைகளால் வெறுப்பு கொண்ட ஜே.வி.பி.யினரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். (பிப்ரவரி 16, 1988)
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ராஜீவ் காந்திக்கு அடுத்தடுத்து எழுதிய கடிதங்கள் மற்றும் அவ் இயக்கத்தினர் அளித்த பேட்டிகளின் அடிப்படையில், இந்திய உளவுத்துறை அவர்களை மிகவும் பலவீனம் அடைந்த ஒரு குழுவாகக் கணிக்க முற்பட்டது. இந்தக் கணிப்பின் விளைவாக தில்லித் தலைமையும் விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தியதுடன், புலிகளுக்கு எதிரான இயக்கங்களை ஒன்றிணைக்கும் முயற்சியிலும் இறங்கியது. இந்தக் கூட்டமைப்புக்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப்-பை தலைமை ஏற்க வைத்தனர்.
இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்காக அவசரம் அவசரமாக நாடாளுமன்றத்தில் 13-வது திருத்தத்தைக் கொண்டுவர இலங்கை அரசு முனைப்புக் காட்டியது. இந்த நெருக்கடிக்கு மற்றொரு காரணம், இலங்கையின் மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டிய நிலை.
மற்ற பகுதிகளுக்குத் தேர்தல் நடந்து, வடக்கு-கிழக்கில் தேர்தல் நடக்கவில்லையென்றால், அது ஜெயவர்த்தனாவுக்கு மிகப் பெரிய தலைவலி ஆகிவிடும். எனவே, வடக்கு-கிழக்கு மாகாணத் தேர்தலில் வெற்றி பெறுவதைவிட தேர்தலை நடத்துவது என்பது அவரது கட்சிக்கும் ஆட்சிக்கும் அவசியமான ஒன்றாக இருந்தது. இதன்பின்னர், வரப்போகும் அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இத் தேர்தல் அவசியமாயிற்று.
இதேபோன்ற ஒரு நெருக்கடி இந்தியாவிலும் இருந்தது. முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இறந்தபின்னர் இலங்கை இனப் பிரச்னையில் தமிழக அரசின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றமும், தொடர் ஆளுநர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவும் தேர்தல் நடத்தவேண்டியிருந்தது.
அதன் அடிப்படையில் அமைதிப் படை, ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினரை முன்னிறுத்த முனைந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினருக்குப் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. தேர்தலில் நிற்க முழுமையான பாதுகாப்புக்கும், தேர்தல் செலவுகளுக்குப் பண உதவியும் செய்வதுடன், பாதுகாப்புக்கு என்று ஆயுதங்களும் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டதாகத் தகவல்கள் உண்டு.
எனவே, ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினரும், ஈ.என்.டி.எல்.எஃப். குழுவினருடன் உடன்பாடு செய்துகொண்டு தேர்தலில் போட்டியிட முன்வந்தனர்.
இலங்கைத் தேர்தல் விதிப்படி, தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈ.என்.டி.எல்.எஃப். தங்களை உடனடியாகப் பதிவு செய்து கொண்டன. ஈரோஸ், விடுதலைப் புலிகள், தமிழர் விடுதலைக் கூட்டணி, பிளாட், டெலோ அமைப்புகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. டெலோ பின்னாளில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். கூட்டணியுடன் சேர்ந்துகொண்டது. (ஆதாரம்: அசைன்மெண்ட் ஜாஃப்னா -லெப்டி.ஜெனரல் சர்தேஷ் பாண்டே, பக்.79)
யாழ்ப்பாணவாசிகள் இந்தத் தேர்தலில் பங்கு பெறப்போவதில்லை என்று வெளிப்படையாகவே தெரிவித்தனர். அவர்களைச் சம்மதிக்க வைக்க இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் யாழ்ப்பாணத்தில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். கூட்டத்தில் மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றவேண்டிய அவசியம் குறித்து விளக்கப்பட்டது.
பொதுமக்களில் சிலர் எழுந்து, ""இந்தத் தேர்தலில் பல்வேறு போராளிக் குழுத் தலைவர்களை அழைத்துப் பேசும்போது, விடுதலைப் புலிகளை மட்டும் ஏன் அழைத்துப் பேசவில்லை'' என்று கேள்வி எழுப்பினர்.
தீட்சித் தரப்பில் பேசியவர், ""தேர்தல் என்று வரும்போது, இலங்கைத் தமிழர்கள் எனக் குறிப்பிடும்போது அது யாழ்ப்பாணத் தமிழர்களை மட்டும் குறிக்காது'' என்று விளக்கினார்.
""அப்படியென்றால் இந்தக் கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துவது ஏன்'' என்று கூட்டத்தில் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த இந்திய அதிகாரிகள், ""இந்த மேடையிலேயே விடுதலைப் புலிகளுக்கும் அழைப்பு விடுவதாக எடுத்துக் கொள்ளலாம். அவர்களைத் தேர்தலில் பங்கேற்குமாறு கேட்டு வருகிறோம். அவர்கள் சுயேச்சைகளை ஆதரித்தாலும் ஆதரிக்கலாம்'' என்றார்.
இந்த நேரத்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக சிவானந்த சுந்தரம், ஈரோஸ் பாலகுமாரி உள்ளிட்டோர், ""இது நம்பிக்கைத் துரோகமாகவும், ஏமாற்றுவித்தையாகவும் கருதப்படும்'' என்று வருத்தம் தெரிவித்தனர். (மேற்கூறிய நூல் பக்.79)
தமிழீழப் பகுதியில் தேர்தலை நடத்துவதற்கான அமைதியான சூழ்நிலை இல்லை என்றும், தேர்தலை நடத்துவதற்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டுத் தேர்தலை நடத்தும்படியும் தமிழீழத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் பொதுநல அமைப்புகளும் அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் இலங்கை-இந்திய அரசுகளுக்குக் கோரிக்கை வைத்தன.
தேர்தலில் கடைசி நேரத்தில் நியமன பத்திரங்களைத் தாக்கல் செய்து போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட கிழக்கு மாகாணத்தில் தேர்தல் ஒன்றை நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை என்றுதான் அறிக்கை வெளியிட்டது.
ஆளும் ஜெயவர்த்தனா கட்சியின் கிழக்கு மாகாண எம்.பி.க்கள் அனைவரும் ஒருமித்த குரலில் தேர்தலுக்கான சூழ்நிலை இல்லை என்று ஜெயவர்த்தனாவிடம் நேரடியாகக் கூறினர்.
""அம்பாறை மாவட்டத்தில் கலவரங்களினால் பாதிக்கப்பட்ட 24,000 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. அவர்களில் 11,000 பேருக்கு மட்டும் உடனடியாக நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.'' (வீரகேசரி-5.11.88)
ஒப்பந்தத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஏராளமான சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுவிட்டார்கள். திருகோணமலை புல்மோட்டையில் ஏராளமான தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட எல்லையில் உள்ள கெüளியாமடுவில் சிங்களக் குடியேற்றங்கள் பெருமளவில் நடந்துள்ளன. (வீரகேசரி-22.10.88). தினசரி பத்திரிகைகள் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டன.
அது மட்டுமல்ல-
""கிழக்கு இலங்கையில் உள்ள மக்களில் கலவரங்களினால் தம் இருப்பிடங்களைவிட்டு இடம்பெயர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இன்னும் தமது இடங்களுக்குச் செல்ல முடியாதவாறு இருக்கின்றனர்.
தமிழ் மக்களுக்குத் தர வேண்டிய அதிகாரங்கள் வரையறுக்கப்படாது, வடக்கு கிழக்கு மாகாண இணைப்பை இலங்கை அரசியல் சட்டத்தின் கீழ் நிரந்தரமாக்காது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் பொருள் இல்லையென்றும்,
நெருக்கடி நிலையை நீக்கி அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும்,
தேர்தலுக்கு முன் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி, விடுதலைப் புலிகளை அழைத்துப் பேசவேண்டும் என்றும்,''
தமிழ்மக்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
127: தேர்தல் குளறுபடிகள்!
வடக்கு-கிழக்கு மாகாணத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள் விடுத்த வேண்டுகோளை அடுத்து, வட மாகாணத்தில் யாரும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவில்லை. தேர்தல் பணிபுரிய, அதிகாரிகளாகப் பணியாற்றவும் யாரும் முன்வரவில்லை. கொழும்பிலிருந்து விமானத்தின் மூலம் சிங்கள அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினர், அமைதிப்படை பாதுகாப்புடன் கடைசி நிமிடத்தில் மனு செய்தனர் (சஞ்சீவி வார இதழ்-8.10.88).
ஈபிஆர்எல்எஃப் குழுவினர் மனுத் தாக்கல் செய்யும் வரை (வேட்பு மனுத் தாக்கல் செய்ய இறுதிநாள் 10.10.1988) காத்திருந்த அமைதிப்படை, வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்துவிடாதபடிக்கு, அந்தப் பகுதியில் திடீரென ஊரடங்கு அமல்படுத்தி, அரசு அலுவலகத்தருகே நெருங்கவிடாதபடியும் செய்தது பெரும் புதிராக இருந்தது.
யாழ் தவிர்த்து இதரப் பகுதிகளின் நிலை என்ன?
"கடந்த ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை வவுனியா பகுதியில் உத்தியோகப் பற்றற்ற ஊரடங்கு அமல் செய்யப்பட்டிருந்தது. நகரின் உட்பிரவேசிக்கவோ, உள்ளிருந்து வெளியேறவோ எவரும் அனுமதிக்கப்படவில்லை, கச்சேரி (கலெக்டர் அலுவலகம்) மற்றும் நகரின் சுற்றுப்புறங்கள் எங்கணும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன' என்று உதயன் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினர் வவுனியா, மன்னார் பகுதிகளில் போட்டியிட முன்வந்த போதிலும் காலதாமதமாக வந்ததாகக் கூறி அவர்களின் மனுக்கள் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டன. (வீரகேசரி-12.10.1988)
வவுனியாவில் வேட்புமனுவை ஏற்பதற்கென கொழும்பிலிருந்து வந்த அதிகாரிகளிடம், ராணுவ வாகனத்தில் வந்திருந்த ஈஎன்டிஎல்எஃப் நிர்வாகி, 7 பேருக்கான வேட்புமனுக்களைத் தான் ஒருவராகவே தாக்கல் செய்துவிட்டு, அதே ராணுவ வாகனத்தில் திரும்பிச் சென்றார். இதுவும் உதயன் பத்திரிகை செய்திதான்.
மனுத்தாக்கல் செய்யவந்தவர்கள் யாருமே புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படாதது மட்டுமல்ல, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. மனுத்தாக்கல் செய்த நபர் யார் என்றாவது காண்பியுங்கள் என்று பத்திரிகையாளர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நின்று கோரிக்கை வைத்தனர்; கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இவ்வாறு தேர்தல் நடைமுறைகளைப் பற்றிய உண்மைத் தகவல்களை அறியச் செய்த காரணத்திற்காக, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த உதயன் நாளிதழுக்குத் தேர்தல் முடியும் நாள் வரை தடை விதிக்கப்பட்டது.
இதே போன்று கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரி நாளிதழுக்கு யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பகுதிகளில் தேர்தல் முடியும்வரை விநியோகிக்கத் தடை விதிக்கப்பட்டது. அமைதிப்படையின் தணிக்கைக்கு உட்படாத பத்திரிகை வீரகேசரிதான் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. (வீரகேசரி கொழும்பில் அச்சாகி வெளிவரும் தினசரி ஆகும்).
கிழக்குப் பகுதிகளில், தேர்தல் நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை. வேட்பாளர்களுக்கான சுவரொட்டிகள் தமிழ்நாட்டில் அச்சடிக்கப்பட்டு, விமானம் மூலம் வடக்கு-கிழக்கு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. கொடிகள், தோரணங்களும் அப்படியே.
இலங்கைத் தேர்தல் சட்டப்படி இதுபோன்ற நடவடிக்கைகள் குற்றமாகும். வேட்பாளர் வண்டியில் மட்டுமே கொடிகட்ட அனுமதியுண்டு. இந்தியாவில் உள்ள நடைமுறையின்படி அமைதிப்படை கடைப்பிடித்ததால் ஏற்பட்ட தவறு இது. கொழும்புப் பத்திரிகைகள் அனைத்துமே கண்டித்தன.
ஈபிஆர்எல்எஃப் அணியினர் இந்திய ஹெலிகாப்டரில் பறந்து சென்று பிரசாரப் பணிகளை மேற்கொண்டதும் விமர்சனத்துக்குள்ளானது.
கிழக்குப் பகுதி மக்கள் வாக்களிப்பதற்காக 576 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், இதில் தேர்தல் பணியாற்ற 5,000 அலுவலர்கள் தேவைப்படுவர் என்றும், இவ்வளவு அலுவலர்களைக் கொழும்பிலிருந்து வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்குக் கொண்டுசெல்ல இயலாது என வாக்குச்சாவடி எண்ணிக்கைகளைத் திடீரெனக் குறைத்தனர். கொழும்பிலிருந்து வந்திருந்த 600 அலுவலர்களுக்கு ஏற்ப 324 வாக்குச் சாவடிகள் மட்டுமே இயங்கும் எனவும் அறிவிப்பு கூறியது.
252 வாக்குச் சாவடிகள் ரத்து செய்யப்பட்டதால் அந்த வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வேண்டிய வாக்காளர்கள் வேறு எந்த வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிப்பது எனத் தெரியாமல் குழம்பினர்.
மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மூலம் அடையாள அட்டை வாக்காளர்களுக்கு உரிய நேரத்தில் விநியோகிக்கப்பட்டிருக்கவேண்டும். மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் பணியாற்ற மறுத்துவிட்ட காரணத்தால் வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டைகள் வழங்கப்படவில்லை. அந்த வாக்காளர் அட்டைகள் தேர்தல் அதிகாரிகளால் ஈபிஆர்எல்எஃப் அணியினரிடமே வழங்கப்பட்டன. அதை அவர்கள் தேர்தல் தினத்தன்றே விநியோகித்தனர். தேர்தல் சட்டத்தை மீறி வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வந்தனர்.
தேர்தலுக்குச் சில தினங்கள் முன்பாகவே தேர்தல் நாள் வரை பாதுகாப்புக் காரணம் கூறி கிழக்கு மாகாணத்துக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. உள்ளூர் போக்குவரத்துச் சேவையும் சீராக இயங்கவில்லை. அசம்பாவித சூழ்நிலையால் இருப்பிடத்தைவிட்டு இடம்பெயர்ந்து வெளியூர்களில் சென்று இருந்தவர்கள் வாக்களிக்கச் செல்ல முடியவில்லை.
தேர்தல் நாளன்று, பெரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் வாகனங்கள் கூட இயங்கவில்லை. போக்குவரத்துச் சேவை முற்றாகச் சீர்குலைந்து இருந்தது. அம்பாறையில் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் வரையில் விற்கப்பட்டது. ஓடிய தனியார் வாகனங்களும் பயணக்கட்டணங்களைப் பல மடங்கு உயர்த்தின (வீரகேசரி-23.11.88).
பாதுகாப்புக் காரணம் கருதி திருகோணமலையில் சைக்கிள், மோட்டார் சைக்கிள் என்பவற்றில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வாக்களிக்க விரும்பியோர், போக்குவரத்து வசதியும் இல்லாமல் எங்கு சென்று வாக்களிப்பது என்றும் தெரியாமல், வாக்காளர் அட்டையும் இல்லாமல் பல மைல் தூரத்திற்கொன்றாக இருக்கும் வாக்குச்சாவடிகளில் எந்த வாக்குச் சாவடியில் தாம் வாக்களிக்கவேண்டும் என்பதைத் தேடியலைந்து கண்டுபிடித்து, அங்கு தமது வாக்கு இருப்பதை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்து, உறுதிசெய்துகொண்டுதான் வாக்களிக்க வேண்டியிருந்தது.
இதனால் காலை 7 மணிக்கே வாக்களிப்பு ஆரம்பமானபோதிலும், வாக்களிக்க விரும்பிய வாக்காளர்கள் தமக்குரிய வாக்களிப்பு நிலையங்களைத் தேடிக் கண்டுபிடித்து காலை 10 மணிக்கு மேல்தான் வாக்களிப்பு நிலையங்களைச் சென்று அடைந்தனர்.
இதனால் அநேகமாக எல்லா வாக்குச் சாவடிகளிலும் காலை 10 மணி வரை வாக்காளர்கள் ஒரு சிலர்தான் வாக்களித்தனர். அசம்பாவிதம் காரணமாக இடம்பெயர்ந்து இருந்த வாக்காளர்கள், தாம் தங்கியிருக்கும் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க ஜனாதிபதி தேர்தலில் அனுமதிப்பது போன்ற வசதிகள் எதுவும் இத் தேர்தலில் செய்யப்படவில்லை.
ஒப்புக்கு ஒரு கண்துடைப்புத் தேர்தல் நடத்தப்படுகிறது என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. அதற்கு முன் நடைபெறாத அளவுக்குக் குளறுபடியான ஒரு தேர்தலை அமைதிப் படையின் உதவியுடனும், மேற்பார்வையுடனும் ஜெயவர்த்தனா அரசு நடத்த முற்பட்டது.
128: வரலாறு காணாத தில்லுமுல்லு!
கிராமப்புறங்களில் 35 சதவீத வாக்குகள்தான் போடப்பட்டுள்ளன என்று செய்தி வெளியாயிற்று.
ஆனால், வரலாறு காணாத அளவுக்கு மக்கள் பெருவாரியாகச் சென்று வாக்களித்தனர் என்றும், மட்டக்களப்பில் 80 சதவீதம், திருகோணமலையில் 53 சதவீதம், அம்பாறையில் 55 சதவீதம் மக்கள் வாக்களித்தனர் என்றும் வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டது.
""தேர்தலில் பெருவாரியாக மக்கள் வாக்களித்ததன் மூலம் ஈழத்தமிழ் மக்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். விடுதலைப் புலிகளின் வன்முறைப் பாதையை முற்றாக நிராகரித்துவிட்டார்கள்'' என்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்திய அமைதிப்படை பிரசாரம் செய்ய ஆரம்பித்தது.
மட்டக்களப்பு மாவட்டத் தேர்தல் முடிவுகளின்படி 1,72,536 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 77 வாக்குச் சாவடிகள்தான் அமைக்கப்பட்டிருந்தன. இதன்படி ஒரு வாக்குச் சாவடியில் சராசரி 2,240 வாக்குகள் போடப்பட்டிருக்க வேண்டும்.
தேர்தல் வாக்களிப்பு காலை 7 மணியிலிருந்து மாலை 4 மணி வரை (ஒன்பது மணி நேரம்) நடைபெற்றது.
பெரும்பாலான வாக்காளர்கள் காலை 10 மணிக்கு மேல்தான் தாம் வாக்களிக்க வேண்டிய வாக்குச் சாவடி எது என்பதை அறிந்து அங்கு செல்ல முடிந்தது. 2,240 பேர் வாக்களிப்பதற்கு 7 மணியிலிருந்து இடைவிடாது வாக்களிப்பு நடைபெற்று, நிமிடத்துக்கு 4 வாக்காளர்களுக்கு மேல் வாக்களித்திருக்க வேண்டும். எந்த வகையிலும் இது சாத்தியமானதல்ல.
மட்டக்களப்பு மாவட்டத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு மூன்று கட்சிகளின் சின்னங்களையும் நாற்பத்திரண்டு வேட்பாளர்களின் பெயர்களையும் கொண்டிருந்தது. சுமார் ஒன்றரை அடி நீளமானது. அந்த வாக்குச்சீட்டில், வாக்காளர்கள், முதலில் தாம் விரும்பிய கட்சிக்கு, கட்சியின் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அதன் பின்னர் 42 பெயர்களைக் கொண்ட வேட்பாளர் பட்டியலிலிருந்து தாம் விரும்பும் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும்.
பிறகு, இரண்டாவதாக விரும்பும் மாற்று வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும். அதன்பின் ஒன்றரை அடி நீளமான அந்த வாக்குச்சீட்டைக் குறைந்த பட்சம் நான்காக மடித்து வாக்குப் பெட்டிக்குள் போடவேண்டும். இவற்றுக்கு மட்டும் குறைந்தபட்சம் 30 வினாடிகளாவது தேவைப்படும்.
அது தவிர, வாக்காளர்களுக்கு முன்கூட்டியே வாக்காளர் அட்டைகள் வழங்கப்படாததால் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று அங்குள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று சரிபார்த்துப் பின்னர் வாக்குச் சீட்டை வாங்கிக்கொண்டு, கை விரலுக்கு மை பூசிக்கொண்டு வாக்களிக்கத் தயாராகக் குறைந்தபட்சம் 45 வினாடிகளாவது தேவை.
வாக்காளர் அட்டை கிடைக்காத ஒருவர் தன்னுடைய வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று, தன் பெயரையும் வசிப்பிடத்தையும் கூறினால் வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டை வழங்குபவர் தாம் வைத்திருக்கும் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இருக்கிறதா என்று தேடிக் கண்டுபிடித்து உறுதி செய்ததன் பின்புதான் வாக்குச் சீட்டை வழங்குவார். சராசரி 2,000 பேர் கொண்ட வாக்காளர் பட்டியலிலிருந்து வாக்காளர் பெயரைக் கண்டுபிடிக்கப் பல நிமிடங்கள் ஆகும்.
""வாக்காளர்களுக்கு அடையாள அட்டை கையில் கிடைக்காததால் எந்த வாக்குச் சாவடியில் வாக்களிப்பது என்று தெரியாமல் ஒவ்வொரு வாக்குச் சாவடியாகச் சென்று பார்த்து, அங்குள்ள வாக்காளர் பட்டியலில் தமது பெயர் இருக்கிறதா என்று அவர்கள் பார்க்க வேண்டியிருந்தது'' என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர் ரீட்டா செபஸ்தியான் தெரிவித்துள்ளார். (20.11.88-இந்தியன் எக்ஸ்பிரஸ்)
எப்படிப் பார்த்தாலும், இயந்திரகதியில் இயங்கினாலும் கூட ஆக, குறைந்தபட்சம் ஒரு வாக்கைப் போடுவதற்கு ஒரு நிமிடத்துக்கும் அதிகமாகத் தேவை.
அப்படி இயந்திரகதியில் வாக்களித்தாலும் கூட மட்டக்களப்பில் உள்ள 77 வாக்குச் சாவடிகளிலும் அதிகபட்சம் 41,580 வாக்குகள்தான் போடப்பட்டிருக்க முடியும் என்பது விடுதலைப் புலிகளின் வாதமாக இருந்தது.
விடுதலைப் புலிகளின் வெளியீட்டில் மேலும் கூறுவதாவது: கிழக்கு மாகாணத் தேர்தல் முடிவுகள் தரும் புள்ளி விவரங்களின்படி 15 வினாடிக்கு ஒரு வாக்கு போடப்பட்டிருக்க வேண்டும். ஒரு வாக்குச் சாவடிக்கு 2,240 வாக்காளர் என்பது சராசரிதான். வாக்குச் சாவடிகள் அனைத்திலும் வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரே அளவினதாக இல்லை. சில வாக்குச் சாவடிகளில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளும் சில வாக்குச் சாவடிகளில் 3,000-க்கும் அதிகமான வாக்குகளும் இருந்திருக்கின்றன.
எனவே, வாக்காளர்கள் எண்ணிக்கை சராசரிக்கு அதிகமாகவுள்ள வாக்குச் சாவடிகளில், வாக்களிப்பு வேகம் 1 வாக்குக்கு 10 வினாடிகளாவது இருந்திருக்க வேண்டும்.
கை விரலுக்கு மை பூசாமல், வாக்காளர் பட்டியலைப் பார்த்து வாக்குச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளாமல் வாக்குச் சீட்டுகளை டேபிளில் மொத்தமாக அடுக்கி வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்து ஒரு ஆள் வேகம் வேகமாக வாக்குச் சீட்டை அடையாளமிட்டு மடித்துப் பெட்டியில் போடுவதானாலும் 10 வினாடிக்கு மேல் தேவை.
தேர்தலைப் பார்வையிட இந்திய அரசு அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டு ஏற்கெனவே "செட்டப்' செய்யப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில் வாக்கு போடப்பட்ட விகிதத்தையும் வேகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தாலும் அங்குகூட நிமிடத்துக்கு 2 வாக்குகள்கூட போடப்படவில்லை.
இந்திய அரசு அதிகாரிகளினால் வாக்களிப்பைப் பார்வையிட கொழும்பிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் ரீட்டா செபஸ்தியான் கூற்றுப்படி, திருகோணமலை, ஜமாலியா முஸ்லிம் பாடசாலை வாக்களிப்பு நிலையத்தில் காலை 7 மணி முதல் 11.20 வரை 500 வாக்குகள்தான் போடப்பட்டிருந்தன. அதாவது, ஒரு நிமிடத்துக்கு 2 (260 நிமிடத்துக்கு 500) வாக்குகள்கூடப் போடப்படவில்லை. ஒரு வாக்களிக்க (260/500-.52 நிமிடம்) 30.3 வினாடிகள் எடுத்திருக்கிறது.
மட்டக்களப்பில் கொண்டாவில் ரோமன் கத்தோலிக்க சர்ச்சில் மாலை 3.10 மணி வரை 1,100 வாக்குகள் போடப்பட்டிருந்தன. அதாவது 490 நிமிடங்களில் 1,100 வாக்குகள் போடப்பட்டிருந்தன. ஒரு வாக்களிக்க (490/1, 100-.45 நிமிடங்கள்) 27 வினாடிகள் ஆகியிருக்கின்றது.
இந்தியத் தூதரக அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்ட வீரகேசரி பத்திரிகை நிருபர் எஸ்.என்.பிள்ளை எழுதியிருப்பதன்படி, மட்டக்களப்பு உப்போடை வாக்குச் சாவடியில் மாலை 2.30 மணி வரை 860 வாக்குகள் போடப்பட்டிருந்தன. அதாவது 450 நிமிடங்களில் 860 வாக்குகள் போடப்பட்டிருந்தன. ஒரு வாக்களிக்க (450/860-.52 நிமிடங்கள்) 31.2 வினாடிகள் ஆகியிருக்கின்றது.
மட்டக்களப்பு, புத்தூர், விக்னேஸ்வரா வித்யாலய வாக்களிப்பு நிலையத்தில் பகல் 12 மணி வரை 205 வாக்குகள் மட்டும்தான் போடப்பட்டிருந்தன. ஒரு வாக்களிக்க (300/205-1.46 நிமிடங்கள்) 87 வினாடிகள் எடுத்திருக்கின்றது.
மக்கள் ஆர்வமாக பெருவாரியாக வந்து வாக்களித்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்காக இந்திய அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று காட்டப்பட்ட வாக்குச் சாவடிகளிலேயே ஒரு வாக்களிக்க 87 வினாடி, 31 வினாடி, 30 வினாடி என ஆகியிருக்கிறது என்றுதான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
10 முதல் 15 வினாடிக்குள் ஒவ்வொரு வாக்கும் இடைவிடாது போடப்பட்டிருந்தால்தான் தேர்தல் முடிவுகளில் அறிவிக்கப்பட்ட 1,72,536 வாக்குகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் போடப்பட்டிருக்க முடியும். எந்த விதத்திலும் அது சாத்தியமில்லை.
மேற்படி தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய மக்கள் அளித்துள்ள வாக்குகள் பற்றிய முடிவுகளின்படி-
மட்டக்களப்பு மாவட்டத்தில்....
வெற்றி பெற்ற ஈபிஆர்எல்எஃப்-க்கு கிடைத்த மொத்த வாக்குகள் 2,78,179 (99.7%)
வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் 639 (.22%)
73.58 சதவீதம் வாக்குகளைப் பெற்ற ஈபிஆர்எல்எஃப் கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்குக் கிடைத்த வாக்குகள் வீதம் -99.7%
24.4 சதவீதம் வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பெற்ற மொத்த வாக்குகளின் வீதம் -22%.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் 73.58 சதவீதம் வாக்குகளைப் பெற்ற ஈபிஆர்எல்எஃப்-க்கு வேட்பாளர்களுக்காக அளிக்கப்பட்ட வாக்குகளில் 99.7 சதவீதம் கிடைத்திருக்கும். அதே நேரம், 24.4 சதவீத வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக (0.22) கால் சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன.
ஈபிஆர்எல்எஃப் வேட்பாளர்களின் வாக்குகள் முழுக்க முழுக்க போடப்பட்டிருக்கிறது. அதே வேளை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் வாக்குகள் போடப்படவில்லை.
129: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடு!
நடந்து முடிந்த தேர்தல் குறித்து, விடுதலைப் புலிகள் இயக்கம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
""இத் தேர்தல் பற்றி இலங்கையின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவருமான கே.டபிள்யு. தேவநாயகம் விடுத்திருந்த அறிக்கையில்,
* கிழக்கு மாகாணத்தில் கொலை, பயமுறுத்தல் மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் மேலோங்கி இருந்தபடியால் தேர்தல் பிரசாரத்தில் எம்மால் ஈடுபட முடியவில்லை. இத்தகையதொரு சந்தர்ப்பத்தில் நடந்து முடிந்துள்ள மாகாண சபைத் தேர்தல் முடிவுகளை வைத்து ஜனநாயகம் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது கவலை தரக்கூடியதாக இருக்கிறது.
* கிழக்கின் இன்றைய சூழ்நிலை குறித்து அரசு மேலிடத்தின் கவனத்திற்கு விரிவாக எடுத்துரைப்போம். வேட்பு மனு பெறப்பட்ட முறை பற்றியும், அரசாங்க அதிபர் (மாவட்ட கலெக்டர்) அம் மனுக்களைப் பெறக்கூடிய நிலையில் இல்லை என்பது பற்றியும் மேலிடத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.
* ஆனால், இத்தனைக்கும் மத்தியில் தேர்தல் நடத்தப்பட்டது. இத் தேர்தல் முடிவுகளை வைத்தும் கிழக்கின் அரசியல் மற்றும் பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்து கொள்ளாமலும் மக்கள் ஜனநாயகத்தை விரும்புகின்றனர் என்று கருத்து வெளியிடுவது பொருத்தமானது அல்ல'' என்று கூறியிருக்கிறார்.
அதேநேரம், கிழக்கு மாகாணத்தில் தேர்தலில் போட்டியிட்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப். போன்றே 17 இடங்களைக் கைப்பற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஜனாப் எம்.எச்.எம். அஷ்ரப் தேர்தல் பற்றி விடுத்த அறிக்கையில் ""முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை இந்திய-இலங்கை ஒப்பந்தம் உள்ளடக்கவில்லை என்பதை நிரூபிக்க வேண்டுமானால் கிழக்கு மாகாணத்திலிருந்து ஐக்கிய தேசியக்கட்சியை (ஜெயவர்த்தனா கட்சி) தோற்கடிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள மற்றுமொரு அறிக்கையில்,
""கிழக்கில் குறிப்பிட்ட அமைப்பொன்று தனித்துவமாகப் போட்டியின்றித் தெரிவாகும் நிலையைத் தவிர்க்கவே நாம் தேர்தலில் பங்கு கொள்வதென்று தீர்மானித்தோம். இதன் மூலம் புலிகளின் குரலும் ஒலிக்கும். அதேநேரம், முஸ்லிம்களின் உரிமைகளும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்'' என்றும் கூறப்பட்டுள்ளது. (18.10.88 வீரகேசரி).
அதுமட்டுமல்ல,
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் முஸ்லிம்களின் அபிலாஷைகளைச் சேர்த்துக் கொள்ளாமல் அவர்களைக் காட்டிக் கொடுத்து நிரந்தர அடிமைகளாக்கிய அரசின் திட்டங்களை முறியடிக்கக் கூடிய எமக்குள்ள ஒரே வழி தேர்தலில் போட்டியிடுவதாகும். இந்த நிலைமைகளிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தைக் காப்பாற்றவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
இந்தியாவின் சொல்லுக்கு தலையாட்டக் கூடிய ஓர் ஆட்சியில் முஸ்லிம்களின் குரல் ஒலித்திருக்க முடியாது. தமிழர் சமூகத்தின் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் விடுதலைப் புலிகளின் நியாயங்களும் கொச்சைப் படுத்தப்பட்டிருக்கும். நாம் போட்டியிடாவிட்டால் வடக்கு கிழக்கு மாகாண சபை ஓரங்க நாடகமாகியிருக்கும்'' என்றும் இன்னொரு அறிக்கையை வெளியிட்டதன் மூலமாகத் தனது நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்திருக்கிறது. (25.10.88 உதயன் நாளிதழ்).
மேற்கண்ட அறிக்கைகளிலிருந்து,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் முஸ்லிம்கள் மீது திணிக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தை அது கடுமையாக எதிர்க்கிறது என்றும், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் முஸ்லிம்களை அடிமையாக்கும் இந்தத் திட்டங்களை முறியடிக்கவே வடக்கு-கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிட்டது என்பதும் தெளிவாகிறது.
எனவே, கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிட்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப்.க்கு நிகராக 17 இடங்களைக் கைப்பற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸýக்கு கிடைத்த அத்தனை வாக்குகளும் இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிரானவை என்பதும், புலிகளின் நடவடிக்கைகளை மதிப்பவை, வரவேற்பவை என்பதும் தெளிவாகின்றது'' என விடுதலைப் புலிகள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில், வடக்கு மாகாணத்தில் புலிகளின் வேண்டுகோளை ஏற்று எவரும் தேர்தலில் போட்டியிட முன் வரவில்லை. அங்கு தேர்தலை நடத்தவும் இந்திய அரசுக்கு துணிவு இருக்கவில்லை. எனவேதான், வடக்கு மாகாணத்தில் தாங்கள் தயார் செய்து வைத்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினரைத் தவிர வேறு யாரையும் தேர்தலுக்கு நியமனப் பத்திரம் தாக்கல் செய்யாதவாறு இந்திய அமைதிப் படை பார்த்துக்கொண்டது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினரிடம் மட்டும் நியமனப் பத்திரங்களை ஏற்றுக் கொண்டு தேர்தல் நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்ய குறிப்பிட்ட கால எல்லை வரை நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்யும் தேர்தல் அலுவலகங்கள் உள்ள பகுதிகளில் உத்தியோகபூர்வமற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தேர்தல் அலுவலகத்துக்கு அருகே எவரையும் செல்லவும் இந்தியப் படை அனுமதிக்கவில்லை.
தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்ளும் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினர், ஒட்டுமொத்தமாக கிழக்கு மாகாணத்தில் 44 வேட்பாளர்களை நிறுத்தினர். அங்கு 34 சதவீதம் முஸ்லிம்கள் இருக்கையில், அவர்களுக்கு 4.5 சதவீத இடத்தைதான் ஒதுக்கினர்.
அதாவது, 24 சதவீத மக்களைக்கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வேட்பாளர்களை நிறுத்திய ஈபிஆர்எல்எஃப் அமைப்பு ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளரையே நிறுத்தினர். 29 சதவீத மக்களைக் கொண்ட முஸ்லிம்களுக்குத் திருகோணமலையில் 13 வேட்பாளர்கள் ஈபிஆர்எல்எஃப் சார்பில் நிறுத்தப்பட்டனர். அங்கு முஸ்லிம் வேட்பாளரே நிறுத்தப்படவில்லை. அதேசமயம் 42 சதவீதமுள்ள முஸ்லிம்கள் உள்ள அம்பாறையில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினர் தேர்தலுக்கு முன்னர் வெளியிட்ட பிரசுரமொன்றில் ""வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியை ஆதரிப்பதன் மூலம் விகிதாசார முறையிலான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்'' என்று கூறியிருக்கின்றனர்.
இவர்களது வேண்டுகோளை ஏற்று முஸ்லிம் மக்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப்.இனருக்கே வாக்களித்திருந்தால் இரண்டே இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகள்தான் மாகாண சபைப் பிரதிநிதிகளாகி இருப்பர். ஆனால் தற்போது அவர்களுக்குக் கிடைத்துள்ள 17 இடங்கள் கிடைத்திருக்காது.
கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றம் தடுக்கப்படவேண்டும் என்பது தமிழர்களின் உயிர்மூச்சான கொள்கையாகும். அதற்கு மாறாக 1976-ல் கிழக்கு மாகாணத்தில் சிங்களர்களுக்கென (குடியேற்றவாசிகளுக்கு) ஒரு தொகுதியை உருவாக்கத் தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை வைத்தது.
இன்று, தேர்தல் வெற்றி வாய்ப்பையும், பதவியையும் பெற்ற ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினர் சிங்கள வேட்பாளர்களை தமது கட்சியில் வேட்பாளராக நிறுத்தியதுடன் சிங்களவர்க்கு, தமிழ்ப் பகுதியில் அமைச்சர் பதவியையும் கொடுத்து மக்களிடையே பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது'' என்றும் கூறப்பட்டுள்ளது.
இங்கு குறிப்பிடவேண்டிய முக்கியமான முரண்பாடு என்னவென்றால், வடக்கு-கிழக்குப் பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கு முன்பாக, இலங்கையின் இதரப் பகுதிகளில் 1988 ஏப்ரலில் தொடங்கி ஜூன் 28-க்குள் முடிவு பெற்றது என்பதாகும். ஒரு கட்டாயத்தின் பேரிலேயே வடக்கு-கிழக்கு மாகாணத் தேர்தல் என்பது நடைபெற்றது என்பதை அறிவது இங்கு அவசியமாகும்.
தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்குபெறும் என்றே இந்திய அமைதிப்படை எதிர்பார்த்தது.
ஆனால் அவ்விருப்பம் வெற்றிபெறாத போதிலும், அமைதிப்படையினரின் வற்புறுத்தலின் பேரில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் விடுத்த அறிக்கையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகத் தமிழ் பேசுகிற மக்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளைத் திடப்படுத்துவதற்கு இன்றியமையாத ஒரு வழியாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஜனநாயகச் செயல்முறையைத் தூண்டுவற்கான முயற்சிகளுக்குத் தமது ஆதரவை அளிக்கும்படி மக்களை வேண்டியது. (ஆதாரம்: இலங்கை தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும் -கலாநிதி ஆ.சு.மனோகரன், தமிழ் டைம்ஸ் 15 நவம்பர் 1988- மேற்கோள் காட்டி)
130: இடைக்கால அரசு!
ஈழத்தில் புலிகளுக்கும் இந்திய அமை திப் படையினருக்கும் உக்கிரமாகப் போர் நடந்து கொண்டிருந்த சூழ்நி லையில், சென்னையில் இருந்த கிட்டுவி டம் இந்தியாவின் ராஜதந்திரிகள் சமாதா னப் பேச்சு நடத்திக் கொண்டிருந்தனர் என்பதும் உண்மையே. இவ்வகையான ஒரு பேச்சும், திட்டமும் கிட்டுவிடம் சொல்லப்பட்டு, அந்தத் தகவலை எடுத் துச் சொல்ல, கிட்டுவிடம் இருந்த போராளி ஜானி அனுமதிக்கப்பட்டார்
பிரபாகரன் இருக்குமிடத்தை அறியும் ஒரு முயற்சியாக இந்த ஏற்பாடு அமைந்து விடுமோ என்ற சந்தேகத்தில், பலாலியில் இறங்கி, யாழ்ப்பாணம் சென்று, தாம தித்து, பின்னர் அமைதிப்படை மற்றும் உளவு சொல்லும் இதர அமைப்புகளின் ஆட்களுக்குத் தெரியாமல், வன்னிப் பகு திக் காட்டில் இருந்த பிரபாகரனைச் சந் திக்க, ஜானி சைக்கிளில் செல்லும்போது சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் கிட் டுவின் சார்பில் என்ன தகவல் ஜானியால் எடுத்துச் செல்லப்பட்டது என்பது தெரி யாமலே போயிற்று
ஆனால் நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சென்னையில் இயங்கி வந்த கிட்டுவுக்கு மேலும் நெருக் கடிகள் கொடுக்கப்பட்டு, இறுதியில் புலி களது அலுவலக இயக்கம் முடக்கப்பட் டது. இவ்வாறு அவர்களின் பத்துக்கு மேற்பட்ட அலுவலகங்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. கிட்டுவைச் சுற்றியி ருந்த நூற்றுக்கணக்கான காயம்பட்ட, காயம்படாத புலிகளையும், கிட்டுவையும் போலீஸôர் வளைத்துக் கைது செய்த னர்
இந்நிலையில், புலிகளது ஆதரவு இயக் கங்கள் ஆளுநர் ஆட்சியின் ஆலோசகர்க ளுக்கும், ராஜீவ் காந்திக்கும் எதிராகக் கண்டனக் குரல் எழுப்பினர். கிட்டு தன் னுடையதும், தமது இயக்கத்தைச் சார்ந்த வர்களதுமான போராளிகளுக்கு அளிக் கப்பட்ட நெருக்குதல்களைக் கண்டித்து, அவர்களை விடுவிக்கும் வரை உண்ணா விரதம் மேற்கொள்ளப் போவதாக (10 அக்டோபர் 1988) அறிவித்தார்
உண்ணாவிரதம் இருந்ததன் பேரில் திலீபன் மரணம் பற்றிய மிகப் பெரிய விமர்சனத்தை அமைதிப் படை ஏற்க வேண்டியிருந்தது. எனவே, சென்னை யில் கிட்டுவின் உண்ணாவிரதம், எந்த வகையான விளைவுகளை ஏற்படுத் துமோ என்ற எண்ணத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர் சென்னையில் இருந்து இயங்கத் தடை விதிக்கப்பட்டது. எனவே, அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். பின்னாளில் கிட்டு பிரபாகரனுடன் சேர்ந்து கொண்டார்
தேர்தலைத் தொடர்ந்து, ஈ.பி.ஆர்
எல்.எஃப்.பின் மத்தியக் குழு உறுப் பினர் வரதராஜ பெருமாள் முதலமைச்ச ராகத் தேர்வு செய்யப்பட்டார். இவரின் தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜபா ளையத்தைச் சேர்ந்தவர். தொழிலுக்காக யாழ்ப்பாணத்தில் குடியேறியவர்
ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஆட்சிப் பொறுப் புக்கு வந்ததும் நிர்வாகத் தலைநகரான யாழ்ப்பாணத்தைத் தவிர்த்து, திருகோண மலையைத் தேர்ந்தெடுத்தது. இதனால் இருவிதமான வெறுப்புகளை அவர் சந் திக்க நேர்ந்தது. முதலாவது எந்த ஈழத்தை அவர்கள் முதன்மைப்படுத்தினார்களோ, அந்த ஈழப்பகுதியின் அடர்த்தியான மக் கள் வசிக்கிற யாழ்ப்பாணத்தை ஒதுக்கிய தால், அந்தப் பகுதி மக்களின் வெறுப் புக்கு ஆளானார்கள்
அதேசமயம் இலங்கை அதிபர் ஜெய வர்த்தனாவும் யாழ்ப்பாணத்தைத் தவிர்த்து திருகோணமலையை, வடக்கு- கிழக்கு மாகாண அரசின் நிர்வாக நகரமா வதைக் கடுமையாக எதிர்த்தார். இந்த எதிர்ப்புக்குக் கீழ்க்காணும் அம்சங்களும் காரணமாக அமைந்தன
யாழ்ப்பாணத்தைவிட, திருகோணம லையை சிங்கள அரசுகள் எப்போதும் முக்கியக் கேந்திரமாக நினைத்தன. உல கின், ஏன் இந்தியாவின் இலக்கு கூடத் திருகோணமலையாகத்தான் இருந்தது
இயற்கைத் துறைமுக வசதி, எண்ணெய்க் கிடங்குகள் அதிகம் கொண்ட, வெளி நாட்டு முதலீடுகளையும், ஒப்பந்தங்களை யும் அதிகம் ஈர்த்த நகரம். அதுமட்டு மன்றி, அமெரிக்காவின் ஒலிபரப்புத்தள வசதிகள் கொண்டதும் ஆகும்
எனவேதான் தமிழர் தலைவர்களி டையே போடப்படுகிற ஒப்பந்தங்கள் எதுவாக இருந்தாலும், வடக்கு-கிழக்கு மாகாணம் என்று குறிப்பிடப்படும் போது, திருகோணமலை நகரின் துறைமு கப் பகுதியும் அதன் நிர்வாகமும் மத்திய ஆட்சியின் அதாவது சிங்களரின் தனிப் பார்வையில் அமையும்படி பார்த்துக் கொள்ளப்படும். இந்நிலையில் சிங்களர்க ளும் இத்தலைநகர் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்
எனவே, அதிபர் ஜெயவர்த்தனா ஆரம் பத்திலேயே இந்தியாவாலும், புதிய முதல மைச்சரின் நிர்வாகத் தலைநகர அறிவிப் பாலும் எரிச்சலடைந்தார்கள். அதிகாரங் களைக் கையளிக்கவும் மறுத்தார். இதன் காரணமாக, வரதராஜ பெருமாள் இவை ஒவ்வொன்றுக்குமாக திருகோணமலைக் கும் கொழும்புக்குமாக விமானத்தில் பறந்த வண்ணம் இருந்தார் என்ற விமரிச னமும் அப்போது எழுந்தது
ஜெயவர்த்தனா இருந்தவரை, இடைக் கால நிர்வாகக் கவுன்சில் என்று அழைக் கப்பட்ட, வடக்கு-கிழக்கு மாகாண அர சுக்கு எவ்வித அதிகாரப் பொறுப்பையும் மனமுவந்து அளிக்கவில்லை. இதன் கார ணமாக வடக்கு-கிழக்கு மாகாணங்களின் தாற்காலிக அரசின் நிர்வாகங்களுக்குத் தேவைப்படும் நிதியாதாரங்களுக்கு, இந் திய அரசையே அவ்வரசு நம்பியிருந்தது
யாழ்ப்பாணத்தில் அரசு அலுவலகத் தில் அமர்ந்து பணியாற்ற, இடைக்கால அரசை நடத்தியவர்களுக்கு ஓர் இடம் கூட வழங்கப்படவில்லை. அவர்கள் யாழ் மணிக்கூண்டுக்கு அருகே, அசோகா ஓட்டலின் எதிரே இருந்த கட்டடத்தில் இருந்து தங்களது அரசப் பணிகளை ஆற்றி வந்தனர்
இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக வந்த ஜெனரல் வி.என். சர்மா, யாழ்ப் பாணத்தில் அமைதிப் படைப் பணிகளை ஆய்வு செய்ய வந்தார். பலாலி ராணுவ முகாமில் தளபதிகளிடம் அவர் உரையா டுகையில், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க என மக்கள் தொண்டர் படை என்னும் அமைப்பை உருவாக்குவதன் அவசி யத்தை வெளியிட்டார். இந்த அமைப்பு அமைதிப் படைக்கு உதவியாக இருக்கும்சுமையையும் குறைக்கும் என்றார்
கூடவே தமிழ்ப் பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மையையும் போக்கும் வகையிலும் இது அமையும் என்று கருத் துத் தெரிவித்தார். இவரது கருத்து தில்லி யிலும் ஏற்கப்பட்டது
இடைக்கால அரசு சந்திக்கும் பல்வேறு இன்னல்களுக்கிடையில், இந்த அமைப் புக்கு இலங்கை அரசின் உத்தரவாதம் பெறுவது அவசியம் என்று இந்தியத் தூதுவரிடம் குறிப்பிடப்பட்டதும், இந்த மக்கள் தொண்டர் படை பற்றிய விவரம், டிசம்பர் 1988-இல் இலங்கை அரசிதழில் வெளியிடப்பட்டது
ஆனால் சட்டவடிவான செயல்பாட் டுக்கு இலங்கையின் காவல் துறை இயக்கு நர் அனுமதி அளிக்கவில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இந்த அமைப்பு வடக்கு-கிழக்கு மாகாணக் கவுன்சிலின் பொறுப்பில் இருக்கும், அவ் வளவுதான். ஆனால் முடிவுகள் பராம ரிப்பு ஆகியன அமைதிப் படையைச் சார்ந்ததாக இருக்கும். எனவே, செலவும் அமைதிப் படையைச் சேர்ந்ததே. இந்த நிதிச்சுமைக்கு பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஐந்து மாதங்கள் கழித் துத்தான் இதற்காகும் செலவில் ஒரு பகு தியை இலங்கை அரசு ஏற்றது
எனவே, இந்த அமைப்புக்கு ஆள் சேர்ப்பது என்பது கேள்விக்குறியானது
வடக்கில் எந்த இளைஞரும் இதில் சேர ஆர்வம் காட்டவில்லை. கிழக்கில் ஆள் சேர்க்கும் வேலைகளை ஆளும் கூட்ட ணியே செய்தது. கட்டாயமாக மாணவர் களையும், இளைஞர்களையும் இதில் சேர்த்ததாக பெரிய அளவில் குற்றச் சாட்டு எழுந்தது
ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினரின் செயல்கள் வடக்குப் பகுதியில் கடுமை யான விமரிசனத்துக்கு உள்ளாயிற்று
"அவர்களின் அதிகாரம் நிகழ்ந்த காலத் தில் நடந்த வன்முறைகள், அராஜகங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு சிலரின் தவறான போக்கே காரணம். பத்மநாபா என்ற ஒரு வர் மனிதநேயமுள்ளவராக இருந்தால் மட்டும் எல்லாம் நல்லபடியாக நடந்துவி டும் என எதிர்பார்க்க முடியாது. தவறுக ளுக்கு இயக்கத்தின் தலைமை பகிரங்க மாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற என் போன்றவர்களின் கோரிக்கை உதாசீனம் செய்யப்பட்டது' என்று தனது நூலில் (ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் பக். 473) அந்த இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான சி.புஷ்பராஜா தெரிவித்துள்ளார். (இவ்வாறெல்லாம் அவர் விமர்சித்த காரணத்தால், அந்த அமைப்பிலிருந்தே நீக்கப்பட்டார் என்ப தும் குறிப்பிடத்தக்கது.) இதைவிடவும் அதிகமாக "முறிந்த பனை' நூலிலும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்.பின் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்கப்பட் டுள்ளன. "இந்தியாவின் கைப்பொம்மை யாக இவ்வியக்கம் இயங்குவதைத் தவிர வேறு ஒரு வழியிலும் முன்னே போக முடியாத நிலைக்கே இவர்களை இட்டுச் சென்றது' என்று குறிப்பிடப்பட்டுள் ளது
இதுதவிர லெப். ஜெனரல் சர்தேஷ் பாண்டேவும் தனது "அசைன்மெண்ட் ஜாஃப்னா' நூலில் இந்திய அமைதிப் படைக்கு இழுக்கு நேர்ந்ததற்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப்.பின் சமூக விரோதச் செயல்பாடே காரணம் என்று கூறியுள்ள அவர், தனது பதிவுகளில் கடும் சொற்க ளைப் பிரயோகித்துள்ளார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.