Saturday 30 May 2020

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (103-110)


103: இந்தியாவை நேசிக்கிறேன்!
ஒப்பந்த நகல் எரிப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அன்று மாலையே விடுதலை செய்யப்பட்டனர். பழ.நெடுமாறன் சென்னை வந்ததும் அவரிடமும், கி.வீரமணியிடமும், விடுதலைப் புலிகள் ஆலோசகர் ஏ.எஸ்.பாலசிங்கம், நடேசன், பேபி சுப்ரமணியம் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.

அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அனுமதித்ததன் பேரில், ஆகஸ்ட் 4-இல் அவரைச் சந்தித்தனர். எம்.ஜி.ஆரின் உடல்நிலையைப் பார்த்ததும் பதறிப் போனார்கள். அவர் என்ன விஷயம் என்று கேட்டதும், இருவரும் உடன்பாடு பற்றிய தங்களதும், விடுதலைப் புலிகளினதுமான சந்தேகங்களை விவரித்தனர்.
பிரதமர் ராஜீவ் கூறியதைப் போன்று சொந்தப் பாதுகாப்பு கருதி விடுதலைப் புலிகள் இவ்வொப்பந்தத்தைச் சந்தேகப்படவில்லை என்றும் விளக்கினார்கள். ஆனால் எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் ஜெயவர்த்தனா மதித்து நடைமுறைப்படுத்த மாட்டார் என்பதையும் அவர்கள் கூறினர்.
இதுகுறித்து பழ.நெடுமாறன் கூறியதாவது:
""திரைப்படத் துறையில் நீங்கள் கொடிகட்டிப் பறந்தீர்கள். உங்களுக்குப் பின்னும் அந்தத் துறையில் பலர் வரலாம். அரசியல் துறையிலும் தமிழகத்திற்கு பல முதலமைச்சர்கள் உங்களுக்கு முன்னும், உங்களுக்குப் பின்னும் வரலாம். ஆனால் அந்த முதலமைச்சர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. உங்கள் காலத்தில் ஈழத் தமிழர்கள் விடுதலை பெறப் போராடினார்கள். நீங்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து, தமிழீழம் அமையக் காரணமாக இருந்தீர்கள் என்பதுதான் தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத இடத்தை உங்களுக்குப் பெற்றுத் தரும். இதைச் சொல்லவே வந்தேன்'' என்று கூறினேன்.
""நான் பேசப் பேச அவர் உணர்ச்சிவசப்பட்டார். ஏதோ பதில் கூற முயன்றார். அவரால் முடியவில்லை. எனது கைகளை எடுத்து தனது நெஞ்சில் வைத்துக் கொண்டு, தன் கைகளால் நெஞ்சில் தட்டிக் காட்டினார். இவ்வாறு அவர் செய்யும்போது அவர் கண்களில் இருந்து நீர் கசிந்தது. எனக்கும் வீரமணிக்கும் கூடக் கண்கள் பனித்தன.
அவர் என்ன சொல்ல விரும்பினார் என்பது முழுமையாக விளங்காவிட்டாலும், ஓரளவு புரிந்தது.
பின்னர் சிற்றுண்டி வரவழைத்தார். எங்களுடன் அவரும் அமர்ந்து உண்டார். நிலைமைகளைத் தெளிவாக உணர்ந்திருக்கிறார் என்ற நிம்மதியில் நாங்கள் திரும்பினோம். இந்த சம்பவத்தை எனது "தமிழீழம் சிவக்கிறது' என்ற நூலிலும் பதிவு செய்திருக்கிறேன்'' என்றார் நெடுமாறன்(நேர்காணல்: 29.8.1987).
ஆகஸ்டு அதே 4-ஆம் தேதியன்று, ராஜீவ் காந்தி அழைப்பினை ஏற்று, சுதுமலை அம்மன் கோயில் திடலில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் முன்னதாக வெளியிட்ட அறிக்கையில்,
""யாழ்ப்பாணக் குடா நாட்டில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் பிரவேசித்து இந்தியப் பிரதமரின் அழைப்பின் மீதே என்னை ஏற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நான் நாட்டைக் கடந்து மட்டும் செல்லவில்லை. தம் மண்ணிற்காகத் தமது உயிரை அர்ப்பணித்த 615 தியாகிகளின் உடல்களையும் கடந்தே செல்வதாக நினைக்கிறேன்...
என் மனச்சாட்சியை நான் விற்க விரும்பவில்லை. பெங்களூர்மகாநாட்டில் கலந்துகொண்டபோது நான் யாழ் மாவட்ட முதலமைச்சராக ஆகியிருக்கலாம். நான் தனி மனிதன். போராட்டத்தில் எத்தனையோ தியாகிகளை இழந்துவிட்டோம். நான் இறப்பது சாதாரண விஷயம். சயனைட்டை நான் கட்டியபின்பே மற்றவர்களும் கட்டியுள்ளனர். மனச்சாட்சிக்கு விரோதமாக நான் ஒருபோதும் நடக்கப் போவதில்லை.
இந்திய அரசு எனக்கு மட்டும் அழைப்பு விடுத்திருப்பது மக்களின் பிரதிநிதியாக என்னைக் கருத்தில் கொண்டபடியால்தான். நாம் மக்களுக்குள்ளேயே இணைந்து போராட்டம் நடத்தியதனால்தான் போராட்டம் இந்த நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ளது. மக்கள் வேறு நான் வேறு அல்ல. முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டவன் நான் அல்லன். நிம்மதியான வாழ்வு மக்களுக்கு அமையவேண்டும் என்பதே என் ஆசை.
இன்று கிடைத்த கெüரவம் தமிழ் மக்களுக்குக் கிடைத்த கெüரவமே தவிர, சாதாரண எனக்குக் (பிரபாகரனுக்கு) கிடைத்ததல்ல. இதுவரையில் நான் இந்தியாவினால் இப்படிக் கெüரவமாக அழைக்கப்படவில்லை. இக்கெüரவத்தை தமிழீழ மக்களுக்கும், மற்றைய தியாகிகளுக்கும், இன்னும் களத்தில் உள்ள சக போராளிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன். தீர்வு சரியில்லை என்றால் நாம் மக்களை எச்சந்தர்ப்பங்களிலும் கைவிடப்போவதில்லை. எமது போராட்டம் தொடரும்'' என்று பிரபாகரன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தில்லியில் நடைபெற்றது என்னவென்பதை ஈழ மக்களுக்குத் தெரிவிப்பது வரலாற்றுக் கடமை என்று பிரபாகரன் உணர்ந்தார். தற்போதுள்ள நிலையை விளக்க கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து, அதில் தெரிவிக்க அவர் விரும்பினார்.
இந்தக் கூட்டமே அவர் தனது வாழ்நாளில் மேடை ஏறிய முதல் கூட்டமாகும். "இந்தியாவை நேசிக்கிறேன்' என்ற பிரபாகரனின் புகழ்வாய்ந்த அந்தப் பேச்சை சென்னைத் தொலைக்காட்சியும் ஒளிபரப்பியது.
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய உரை வருமாறு:
""இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. திடீரென எமக்கு அதிர்ச்சியூட்டுவது போல, எமது சக்திக்கு அப்பாற்பட்டதுபோல, இந்தத் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவுகள் எமக்குச் சாதகமாக அமையுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
திடீரென மிகவும் அவசரமாக, எமது மக்களையோ, எமது மக்களின் பிரதிநிதிகளாகிய எம்மையோ கலந்தாலோசிக்காமல், இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட ஒப்பந்தம் இப்பொழுது அவசர அவசரமாக அமலாக்கப்பட்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் தில்லி செல்லும்வரை இந்த ஒப்பந்தம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது.
பாரதப் பிரதமர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி என்னை தில்லிக்கு அவசரமாக அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்றதும் இந்த ஒப்பந்தம் எமக்குக் காண்பிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தன. பல கேள்விக்குறிகள் இருந்தன. இந்த ஒப்பந்தத்தால் எமது மக்களின் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுமா என்பது பற்றி எமக்குச் சந்தேகம் எழுந்தது. ஆகவே, இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்திய அரசுக்கு தெள்ளத் தெளிவாக விளக்கினோம்'' என்றார், பிரபாகரன்.
இரு நாடுகளுக்கிடையே இந்த ஒப்பந்தம் உருவானதால் இரு நாடுகளின் நலன்களும் இதில் அடங்கியிருக்கிறது என்பதையும் தனது உரையில் விளக்கினார்.
அவர் மேலும் பேசுகையில், ""ஆனால், நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாது போனாலும் இந்த ஒப்பந்தத்தை அமலாக்கியே தீருவோமென இந்திய அரசு கங்கணம் கட்டி நின்றது. இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து நாம் ஆச்சரியப்படவில்லை. இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்னையை மட்டும் தொட்டு நிற்கவில்லை.
இது பிரதானமாக இந்திய-இலங்கை உறவு பற்றியது. இந்திய வல்லாதிக்க வியூகத்தின் கீழ் இலங்கையைக் கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் அடங்கியிருக்கின்றன. இலங்கையில் அந்நிய நாசகார சக்திகள் காலூன்றாமல் தடுக்கவும் இது வழி வகுக்கிறது. ஆகவேதான் இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொள்வதில் அதிக அக்கறை காட்டியது.
ஆனால் அதே சமயம், ஈழத் தமிழரின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதாகவும் இந்த ஒப்பந்தம் அமைகிறது. ஆகவேதான், எமது மக்களைக் கலந்தாலோசிக்காது, எமது கருத்துகளைக் கேளாது இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதை நாம் கடுமையாக ஆட்சேபித்தோம்.
ஆனால் நாம் ஆட்சேபித்ததில் அர்த்தமில்லை. எமது அரசியல் தலைவிதியை எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவு செய்திருக்கும்பொழுது நாம் என்ன செய்வது?'' என்றார்.
ஒப்பந்தம் தங்களைப் பாதிப்பது எவ்வாறு என்பது குறித்து அவர் விளக்குகையில்,
""இந்த ஒப்பந்தம் நேரடியாக எமது இயக்கத்தைப் பாதிக்கிறது; எமது அரசியல் லட்சியத்தைப் பாதிக்கிறது; எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது; எமது ஆயுதப் போராட்டத்திற்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது.
பதினைந்து வருடங்களாக, ரத்தம் சிந்தி, தியாகம் புரிந்து, சாதனைகள் கட்டி எழுப்பப்பட்ட ஒரு போராட்ட வடிவம் ஒரு சில தினங்களில் கலைக்கப்படுவதென்றால் அதை நாம் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது. திடீரென கால அவகாசமின்றி எமது போராளிகளின் ஒப்புதலின்றி, எமது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமின்றி இந்த ஒப்பந்தம் எம்மை நிராயுதபாணிகளாக்குகிறது. ஆகவே, நாம் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தோம்.
இந்தச் சூழ்நிலையில் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி என்னை அழைத்துப் பேசினார். அவரிடம் எமது பிரச்னைகளை மனம் திறந்து பேசினேன். சிங்கள இனவாத அரசில் எமக்குத் துளிகூட நம்பிக்கை இல்லையென்பதையும் இந்த ஒப்பந்தத்தை அவர்கள் நிறைவேற்றப் போவதில்லை என்பதையும் இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். எமது மக்களின் பாதுகாப்புப் பிரச்னை பற்றியும் அதற்கான உத்தரவாதங்கள் பற்றியும் அவரிடம் பேசினேன்.
பாரதப் பிரதமர் எமக்கு சில வாக்குறுதிகளை அளித்தார். எமது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்தார். பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரது உறுதிமொழிகளில் நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இனவாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கையில் இறங்க இந்தியா அனுமதிக்காது என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையில்தான் நாம் இந்திய சமாதானப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்தோம்'' என்றார்.
ஆயுத ஒப்படைப்பால் ஏற்படப் போகும் ஆபத்து குறித்து அவர் விளக்குகையில்,
""நாம் எமது மக்களின் பாதுகாப்பிற்காக எத்தனை அளப்பரிய தியாகங்களைப் புரிந்தோம் என்பதை நான் இங்கு விளக்கிக் கூறத் தேவையில்லை. எமது லட்சியப் பற்றும், தியாக உணர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை எமது மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள்.
உங்களது பாதுகாப்பிற்காக, உங்களது விடுதலைக்காக, உங்களது விமோசனத்திற்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து, எமது மக்களாகிய உங்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்.
ஈழத் தமிழரின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை. இந்திய அரசு எம்மிடமிருந்து பெற்றுக்கொள்வதிலிருந்து எமது மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தைத்தான் குறிக்கிறது'' என்றார்.
அவர் தனது உரையில், இந்தியாவுக்குத் தாங்கள் எதிரிகளல்ல என்றும் விளக்கினார்,
""நாம் ஆயுதங்களைக் கையளிக்காது போனால் இந்திய ராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. இந்தியாவை நாம் நேசிக்கிறோம். இந்திய மக்களை நாம் நேசிக்கிறோம். இந்திய வீரனுக்கு எதிராக நாம் ஆயுதங்களை நீட்டத் தயாராக இல்லை. எமது எதிரியிடமிருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய ராணுவ வீரர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
நாம் ஆயுதங்களை அவர்களிடம் கையளிப்பதிலிருந்து ஈழத் தமிழன் ஒவ்வொருவரது உயிருக்கும் பாதுகாப்பிற்கும் இந்திய அரசுதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் இங்கு இடித்துக் கூற விரும்புகிறேன்'' என்றார்.
தொடர்ந்து பேசுகையில், ""இந்தியாவின் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் அவர்களுக்கு வழங்குவோம். ஆனால் இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுமென நான் நினைக்கவில்லை. சிங்கள இனவாதப் பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி விடும் காலம் வெகுதூரத்தில் இல்லை'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரபாகரன் தொடர்ந்து பேசுகையில்,
""தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ லட்சியத்திற்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் நான் இங்கு திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எனது போராட்ட லட்சியம் மாறப் போவதில்லை. எமது லட்சியம் வெற்றி பெறுவதானால் எமது மக்களாகிய உங்களின் ஏகோபித்த ஆதரவு என்றும் எமக்கு இருக்க வேண்டும்''.
""தமிழீழ மக்களின் நலன் கருதி இடைக்கால அரசில் பங்குபெற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபெறப் போவதில்லை. முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்''
""புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'' என்று பிரபாகரன் கூறித் தனது உரையை அவர் முடித்தார்.
உரையாற்றும்போது, பிரபாகரன் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தார். பேச்சும் அவ்வாறே இருந்தது. மக்களும் அதே மனநிலையில் இருந்தனர். லட்சக்கணக்கில் திரண்ட மக்களிடையே இந்திய-இலங்கை ராணுவ அதிகாரிகள், உள்நாட்டு, வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிறுவனத்தினரும் கலந்துகொண்டனர்.
104: அமைதிப்படையும் ஆயுதக் கையளிப்பும்!
அமைதிப்படை வான் வழியாகவும், கடல் வழியாகவும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தது. அதன் முகாம்கள் யாழ்குடாவில் பலாலி, வவுனியா, திருகோணமலை, யாழ்ப்பாணம் பகுதிகளில் நிலைகொண்டன. மட்டக்களப்பில் அதிக அளவு ராணுவப்படை தேவையில்லை என்ற உத்தரவே முதலில் இடப்பட்டிருந்தது. ஆனாலும் அங்கும் முழு அளவில் அமைதிப்படை ஈடுபடுத்தப்பட்டது. அம்பாறை பட்டியலில் இல்லை; பின்னர் அதுவும் சேர்க்கப்பட்டது.
ஐ.பி.கே.எஃப் - என்று அழைக்கப்பட்ட அமைதிப்படையின் பிரிவுகளுக்கு "ஆபரேஷன் பவான்' என்று பெயரிடப்பட்டிருந்தது. "பவான்' என்றால் "சுத்தமான காற்று' என்று அர்த்தப்படுத்தலாம். அனுமனையும் சம்பந்தப்படுத்தலாம். அனுமனுக்கு "பவன்புத்ரா' என்றுதான் பெயர். அதாவது வாயுபுத்ரா-காற்றின் மைந்தன் எனப் பொருளாகும்.
அமைதிப்படைக்கு இடப்பட்ட பணிகளை லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர்சிங் கூற்றுப்படி இவ்வாறு பிரிக்கலாம்:
1. இலங்கை - விடுதலைப்புலிகளிடையே நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டு வந்து, போர்நிறுத்தம் ஏற்படுத்துவது-கண்காணிப்பது.
2. விடுதலைப்புலிகள் மற்றும் இதரப் போராளிக்குழுக்களிடமிருந்து ஆயுதங்களைப் பெறுவது.
3. இலங்கை அரசப்படைகள் 1987 மே மாதத்தில் இருந்த நிலைகளுக்குத் திரும்புவதை உறுதிப்படுத்துவது-வற்புறுத்துவது-கண்காணிப்பது.
4. போரினால் வெளியேறிய மக்களை அவர்களின் வாழ்விடங்களில், திரும்ப வந்து வசிக்கச் செய்வது.
இதுதவிர, வடக்கு கிழக்குப் பகுதிகளில் காவல் நிலையங்கள் செயல்படாத நிலை. எனவே, சட்டம்-ஒழுங்குப் பணிகளையும் மேற்கொள்ள நேர்ந்தது.
லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர்சிங், பலாலி விமானதளத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதும், அவரை இந்திய அமைதிப்படையின் (பொறுப்பு) மேஜர் ஜெனரல் ஹர்கிரத்சிங் (54-வது பிரிவு தரைப்படை), இலங்கை அரசுப்படையின் கமாண்டர், பிரிகேடியர் ஜெர்ரி.டி. சில்வா சந்தித்தனர்.
தீபிந்தர்சிங், யாழ் பகுதிகளைத் தரைவழியாகச் சென்று பார்க்க விரும்பினார். அதற்கு ஹர்கிரத்சிங், சாலை முழுவதும் நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக, சாலைக்காவலில் ஈடுபட்ட அமைதிப்படை சிப்பாயிடம், விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். சிப்பாய் நிலக்கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும்படி கேட்டதும், பிரபாகரன்தான் தங்களுக்கு இதுகுறித்து உத்தரவிடவேண்டும் என்றும், அவர் தில்லி ஹோட்டலில் சிறை வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் வந்தால்தான் உண்டு என்று தெரிவித்திருக்கிறார்கள்' என்றார்.
இதுகேட்டு தீபிந்தர்சிங், இது உண்மையா இல்லையா என்கிற ஆராய்ச்சியில் ஈடுபடாமல், பிரபாகரன் யாழ்ப்பாணம் திரும்பவேண்டிய அவசியத்தைத் தலைமைக்கு வலியுறுத்தினார்.
பிரபாகரன் யாழ் திரும்புவதற்கு பல்வேறு வகையான நெருக்குதல்கள் இருந்தபோதிலும், இந்தக் காரணமும் அதில் ஒன்றாகச் சேரக்கூடும் என்பதும் உண்மையே.
தீபிந்தர்சிங்கும், இலங்கை ராணுவத் தளபதி ஜெனரல் சிரில் ரணதுங்கேயும் பலாலி விமானதளத்தில் உள்ள பார்வைக்கோபுரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, உலக அளவிலான பத்திரிகையாளர்களில் பெரும்பாலானோர், இலங்கையில் இந்திய அமைதிப்படை எத்தனை காலம் இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதில் அதிக அக்கறை காட்டினார்கள்.
தர்மசங்கடமான இந்தக் கேள்விக்கு தீபிந்தர்சிங் "இந்தப் பணி முடியும் வரை' என்று பதிலளித்தார்.
பிரபாகரன் யாழ்ப்பாணம் திரும்பியதை அடுத்து, ஆயுதம் கையளிப்பது தொடர்பான ஆலோசனையை அவரிடம் செய்யவேண்டிய அவசியம் தீபிந்தர்சிங்குக்கு ஏற்பட்டது. இதற்கான ஏற்பாடு அவர் தங்கியிருந்த இடத்தினருகே உள்ள விருந்தினர் இல்லத்தில் செய்யப்பட்டிருந்தது. பிரபாகரன், யோகரத்தினம் யோகியுடன் வந்தார். இது தவிர, மேலும் இரு விடுதலைப் புலிகளும் உடன் வந்தனர்.
இதுகுறித்து தீபிந்தர்சிங் தனது நூலில், ""அறைக்குள் நுழைவதற்கு முன்பாக பிரபாகரன் தனது காலணிகளை வாசலுக்கு வெளியே கழற்றிவிட்டு உள்ளே வந்தார். அவர் "புஷ்' சர்ட் அணிந்திருந்தார். உயரம் அதிகமில்லை. நல்ல கட்டுமஸ்தான உடம்பு. பார்க்க அழகானவராக இருந்தார். முகம் இறுகினது போல இருந்தது. அவரைப்பற்றிய வீரப்பிரதாபங்கள் பலவற்றைக் கேள்விப்பட்டிருந்த நிலையில், அதில் சில உண்மையாக இருக்கவும் வாய்ப்புண்டு-என்பது எனது கணிப்பாக இருந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் நூலில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, "டீ சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் இந்தியாவின் வற்புறுத்தலுக்கிணங்க போர்நிறுத்தம் மற்றும் ஆயுதம் கையளிப்புக்கு இணங்கியதாகத் தெரிவித்தபோது, இச்சூழ்நிலை இலங்கை அரசு யாழ்ப்பாணம் மீது ஏற்படுத்திய பொருளாதாரத்தடை மற்றும் ராணுவம் மக்கள் மீது தொடுத்த தாக்குதல்கள் காரணமாகவும், மக்கள் பட்ட துன்பம் காரணமாகவும் எழுந்தது என்று விளக்கினேன். தில்லியில் அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த பேச்சு எழவில்லை. ஆனால் அவரது பேச்சுகளில் இருந்து இந்திய வெளிவிவகாரத்துறை மற்றும் "ரா' அமைப்பில் உள்ளவர்களின் செயல்பாடுகளால் கோபம் ஏற்பட்டிருக்கிறது என்பதையும், இனி அவர்களது பேச்சை எந்தக் காலத்திலும் நம்பமாட்டார் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்தும் அவரிடம் எதுவும் விவாதிக்கவில்லை. ஆயுதம் கையளிப்பது தொடர்பாகத் தனது தளபதிகளிடம் விவாதித்து முடிவு செய்யப்படும் என்று கூறியது தொடர்பாக, ஞாபகப்படுத்திக் கேட்டபோது அடுத்தடுத்த நாளில் நடைபெறும் என்றார். இலங்கை அரசு ஆயுதம் கையளிப்பதை விரிவான அளவில் விளம்பரம் செய்வதாக இருந்ததை அவர் விரும்பவில்லை. மேலும் எந்த ஓர் ஆயுதத்தையும் இலங்கை அரசிடம் நேரடியாகக் கையளிப்பதையும் அவர் விரும்பவில்லை என்பதும் தெரியவந்தது' என்கிறார் தீபிந்தர்சிங்.
அடுத்தநாள் தீபிந்தர்சிங் யாழ்ப்பாணப் பல்கலைத் திடலில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கவும், அவரை மாத்தையா வரவேற்று, பிரபாகரன் இருக்குமிடத்துக்கு அழைத்துச் சென்றார். ஆயுதம் கையளிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இலங்கை அரசிடம் ஆயுதம் கையளிப்பது நடக்காது என்றே பிரபாகரன் தெரிவித்தார். ஆயுதம் கையளிப்பது இல்லை என்றால், போராளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்குவது என்பது தடைபடும். எனவே, ஆயுதம் கையளிப்பது என்பதை அவரின் பிரதிநிதியாக ஒருவர் ஆயுதம் வழங்க, இந்தியப் பிரதிநிதி முன்னிலையில் ஆயுதத்தை அளித்தால் போதும் என்று தீபிந்தர்சிங் யோசனை கூறினார்.
அதன்படி, பலாலி ராணுவ முகாமில் ஆயுதக் கையளிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒரு மேசை போடப்பட்டு, அதன் எதிர்ப்புறத்தில் மேஜர் ஜெனரல் ஹர்கிரத்சிங்கும், இலங்கை பாதுகாப்பு செயலாளர் சேபால அட்டியகாலேவும் நிற்க, இந்தப் பக்கத்தில் நின்ற யோகரத்தினம் யோகி, ஒரு துப்பாக்கியைக் கையளிப்புக்கு அடையாளமாக மேசையில் வைத்தார்.
இந்தக் காட்சியை இலங்கை, இந்தியப் பத்திரிகையாளர்கள் தவிர, உலகநாடுகளின் பத்திரிகையாளர்களுமாக 200 பேர் பதிவு செய்தனர். இதே நேரத்தில், ஜெயவர்த்தனா போராளிகளுக்கு வழங்கிய பொதுமன்னிப்பை அட்டியகாலே வாசித்தபின், அக்கடிதத்தை யோகியிடம் வழங்கினார். ஆயுதக் கையளிப்பு நிகழ்ச்சி முடிவுற்றது.
105: ஒப்பந்தம் மீது சந்தேகம்!
ஆயுதக் கையளிப்பு நிகழ்ச்சிகள் வடக்கிலும், கிழக்கிலும் தொடர்ந்து நடைபெற்றன. இந்தக் கையளிப்பில் விடுதலைப் புலிகள் தவிர, ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈ.என்.டி.எல்.எஃப்., ப்ளாட், டெலோ இயக்கங்களும் பங்குபெற்றன. (முறிந்த பனை பக்-164) இந்த நிகழ்ச்சிகள் ஒரு விழாவினைப்போன்று ஏற்பாடு செய்யப்பட்டு, விரிவான அளவில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தியாக்கப்பட்டன. இந்தியா, இலங்கை ஆகிய இருநாடுகளின் ஆட்சியாளர்களின் அரசியல் தேவைகளுக்கு இந்த விளம்பரம் தேவையாக இருந்தது.
விடுதலைப் புலிகள் அமைப்பு, பின்னர் சில வாகனங்கள் நிறைய ஆயுதங்களைக் கொண்டுவந்து பலாலியில் இறக்கியது. அதில் சிலிண்டர் வடிவ ஆயுதங்களும் இருந்தன. தீபிந்தர்சிங், இந்த சிலிண்டர் வடிவில் இருப்பது என்னவென்று வினவியபோது குண்டுவீசப் பயன்படும் 175எம்.எம். மோர்ட்டார் என்று தெரிவித்தனர். இவை உள்ளூர் தயாரிப்பு என்றதும் அவர் வியந்தார்.
ஆயுதக் கையளிப்பு நிகழ்ச்சிகளில் கையளிக்கப்பட்ட ஆயுதங்கள் மிகக்குறைவு என்று ஜெயவர்த்தனா அபிப்பிராயப்பட, கைதிகள் விடுதலையிலும் சுணக்கம் தென்ப்பட்டது.
அதேபோன்று, மக்களும் போராளிகளும் போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கவே அமைதிப்படை என்று முதலில் நினைத்தனர். ஆனால், நாளடைவில் கனரக ஆயுதங்களும் பீரங்கிகளும் வந்து இறங்கவும், அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. அமைதியை நிலைநாட்ட வந்த படைக்கு, இந்த கனரக ஆயுதங்கள் எதற்கு என்பது புரியாத புதிராக இருந்தது.
முதலில் மக்களது கோரிக்கைகளை கவனிப்பது போன்று செயல்பட்ட அமைதிப்படையின் போக்கு நாளடைவில் மாறத் தொடங்கியது. அப்படைக்கு, இந்திய-இலங்கை நலன்களே "குறி' என்பதும் வெளிப்டையானது.
இது குறித்து புஷ்பராஜா தனது நூலில், "இந்திய ராணுவம் இலங்கையில் தன்னைச் சமாதானப்படையாக எண்ணாமல் ஒரு கைப்பற்றப்பட்ட பிரதேசத்தில் இருக்கும் ராணுவம் போல வலம் வரத்தொடங்கியது. இதற்கு இந்திய ராணுவ அதிகாரிகளின் கற்பனையும் இந்திய ராஜதந்திரிகளின் தவறான கணிப்பீடும் காரணங்கள் எனச் சொல்லலாம்... நாங்கள் சொல்வதற்கு மட்டுமே கட்டுப்படுங்கள் என்ற வாத்தியார்த்தனம் இந்தியாவிடம் இருந்தது. முக்கியமாக இந்திய உளவுப்பிரிவான "ரா' இலங்கைப் பிரச்னையில் தவறான கணிப்பீடுகளைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், ராஜதந்திரிகளையும் தவறான கணிப்பீடு கொள்ளவைத்தது' என்று குறிப்பிடுகிறார்.
அதுவே நாளடைவில் அமைதிப்படையின் செயல்பாடுகளிலும் காணப்பட்டது. ஆயுதங்களைப் பறித்தெடுப்பதில் காட்டப்பட்ட அக்கறை, இடைக்கால அரசு அமைப்பதில் காட்டப்படவில்லை. ஆயுதங்களைக் கையளிக்க 5 நாள்கள் அவகாசமும், இறுதி முடிவு எடுக்கப்படாத விஷயங்களை இந்தியாவும்-இலங்கையும் பேசி முடிவெடுக்க ஆறுவாரம் கெடுவும் அளிக்கப்பட்டது -ஒரு விநோதமான செயல்பாடு ஆகும். இந்தக் குறிப்புப்படி எந்தவிதமானப் பேச்சும் இரு அரசுகளுக்கிடையே நடைபெறவில்லை.
மாறாக 13-வது திருத்தமாக ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் அவசர அவசரமாக நிறைவேறியது. இந்தச் செயலை அப்போதைய வெளியுறவுச் செயலாளரான ஏ.பி.வெங்கடேஸ்வரன், "அதிகாரப் பகிர்வு செய்யாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குதிரைக்கு முன்னால் வண்டியைப் பூட்டிய செயல்' (இந்து நாளிதழ்-13 ஆகஸ்டு 1987) என்று விமர்சித்தார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் 1.14-இன் ஷரத்துப்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் வரலாற்றுக் குடியிருப்புப் பிரதேசங்கள் என்று குறிப்பிட்ட நிலையில், தமிழர் தாயகம் என்பதை மறுப்பதும் விநோதமான ஒன்றே.
ஜூலை 26 1987-இல் யு.என்.பி.யின் பொதுக்குழுக் கூட்டத்தில் "இணைப்பு என்பதும், வாக்கெடுப்பு என்பதும் நாடகம்தான் என்றும், தமிழர்களின் குழுக்களே இதனை முறியடித்துவிடுவர்' என்றும் ஜெயவர்த்தனா பேசியதின் மூலம் இந்த ஏமாற்று நாடகம் அம்பலத்துக்கு வந்தது. அதுமட்டுமல்ல, ""இவ்வொப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் ஆதாயம் என்னவென்றால், பயங்கரவாத இயக்கத்துக்கு அது ஒரு முடிவைக் காணும்'' என்றும் ஜெயவர்த்தனா குறிப்பிட்டாரே தவிர, இடைக்கால அரசு பற்றி குறிப்பிடவில்லை. ஆனால், இதுபற்றியும் இந்தியா எந்தக் கருத்தும் சொல்லவே இல்லை என்பதுதான் உண்மை.
தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் என்பது, அந்தப் பகுதி தமிழரின் தாயகம் என்பதைத் தவிர்ப்பதற்காகவும், தமிழர்கள் ஒன்றுபட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிவிடக்கூடாது என்பதற்காகவும் சொல்லப்பட்ட சதி என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சுதந்திரத்துக்கு முன்பே தரிசு நிலம் மற்றும் உவர்நில மேம்பாட்டுத் திட்டத்தின்பேரில் நிலத்தைக் கையகப்படுத்தி அவை பிரித்தளிக்கப்பட்டது. அதில் தமிழர்களைவிடவும், சிங்களவர்கள் அதிக அளவில் குடியேற்றப்பட்டார்கள் என்பதும், நாளடைவில் கிழக்குப் பகுதியின் நெற்களஞ்சியப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களை வன்முறை மூலமும், அரசு திட்டங்கள் மூலமும் வெளியேற்றி, அந்தப் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியமர்த்தினார்கள் என்பதும் முந்தைய பகுதிகளில் குறிப்பிட்டிருந்தோம்.
இந்தக் குடியேற்றங்களை முதன்முதலில் சுதந்திர இலங்கையில் ஆரம்பித்துவைத்தவர் சேனநாயக்கா. அவர், அப்போது தன்னை முதலாம் பராக்கிரமபாகு என்று அழைப்பதைப் பெருமையாகக் கருதினார். முதலாம் பராக்கிரமபாகு தமிழர்களை வீழ்த்தி, சிங்கள ராஜ்ஜியத்தை உருவாக்கி, அங்கே பெüத்தத்தை விதைத்தவன் ஆவான்.
சேனநாயக்காவும் வெள்ளைச் சால்வை அணிந்து, பெüத்த சின்னங்கள் முன்பு தரையில் விழுந்து வணங்கியதோடு, அச்சின்னங்கள் அடங்கிய பெட்டியை சுமந்துசென்று சிங்கள-பெüத்த மேலாண்மைக்கு வித்திட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்கான தொலைநோக்கில் அவர் தமிழர் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியமர்த்தினார்.
இதன் காரணமாக, கோல்புரூக் காலத்தில் (1833) மூன்று சிங்கள மாகாணங்கள் என்றிருந்த நிலையில், ஏழு மாகாணங்கள் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. தமிழர் பிரதேசமாக இரு மாகாணங்களாக, கரையோரமுள்ள பகுதிகளாக மட்டுமே அமைந்தன. ஒட்டுமொத்த இலங்கையில் அமைந்துள்ள ஒன்பது மாகாணங்களில் சிங்கள மாகாணங்கள் போக, மீதமுள்ள இரண்டு தமிழ் மாகாணங்களையும் சிதைக்கும் நோக்கத்துடன் சிங்களக் குடியேற்றம் அவ்வப்போது நடைபெற்றது.
தமிழ் மாகாணங்களில் விவசாய-குடிநீர்ப்பாசனத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அங்கே அதிக அளவில் சிங்களவரைக் குடியேற்றினார்கள். விவசாய நிலப்பகுதி தவிர்த்து வடக்கில் அமைந்துள்ள காட்டுப்பகுதியும், கிழக்கில் உள்ள வேடர் பிரதேசங்களையும் குடியேற்றம் விட்டுவைக்கவில்லை.
1950-களில் அல்லை, காந்தளாய் மற்றும் கல் ஓயா குடியேற்றங்களில் இன விகிதாச்சாரம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. திருகோணமலையில் யான் ஓயா, மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுரு ஓயா, முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலி ஓயா ஆகியவற்றிலும் இதே பாகுபாடுதான். சிங்களவர்களுக்கு மட்டும் ஒரு குடும்பத்தில் ஏற்படும் இயற்கை அதிகரிப்பு கணக்கிடப்பட்டு ஒரு குடும்பத்துக்கு மூன்று நான்கு என காணித்துண்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இவ்வாறு உருவாக்கப்படும் குடியேற்றத் திட்டங்களில் அந்த ஊரின் தமிழ்ப்பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டுவிட்டன. (உ-ம்) நொச்சிகுளம்-நொச்சியாகம, அம்பாறை-திகாமடுல்ல, அம்பலாங்கொடை-அம்பலாங்கொடம்ல, மணல் ஆறுத்திட்டம்-வெளி ஓயா, கோமரங்கடவை-கோமரங்கடவல, முதலிகுளம்-மொரவெவ.
கெண்ட் பண்ணை-டாலர் பண்ணை முதலியவற்றில் தமிழர்களே பெரும்பான்மை. அவர்களை வெளியேற்றிவிட்டு அங்கே சிங்களவர்களைக் குடியமர்த்திவிட்டார்கள்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்தின் கிழக்கு மாகாணம் முன்பு திருகோணமலை, மட்டக்களப்பு என இரு மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். அதிரடியாக மட்டக்களப்பில் சிங்களவரை அதிக அளவில் குடியேற்றி அம்மாவட்டத்தைப் பிரித்து, அம்பாறை மாவட்டம் எனப் புதிதாக, உருவாக்கி சிங்களப் பெயராகவும் அறிவித்துவிட்டார்கள்.
இவையெல்லாம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு முன்பாக நடந்த குடியேற்றங்களில் பத்து சதவிகிதக் குறிப்புகள் மட்டுமே. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட 2.4 ஷரத்துப்படி, வன்முறையால் வெளியேறிய அல்லது வேறு காரணங்களுக்காக இடம்பெயர்ந்தவர்களைக் குடியமர்த்தத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கவேண்டும் என்பதாகும்.
ஆனால் கிழக்கு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த தமிழர்களை அங்கே குடியமர்த்த முயற்சி எடுக்காது, சிங்களவர்களைக் குடியமர்த்துவதில் அரசு தீவிரம் காட்டியது. அம்பாறை மாவட்டத்திலும் இதே நிலைமைதான். குடியேற்ற விஷயத்தில் அரசு திட்டமிட்டுத் தமிழர்களுக்குத் துரோகம் செய்தது. இதனால் தமிழர்கள் மத்தியில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் மீது சந்தேகம் எழுந்தது.
106: கேள்விக்குறியான புலிகளின் பாதுகாப்பு!
ஒப்பந்தத்தில் இல்லாவிட்டாலும் சட்டம் ஒழுங்கு இந்திய அமைதிப்படையின் பொறுப்பில் விடப்பட்டதாக லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங் குறிப்பிட்டுள்ள நிலையில், கிழக்கில் புதிதாக காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும், யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கும் ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ரயில்வே பாதையை ஆய்வு செய்ய ஒரு குழு வந்தது. சிலிப்பர் கட்டைகள் நீக்கப்பட்டிருந்த நிலையில் புதிய சிலிப்பர் கட்டைகள் பொருத்தப்பட்டன. குறிப்பிட்ட தூரம் ரயில் ஓட்டியும் காட்டப்பட்டது.
அதேபோன்று வான்சேவை துவங்கிற்று. சென்னையிலிருந்து கொழும்புக்கும், யாழ்ப்பாணத்துக்கும் விமானப் போக்குவரத்தை நடத்த இந்திய அமைதிப்படை நிர்வாகம், ஏற்பாடு செய்திருந்தது. சென்னையில் வசித்த யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைவாழ் தமிழர்கள் தங்களது இல்லம் திரும்பவே இந்த வசதி செய்யப்பட்டிருந்தது.
விடுதலைப்புலிகள் இயக்கம், ஆயுதங்களைக் கையளித்த நிலையில், அரசியலுக்குத் திரும்ப முடிவு செய்திருந்தது. தங்களது போராளிக் குழுவினருக்கு கவிஞர் காசி ஆனந்தன் அரசியல் வகுப்பு நடத்தப் பணிக்கப்பட்டிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழமுரசு, உதயன் பத்திரிகைகளில் காரசாரமான மரபு சார்ந்த விமர்சனங்கள் இடம்பெற்றன. அப்பத்திரிகைகளின் விமர்சன இலக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி செயல்பாடுகள் குறித்தே அதிக அளவில் இடம்பெற்றன.
வன்னிப் பகுதிகளில் "த்ரீ ஸ்டார்' என்று அழைக்கப்பட்ட ஈஎன்டிஎல்எஃப், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., டெலோ இயக்கத் தவர்கள் விடுதலைப் புலிகள் மீது தாக்குதலைத் தொடுக்கத் தூண்டப்பட்டார்கள். அத்தகையவர்களுள் பிரபலமானவர்கள் பிளாட் இயக்க உறுப்பினரான சங்கிலி(கந்தசாமி)யும், ஈஎன்டிஎல்எஃப் ராஜனும் ஆவார்கள்... (ஆதாரம்: முறிந்தபனை : பக் 168)
விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதம் கையளித்த சூழ்நிலையில், மற்ற இயக்கங்களும் ஆயுதங்களை அமைதிப்படையிடம் ஒப்படைத்துவிட்டதாகச் சொன்ன நிலையில், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஆயுதக் குழுக்களிடையே தாக்குதல்களும், பதில் தாக்குதல்களும் தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் அடுத்தடுத்து வந்தன.
இந்நிலையில் பிரபாகரன், லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங்கை 15-8-1987அன்று சந்தித்தபோது, சில புகார்களைத் தெரிவித்தார். அதுகுறித்து தனது நூலில் தீபிந்தர் சிங் குறிப்பிடுவதாவது:
""எங்களை ஆயுதங்களைக் கையளிக்கச் சொல்லிவிட்டு, அது நடந்த பின்னர், "ரா' அமைப்பு, பிற ஆயுதக்குழுக்களான டெலோ, ஈபிஆர்எல்எஃப் மற்றும் ஈஎன்டிஎல்எஃப் இணைந்த "த்ரீ ஸ்டார்' என்கிற அமைப்பை எங்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு மோதல்களை நடத்தி வருகிறது'' என்று தெரிவித்தார். இந்தப் புகார்கள் கடுமையானவை. இதுகுறித்து ராணுவத் தலைமையகத்துக்குத் தெரியப்படுத்தினேன்.
அங்கிருந்து வந்த தகவல்கள் புகாரை உறுதிப்படுத்துவதாக இல்லை. எனவே, பிரபாகரனிடம் இந்தப் புகார் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தபோது, அவரோ புகாரில் உறுதியாக இருந்தார். பிற இயக்கங்களிடையே "ரா' அமைப்புக்கு உறுதியான தொடர்புகள் இருக்கின்றன என்றார். மேலும் தகவல்கள் கிடைக்கும்வரை காத்திருக்கும் நேரத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள போராளிகளைக் காவல் பணியில் ஈடுபடுத்தலாமா என்று யோசித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனென்றால் அந்த சமயத்தில் யாழ்ப் பகுதிகளில் காவல் நிலையங்கள் மூடப்பட்டு அந்தப் பணி உள்ளிட்ட சிவில் நிர்வாகத்தை விடுதலைப் புலிகளே செய்து வந்தனர். தற்சமயம் இந்தப் பணியையும் அமைதிப்படையே செய்யவேண்டும் என்றபோது, உள்ளூர்வாசிகளை அதில் ஈடுபடுத்துவது சரியானதாக இருக்க முடியும் என்பதையும்விட, விடுதலைப் புலிகளுக்கு மாற்று வேலை வழங்கினதாகவும் ஆகும் என்று தீபிந்தர்சிங் நினைத்தார். ஆனால், ராணுவத் தலைமை அவரது முதல் பணி ஆயுதங்களைப் பறிப்பதுதான் என்று நாகரிகமாக மறுத்துவிட்டது.
பிற போராளி அமைப்புகளுக்கு "ரா' அமைப்பு திரும்பவும் ஆயுதங்கள் அளித்ததை தீபிந்தர்சிங் நிராகரித்த நிலையில், இதற்கான ஆதாரத்தை மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்கிடம் விடுதலைப் புலிகள் அளித்ததாக அப்போது செய்திகள் வெளியாயின.
இந்தச் சம்பவம் குறித்து ஹர்கிரத் சிங் தான் எழுதிய நூலில், ""விடுதலைப் புலிகள் ஆயுதக்கையளிப்பை ஆகஸ்டு 21-ம் தேதி முடித்தார்கள். இந்த நேரத்தில் பிரதமர் அலுவலக உத்தரவின் பேரில், "ரா' அமைப்பு பிற போராளி அமைப்புகளுக்கு ஆயுதம் வழங்குகிறது என்கிற புகாரையடுத்து, தலைமை அலுவலகத்துக்கும், இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் மற்றும் அவரது ராணுவ ஆலோசகருக்கும் அறியப்படுத்தப்பட்டது.
விடுதலைப் புலிகள் அளித்த வீடியோ ஆதாரத்தை இந்தியத் தூதருக்குப் போட்டுக் காட்டினேன். அந்த வீடியோ காட்சிகளில் "ரா' அதிகாரிகள் வழங்கியதாகச் சொல்லப்படும் ஆயுதங்களில் இந்தியக் குறியீடுகள் இருந்தன.
இவ்வாறு விடுதலைப் புலிகள் தவிர்த்து, மற்ற குழுக்களுக்கு ஆயுதம் வழங்கப்பட்டதானது, குழுக்களுக்கிடையே மோதல் போக்கை உருவாக்கியது. யாழ்ப்பாணம் அமைதிப்படை முகாமுக்கு விடுதலைப் புலிகள் வந்து, "இவ்வாறு பிற குழுக்களுக்கு ஆயுதம் அளிப்பதால் எங்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. ஈ.என்.டி.எல்.எஃப். அமைப்பைச் சேர்ந்த 150 பேருக்கு கிளிநொச்சியில் பயிற்சி அளிக்கும் பொறுப்பையும் "ரா' ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் எங்களது போராளிகளுக்கு ஆபத்து அதிகரித்துள்ளது' என்று மீண்டும் புகார் தெரிவித்தனர்.
"இந்திய அரசு இதுபோன்ற சூழ்நிலையை ஏன் உருவாக்கவேண்டும் "ரா' அமைப்பு பிரதமர் ராஜீவ் காந்தியின் அறிவுறுத்தல் பேரில் நடந்துகொள்வதாகச் சொல்லப்படுவதை உண்மையில் பிரதமர் அறிவாரா? பிரதமர் ராஜீவ் காந்தியின் குரலாகச் செயல்படும் இலங்கையின் இந்தியத்தூதர் இதைத் தடுக்க ஏன் முன்வரவில்லை? இதன் விளைவுகள் என்னவாகும் என்பது அவர் அறியாததா?' என்றும் ஹர்கிரத் சிங் அடுக்கடுக்காக பல கேள்விகளை தனது நூலில் எழுப்பியுள்ளார்.
107: போராளி இயக்கங்களிடையே மோதல்!
இவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு எதிராக மறைமுகமாக ஆயுதங்கள் வழங்குவது அவர்களை அடக்கியொடுக்கத்தான் என்று குற்றச்சாட்டு எழுந்தது. பிற இயக்கங்களுக்கு விடுதலைப் புலிகள் குறித்தும் அமைதிப்படை குறித்தும் ஐயப்பாடுகள் இருந்தன என்பது பல்வேறு செய்திகளில் இருந்து தெரிய வருகிறது.
"முறிந்த பனை' நூலில் இந்த சந்தேகங்களும், அதன் செயல்பாடுகளுமான பதிவில் கூறப்பட்டிருக்கிறது. "விடுதலைப் புலிகளுடன் மட்டுமே பிரத்தியேகமாக இந்தியர்கள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தமையானது, விடுதலைப் புலிகளைக் கணக்கில் எடுத்தாக வேண்டிய வலிமை வாய்ந்த சக்தியாகத் தாங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதையும், அவர்களைத் தவிர்ப்பது என்பது வீண்வம்பை விலைக்கு வாங்கும் முயற்சியே என்றும் இந்தியர்கள் கருதிக்கொண்டதற்கான அறிகுறியாகும். பின்னர் இடம்பெற்ற நிகழ்ச்சிகளும் இதனை உறுதிப்படுத்துவனவாகவே இருந்தன' என்று கூறப்பட்டிருப்பதில் இருந்து விடுதலைப் புலிகளின் வலிமை வெளிப்படுகிறது.
மேலும் அதே "முறிந்த பனை' நூலில், பிற போராளி இயக்கங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், "தாங்களின் விரக்தியில் அவர்கள் தமிழ்ப்பொதுமக்கள் மீது, குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து வருபவர்கள்மீது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்ற நினைப்பில் பெருங்கசப்பு கொண்டிருந்தனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கசப்பு நிலையே பல்வேறு மோதல்களுக்குக் காரணமாக இருந்தது. பயணிகளுக்கும் அவர்களது உடமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாயிற்று. திடீர்க் கொலைகளும் ஆங்காங்கே நடந்தன. "இந்தியர்களின் அக்கறையில் பொதுமக்கள் உண்மையாகவே மிகக் கீழான இடத்திலேயே வைக்கப்பட்டிருந்தனர்' என்ற விமர்சனமும் அப்போது எழுந்தது.
மன்னாரில் விடுதலைப் புலிகள் மூவர் கொல்லப்பட்டதும் அதன் எதிரொலியாக நடைபெற்ற மோதல்கள் குறித்தும் அமைதிப் படைக்குப் புகார் வந்தபோது, சட்டம் ஒழுங்குப் பிரச்னை மன்னாரைப் பொறுத்து அமைதிப் படையைச் சார்ந்ததல்ல-அங்கு இலங்கை அரசின் காவல் நிலையங்கள் இயங்குகின்றன. அந்த நிலையங்கள் அந்த வேலையைப் பார்த்துக்கொள்ளும் என்று காரணம் கூறிவிட்டது. ஆனால், அடுத்த நாளே அமைதிப்படை தலைமையிடமிருந்து மன்னாரிலும் சட்டம்-ஒழுங்கை அமைதிப்படை பராமரிக்கவேண்டும் என்று உத்தரவு வந்தது. அப்படியென்றால், சி.ஆர்.பி.எஃப். படைப்பிரிவினரையும், கலவரம் நேர்ந்தால் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் உள்ளிட்ட சாதனங்களையும் அனுப்பவேண்டும் என்று அமைதிப்படை கூறியதும், அக்கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டது.
மதச் சிறுபான்மையினர் கடத்தல் மற்றும் கொலைகள் நடத்தப்படுவதாகப் புகார்கள் வந்தன. போராளி இயக்கங்களுக்கிடையே இது குறித்துப் புகாரும், எதிர்ப்புகளும் எழுப்பப்பட்ட நிலையில், தமிழ்ப் பகுதிகளில் மரபு ரீதியான வேலை நிறுத்தங்களும் நடைபெற்றன. இந்த வேலை நிறுத்தங்கள் அடுத்தடுத்த நாளில்கூட நடைபெற்றன.
அமைதிப்படை வருகையையொட்டி எல்லாமும் நல்லதாக நடக்கும் என்பதை மெய்ப்பிக்க, சிங்கள ராணுவம் மற்றும் சிங்கள இனவாத அரசுகளால் செயலிழந்தவற்றை, செயல்படவைக்க, பெரியதொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வங்கிகள் இயங்கின. இதற்கென ராணுவ வாகனங்களில் கொழும்பிலிருந்து ரூபாய் நோட்டுகள் வரவழைக்கப்பட்டன. வங்கி ஊழியர்களை அவர்களது இல்லத்திலிருந்தே அழைத்து வந்து வங்கிகளில் அமர வைத்தனர். வங்கிகள் திறக்கப்பட்டன. பணம் இருந்தது. ஆனால் வாடிக்கையாளர்கள் வருகை என்பதுதான் இல்லாதிருந்தது.
அதேபோன்று நீதிமன்றம் செயல்படவும், முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிங்கள அரசு நிர்வாக அமைப்பில் உள்ள நீதிமன்றத்தை மக்கள் புறக்கணித்தார்கள். காரணம், விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தில்தான் புகார்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட சூழ்நிலை அப்போது யாழ்ப்பாணத்தில் நிலவி வந்தது. அதுமட்டுமல்ல, நிலவரி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததைப் பார்த்ததாக லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.சி.சந்தோஷ் பாண்டே தனது நூலில் குறிப்பிடுகிறார்.
இடைக்கால நிர்வாக சபை அமைப்பது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் ஓர் அம்சம். எட்டு பேரைக்கொண்ட நிர்வாக சபையில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு 3 இடங்கள், தமிழர் விடுதலை ஐக்கிய முன்னணிக்கு 2 இடங்கள், இன்னொரு ஆயுதப் போராட்டக்குழுவுக்கு ஓர் இடம், மீதமுள்ள 2 இடங்களுக்கு அரசுப் பிரதிநிதிகளுக்கென ஒரு திட்டம் முன்வைத்துப் பேசப்பட்டது.
இந்த இடைக்கால சபையின் பணி, இலங்கை அரசினதும் அமைதிப்படையினதுமான உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு, வடக்கு-கிழக்கு நிர்வாகப் பணிகளை மேற்கொள்வது, மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் காலம் வரை செயல்படுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த மாகாணசபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று கேள்வி எழுப்பப்பட்டபோது உறுதியான தகவல் இல்லை. ஆறு மாதத்திலும் நடக்கலாம்; அல்லது ஓராண்டு இடைவெளியிலும்கூட நடக்கலாம் என்கிற தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் இடம்பெற விடுதலைப் புலிகள் அமைப்பு விருப்பம் காட்டவில்லை. இடைக்கால நிர்வாக சபையில் 3 இடங்களைப் பெற்று, சாதிக்கப்போவது ஒன்றுமில்லை. இலங்கை அரசின் வழிகாட்டுதலில், அமைதிப்படையின் உத்தரவின் கீழ், நிர்வாகத்தில் எந்த முடிவினையும்கூட எட்ட முடியாத சூழ்நிலையே உருவாகும் என்பது அவர்களது வாதமாக இருந்தது.
இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத்திலேயே இருக்க, இந்திய அமைதிப்படையின் முகாம்கள் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டன. பாதுகாப்புக் கோரிய போராளிக்குழுக்களுக்கு, பாதுகாப்பு அளிக்கவும் போராளிக்குழுக்களிடையே ஏற்படும் மோதலைத் தடுக்கவும் புதிய முகாம்கள் அமைக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது.
இருப்பினும் விடுதலைப் புலிகளுடனான சுமுக நிலையை அமைதிப்படை குறைத்துக்கொள்ளவேண்டும் என்று மேலிடத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டது.
பிற போராளி இயக்கங்களுக்கு ஆயுதம் அளிப்பது குறித்து விடுதலைப் புலிகள் எழுப்பிய புகாருக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்ட நிலையில், கொழும்பில், அமைதிப்படைத் தளபதி ஹர்கிரத் சிங் உள்ளிட்டோருடன் இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்சித் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, ஈ.என்.டி.எல்.எஃப்., பிளாட், டெலோ அமைப்புகளை அமைதிப்படை ஆதரிக்கிறது என்ற செய்தியைப் பரப்பவேண்டும் என்று தூதுவர் கூறவும், அது தேவையில்லை... யாழ் மக்கள் இதை எப்போதோ பேச ஆரம்பித்துவிட்டார்கள் என்று தளபதி தெரிவித்தார்.
பிற இயக்கங்களுக்கு ஆயுதம் அளிப்பது பற்றி விவாதம் வந்தபோது, ஆயுதம் அளிப்பது மட்டுமல்ல, ஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தைச் சேர்ந்த 150 பேருக்கு, கிளிநொச்சியில் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவது குறித்தும் பிரபாகரன் புகார் தெரிவித்திருக்கிறார் என்று தளபதி குறிப்பிட்டார்.
யாழ் மக்கள் ஆதரவைப் பெறாத அமைப்புகளுக்கு ஆயுதம் அளித்தும், பயிற்சி கொடுத்தும் வருவதால் அமைதிப்படையின் பணி சிக்கலைச் சந்திக்கும். விடுதலைப் புலிகள் மீது விமர்சனம் இருந்தபோதிலும், அம்மக்கள் தங்களின் "பாதுகாவலன்' என்ற நிலையில் புலிகளையே நம்புகிறார்கள் என்றும் தளபதி கருத்துத் தெரிவித்தார்.
இக்கருத்தை மாற்றும் பணியை அமைதிப்படை மேற்கொள்ளவேண்டும் என்றும் இதற்கான பிரசாரத்தை முடுக்கிவிடவேண்டும் என்றும் இந்தியத் தூதவர் அறிவுரை வழங்கினார்.
அமைதிப்படைத் தளபதியோ, இந்தப் பிரசாரத்தை மக்கள் நம்பமாட்டார்கள் என்றும், அவர்கள் விடுதலைப் புலிகளோடு இருக்கிறார்கள் என்றும், அமைதிப்படை தங்கியிருக்கும் காலம் குறித்தும் அவர்களுக்குத் தெளிவாகத் தெரியாத நிலையில் இப் பிரசாரம் சாத்தியமில்லை என்றும் கருத்துத் தெரிவித்தார்.
ஆனால் அவரின் கருத்து ஏற்கப்படவில்லை. மாறாக, இலங்கை கடற்படையினருடன் சேர்ந்து, இந்தியக் கடற்படையினரும் இரவில் ரோந்துக்குப் போக இருக்கிறார்கள் என்றும், சமீப காலத்தில் இலங்கையின் கடற்பகுதியில் மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், அவர்கள் மீன்பிடிதொழிலில் ஈடுபடுகிறவர்களாக இருக்க முடியாது என இலங்கை அரசாங்கம் கருதுவதாகவும் சொல்லப்பட்டது.
போராளி இயக்கங்களிடையே மோதல் ஏற்பட இந்திய அரசுதான் காரணம் என்கிற சந்தேகம் பரவலாக எழுந்தவண்ணம் இருந்தது.
108: பிரபாகரனைக் கைது செய்யுங்கள்!
இந்தியாவுக்கு, விடுதலைப் புலிகளின் வெளித் தொடர்புகள் குறித்து ஐயம் எழுந்தது. பிரபாகரனுக்கு இலங்கைப் பிரதமர் பிரேமதாசா, ""இந்தியா இனி உதவாது; அவர்களை நம்புவதைவிடத் தன்னை நம்பலாம்'' என்று செய்தி அனுப்பியுள்ளதாகவும் இந்திய உளவுப் பிரிவு நம்பியது.
அதுமட்டுமல்ல, சென்னையில் இருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கிறார் என்றும் நம்பியது.
இவர்கள் இவ்வாறு தொடர்பு கொள்கிற விஷயம் இந்தியாவுக்குத் தெரியும் என்றும், இதனால் விடுதலைப் புலிகளுக்கு விளையும் நன்மைகளைவிட, தீமைகளே அதிகமாகச் சம்பவிக்கும் என்றும், இத் தொடர்புகள் ஒப்பந்தத்தைப் பாதித்தால் அது நன்றாக இருக்காது என்றும் பிரபாகரனிடம் தெரிவிக்குமாறு இந்தியத் தூதுவர், தளபதி மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்குக்கு அறிவுறுத்தியதாகத் தகவல்கள் உண்டு. (ஆதாரம்: "இன்டர்வென்ஷன் இன் ஸ்ரீலங்கா' - மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்)
இந் நிலையில், பொதுமன்னிப்பு வழங்கப்பட்டும் எந்தவித வழக்குமின்றி இலங்கைச் சிறைகளில் சுமார் 1,300 பேர் அடைபட்டிருப்பது குறித்து விடுதலைப் புலிகள் அமைப்பு கேள்வி எழுப்பியது. இந்தத் தகவலை தீட்சித் கவனத்துக்குக் கொண்டு வந்ததும், அதில் புலிகள் எத்தனை பேர் என்று பட்டியல் கொடுத்தால் உடனடியாக விடுதலை செய்துவிடலாம் என்று ஜெயவர்த்தனா கூறுவதாகத் தெரிவித்தார்.
ஆனால் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்ல விடுதலைப் புலிகள் விரும்பவில்லை. அப்படிப் பெயர் கொடுக்கப்பட்டால் அதுவே அவர்களுக்கு மரணவோலை ஆகிவிடும்; அவர்கள் மீது வீணான வழக்குகள் புனையப்படலாம்; வெளியே விட்டுசுடப்படலாம்; மோதலை ஏற்படுத்தி சாகடிக்கவும் செய்ய வாய்ப்புண்டு - என்று பல வகைகளிலும் யோசித்து பெயர் கொடுக்கும் யோசனை புலிகளால் நிராகரிக்கப்பட்டது. எனவே அனைவரையும் விடுவிக்கவேண்டும் என்று பொதுவில் கோரிக்கை வைத்தனர்.
உடனே தீட்சித் சொன்னார், ""விடுதலைப் புலிகள் 8 சிங்கள வீரர்களைக் கைதுசெய்து வைத்திருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்யும்படி அரசு கேட்கிறது; அவர்கள் விடுவிக்கப்பட்டால் 1,300 பேரை விடுவிப்பது குறித்துப் பேசலாம்'' என்றார்.
8 சிங்களக் கைதிகளின் விடுதலையும் நடைபெறவில்லை; 1,300 பேர் விடுதலையும் நடைபெறவில்லை.
""பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம் பகுதியில் அரசுக்குள் ஓர் அரசு என்ற நிலையில் அந்தப் பகுதியை நிர்வகித்து வந்தார்களாதலால் அவர்களது குரலே எடுபட்டது. மக்கள் தொடர்புத்துறை அவர்களிடம் வலுவாக இருந்தது. அவர்களிடம் குறைந்தது மூன்று தினசரிகள் அச்சக வசதியுடன் இருந்தது என்றே மதிப்பிடுகிறேன். சொந்த வானொலி நிலையம் மற்றும் சொந்தமாகத் தொலைக்காட்சி நிலையம் ("நிதர்சனம்' என்கிற பெயரில்) ஆகியவற்றை இயக்கி வந்தனர். இதன் வீச்சை யாழ்ப்பாணப் பகுதியின் குக்கிராமங்களிலும் காணமுடிந்தது.
இது தவிர, யாழ்ப்பாணத்தின் முன்னாள் தளபதியாக இருந்த கிருஷ்ணகுமார் என்கிற கிட்டு, ஒரு காலை இழந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது தலைமையில் சென்னையில் தொலைத் தொடர்பு வசதி கொண்ட அமைப்பு இயங்கியது. இதன்மூலம் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய நாடுகளுக்கு உடனுக்குடன் செய்தி பரிமாறிக்கொள்ள அவர்களால் முடிந்தது. தினமும் செய்தி வெளியீடுகளை வெளியிட்டுக்கொண்டே இருந்ததால், உடனுக்குடன் அவர்களது செய்தி உலகம் முழுவதும் வெளியாகிக்கொண்டிருந்தது. ஒரே நாளில் பல செய்தி வெளியீடுகளை வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக அமைதிப்படையின் செயல்பாடுகளும், அதன் ராஜதந்திர நடவடிக்கைகளும் உடனுக்குடன் உலகுக்குத் தெரிந்துவிடுகின்றன'' என்று தீபிந்தர் சிங் தனது நூலில் (பக்.91) குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாள் இரவு (செப்டம்பர் 14/15-1987) தூதுவர் தீட்சித், ஹர்கிரத் சிங்கை போனில் அழைத்து, "நாளை பேச்சுவார்த்தைக்கு வரும் பிரபாகரனைக் கைது செய்யவேண்டும் அல்லது சுட்டுக்கொன்றுவிட வேண்டும்' என்று சொன்னதும், அதிர்ந்துபோன தளபதி ஹர்கிரத் சிங், அமைதிப் படைத்தலைவர் தீபிந்தர் சிங்கிடம் இதைத் தெரிவித்துவிட்டு, இதற்கான பதிலைப் பின்னர் சொல்வதாகக் கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்.
மறுநாள் தீட்சித்திடம், ஹர்கிரத் சிங் போனில் தொடர்பு கொண்டு, "இந்திய ராணுவம் பாரம்பரியப் பெருமை கொண்ட அமைப்பு. இப்படிப்பட்ட ராணுவத்தைச் சேர்ந்த ஒரு வீரன், முதுகில் சுடமாட்டான். அதுவும் வெள்ளைக்கொடியுடன் சமாதானப் பேச்சுக்கு வரும் நிலையில் கொல்வது அழகல்ல என்று தளபதி சொல்லச் சொன்னார். எனவே, உங்களது வழிகாட்டுதலின்படி என்னால் நடக்க இயலாது' என்றார்.
மேலும் ஹர்கிரத் சிங் கூறுகையில், "விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை நாம்தான் பேச்சுவார்த்தைக்கு - அதாவது ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த என்று அழைத்திருக்கிறோம்' என்றும் நினைவுபடுத்தினார்.
உடனே தீட்சித், "அவர்தான் (ராஜீவ் காந்தி) இந்த உத்தரவுகளை எனக்குப் போடுகிறார். ராணுவம் அவரது காலை வாரிவிடக்கூடாது.
நீங்கள் அமைதிப்படையின் தளபதி. நீங்களே இதற்குப் பொறுப்பு ஏற்கவேண்டும்' என்று கடுமையான குரலில் உத்தரவிட்டார்.
அடுத்த நாள் இந்திய ராணுவத்தின் (பொது) இயக்குநராக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் பி.சி.ஜோஷி போனில் தொடர்புகொண்டு, எனது நிலைக்குப் பாராட்டு தெரிவித்தார். ஆனால், அதே நேரம் எனது செயல்பாட்டுக்காக ராணுவத் தளபதி சுந்தர்ஜி கடுமையாகக் கோபித்துக்கொண்டார்.' (இன்டர்வென்ஷன் இன் ஸ்ரீலங்கா - மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங். பக்.57)
இந்திய - இலங்கை ஒப்பந்தம் என்பதே கேள்விக்குறியான நிலைமை என்பதை மேற்கண்ட நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன.
109: திலீபன் உண்ணாவிரதம்!
உண்ணாவிரதமிருந்த திலீபனுடன் பிரபாகரன் தமிழ் மக்களினதும், தமிழர் தாயகத்தினதும் உரிமைகளைக் காப்பாற்றும் வகையில், இந்திய அரசாங்கத்தினதும், இந்திய மக்களினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் (15.09.1987) தொடங்கினார்.
அவரது ஐந்து கோரிக்கைகள்தான் என்ன?
1. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறையில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களவர் குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை "புனர்வாழ்வு' என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
4. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் போலீஸ் நிலையங்கள் திறப்பதை உடனே நிறுத்தவேண்டும்.
5. இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோர்க்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் திரும்பப்பெற்று, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள ராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை உண்ணாவிரத மேடையில் பிரசாத் படிக்க, இதே கோரிக்கைகளை 13-08-1987 அன்று இந்தியத் தூதர் அலுவலகத்திற்கு அனுப்பி 24 மணிநேரம் ஆன நிலையில், தகுந்த தீர்வு கிடைக்காத காரணத்தால், சாகும்வரை உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த விடுதலைப் புலிகள் பிரதேசப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் (13-08-1987) தீர்மானிக்கப்பட்டது. பிரபாகரனும் நிலைமையை விளக்கி தீட்சித்துக்குக் கடிதம் எழுதினார். ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயிலையொட்டி உண்ணாவிரத மேடை அமைக்கப்பட்டிருந்தது. தாயற்ற திலீபனுக்கு நடுங்கும் கரத்துடன் வந்த ஒரு தாய், திருநீற்றைப் பூசினார். மாத்தையா திலீபனை உண்ணாவிரத மேடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார். அவர் அருகே மு.வ.யோ.வாஞ்சிநாதன், ராஜன், பிரசாத், சிறீ ஆகியோர் அமர்ந்தனர்.
திலீபனின் இயற்பெயர் இராசையா பார்த்திபன் ஆகும். யாழ் மாவட்டத்திலுள்ள ஊரெழு என்னும் பனைமரங்கள் நிறைந்த கிராமத்தில், ஆசிரியர் இராசையா தம்பதியினருக்கு நாலாவது கடைக்குட்டி மகனாகப் பிறந்தார். மருத்துவ மாணவனாக இருக்கையில் பிரபாகரனைத் தலைவராக ஏற்று இயக்கத்தில் சேர்ந்தார்.
இவரது பணியில் திருப்தியுற்ற தளபதி கிட்டு பல்வேறு உயர்வுகளை அளித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளராக, கிட்டுவின் பரிந்துரையின்படி பிரபாகரன் நியமித்தார்.
திலீபனின் முயற்சியால் விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் துணை அமைப்புகளாக (1) தமிழீழ விடுதலைப் புலிகளின் மாணவர் இயக்கம் (SOLT) , (2) தமிழீழ மகளிர் அமைப்பு, (3) சுதந்திரப் பறவைகள் அமைப்பு. (4) தமிழீழ தேசபக்தர் அமைப்பு, (5) தமிழீழ விழிப்புக் குழுக்கள், (6) தமிழீழக் கிராமிய நீதிமன்றங்கள், (7) சுதேச உற்பத்திக் குழுக்கள், (8) தமிழீழ ஒலி-ஒளி சேவைக் கட்டுப்பாட்டுச் சபை, (9) தமிழர் கலாசார சபை மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு பெரும் பாராட்டைப் பெற்றன.
அண்ணல் காந்தி, ஐரிஷ் நாட்டுப் போராட்ட வீரன் பாபி சாண்ட்ஸ், பொட்டி ஸ்ரீராமலு போன்றோர் நீராகாரம் அருந்தித்தான் உண்ணாவிரதம் இருந்ததாகப் படித்திருக்கிறோம். ஆனால் திலீபன் ஒரு சொட்டு நீர்கூட அருந்தாத உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன், தகவல் தொடர்பு சாதனங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் உண்ணாவிரதம் இருந்தபோது ஒரு சொட்டு நீர்கூட அருந்தாத உண்ணாவிரதத்தையே மேற்கொண்டார். அவர் வழியில் திலீபன்.
பக்கத்தில் இருந்த மேடையில் பிரசாத் தலைமை ஏற்க, உண்ணாவிரதத்துக்கான காரணங்களை நடேசன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் விளக்கினார்கள்.
மேடையில் ஓர் இளைஞன், "திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல - தமிழ்மக்களின் ஒட்டுமொத்தமான கோரிக்கை இது. தமிழீழம் தாருங்கள் என்றுகூடக் கேட்கவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என்றுதான் அவர் கேட்கிறார்' என்று பேசினார்.
அன்று இரவு பதினோரு மணியளவில் பிரபாகரன், திலீபனைப் பார்ப்பதற்காக வந்தார். அவருடன், சொர்ணம், இம்ரான், அஜீத், சங்கர், மாத்தையா, ஜானி என்று பலரும் வந்திருந்தனர்.
முதல் நாள்: இரவு நாடித் துடிப்பு 88, சுவாசத் துடிப்பு 20.
இரண்டாம் நாள்: முகம் கழுவிக்கொண்டார்; தலைவாரிக் கொண்டார்; சிறுநீர் கழித்தார்; மலம் போகவில்லை.
மேடையில் கவிதைகள் முழங்கிக்கொண்டிருந்ததைக் கேட்ட திலீபன், "பேசவேண்டும் போலிருக்கிறது. மைக் தாருங்கள்' என்றார்.
இரண்டு நிமிடத்துக்கு மேல் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு மைக் வழங்கப்பட்டது.
""அன்பார்ந்த மக்களே! என்னால் அதிகம் பேசமுடியாது. ஆனாலும் உங்களுடன் பேசவேண்டும் போல் இருக்கிறது. உங்களைப் பார்க்கும்போது, நீங்கள் தரும் ஆதரவைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடைகிறேன். எனது ஐந்து கோரிக்கைகளும் நிறைவேறும் மட்டும் ஒரு சொட்டு நீர்கூட அருந்த மாட்டேன். இது உறுதி. இதையே தலைவர் பிரபாகரனிடமும் வலியுறுத்திக் கூறிவிட்டேன். இறக்க நேரிட்டால், அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். நான் இறந்ததும் விண்ணில் இருந்து அங்கேயுள்ள என் நண்பர்களுடன் சேர்ந்து தமிழீழம் மலரப்போகும் அந்தநாளை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பேன். என்னால் அதிகம் பேசமுடியவில்லை. என் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆர்வமுடன் கலந்துகொள்ளும் உங்களுக்கு என் நன்றிகள். வணக்கம்''
அவரது பேச்சைக் கேட்ட மக்கள் கண்ணீர் சிந்தினர். அன்று இரவும் பிரபாகரன் வந்தார்.
மூன்றாம் நாள்: "மலம் போகவேணும் போலதான் இருக்கு' என்றார் திலீபன்.
"இறங்கி வாருங்கள்' - உதவுகிறார் டாக்டர் வாஞ்சிநாதன்.
"வேண்டாம் விடுங்க... நானே வருகிறேன்.'
சிறுநீர் கழியவில்லை...சிரமப்படுகிறார்.
"தண்ணீர்-குளுக்கோஸ் ஏதும் குடித்தால்தான் சிறுநீர் வரும்' என்கிறார் டாக்டர்.
"என்ன பகிடியா பண்ணுறீங்க - சொட்டுத் தண்ணீர்கூட குடிக்கமாட்டேன்' என்றார் திலீபன் உறுதியோடு.
ஒலிபெருக்கியில் காசி ஆனந்தன் கவிதைகள் முழக்கமிட்டுக் கொண்டிருந்தது.
3-ஆம் நாள் நாடித்துடிப்பு 110. சுவாசத் துடிப்பு 24.
நான்காம் நாள்: நாடித்துடிப்பு 120. சுவாசத் துடிப்பு 24.
நாடித்துடிப்பு சாதாரணமாக 72-80-ம், சுவாசத் துடிப்பு 16-22-ம் இருக்கவேண்டும். அதே நாள் இரவில் நாடித்துடிப்பு 114. சுவாசத்துடிப்பு 25.
1986-இல் நடைபெற்ற ஒரு மோதலில் எதிரியின் குண்டை வயிற்றில் தாங்கியதால் திலீபனின் 14 அங்குலக் குடலை அகற்றிவிட்டார்கள். அப்போது மூன்று மாதம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். அந்தக் காரணமும் இப்போது சேர்ந்து அவருக்கு வயிற்றில் வலி எழுந்தது.
ஐந்தாம் நாள் - ஆறாம் நாள்: கொழும்பிலிருந்து இந்தியத் தூதுவர் அலுவலகத்தில் இருந்து முக்கிய நபர் வரப்போவதாகச் செய்தி கசிந்தது.
கிட்டுவின் தாயார் ராஜலட்சுமி அம்மாள் உண்ணாவிரத மேடைக்கு வந்து, திலீபனை அணைத்து வாழ்த்தும் வேளையில், அவரது அழுகை நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
அன்று மாலை யாழ்க்கோட்டை ராணுவ முகாம் பொறுப்பாளர் ஜெனரல் பாரா, திலீபனைப் பார்க்க வந்தார். பிரிகேடியர் ஃபெர்னான்டோ உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து சிங்களக் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தினார்.
ஆறாம் நாள்: தளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜானி ஆகியோர் வந்து திலீபனின் தலையை வருடி கண்கலங்கிச் சென்றனர்.
"கிட்டு அண்ணனைப் பார்க்கவேண்டும்' திலீபன் கோரிக்கை வைத்தார். அவர் அப்போது சென்னையில் இருந்தார்.
மாலை, ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்காராவும் அவரது கட்சியினரும் வந்து பார்த்தனர்.
யாழ்ப்பாணம் வந்த இந்திய உதவித் தூதுவர் நிருபம் சென், முகாமில் புலிகளின் பிரதிநிதிகளிடம், "உண்ணாவிரதப் போராட்டங்களால் இந்தியாவை நிர்ப்பந்திக்க முடியாது' என்று எச்சரித்துவிட்டுச் சென்றார்.
ஏழாம் நாள்: சென்னையிலிருந்து இந்தியா டுடே பத்திரிகையாளர் மற்றும் சென்னைத் தொலைக்காட்சிக் குழுவினர் வந்தனர்; படம் பிடித்தனர்.
எட்டாம் நாள்: கூட்டம் லட்சக்கணக்கில் சேர்ந்துவிட்டதால் வெயிலைத் தாக்குப்பிடிக்க கொட்டகை போடும் வேலை நடந்தது.
வடக்கு-கிழக்குப் பகுதிகளில் பல இடங்களில் திலீபனின் உண்ணாவிரதத்தை ஆதரித்து, அடையாள உண்ணாவிரதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ரத்த அழுத்தம் 80/50.
நாடித் துடிப்பு 140.
சுவாசம் 24.
இந்திய அமைதிப்படையினர் விடுதலைப் புலிகளைச் சந்தித்தனர். இவர்கள் சிங்களப் போலீசாருக்குப் பதில் இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படையைக் கொண்டு வருவது குறித்து பேசிச் சென்றார்கள். உண்ணாவிரதம் குறித்து எதுவும் பேசவில்லை.
ஒன்பதாம் நாள்: இந்திய அமைதிப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங் ஹெலிகாப்டரில் யாழ் பல்கலை மைதானம் வந்தார். பிரபாகரனைச் சந்தித்தார். இருவரும் தனித்தனி வாகனங்களில் புறப்பட்டு யாழ்கோட்டை ராணுவ முகாம் சென்றனர். பேச்சுவார்த்தையில் பலன் எதுவுமில்லை.
தொடர்ந்து அதே நாளில் பிற்பகல் 1.30 மணிக்கு, இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் பிரபாகரன் சந்திப்பு நடந்தது. பேச்சுவார்த்தையில் தீபிந்தர் சிங், ஹர்கிரத் சிங், பிரிகேடியர் ஃபெர்னாண்டஸ், கேப்டன் குப்தா மற்றும் புலிகள் தரப்பில் மாத்தையா, செ.கோடீஸ்வரன் (வழக்கறிஞர்), அன்டன் பாலசிங்கம், சிவானந்த சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் தூதர் உறுதிமொழி மட்டுமே அளித்தார். உண்ணாவிரதம் நிறுத்தப்படுவது குறித்து ஏதும் பேசவில்லை.
பத்தாம் நாள்: திலீபனின் கை, கால்கள் அசைவின்றி சோர்ந்து கிடந்தன.
நாடித்துடிப்பு 52.
ரத்த அழுத்தம் 80/50.
சராசரி மனிதனின் அளவுகளைவிட அனைத்தும் குறைந்துவிட்டன. இனி, திலீபனுக்கு எந்த நிமிடமும் எதுவும் நேரலாம்.
நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாட்டுத் தூதுவர்கள் வந்து திலீபனைப் பார்த்துச் சென்றார்கள்.
பதினோராம் நாள்: கோமாவுக்கு முந்தைய நிலையில் உடல் அங்குமிங்கும் அசைவது போல திலீபனின் உடல் அவரையறியாமலே புரளத் தொடங்கியது.
யாழ் மாவட்டத்தில் அனைத்து நிறுவனங்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்தன. "நிதர்சனம் டிவி' கடந்த பத்து நாட்களாக உண்ணாவிரதச் செய்தியைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தது.
பன்னிரண்டாம் நாளில், திலீபனின் உடல்நிலை மோசமாகிவிட்டது என்ற செய்தி யாழ் பகுதி முழுவதும் பரவியது.
265 மணி நேரம், நீரின்றி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி, தனது சுயநினைவு தப்பினாலும் குளுக்கோஸ், நீர் தந்துவிடாதீர்கள் என்று கூடியிருந்தோரிடம் சத்தியவாக்கு வாங்கிக்கொண்டு புழுவாய்த் துடித்த திலீபனின் உயிர் 26-09-1987 காலை 10.48 மணிக்குப் பிரிந்தது.
எங்கும் அழுகை... விம்மல்... இலங்கை இந்தியா எதிர்ப்புக் குரல் எழுந்தது.
எம்பார்ம் செய்ய மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட உடல், பிற்பகல் 4.15 மணியளவில் மக்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ஈரோஸ் தலைவர் பாலகுமார், பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதனர். பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். மனிதநேயம் தழைக்கும் இடத்தில்தான் அகிம்சை வெல்லும் என்பது திலீபன் மரணம் மூலம் உலகுக்கு உணர்த்தப்பட்டது.
(ஆதாரம்: தியாகப் பயணத்தில் திலீபனுடன் 12 நாட்கள்: மு.வே.யோ.வாஞ்சிநாதன்).
110: இடைக்கால நிர்வாக சபையை நோக்கி...
திலீபன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது தீட்சித் வந்திருந்து, அவரின் ஐந்து அம்சக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டிருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் அவர் பிரபாகரனை 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு "திலீபனின் உயிர் பிரிந்த பிறகு 15 நிமிடம் கழித்து' சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியிருந்தார். கெüரவம் பார்க்காமல் அவர் நேராக வந்திருந்தாலோ, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவோ வாக்குறுதி அளித்திருந்தால் நிலைமையே மாறி இருக்கும்.
திலீபன் உயிர் போன பிறகு ஐந்து அம்சக் கோரிக்கைகளை ஏற்பதாகவும், அதனை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தபோதிலும், விடுதலைப் புலிகளின் மனதிலிருந்து அமைதிப்படையின் மீதிருந்த மரியாதையும் நம்பிக்கையும் அகன்றுவிட்டிருந்தது; மக்களுக்கும்தான். தீட்சித்தின் பிடிவாதம் மாறாத வடுவை அவர்கள் மனதில் ஏற்படுத்திவிட்டது.
திலீபன் உயிரிழப்பைத் தாங்கமுடியாத மக்கள் கூட்டம் வன்முறையில் இறங்கியது. இரண்டு பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டதற்கு தண்டவாளங்களில் ஏற்பட்டிருந்த தடையே காரணமானது.
யாழ்ப்பகுதி முழுவதும் திலீபனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. சாலை எங்கும் மனிதத் தலைகளாகவே காட்சியளித்தன. அவர்களின் மனதில் தாங்க முடியாத சோகம். அரசுகளின் மீது வெறுப்பு. ஒவ்வொரு வீட்டிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் துக்கம் நேர்ந்தால் வீட்டில் வாழை மரம், தென்னங் குருத்துத் தோரணம் கட்டும் பழக்கமுண்டு. மக்கள் சந்துக்குச் சந்து இந்த வாழை மரங்களை, தங்கள் வீட்டில் நடந்த துக்கம் போன்று கட்டியிருந்தார்கள். இறுதி நாள் அஞ்சலிக் கூட்டத்தில் மட்டும் 3 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
"திலீபன் மரணமே தியாகத்தில் தோய்ந்த மரணமாகும். வாழும்போது மட்டுமல்ல; சாவுக்குப் பின்னரும் அவருடைய தியாகம் தொடர்ந்தது. தான் இறந்தால், மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சிக்குத் தனது உடலை வழங்க வேண்டும்' என்று சொல்லியிருந்தார். அதன்படி அவரது உடல் அடங்கிய பெட்டி யாழ் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
"வாழ்விலும் சாவிலும் தியாக வரலாறு படைத்தான் திலீபன். மில்லர் புரிந்தது மறத்தியாகம் என்றால் திலீபன் புரிந்தது அறத்தியாகம்' என்கிறார் பழ.நெடுமாறன் தனது "தமிழீழம் சிவக்கிறது' நூலில். இறுதி நாள் ஊர்வலத்தில் அவரும் கலந்துகொண்டு, அஞ்சலிக் கூட்டத்திலும் பேசினார்.
திலீபன் மரணத்தைத் தொடர்ந்து, இடைக்கால நிர்வாக சபை அமைப்பதில் வேகம் பிடித்தது. செப்டம்பர் 26-இல் பேசியதையொட்டி, அடுத்தப் பேச்சு செப்டம்பர் 28-இல் என்று முடிவெடுத்தபடி பிரபாகரன் உள்ளிட்டோர் பலாலி ராணுவ முகாமில் கூடியிருந்தனர். இந்தியத் தூதுவர் வருகை சிறிது நேரம் தடைப்பட்டது.
நிர்வாக சபைத் தலைவர் பதவிக்கு மூன்று பெயர்கள் கொண்ட பட்டியலில் ஜெயவர்த்தனா ஒருவரைத் தேர்ந்தெடுப்பார். ஜெயவர்த்தனா யாரைத் தேர்ந்தெடுக்கிறார் என்கிற விவரத்துடன் தீட்சித் வருகை எதிர்நோக்கப்பட்டது.
தீட்சித் வந்தார். ஜெயவர்த்தனா, சி.வி.கே.சிவஞானத்தைத் தேர்ந்தெடுத்ததாக அறிவித்தார். பிரபாகரனுக்கு இந்த முடிவு உகந்ததாக இல்லை. என்.பத்மநாதனை அவர் முடிவு செய்திருந்தார்.
தீட்சித், ""பட்டியலில் உள்ளபடிதான் அவர் தேர்வு செய்திருக்கிறார்'' என்றார்.
""இருக்கலாம்...எனது விருப்பம் நான் கொடுத்த வரிசைப்படி முதலாவது பெயராக பத்மநாதனில் ஆரம்பிக்கிறது. பத்மநாதன் முன்னாள் அரசு ஊழியர். தாசில்தார் ரேங்கில் பணிபுரிந்தவர். கிழக்குப் பகுதியில் அவர் பணிபுரிந்ததால், கிழக்குக்கு முக்கியத்துவம் கொடுத்தது போன்று இருக்கும்'' என்றார்.
""ஜெயவர்த்தனா வேறு மாதிரி சிந்தித்தார். "பத்மநாதன் மட்டக்களப்பு சிறை உடைப்பில் ஒரு குற்றவாளி. அதனால் அவர், அவரை விரும்பவில்லை.''
""ஜெயவர்த்தனாவுக்கு நாங்கள் எல்லோருமே குற்றவாளிகள்தான். அவரது நியாயம் எங்களுக்கு ஏற்பில்லை'' என்று பிரபாகரன் தெரிவித்தார்.
பிரபாகரனை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று தீட்சித் பெரிதும் முயன்றார். வாக்குவாதங்கள் - இடையிடையே சிற்றுண்டி எல்லாம் குறுக்கிட்டும் மாலை 5 மணி வரை பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.
முடிவில் பிரபாகரன் சம்மதித்தார் - என்று லெப். ஜெனரல் தீபிந்தர் சிங் இந்தச் சம்பவம் பற்றித் தனது நூலில் குறித்து வைத்திருக்க, மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்கின் நூலில் சிறிது மாற்றம் உள்ளது. "சி.வி.கே. சிவஞானம் பெயர், ஜெயவர்த்தனா, தீட்சித் விருப்பம் என்றும், சிவஞானம் தீட்சித்தின் நெருங்கிய சகா மற்றும் அவருக்கு உளவு சொல்கிறவர் தீட்சித்தின் நிதி வழங்கும் பட்டியலில் அவர் உள்ளவர் என்றும், அவரையே அந்தப் பதவியில் அமர்த்துவதில் உறுதியாக ஜெயவர்த்தனா இருந்தார்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து விடுதலைப்புலிகள் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசு தனது முடிவுக்கு எங்களைக் கட்டாயப்படுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஒப்பந்தத்தின் முன்னதாக பேசித் தீர்க்க வேண்டியவற்றை பின்னர் பேசுவதால் ஏற்படும் விளைவுகளில் இதுவும் ஒன்று.
திலீபனின் உயிரிழப்பு விடுதலைப் புலிகளிடத்தும், யாழ் மக்களிடத்தும் மாறாத சோகத்தை ஏற்படுத்தியருந்த நிலையில், இவ்வியக்கம் அடுத்ததொரு சோகத்தையும் சந்திக்க நேர்ந்தது.
கசப்பு மருந்தாக இடைக்கால நிர்வாக சபைத் தலைவர் தேர்வு இருந்தாலும், கெட்டதில் நல்லதைத் தேடுவது என்ற அடிப்படையில் விடுதலைப்புலிகள் நிலைப்பாடு இருந்தது.
சென்னையில் இருந்த அவர்களது அலுவலகத்தை முற்றும் முழுதாகக் காலி செய்து கொண்டு யாழ்ப்பாணம் வரும் முடிவுடன் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 17 பேர் படகில் இலங்கையிலிருந்து கிளம்பினர்.
அவர்களின் பயணம் இந்திய அமைதிப்படைத் தலைவர்களுக்கும் இந்தியத் தூதுவருக்கும் தெரிவிக்கப்பட்டே நடந்தது.
இந்நிலையில், சிங்களக் கடற்படை, குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டோர் சென்ற படகைச் சுற்றி வளைத்தது. அவர்கள் ஆயுதம் கடத்துவதாகக் கூறி கைது செய்ததாகவும் அறிவித்தது.
இந்த செய்தி, விடுதலைப் புலிகள் மத்தியிலும் யாழ்ப்பாண மக்கள் மத்தியிலும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.