Saturday 30 May 2020

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (118-122)


118: புலிகளின் எதிர்த் தாக்குதல்!
அக்டோபர் 10-ஆம் தேதி மோதல் தொடங்கப்பட்டதன் நோக்கம், விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனை சிறைப்பிடிப்பது அல்லது சுட்டுக் கொல்வது என்பதே! தலைமையைக் குறி வைத்து அழித்துவிட்டால் விடுதலைப் புலிகள் அமைப்பு சிதறிவிடும் என்பது திட்டம்.

இத்திட்டப்படி, தளபதிகளைக் கைது செய்யவும் படைப் பிரிவுகளில் சிலவற்றை இறக்கியது அமைதிப் படை. அடுத்து பிரபாகரன் இருக்குமிடத்தைச் சுற்றிவளைப்பது. இவ்விரு திட்டங்களும் பெரிய அளவில் முடுக்கிவிடப்பட்டன.
யாழ் புறநகரில், கொக்குவில், பிரம்படி பகுதியில் உள்ள தலைமையிடத்தில் பிரபாகரன் இருக்கிறார் என்று இலங்கை உளவுப் படை அளித்த தகவலையடுத்து, இந்திய அமைதிப்படை அப்பகுதியை முற்றுகையிட முடிவு செய்தது.
அக்டோபர் 12-ஆம் தேதியன்று சிறப்பு அதிரடிப் படைப் பிரிவை ஹெலிகாப்டர் மூலம் இரவு ஒரு மணியளவில் இறக்கியது. (சேகர் குப்தா கூற்றுப்படி 70 பேர்) ""அதிரடிப் படை வீரர்களைத் தொடர்ந்து 13-வது சீக்கிய மெதுரகக் காலாட்படையைச் சேர்ந்த 30 வீரர்கள் அடங்கிய இன்னொரு பட்டாளமும் தரையிறங்கியது.
அதிரடிப் படையினர் விடுதலைப்புலித் தலைவரைக் கைது செய்யும் பணியில் இறங்க, சீக்கியப் படையினர் தங்கள் தளத்தைக் கண்காணிப்பில் வைத்துக் கொள்வது என்பதுதான் ஏற்பாடு.
அதிரடிப் படை வீரர்களைக் கொண்டு வந்த ஹெலிகாப்டர்கள் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலுக்கு உள்ளானதால், சீக்கிய காலாட் படையினர் கொக்குவில் கிராம சபைக்கு 300 அடி தள்ளி கிழக்கே இருந்த பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அருகில் தரையிறக்கப்பட்டனர். அவர்கள் அசையக் கூட முடியாமல் நாலாப்புறமும் விடுதலைப் புலிகளால் துரிதகதியில் சுற்றி வளைக்கப்பட்டுச் சுடப்பட்டனர்.
மருத்துவ பீடத்தின் பலமான மூன்று மாடிக் கட்டடத்திற்குள் உள்புகுந்து கொண்ட விடுதலைப் புலிகள் அதன் மேல் மாடியில் பாதுகாப்பான - சுடுவதற்கு வசதியான இடங்களில் தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர். அதிகாலையிலேயே இரு தரப்பினருக்கும் துப்பாக்கிச் சூடு ஆரம்பமாகிவிட்டது''- என்று "முறிந்தபனை' மோதலின் ஆரம்பத்தை விவரிக்கிறது.
இதே சம்பவத்தை தீபிந்தர் சிங் தனது நூலில் குறிப்பிடுகையில், ""பலமுறை பறந்து அதிரடிப் படையைச் சேர்ந்த 103 வீரர்களையும் சீக்கியப் படையைச் சேர்ந்த 30 வீரர்களையும் இறக்கினோம். ஆனால் நாலாபுறத்திலிருந்தும் விடுதலைப் புலிகளின் குண்டுகள் சீறிப் பாய்ந்து வந்தன. இதன் விளைவாக 3 ஹெலிகாப்டர்கள் சேதமடைந்தன. எனவே, மேற்கொண்டும் பறக்க இயலாது என விமானிகள் மறுத்துவிட்டனர். எனவே 13-வது சீக்கியப் படையணியில் எஞ்சியிருந்தவர்களை அனுப்பமுடியவில்லை. பிற படையணிகளையும் அனுப்ப முடியவில்லை என்ற செய்தியை ஏற்கெனவே திடலில் இறங்கியவர்களிடம் செய்தி தெரிவிக்கவும் முடியாதவாறு அவர்களின் "வாக்கி-டாக்கி செட்டுகள்' புலிகளால் தாக்கப்பட்டு பழுதாகிவிட்டன.
இதற்குள் விடியும் வேளை நெருங்கி விட்டதால் அதிரடிப் படையினர் பிரபாகரன் இருக்குமிடத்தை வளைத்துக் கொள்ள முன்னேறினார்கள். ஆனால், அவர்கள் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டனர். கடும் போரின் முடிவில் ஒரேயொருவர்தான் மிஞ்சினார் (நெடுமாறனின் தமிழீழம் சிவக்கிறது மற்றும் தீபிந்தர் சிங்கின் ஐடஓஊ ஐச நதஐ கஅசஓஅ).
இந்தச் சண்டையின்போது அந்தப் பகுதியில் இருந்த கவிஞர் காசி ஆனந்தன் கூறியதாக பழ.நெடுமாறன் நூலில் கூறப்பட்டுள்ள தகவல் வருமாறு: ""தம்மைச் சுற்றிவளைத்துப் பிடிக்க இந்தியப் படை முயலும் என பிரபாகரன் உணர்ந்திருந்தார். ஹெலிகாப்டர்கள் மூலம் படைகளைக் கொண்டு வந்து இறக்குவார்கள் என்பதையும் அவர் ஊகித்துணர்ந்திருந்தார்.
இதன் காரணமாக அவர், பல்கலைக்கழக வளாகத்திற்குள் புலிகளை மறைவாக நிறுத்தி வைத்திருந்தார். இவர்கள் இருப்பது தெரியாமலேயே வந்திறங்கிய அமைதிப் படை வீரர்கள் புலிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாயினர். இந்த இடத்துக்கு அருகில்தான் நாங்கள் தங்கியிருந்தோம். தம்பி, தானே தலைமை ஏற்று ஆயுதமேந்தி, களத்தில் நின்று, உத்தரவுகளைப் பிறப்பித்த காட்சி, நிலவொளியில் அவர் நெருப்பாகத் தெரிந்தார்'' என்று கூறியுள்ளார்.
இந்தப் போரில் பிரபாகரன், மாத்தையா, ஜானி, பொட்டு அம்மான், யோகி, நடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
விடுதலைப் புலிகள் தரப்பில் பொட்டு அம்மான் வயிற்றில் குண்டு பாய்ந்து படுகாயமுற்றார். கையிலும் பலத்த காயத்துடன் தப்பித்தார்.
இப் போர் குறித்து அடேல் பாலசிங்கம் எழுதிய "சுதந்திர வேட்கையில்' கூறப்பட்டிருப்பதாவது:
""இதேவேளை, பாரசூட் அதிரடிப் படையினர் சீக்கியப் படையணியிலிருந்து பிரபாகரனை அழித்தொழிக்கும் இலக்கை மட்டும் தங்கள் தனி இலக்ககாகக் கொண்டு அவர் இருந்த இடத்தைக் குறி வைத்து நகரத் தொடங்கினர். அந்த இடத்தை நெருங்குவதற்கு முன்னமே அங்கிருந்து அவர் வெளியேறி விட்டதை அவர்கள் அறிந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், ""தமக்கு பரிச்சயமில்லாத சூழலில் தாம் யாரைத் தேடிச் செல்கிறார்களோ, அவரை முன்பின் பார்த்தறியாத நிலையில், தங்களது இலக்குக்குள் அகப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை அமைதிப்படை ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்றது. யாழ் கோட்டையிலிருந்து புறப்பட்ட கவச வாகனங்கள் மக்கள் மீது ஏறிச் சென்றது''- என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமைதிப் படையின் இந்நடவடிக்கை "ஆபரேஷன் பவான்' என்றழைக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் களைவது என்று ஆரம்பித்து அவ்வியக்கத் தலைமையை அழித்தொழிப்பது என்றானது. "பவான்' என்கிற "சுத்தமான காற்று' விடுதலைப் புலிகளினதும் தமிழ்மக்களினதும் துயர்களுக்கு புயற்காற்றானது. புயலில் சிக்குண்ட மக்களின் நிலைக்கு அவர்கள் ஆளானார்கள்.
பிரபாகரனைப் பிடிப்பது-அழிப்பது என்பது நடைபெறவில்லையென்றாலும் விடுதலைப் புலிகளின் வெளிப்படையான யாழ்ப்பாண நடவடிக்கைகள் மறைந்து போயிற்று.
119: அமைதிப்படையிடம் யாழ்ப்பாணம்!
யாழ் பல்கலை மருத்துவ பீடத்திற்கருகே நடைபெற்ற யுத்தத்தில், சீக்கியப் பிரிவின் காலாட்படையின் கடைசிவீரன், தனது கடைசித் தோட்டா தீரும்வரைப் போராடியதாகக் குறிப்புகள் உண்டு. வாக்கி-டாக்கியைப் பயன்படுத்திய வீரர் கீழே இறங்கிய நிமிடத்திலேயே கொல்லப்பட்டார். பட்டாளத்தின் தலைவர் மேஜர் பீரேந்திரசிங் தான் இறங்கவேண்டிய இடம் என்று தீர்மானித்த இடத்தில் இறங்கினார். எஞ்சியுள்ள அதிரடிப் படையினர் வாக்கி-டாக்கியை எடுத்துக்கொண்டு விரைந்து, தாங்கள் பதுங்கியிருக்கும் இடத்திற்கு வரும்படி அவரை அழைத்திருக்கிறார்கள். ஆனால், அவரோ தனது வீரர்கள் விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டதை அறியாமல் அங்கேயே நின்று, துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானார் (சேகர் குப்தா - முறிந்தபனையில் வந்தவாறு) என்றும் ஒரு குறிப்பு உள்ளது.
விடுதலைப் புலிகளை அழிப்பது என்பதிலிருந்து தடம்புரண்டு, மக்களை அழித்தது குறித்த விமர்சனம் எழுந்தபோது, அமைதிப் படையைச் சேர்ந்த ஒருவருக்கும் பிரம்படி பகுதியைச் சேர்ந்த மக்களுக்குமான உரையாடலை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்:
""உங்களுக்கு இங்கே என்ன வேலை? உங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட முகாமில் அல்லவா நீங்கள் தங்கியிருக்க வேண்டும்'' என்று தளபதிகளில் ஒருவர் கேட்டதும்,
பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், ""அந்த அறிவிப்பு - யாழ் நகருக்கு மட்டுமானது. நாங்கள் புறநகர்ப் பகுதியில் வசிக்கிறவர்கள். ஊரடங்கு அமலில் உள்ளதால் வீட்டினுள்ளேயே அடைபட்டிருக்கிறோம்'' என்றார்.
தொடர்ந்து அவர், ""'நீங்கள் யாரை வேட்டையாடுகிறீர்கள்? மக்களையா, புலிகளையா?'' என்று கேட்டார்.
""மக்களின் பின்னே அவர்கள் நின்றால் என்ன செய்வது?''
""இப்படித்தான் சிங்கள அரசும் சொன்னது. இப்போது நீங்களும் அதையே சொல்கிறீர்கள். கொஞ்சம் மாற்றியாவது சொல்லக்கூடாதா?'' என்றார்.
""நீங்கள் யார்?''
""யாராக இருந்தால் பதில் சொல்வீர்கள்? நான் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருக்கிறேன். உங்களது நடவடிக்கைகள் சிங்களவரைவிட உயர்வாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்'' என்றார்.
""அப்படியா! அப்படியிருந்தால் இவ்விடத்தைவிட்டு அகலுகிறேன்'' என்று கூறிவிட்டு ராணுவ நிர்வாக அதிகாரி கிளம்பிச் சென்றார்.
இந்த உரையாடல் மூலம், யாழ் நகரில் வசிப்பவர்கள் அனைவரும் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற வேண்டும் என்று வானொலி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது தெரிய வருகிறது.
அவர்கள் அனைவரும் நல்லூர் கந்தசாமி கோயில், யாழ் இந்துக் கல்லூரி, இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றில் சென்று தங்குமாறு பணிக்கப்பட்டிருந்தார்கள். இந்த அறிவிப்பைப் பின்பற்றுவது என்பது நடைமுறை சாத்தியமற்றது என்பதை அறிவிப்பு வெளியிட்டவர்கள் உணரவில்லை.
யாழ் நகரில் உள்ள மக்கள்தொகைக்கு இந்த மூன்று இடங்களும் போதுமானதல்ல. அப்படியே சென்று தங்கினாலும் அங்கே கழிப்பிட வசதிகளும் அவ்வளவாக இல்லை. அதனால் பெரும்பாலான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு அகலாத நிலையிலும், வானிலிருந்து வீசப்படும் குண்டுகளுக்குப் பயந்த மக்கள் அந்த இடநெருக்கடி மிகுந்த இடத்தை தஞ்சம் அடையவே செய்தனர். மழைக்காலம், பண்டிகைக்காலம் எல்லாம் சேர்ந்து அமைதிப்படை மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. அவர்கள் மனதில், போராளிக்குழுவில், பலசாலியான விடுதலைப் புலிகளே தங்கியிருந்தனர்.
படுகாயமுற்ற விடுதலைப் புலிகள் யாழ் பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கும் முன்பாக, அங்கே பொதுமக்களும் ஏராளமான அளவில் சேர்ந்திருந்தார்கள். வயிற்றில் குண்டு வாங்கிய பொட்டு அம்மானுக்கு யாழ் மருத்துவமனையில் அவசர அறுவைச்சிகிச்சை செய்த பின்னர், அவர் அங்கே இருப்பது பாதுகாப்பற்றது என இடமாற்றம் செய்யப்பட்டார்.
வடமராட்சியில் உள்ள வல்வெட்டித்துறை கிட்டுவின் வீடு பாதுகாப்பானது என்று, அவரின் தாயார்வசம் பொட்டு அம்மான் ஒப்படைக்கப்பட்டார். பாலசிங்கமும் அடேல் பாலசிங்கமும் பொட்டு அம்மானைப் பார்க்க வந்த இடத்தில் அவருக்கு ஏற்பட்ட காயம் மிகவும் ஆபத்தானது; உடனிருந்து வேளைதோறும் மருந்திட்டு கவனிக்க வேண்டியது என்று கண்டனர். பொட்டு அம்மானைத் தவிர்த்து வேறு இரு போராளிகளும் காயங்களுடன் அங்கே இருந்தனர். போராளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியை, நர்ஸ் தொழிலில் முன்னர் இருந்த அடேல் ஏற்றுக்கொண்டார். மிகவும் ரகசியமாக அவர்களைப் பருத்தித்துறை மருத்துவமனைக்குக் கொண்டுபோய் கட்டுப்போட்டு அழைத்து வரும் வேலையும் அவரைச் சேர்ந்ததாயிற்று. உடன் உள்ளூர் போராளிகளும் ஒத்துழைத்தனர்.
அமைதிப் படையின் அடுத்த இலக்கு சாவகச்சேரி ஆயிற்று. அங்கே புலிகளின் நடமாட்டம் இருப்பதான தகவலை அடுத்து, சாவகச்சேரி சந்தையில் வான் தாக்குதல் நடத்தப்பட்டது. காரணம், அங்கே பிரபாகரன் துப்பாக்கியுடன் நடமாடுவதாகக் கிடைத்த ஒற்றுத் தகவல். எனவே உள்ளூர் சந்தையில் கூடியிருந்தோர் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர் எண்ணிக்கை 30. புலிகள் கொல்லப்பட்டதாக செய்தி அறிவிப்பு வெளியானது. உண்மையில் அவர்கள் பொதுமக்களே ஆவார்கள்.
மக்கள் குடல் சிதறி, உடல் பாகங்கள் பிய்த்தெறியப்பட்டு நாலாபுறமும் வீசப்பட்டனர். இவர்களை, பருத்தித்துறை மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தனர்.
அம்மருத்துவமனையை விட யாழ் மருத்துவமனை மிகப் பெரியது. ஆனால், அம்மருத்துவமனையைப் புலிகள் பயன்படுத்துவதாகவும், அங்கே நோயாளிகள் போர்வையில் படுத்துக்கிடப்பதாகவும் வந்த ஊர்ஜிதமாகாதத் தகவலையடுத்து, அங்கே குண்டு வீசப்பட்டு, டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள், நோயாளிகள் என்று 21 பேர் கொல்லப்பட்டிருந்தனர் (அக்டோபர் 21-இல்). இதனை அறிந்த மக்கள் யாழ் மருத்துவமனை பக்கம் போகவே பயந்தனர்.
பருத்தித்துறை மாந்திகை மருத்துவமனைக்கு வந்துசேர்ந்த காயம்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டது. அங்கோ இடவசதி குறைவு; ஆள் பற்றாக்குறை. அடேலும் அங்கிருந்த பணியாளர்களுடன் சேர்ந்து சிகிச்சையளித்துவிட்டு "கிட்டுவின் அம்மா' வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
வலிகாமத்தில் அமைதிப் படை குவிக்கப்பட்டது. வடக்கே வடமராட்சி, தெற்கே தென்மராட்சியில் உள்ள சாவகச்சேரியில் தாக்குதல் நடத்த திட்டம். சாவகச்சேரி விடுதலைப் புலிகளை அதிகம் தந்த பகுதியாகும். மக்கள் அனைவரும் புலிகளோ என்ற தோற்றம் கொண்ட ஊர். எனவே புலிகளின் ஆயுதம் களையும் நடவடிக்கை அங்கே பெரிய அளவில் நடைபெற்றது. வழக்கம்போல் புலிகளைவிடவும் மக்களே அதிகம் தாக்குதலுக்கு ஆளானார்கள்; உடைமைகளையும் இழந்தார்கள்.
சாவகச்சேரி அமைதிப்படை வசமாயிற்று. புலிகளோ கொரில்லாத் தாக்குதலுக்குத் தயாரானார்கள். தமிழ்ச்செல்வன் கொரில்லாப் படைக்குத் தலைமை தாங்கி பின் நாளில் அந்த ஊரை மீட்டெடுத்தார். புலிகளின் அரசியல் பிரிவுக்குப் பின் நாளில் பொறுப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.
யாழ்ப்பாணத்தை நான்கு நாள்களில் பிடிப்போம் என்று லெப்.ஜெனரல் தீபிந்தர்சிங் அக்டோபர் 10-ஆம் தேதி குறிப்பிட்டார். ஆனால் 16 நாள்கள் கழித்து அக்டோபர் 25-இல் யாழ்ப்பாணத்தைப் பிடித்ததாக அமைதிப்படையின் செய்திக்குறிப்பு கூறினாலும், இது குறித்து கவிஞர் காசி ஆனந்தன் அளித்த பேட்டியில், "யாழ்ப்பாணத்தைப் பிடிக்க 24 நாள்கள் (நவம்பர்-3) வரை அமைதிப்படைக்குத் தேவைப்பட்டது' என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "இரண்டாயிரம் புலிகளை எதிர்த்து 40 ஆயிரம் இந்திய வீரர்கள் களமிறக்கப்பட்டார்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மேஜர் ஜெனரல் ஹர்கிரத்சிங் இந்தியாவுக்கு மாற்றப்பட்டு அவரது இடத்திற்கு லெப்.ஜெனரல் எஸ்.சி.சர்தேஷ் பாண்டே நியமிக்கப்பட்டார்.
ஜனவரி 1988-இல் இதற்கான உத்தரவை ஹர்கிரத்சிங் பெற்றதும், சென்னை சென்று கோட்டையில் இருந்த ஐ.பி.கே.எஃப். அலுவலகத்தில் லெப்.ஜெனரல் தீபிந்தர்சிங்கைச் சந்தித்து ஆலோசனை கலந்தார்.
"ஒரு போர்வீரன் என்று முறையில் உத்தரவுக்குக் கட்டுப்படுவது என்பது பாலபாடம். எனவே உத்தரவுக்குக் கட்டுப்பட்டு இலங்கையுடனான எனது தொடர்பைத் துண்டித்தேன்' என்று ஹர்கிரத்சிங் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழ்நிலை ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் அவர் எழுதியுள்ளார். பிரபாகரனை சுட்டுத்தள்ளவும், இல்லையானால் கைது செய்யவேண்டும் என்று இலங்கையின் இந்தியத் தூதர் தீட்சித் விதித்த கட்டளையை நிறைவேற்றாதது குறித்து, 1987 செப்டம்பரில் அவர் எழுதிய கடிதம், தூசு தட்டப்பட்டு 1988 ஜனவரியில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமன்றி, இந்திய அமைதிப்படைக்கு உத்தரவிட இந்திய அரசு மட்டுமே உரித்தானது என்றும் வேறு யாரும் இப்படைக்கு உத்தரவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவருக்குப் பின் பலாலி முகாமில் வந்து இறங்கிய லெப்.ஜெனரல் சர்தேஷ் பாண்டேவும் தனது அனுபவங்களை "அசைன்மெண்ட் ஜாஃப்னா' என்று எழுதியுள்ளார். அந்நூலில், "விடுதலைப்புலிகளின் மீது அமைதிப்படை எடுத்த நடவடிக்கைகளில் போதுமான அளவு திட்டமிடுதல் இல்லை' என்று ஹர்கிரத்சிங் பணிக்காலத்தை விமர்சித்திருந்தார்.
120: பாலசிங்கம் எங்கே?
அமைதிப் படையின் அடுத்த இலக்கு வடமராட்சியானது. வலிகாமம், சாவகச்சேரி ஆகிய இடங்களில் நடத்திய தாக்குதலையும் பார்க்க, ஆயுதங்கள் பற்றாக்குறையாகவும், ஆட்கள் அதிகமில்லாத நிலையிலும் இருந்தன. அமைதிப் படையுடன் மரபுவழித் தாக்குதல் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக, வடமராட்சிப் பொறுப்பாளராக இருந்த சூசைக்கு தெளிவாகத் தெரிந்தது. அவரும் பாலசிங்கமும் கூடிப் பேசி அமைதிப் படையுடன் நேரடித் தாக்குதலைத் தவிர்த்தனர். சூசையும் மற்ற போராளிகளும் கொரில்லாத் தாக்குதலைத் தேர்ந்தெடுத்ததால் வடமராட்சிப் பகுதி மக்கள் பீரங்கிக் குண்டுத் தாக்குதலில் இருந்து தப்பினர்.
வடமராட்சிக்குள் அவர்கள் நுழைந்தபோது, வல்வெட்டித் துறையில் தங்கியிருந்த பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், பொட்டு அம்மான் உள்ளிட்டோர் வடமராட்சியின் நடுப்பகுதிக்கு வந்தனர். இது சிறுவயதில் பாலசிங்கம் வாழ்ந்த பகுதி. கரவெட்டியில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர், பொறுப்பாளர் சுக்ளா ஏற்பாட்டின்பேரில் வீடு எடுக்கப்பட்டது. வடமராட்சியின் அமைப்பு அமைதிப் படையின் ஊடுருவலுக்கு இலகுவாக இல்லை. நகரப் பகுதிகளில் மட்டுமே அவர்கள் நடமாட்டம் இருந்தது. இதுவே புலிகளுக்கு வசதியாயிற்று.
இந்நிலையில், ஈரோஸ் தலைவர் பாலகுமார், பாலசிங்கத்தைத் தேடி வந்தார். இந்திய அமைதிப் படையிடம் மோதல் போக்கு இல்லாதவராக அவர் இருந்தார். பாலசிங்கம் சென்னையில் இருந்தபோதே நன்கு பழக்கமானவர். புலிகளின் அர்ப்பணிப்பு உணர்வு அடிப்படையில் அவருக்கு விடுதலைப் புலிகளின் தலைமையிடம் அன்பு மிகுந்திருந்தவர் என்று கூறுவது பொருந்தும்.
அவர் வரும்போதெல்லாம் இந்திய அமைதிப் படையின் நோக்கம் - செயல்பாடுகள் பற்றியத் தகவல்கள் பாலசிங்கத்துக்குக் கிடைக்கும். இந்த முறை அவர் இந்திய ராணுவத் தளபதிகளிடமிருந்தே செய்தி கொண்டு வந்திருந்தார். அவர்கள் பாலசிங்கத்தைச் சந்தித்துப் பேச விரும்பினார்கள் என்றும் போரை முடிவுக்குக் கொண்டு வரலாமென்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறினார்.
ஆனால், பாலசிங்கம் இது ஒரு சூழ்ச்சி வலைப்பின்னலாக இருக்கும் என்று உணர்ந்தார். தானே முடிவு எடுக்காமல் இந்தத் தகவலை வன்னிக்காட்டில் முகாமிட்டிருந்த பிரபாகரனுக்கு அனுப்பினார். உடனடியாகத் தகவல் கிடைக்கவில்லை. சில நாள்களில் இந்த சந்திப்புக்கு இணங்க வேண்டாம் என்று தகவல் அனுப்பினார்.
இதற்கு பிரபாகரன் கூறிய காரணம், இதே முறையைப் பயன்படுத்தி மட்டக்களப்பின் முக்கியப் பொறுப்பாளரைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்தார்கள். எனவே அவர்களின் சூழ்ச்சி வலையில் சிக்கினால், அவர்களது பிரசாரமே வெற்றி பெறும். நமது தகவல்களோ வெளி உலகுக்கு வராமல் போய்விடும் என்று கூறியிருந்தார்.
இலங்கை வசம் வீச்சுள்ள அலைவரிசைகள் இருந்ததால், இந்த ஒலிபரப்பு வசதியைப் பயன்படுத்தி புலிகள் கைதானார்கள் என்றும், கொல்லப்பட்டார்கள் என்றும், சரணடைந்தார்கள் என்றும் பொய்ச் செய்திகளைக் கூறி மக்களை திசை திருப்பும் வேலையிலும் அமைதிப்படை ஈடுபட்டது.
இவ்வாறான தகவல்களில் பாலசிங்கமோ, பொட்டு அம்மானோ கைது செய்யப்பட்டார்கள் என்று தகவல் வருமானால் புலிகளுக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் என்று தடுக்கப்பட்டது. இந்திய அமைதிப்படை வடமராட்சியில் நிலை கொண்டு - பருத்தித்துறை, நெல்லியடி, பொலிகண்டி, உடுப்பிட்டி, துன்னாலை பகுதிகளில் தனது முகாம்களை நிறுவிக்கொண்டது. இவ்வாறாக ராணுவக் குவிப்பு தீவிரம் ஆனதும் பாலசிங்கம் குழுவினர் கரவெட்டியில் இருந்தும் வேறு இடத்திற்குச் செல்ல நேர்ந்தது.
புலிகளைத் தேடுதல் என்பது அதிகாலை நேரத்தில் அமைதிப் படையால் மேற்கொள்ளப்பட்டது. ஒரு பகுதியை வளைத்துக் கொண்டு யாரும் உள்ளிருந்து வெளியேறுவதோ, வெளியேயிருந்து உள்நுழைவதோ முடியாதபடி செய்து, புலிகளை வேட்டையாடியது அமைதிப்படை.
படையினர் வருகை - அவர்களது செயல்பாடுகள் குறித்து, பெரியவர் முதல் சிறுவர்கள் வரை பல்வேறு நிலைகளில் விடுதலைப் புலிகளுக்கு தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. இதேபோன்று அமைதிப் படைக்கும் ஒற்றுத் தகவல்கள் சென்று கொண்டுதான் இருந்தன.
இன்னொரு நாள் பாலகுமார் வந்து பாலசிங்கத்தையும், அவரது மனைவி மற்றும் பொட்டு அம்மானை கைது செய்ய உத்தரவாகியிருக்கிறது என்றும் "ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பாலசிங்கம் என்று பெயர் உள்ளவர்களைத் தேடுகிறார்கள் என்றும் தெரிவித்தார். ஆனால் அங்கே அப்படியொருவரோ வெள்ளைக்கார மனைவி பெயரோ இல்லையென்றதும்தான் தேடுதல் முற்றுப் பெறுகிறது' என்றும் பாலகுமார் சொன்னார்.
இதனைத் தொடர்ந்து, பாலசிங்கம் தங்கியிருந்த பகுதியைக் கடந்து சென்ற ஹெலிகாப்டர் மீண்டும் திரும்பி வட்டமிட்டு, துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு திரும்பிச் சென்றது - பாலகுமார் கொண்டு வந்த தகவலை உறுதி செய்தது.
இவ்வாறாக ஒருநாள் மாலை பாலசிங்கம் தங்கியிருந்த வீட்டின் மீது குண்டுமழை பொழியத் தொடங்கியது. வெளியே ஓடி, கட்டடத்தின் சுவருக்குப் பின்னால் பதுங்கி தப்பித்தனர். இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம், அத்தாக்குதலில் யாருக்கும் காயமோ, இழப்போ ஏற்படவில்லை என்பதுதான்.
வேறு வீடு மாறினார்கள். நோயாளிகளுக்கு ஒரு வீடும், பாலசிங்கத்துக்கு இன்னொரு வீடும் என்று பிடித்துக் கொடுக்கப்பட்டது. இந்தத் தேடுதல் வேட்டைக்கிடையே தமிழேந்தியும், பாலசிங்கத்துடன் வந்து சேர்ந்து கொண்டார்.
தமிழேந்தி, விடுதலைப் புலித் தலைவர் வே.பிரபாகரனின் நெருக்கமான சகா, மூத்த போராளி. நிதிப் பொறுப்பைக் கவனித்தவர். எப்போதும், அவரிடம் ஒரு பை இருக்கும். அது பணப் பை ஆகும். ஏராளமான நகைகளும் அதில் இருக்கும். பணம் செல்லுபடியாகாத இடங்களில் நகைகளே மாற்றுப் பணம்.
பாலசிங்கத்துடன் இருப்பதில் ஆபத்து அதிகமானதால் அவர் வன்னிப் பகுதி சென்று, அங்கிருந்த பிரபாகரனுடன் இணைய முற்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் அமைதிப் படையினரால் கைது செய்யப்பட்டார். காங்கேசன் துறை சிறையிலும் அடைக்கப்பட்டார். கைது செய்வதற்கு சில நிமிடங்கள் முன்பாக, தனது கைப் பையை ஓரிடத்தில் பூமியைத் தோண்டி, புதைத்து விட்டிருந்ததால் அது காப்பாற்றப்பட்டது. பின்னர், விடுதலையானதும் அந்தப் பணப் பையைத் தோண்டி எடுத்துச் சென்றதாக இவரைப் பற்றிய குறிப்புகள் உண்டு.
இவ்வாறு தமிழேந்தி கைது செய்யப்படும் முன்பாக, பாலசிங்கம் தம்பதியினர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக, பிரபாகரனுக்குத் தகவல் அனுப்பி வைத்து விட்டுத்தான் அவர் கிளம்பினார்.
இந்நிலையில் கரவெட்டியில் இருந்து கிளம்ப வேண்டியதாயிற்று. சில மைல் தொலைவில் இருந்த நவிண்டில் உள்ள பகுதிக்கு பாலசிங்கம் மாறினார். இங்கே பொட்டு அம்மான் இவர்களுடன் மீண்டும் சேர்ந்து கொண்டார்.
அவரது கையிலுள்ள காயத்தில் சீழ் பிடித்துக் கொண்டிருந்தது. கட்டுப்போடாத நிலையில் துர்நாற்றம் வீசியது. கையிலோ மருந்து இல்லை. அடேல், பென்சிலின் ஊசி மட்டும் போட்டார். இரவு முழுவதும் அவரின் முனகல் ஒலி கேட்டவாரே இருந்தது. அதுவே அவர்களைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று பயந்த நிலையில் இரவு கழிந்தது.
அவரால் நடக்க முடியாது. அவரைத் தொட்டில் கட்டி முதுகில் ஒருவர் சுமந்து வர வேண்டும். வயிற்று உபத்திரம் வேறு; கொடுமைதான். அடேல் எங்கே வெளியே கிளம்பினாலும் தலை முதல் கால் வரை போர்த்திய துணியுடன் சென்று வந்தார். அவரது வெள்ளைத் தோல் அந்நியப்படுத்திக் கொண்டிருந்தது. நெல்லியடிக்கு அடுத்த ஜாகை.
நெல்லியடியில் அவர்கள் இருந்தபோது இவர்களது வீட்டை நோக்கி, இந்திய அமைதிப்படை ரகசியமாக நகர்ந்து கொண்டிருப்பதாக சிறுவர்கள் ஓடி வந்து தகவல் கொடுத்தனர். அது ஒரு மாலை வேளை. எல்லாரும் கிளம்ப ஆயத்தமானார்கள். அடேல் மருந்துப் பையை கையில் எடுத்துக் கொண்டார். அதில் சிலவகை மருந்துகளுடன் பாலசிங்கத்துக்கு அன்றாடம் போட வேண்டிய இன்சுலின் மருந்தும் இருந்தது. பொட்டு அம்மான் வயிற்றைப் பிடித்துக் கொண்டு, நொண்டிக் கொண்டே கிளம்பினார். அந்த வீட்டில் இருந்து மறைந்து மறைந்து வெளியேறியவர்களுக்கு உள்ளூர் தோழர் கந்தையா வழிகாட்டி அழைத்துச் சென்றார்.
இவர்கள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த வீட்டின் மீது தொடர்ந்து குண்டுத்தாக்குதல். இதுகுறித்து அடேல் பாலசிங்கம் தான் எழுதியுள்ள "சுதந்திர வேட்கை' நூலில், ""ஈபிஆர்எல்எஃப் ஆள் ஒருவரின் வழிகாட்டுதலோடு அந்த இடத்தை இந்தியப் படையினர் மொய்த்துக் கொண்டனர். வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக வெளியே வரவேண்டும் என்று உரக்கக் கூவி அழைத்தார்களாம். வீட்டுக்குள் ஒரே அமைதி. பொறுமை இழந்த அமைதி காப்பாளர்கள் தானியங்கித் துப்பாக்கியால் வெறும் வீட்டின் மீது சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள். பிறகு நாங்கள் இல்லாததை அறிந்து, வீட்டுச் சொந்தக்காரர் மார்க்கண்டு என்பவரைப் பிடித்துப் போய், தங்களது காவலில் வைத்து, அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். ""இனி, புலிகளுக்கு வீடு கொடுத்தால் தண்டனை வேறாக இருக்கும்'' என்றும் எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள். அவரின் மகன் விஜயன் ஒரு போராளியாவார் என்று கூறியுள்ள அவர், அந்த வீட்டுக்கு திரும்பச் செல்லவில்லை என்று கூறியுள்ளார்.
121: பாலசிங்கம் லண்டன் தப்பினார்!
அமைதிப்படையின் தீவிர தேடுதலில் சிக்கிய பாலசிங்கமும், டேவிட்டும், பொட்டு அம்மானும் ஒவ்வொரு மறைவிடமாக அலைந்தனர். ஒவ்வொரு வீட்டுக்கும் இவர்கள் தப்பிச் செல்லுகையில் பொட்டு அம்மானை முதுகில் தூக்கிக் கொண்டு போராளியொருவர் உடன் வருவது என்பது சாத்தியமற்றதானது. எனவே அவர் மருத்துவ வசதி பெறவும், உயிர் பிழைக்கவும் கடல் மார்க்கமாக தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டார். காயம்பட்ட இதர போராளிகளுக்குத் தனி ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்தப்பகுதியின் பொறுப்பாளராக இருந்த சுக்ளாவின் நட மாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. அவரை அமைதிப்படைக்குத் தெரியாததால் அவரையும், புலிப்போராளிகளையும் அடையாளம் காட்ட "முகமூடி' தரித்த ஒற்றர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
இவர்கள் கண்கள் மட்டும் தெரியும்படி முகத்தைத் துணியால் மறைத்தபடி, கூட்டத்தில் நிற்பார்கள். அவர் புலிகளை அடையாளம் கண்டதும் ராணுவ வீரருக்கு "தலையை ஆட்டி' சைகை செய்வார். உடனே கைது வேட்டை நடக்கும். இதன் காரணமாக சுக்ளாவும் வெளிப்படையாக நடமாட முடியவில்லை.
அடேல், வெள்ளைக்காரப் பெண்ணாக இருப்பதால் இவரையும், இவருடன் சேர்ந்த ஆட்களையும் தேடுவதில் அமைதிப்படை முனைப்பு காட்டியது. எனவே, இவர்களை வேறு வேறு இடங்களில் தங்கவைப்பது என்பது குறித்த ஆலோசனைகளுக்கு அடேல் உடன்படவில்லை.
நவிண்டியில் ரதி என்பவரது வீட்டில், அவரது ஆதரவுடன் பதுங்கியிருக்கையில் இவர்களைத் தேடி, புலிகளுடைய வடமராட்சித் தளபதி சூசை வந்தார். சூழ்நிலையும், கடல்மார்க்கமும் சாதகமாக இருக்கும்போது, அவர்களிருவரையும் தமிழ்நாட்டுக்கு அனுப்ப பிரபாகரன் உத்தரவிட்டிருப்பதாக கூறினார். (ஆதாரம்: சுதந்திரவேட்கை - அடேல் பாலசிங்கம்).
வடமராட்சியில் மாலை ஆறு மணியிலிருந்து காலைவரை ஊரடங்கு சட்டம் அமல் செய்யப்பட்டது. காரணம், புலிகள் இரவு வேளையில் அங்கிருந்து நழுவுகிறார்கள் என்று கிடைத்த தகவலின் எதிரொலியாகும்.
ஆனால், மக்கள் புலிகளாய் இருந்தார்கள். அதனால் அவர்கள் கைதுக்கும், கொடுமைகளுக்கும் ஆட்பட்டதுடன் மரணத்தையும் எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனாலும் அவர்களின் உறுதியைக் குலைக்க முடியவில்லை.
உள்ளூர் மனிதர்களைப் பார்த்து நாய் குரைப்பதில்லை. ஆனால் இந்திய அமைதிப் படையினரைப் பார்த்து குரைத்துத் தீர்த்து வீடும். இப்படி நாய் குரைப்பதைக் கேட்டு, அதன் அடிப்படையில் புலிகளின் நடமாட்டம் இருக்கும்.
பல இடங்கள் மாறிய வேளையில், தமிழ்நாட்டுக்குப் புறப்படும் நேரம் வந்தது. அந்நிலையில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இறந்த செய்தி வந்திருந்தது. அன்று அமைதிப்படை தனது முகாமைவிட்டு வெளியேறாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
வடமராட்சியின் ஒரு மூலையில் இருந்து படகில் புறப்பட ஏற்பாடு ஆகியிருந்தது. அனைவரிடமும் விடைபெற்று, பாலசிங்கமும், அடேலும் படகில் ஏறினர். அவர்களுடன் வேறு சிலரும் ஏறிக்கொண்டனர். கடல் கொந்தளிப்பாக இருந்தது. கரையை விட்டுப் படகு விலகி, கடலுக்குள் செல்லச் செல்ல அடேலுக்கு சோகம் கவ்விக்கொண்டது.
இது குறித்து அவர் தனது நூலில் குறிப்பிடுகையில், "நமது நம்பிக்கைக்குரிய நண்பர்களை ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்துக்குள் கைவிட்டுச் செல்லும் உணர்வே என்னுள் மிதந்து வந்தது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களோடு வாழ எண்ணிய நான், எனக்கு உதவி புரிந்த மக்களை அவர்களது கையறு நிலையில் விட்டுச் செல்வது துயரமாக இருந்தது' என்று கூறியுள்ளார்.
தமிழகம் வந்து, அதுவும் பாதுகாப்பற்றதாகிப் போன நிலையில், பெங்களூர் சென்றனர்.
1988 ஏப்ரலில் பெங்களூரில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த ஆன்டன் பாலசிங்கத்துக்கு, திமுக தலைவர் மு.கருணாநிதியிடமிருந்து அவசரச் செய்தி வந்ததாகவும், அந்த அவசரச் செய்தியில் "தன்னை சந்திக்கும்படி' அவர் கூறியிருந்ததையொட்டி, இரவோடு இரவாக பெங்களூரிலிருந்து சேலம் புறப்பட்டதாகவும் தனது "வார் அண்ட் பீஸ்' நூலில் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
அந்நூலில், அச்சந்திப்பைப் பற்றி விவரிக்கின்றார்: ""சேலம் ஓட்டல் ஒன்றில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நள்ளிரவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது முரசொலி மாறனும் உடனிருந்தார். திமுக தலைவர் மு.கருணாநிதி பேசும்போது, "மிகப்பெரிய அமைப்பான இந்திய ராணுவத்துடன் போரிட விடுதலைப் புலிகளால் முடியுமா?' என்று கேள்வியெழுப்பியதுடன், "மோதல் போக்கை தவிர்க்குமாறும்' ஆலோசனை வழங்கினார்.
இதற்குப் பதிலளித்த பாலசிங்கம், "பிரபாகரனும் இதர போராளிகளும் புனிதமான நோக்கம் ஒன்றிற்காக உயிரிழக்கவும் தயாராக இருக்கிறார்கள் என்றும் அவர்கள் சரணடைவதையும் அதன் பின்னர் ஏற்படும் நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இல்லையென்றும், போராளிகள் கொரில்லா யுத்தத்தில் சாதனை படைப்பார்கள் என்றும் அதற்கான மன உறுதி அவர்களிடம் இருப்பதாகவும்' விளக்கினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், ""பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி, தில்லியில் ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பு, எங்களுக்கு அளித்த உறுதிமொழிப்படி, இடைக்கால அரசு என்ற தீர்வு அமைதியான வழியில் ஏற்பட, அதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்கவும், புலிகள் தயாராக இருக்கிறார்கள்'' என்றார்.
இதைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தியை முரசொலி மாறன் சந்தித்து, விடுதலைப் புலிகளின் விருப்பத்தையும் நிபந்தனைகளையும் கூறியபோது, அந்தச் செய்தி ராஜீவ் காந்திக்கு உவப்பாக இல்லை.
""புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுச் சரணடைய வேண்டும் அல்லது இந்திய ராணுவத் தாக்குதலை சந்திக்கவேண்டும்'' என்று ராஜீவ் கூறியதாகப் பின் நாளில் முரசொலி மாறன் தன்னிடம் கூறியதாக பாலசிங்கம் தனது நூலில் (பக்.129-130) குறிப்பிட்டுள்ளார்.
இதே நிகழ்வை பழ.நெடுமாறனும் தனது நூல் ஒன்றில், திருகோணமலையில் சந்தித்தபோது பாலசிங்கம் தன்னிடம் கூறியதாகப் பதிவு செய்திருக்கிறார்.
மேலே குறிப்பிட்ட சந்திப்புக்குப் பிறகுதான் ஆன்டன் பாலசிங்கமும் அடேலும் சென்னை திரும்பி, ஒரு மாற்று ஏற்பாட்டில் லண்டன் சென்றதாக, அடேல், தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
122: ராஜீவுக்கு பிரபாகரன் எழுதிய கடிதங்கள்!
இந்திய அமைதிப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நேரடிப் போர் ஏற்பட்ட இரண்டாவது நாளில் பிரபாகரன், பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் உள்ள விவரம் வருமாறு:
""மிகவும் அபாயகரமான சூழ்நிலையில் இந்த அவசரக் கடிதத்தை அனுப்புகிறேன். அமைதிப்படை விடுதலைப் புலிகளுடன் போர் தொடுப்பது என்ற நிலை எடுத்த பிறகு இதன்மூலம் எதிர்த் தாக்குதல் நடத்தும்படி நாங்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறோம். விடுதலைப் புலிகளின் இந்த எதிர்த்தாக்குதல் என்பது எங்களையும், எங்களது மக்களையும் தற்காத்துக் கொள்ளவே மேற்கொள்ளப்படுகின்றது.
அமைதிப்படை எங்கள் மீது போர் தொடுப்பது என்பதைக் கண்ட எங்களது மக்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். எங்கள் மீது தொடுக்கப்பட்ட போரானது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஷரத்துகளுக்கு முரணானதும், ஓர் அத்துமீறலுமாகும். இது எங்களது கருத்து மட்டுமல்ல; தமிழீழ மக்களின் ஒட்டுமொத்த கருத்துமாகும்.
இந்த யுத்தத்தில் அமைதிப் படையுடன் சிங்களப் படையும் சேர்ந்துகொண்டதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இதனால் மனித இழப்பு என்பது பெருமளவில் இருக்கும். இத்தகைய அழிவுகளுக்கும், விளைவுகளுக்கும் இந்தியாவே பொறுப்பு ஏற்க வேண்டும்.
இந்நிலையில் எமது தாழ்மையான விண்ணப்பம் என்னவென்றால், அமைதியை நிலைநாட்டவும், நன்நம்பிக்கையை வளர்க்கவும், இந்தியாவுடன் எங்களது உறவுகள் மேம்பாடடையவும், உடனடியாகப் போர் நிறுத்தம் அறிவிக்கும்படி வலியுறுத்துகிறோம்'' என்று 1987, அக்டோபர் 12-ஆம் தேதி, எழுதப்பட்ட கடிதத்தில் வேண்டியிருந்தார்.
இந்தக் கடிதத்துக்கு எந்தவிதமான பதிலோ, அதன் பேரிலான நடவடிக்கைகளோ இல்லாத நிலையில் மீண்டும் ஒரு கடிதத்தை எழுதினார். அந்தக் கடிதம் 14-10-1987 அன்று எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தில்,
""நாளுக்கு நாள் தமிழீழத்தில் மக்கள் கொல்லப்படுவதுடன், அழிவுகளும் அதிகரித்து வரும் நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுவதாக'' என்று குறிப்பிட்டுள்ள பிரபாகரன் மேலும் குறிப்பிடுவதாவது:
""இதுநாள்வரை நடந்த போரில் 150 பேருக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 500 பேருக்கும் மேல் காயமடைந்திருக்கிறார்கள். எந்திரத் துப்பாக்கி மூலம் சுடுதல், ராக்கெட் குண்டுவீச்சு, வான் மூலமான குண்டுவீச்சுகளில் இந்த இழப்புகளும் விளைவுகளும் ஏற்பட்டுள்ளன. எங்களது இயக்கத்தின் போராளிகள், தேடுதல் மற்றும் அழித்தல் நடவடிக்கையால் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தற்சமயம் எங்களால் 18 அமைதிப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு எங்களது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் திடீர்ப் போர் காரணமாக, ஏராளமான மக்கள், அமைதிப்படைக் காலத்தில், முதன்முதலாகத் தங்கள் வாழ்விடத்திலேயே, அகதிகளாக்கப்பட்டுள்ளனர். தொடர் ஊரடங்கு அமலினால் உணவுக்கும் குடிநீருக்கும் மற்றும் தங்கள் தேவைகளுக்கும் அவர்கள் ஆலாய்ப் பறக்கிறார்கள்.
இந்திய அமைதிப்படை எங்களது தாயகத்துக்கு அமைதியையும்-சுமுகச்சூழலையும் ஏற்படுத்துவதற்காக வந்திறங்கி, எங்கள் மக்கள் மீது கொடுமைகளை இழைத்து வருகிறது. இது முற்றிலும் மனிதநேயத்துக்கு அப்பாற்பட்ட செயலாகும்.
அக்டோபர் 11-ஆம் தேதி காலையில், யாழ் பல்கலைக்கழக எல்லைக்குள் 40 பொதுமக்கள் இந்திய அதிரடிப்படை வீரர்களால் இறக்க நேர்ந்தது எதனால்? அந்தப் பகுதி கல்விக்கூடங்கள் நிறைந்த பகுதி. அங்கு அதிரடி நடவடிக்கை ஏன் நடத்தப்பட்டது? ஈழமுரசு, முரசொலி பத்திரிகை அலுவலகங்கள் குண்டுவீசித் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதுடன் அங்கிருந்த செய்தியாளர்கள், ஊழியர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். யாழ் பொது மருத்துவமனை குண்டுவீச்சுக்கு ஆளாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் டாக்டர்கள், நர்ஸ்கள், பணியாளர்கள் இறந்திருக்கிறார்கள். யாழ் பல்கலை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு அங்கிருந்த பெரும்பாலான கட்டடங்கள் நாசமாக்கப்பட்டு விட்டன.
அமைதிப்படை கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்று பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் வான்வீதியிலான தாக்குதல் எவ்வாறு நடைபெறுகிறது? உண்மையில் இந்திய, இலங்கைப் படைகள் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி பெரும் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
அமைதிப் படையின் வருகையும் அதன் நோக்கமும் மக்களுக்கு இயல்பு வாழ்வைத் தருவது என்பது; ஆனால் நடப்பதோ வேறு. அமைதிப்படையின் அத்துமீறல்களுக்கு சட்டபூர்வ உதவி கோர முடியாத நிலையுள்ளது. எனவே இதுவரை நடைபெற்றுள்ள அத்துமீறலுக்கும், அழிவுகளுக்குமான உண்மை விவரம் அறிய, உண்மை அறியும் குழுவொன்றுக்கு உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்.
இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய நாங்கள் அழைக்கப்பட்டோம். அதில் பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் எங்களது இயக்கத்தின் வலு உணர்ந்தே அழைக்கப்பட்டோம். இந்தியாவும் இலங்கையும் எங்களுக்கு வாக்களித்தபடி, இடைக்கால அரசமைக்க வேண்டி, ஆயுதங்களைக் கையளிக்கவும் உறுதியளிக்கிறேன்.
ஆனால் துரதிருஷ்டவசமாக எங்கள் மீது யுத்தம் தொடுக்கப்பட்டுவிட்டது; அதுவும் கிழக்கு மாகாணத்தில் ராணுவ வீரர்கள் மீது ஒரு தாக்குதலை நடத்தி, அந்தப் பழியை விடுதலைப் புலிகள் மீது சுமத்தி இருக்கிறார்கள்! கிழக்கில் நடைபெறும் இன மோதல்களில் எங்களது இயக்கத்துக்கு எந்தப் பங்கும் இல்லை. ஆனால், பழி எங்கள் மீது சுமத்தப்படுகிறது.
தற்சமயம் புலேந்திரன், குமரப்பா மரணத்தினாலும் அங்கு வன்முறைகள் வெடித்துள்ளதற்கு சிங்களப் படையே காரணம். இவ்விரு போராளிகளும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த எங்கள் இயக்கத்தின் தளபதிகள் ஆவர். அவர்களது கைதால், பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென நாங்கள், தூதுவர் ஜே.என். தீட்சித்தை எச்சரித்தோம். அவரும் ஜெயவர்த்தனாவைச் சந்தித்தார். ஆனால் தீர்வு காணப்படவில்லை..
எங்களுக்கென்று சில கோட்பாடுகளை நாங்கள் வைத்திருந்தும், அந்தக் கோட்பாடுகளையெல்லாம் ஒதுக்கி வைத்து, இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்தோம். ஒத்துழைப்பு கொடுத்தோம். ஆனால் இந்தியா எங்களை ஒதுக்கியது. தனிமைப்படுத்த முயன்றது. நான் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால், போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தையில் இறங்குவோம் என்பதுதான்'' என்று அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கடிதத்துக்கும் உரிய நடவடிக்கைகள் இல்லை. எனவே 1988 ஜனவரி 13-இல் இறுதியாக ஒரு கடிதம் எழுதினார். அதில் ஆயுதக் கையளிப்பு மற்றும் ஏற்றுக்கொண்ட இடைக்கால அரசை, எழுதப்படாத ஒப்பந்தப்படி நடைமுறைப்படுத்த முன்வருமாறும் குறிப்பிட்டு எழுதினார். அக்கடிதத்தின் விவரம் வருமாறு:
""நல்லெண்ண நடவடிக்கையாக அமைதிப்படையின் முகாமில் அடைபட்டிருக்கும் எங்களது போராளிகளையும் ஆதரவாளர்களையும் விடுவிக்கும்படி கோருகிறோம். எங்களது போராளிகளுக்கு உண்மையான பொது மன்னிப்பை வழங்கும்படி ஜெயவர்த்தனாவை வலியுறுத்துவதுடன், அதனை அமல்படுத்தவும் தாங்கள் வலியுறுத்த வேண்டுமாயும் கோருகிறோம்.
தாங்கள் தில்லியில் ஒப்பந்தத்துக்கு முன்பாகக் குறிப்பிட்டபடி, இடைக்கால அரசை அமைத்து, அதனை விடுதலைப் புலிகள் கோரியபடி அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம். இதற்குத் தடையாக இருக்கும் என்று கருதும்பட்சத்தில் எங்களது ஆயுதங்களைக் கீழே போடவும் தயார் என மீண்டும் - உறுதியளிக்கிறோம். மக்கள் அமைதியுடன் வாழ, எங்களது இயக்கத்தின் ஒத்துழைப்பை நல்கவும் தயாராக இருக்கிறோம்.
இடைக்கால அரசு என்கிற திட்டம் தற்போது பாதியில் உள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தாங்கள் அளித்த வாக்குப்படி, இவ்வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில், மாநில அளவிலான உரிமைகளுக்கும் சுயநிர்ணய ஆட்சிக்கும் உரியவற்றையும் திட்டமிட முடியும்.
தமிழீழ மக்களின் துயர்போக்க, அவர்கள் தங்களது வாழ்விடத்தில் வசிக்க, போர் நிறுத்தம் அறிவித்து, பேச்சுவார்த்தை தொடங்க வேண்டுமாயும், இதற்கான அமைதிச் சூழலை உருவாக்கும்படி மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்'' என்றும் கூறியுள்ளார் (கடிதங்கள் ஆதாரம்: அன்டன் பாலசிங்கம் எழுதிய வார் அண்ட் பீஸ்).
இந்தக் கடிதங்களுக்கு எந்த பதிலும் பிரதமர் தரப்பில் இல்லை. அவர் உளவு அமைப்பின் தகவல்களுக்கே முக்கியத்துவம் அளித்தார் என்றே அப்போதைய அமைதிப் படை தளபதிகள் தங்கள் நூல்களில் கூறியுள்ளனர்.
மாறாக விடுதலைப் புலிகளை இயக்கங்களுக்கிடையே தனிமைப்படுத்தவும், மக்களுக்கிடையே அந்நியப்படுத்தும் முயற்சியிலும் இறங்க அமைதிப்படைக்கு உத்தரவிடப்பட்டது.
நாளை: கிட்டு அளித்த பேட்டி!
மூலம்: பாவை சந்திரன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.