Thursday 11 June 2020

இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்: பகுதி 4 to 6


யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்:
இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்:

சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும் (பகுதி-4)

-[ஓர் ஈழ அகதியின் அனுபவத் தொடர்]-

''சிங்கள பேரினவாத அரசின் அடக்குமுறையில் இருந்து காப்பாற்றுவதற்காக, இந்திய இராணுவத்தை அனுப்பி உதவும் என்று பல தமிழர்கள் நம்பினார்கள். பாமரர் முதல் படித்தவர் வரை அந்த நம்பிக்கை காணப்பட்டது. ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையானோர் இந்துக்கள் என்பதாலும், தென்னிந்தியாவுடனான கலாச்சார தொடர்பாலும், பலர் இந்தியாவை தமது தாயகமாக கருதினார்கள். தென்னிந்தியாவிலும் தமிழர்கள் வாழ்வதாலும், பெரும்பான்மை இந்தியர்கள் இந்துக்கள் என்பதாலும், இந்திய அரசு தம்மை கைவிடாது என்று நம்பினார்கள். அன்று தமிழகத்தில் இருந்த ஈழ ஆதரவு கட்சிகள், இந்தியா இராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழரை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தனர். "அகில உலக தமிழினத் தலைவர்" கருணாநிதி முதல், "தூய தமிழ் தேசியவாதி" நெடுமாறன் ரை அவ்வாறு குரல் கொடுத்தவர்கள் தாம். இது போன்ற காரணங்களால், ஈழத்தமிழ் மக்கள் இந்தியப் படையினரை வரவேற்று மகிழ்ந்ததில் வியப்பில்லை. சில இடங்களில் இந்தியப் படைவீரர்கள் உள்ளூர்ப் பெண்களை திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்''.

தொடர்ச்சி...

அகதிகளிலும் "ஏழை அகதிகள், பணக்கார அகதிகள்" என்று இரண்டு வகை உண்டு. ஒருவர் ஈழத்தில் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர் என்பது, இந்திய அகதி வாழ்க்கையிலும் தீர்மானிக்கப்படுகின்றது. ஈழத்தில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த அகதிகள், இந்தியாவில் அகதி முகாம்களிலேயே வருடக்கணக்காக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அதற்கு மாறாக, மத்திய தர வர்க்க அகதிகள், கூடிய சீக்கிரத்தில் அகதி முகாமை விட்டு வெளியேறவே விரும்புவார்கள். அவர்கள் தங்களை இந்தியாவில் அகதியாக பதிந்து கொள்வார்கள், ஆனால் முகாமில் வாழ மாட்டார்கள். சென்னை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் சென்று வாடகை வீடு எடுத்து வாழ்வார்கள். பராமரிக்க வேண்டிய அகதிகளின் தொகை குறைகின்றது, என்ற சந்தோஷத்தில் மாநில அரசும் அது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.

பெரு நகரங்களில் வீடு வாடகைக்கு எடுத்து வாழ்வதற்கு மாதாந்த வருமானம் வேண்டும். பெரும்பாலும் வெளிநாடுகளில் வாழும் உறவினர்கள் அந்த செலவை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த மேட்டுக்குடி மக்கள் மட்டும் அகதியாக பதியாமல், நேரடியாக இந்தியாவில் குடியேறினார்கள். ஏற்கனவே அவர்களது செலவை ஈடுகட்டும் பணத்தை கையிருப்பில் வைத்திருப்பார்கள். ஈழப்போர் காலகட்டத்திற்கு முன்பிருந்தே இந்தியாவில் வாழும் மேட்டுக்குடி தமிழர் குறித்து இங்கே பேசத் தேவையில்லை. வெளிநாட்டுச் செலவில் வாழ்பவர்கள் எல்லோரும் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல. யாழ்ப்பாணத்தில் ஒரு ஏழை விவசாயிக்கும் நிலம் சொந்தமாக இருக்கும். செறிவான மக்கட்தொகை கொண்ட யாழ்ப்பணத்தில் ஒரு பரப்பு காணியின் விலை பிற மாகாணங்களை விட அதிகம். இதனால் காணி விற்று அனுப்பிய பிள்ளை, வெளிநாடு சென்று உழைத்து அனுப்பினால், அந்தக் குடும்பம் வசதிகளைப் பெருக்கிக் கொண்டது. சில வருடங்களில், புதுப் பணக்கார மிடுக்கு அவர்களிடம் மத்தியதர வர்க்க மனோபாவத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
 
சென்னை மாநகரின் பகுதியான அண்ணா நகர், அப்போது தான் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஈழத்தமிழரின் "குடியேற்றம்" இடம்பெற்ற அண்ணா நகர் பகுதியில் வாடகைக்கு வீடெடுப்பது கடினமாகவிருந்தது. வீட்டு வாடகை உயர்ந்து கொண்டே சென்றமை, இலங்கை- இந்தியத் தமிழ் முரண்பாட்டை விதைத்தது. பேராசை கொண்ட வீட்டு உரிமையாளரும், வெளிநாட்டுப் பணத்தை தண்ணீராக செலவழித்த ஈழத் தமிழரும் சமூக முரண்பாடுகளை கணக்கில் எடுக்கவில்லை. இதே போன்ற நிலைமை இதே காலகட்டத்தில் கொழும்பில் தோன்றியது. வட மாகாணத் தமிழர்கள், போர்ச் சூழலில் இருந்து தப்புவதற்காக, போர் நடக்காத கொழும்பில் சென்று பாதுகாப்பாக வாழ விரும்பினார்கள். இந்தியாவில் இருந்து போவதை விட, கொழும்பில் இருந்து வெளிநாடு செல்வது இலகுவாக இருந்தது. வெளிநாடு போகா விட்டாலும், வெளிநாட்டில் இருந்து உறவினர் அனுப்பும் பணத்தில் கொழும்பில் வசதியாக வாழ விரும்பினார்கள்.

தமிழர்கள் கொட்டும் வெளிநாட்டுப் பணத்துக்கு பேராசை கொண்ட சிங்கள வீட்டு உரிமையாளர்களும், வீட்டு வாடகையை உயர்த்திக் கொண்டே சென்றனர். இதனால் கொழும்பு வாழ் சிங்கள, தமிழ் மக்களுடன் முறுகல் நிலை ஏற்பட்டது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், கொழும்பு நகரில் யாழ்ப்பாணத் தமிழரின் தொகை பெருகிக் கொண்டிருந்தது. கொழும்பில் வாழ்வதற்கும், சென்னையில் வாழ்வதற்கும் இடையில் வேறுபாடு இருந்தது. யுத்தம் கொழும்பை நோக்கி புலம்பெயர்ந்தது. குண்டுவெடிப்புகள், அதையொட்டிய கைதுகள், நெருக்கடிகள் போன்றன அங்கேயும் பாதுகாப்பற்ற சூழலை தோற்றுவித்தது. சென்னையிலோ, திருச்சியிலோ அந்தப் பிரச்சினை இருக்கவில்லை. ராஜீவ் காந்தி கொலை மட்டும் அவர்களின் சீரான வாழ்க்கையில் நெருக்கடியைக் கொண்டு வந்தது.

சென்னையில் சில நண்பர்கள் வசித்ததால், அவர்களின் தொடர்பு கிடைத்து நானும் சென்னை நோக்கிப் புறப்பட்டேன். அப்போதெல்லாம் தனியார் நடத்தும் விரைவு பேரூந்து சேவைகள் கிடையாது. போக்குவரத்து சபை முழுக்க முழுக்க மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. நகரங்களுக்கு இடையில் "திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம்" சேவையில் ஈடுபட்டிருந்தது. நானும், அகதி முகாமில் சந்தித்த நண்பருமாக சென்னை நோக்கி பஸ் பயணம் மேற்கொண்டோம். சென்னை நகரின் பிரமாண்டம் வியக்க வைத்தது. அதே நேரம், இந்தளவு நெருக்கமான குடிசனப் பரம்பலை இலங்கையில் எங்கேயும் காணவில்லை.

ஒவ்வொரு வீடும் ஒன்றுடன் ஒன்று சேர்த்துக் கட்டப் பட்டிருந்தது. கூரைக்கு பதிலாக மொட்டை மாடி வைத்துக் கட்டியிருந்தார்கள். பிறகொரு தருணத்தில், அப்படியான வீடுகளை வெப்ப வலைய நாடுகளில் எல்லாம் காண முடிந்தது. நான் சென்னையில் தங்கியிருந்த நாட்களில், கோடை காலமென்பதால் எல்லோரும் மொட்டை மாடியில் தான் படுப்போம். அந்தக் காலத்தில் காற்றாடி பாவிப்பது ஆடம்பரமானது. இலங்கையில் சில வசதியானவர்களைத் தவிர மற்றவர்கள் மின்சாரக் காற்றாடி பாவிக்கவில்லை. (என்பதுகளுக்கு பிறகு தான் எமது ஊருக்கு மின்சாரம் வந்தது.) ஆனாலும், கோடை காலத்து வெம்மையை தாங்கிக் கொள்ள முடிந்தது. சென்னையில் கோடை காலத்தில் வீட்டுக்குள் முடங்கிக் கொள்வது சித்திரவதை அனுபவிப்பதற்கு சமமானது. ஆகவே மொட்டை மாடியின் மகிமையை, சென்னை சென்று ஒரு சில நாட்களிலேயே உணர்ந்து கொண்டேன்.

நான் தங்கியிருந்த வீட்டில் வசித்த எல்லோரும் 25 வயதுக்கு மேற்படாத வாலிபர்கள். அனைவரது நோக்கமும் வெளிநாடு போவதாகவே இருந்தது. தாங்கள் எத்தனை மாதங்களாக காத்திருக்கிறோம், என்பதை ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப் படுத்தும் போதே கூறிக் கொண்டனர். புதிதாக சென்ற என்னை, "தங்களோடு சேர்ந்து வருந்த வந்திருக்கும் பாவப்பட்ட ஜீவன்," போல சேர்த்துக் கொண்டார்கள். அங்கேயிருந்த சிலர் வெளிநாட்டுப் பயணத்திற்கான முயற்சியில் தோல்வியடைந்தவர்கள். சிலர் பணம் போதாமையால் இன்னும் விமான நிலையத்தை தரிசிக்காதவர்கள். இந்திய கடவுச்சீட்டில் படம் மாற்றி, டெல்லி விமான நிலையம் சென்று பிடிபட்டு திரும்பி வந்தவர்கள். நடுங்கும் இமாலயக் குளிரில் நேபாளம் வரை சென்று திரும்பியர்கள். இவ்வாறு பல சோகக் ககதைகளை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

வெளிநாடு அனுப்பி வைக்கும் முகவர் ஒருவர் மட்டும், இருந்திட்டு எப்போதாவது வந்து எட்டிப் பார்த்து விட்டுச் செல்வார். தனது "வாடிக்கையாளர்களுக்கு" செலவுக்கு பணம் கொடுத்து விட்டுச் செல்வார். வீட்டு உரிமையாளரின் குடும்பம் கீழ் வீட்டில் வசித்து வந்தது. இவர்களைத் தவிர வேறு வெளியுலகத் தொடர்புகள் இல்லை. கொஞ்சம் பணம் இருந்தால், சினிமா பார்த்து விட்டு வருவதைத் தவிர வேறு பொழுதுபோக்கு இருக்கவில்லை. ஒரு புதுப்படம், தமிழகத்தில் ரிலீசாகி மாதக் கணக்கான பின்னர் தான் யாழ்ப்பாண திரையரங்குகளில் வெளியிடுவார்கள். அதனால் சென்னையில் புதுப்படத்தை உடனுக்குடன் பார்க்கும் வசதி, ரசிகர்களுக்கு ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம்.

ஒரு வகையில் நாம் தங்கியிருந்த வீடு இன்னொரு வகை "அகதி முகாம்." இது போன்ற பல உத்தியோகபூர்வமற்ற முகாம்கள் சென்னை நகர வீடுகள் பலவற்றில் இருந்தன. பொதுவாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் முகவர்களால் குறைந்த விலைக்கு வாடகைக்கு எடுக்கப் பட்டிருந்தன. இந்த வீடுகளில் பலதரப்பட்ட பின்னணியைக் கொண்ட இளைஞர்கள் வசித்தனர். எல்லோருடைய நோக்கமும் மேற்கு ஐரோப்பா, அல்லது கனடா போவதாக இருந்தது. நான் சந்தித்த சில இளைஞர்கள் ஈழ விடுதலை இயக்கங்களில் செயற்பட்டு, பின்னர் விட்டு விட்டு வந்திருந்தார்கள். ஈழத்திலும், தமிழகத்திலும் அந்த இயக்கங்கள் ஒன்றையொன்று பகைவர்களாக கருதிக் கொண்டிருந்த நேரம். ஆனால் இந்த முன்னாள் போராளிகள் மட்டும் நட்புடன் பழகினார்கள்.

ஒரு சில நேரம், அரசியல் பேச்சுகள் தர்க்கத்தில் முடிந்தாலும், அவர்களது நட்பு முறியவில்லை. அவர்களைப் பொறுத்த வரையில், அரசியல் வாழ்வு அஸ்தமித்து விட்டது. இனிமேல் வெளிநாடு சென்று சம்பாதித்து சொந்தக் குடும்பத்தை பார்த்தால் போதும் என்று நினைத்தார்கள். முன்னர் இயக்க உறுப்பினர்களாக பொது வாழ்வில் இருந்த காலங்களில் குடும்ப உறவை துண்டித்திருந்தார்கள். தற்போது மீண்டும் உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டார்கள். பெற்றோரும் "காணாமல் போன ஆட்டுக்குட்டி திரும்பி வந்த குதூகலத்தில்" திளைத்தார்கள். "ஈழத்திற்காக வேறு யாராவது போராடட்டும். தனது பிள்ளை வெளிநாடு சென்று நலவாழ்வு வாழ வேண்டும்," என்று நினைத்தார்கள். அதனால் எத்தனை லட்சம் கொடுத்தேனும் வெளிநாடு அனுப்பி விடத் துடித்தார்கள்.

முன்னாள் இயக்க உறுப்பினர்களின் மூலம், தமிழகத்தில் ஈழ அரசியல் செல்வாக்கு குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. முக்கியமான ஐந்து ஈழ விடுதலை இயக்கங்கள் இந்தியாவில், சென்னையில் தலைமை அலுவலகங்களை வைத்திருந்தன. ஈழத்தில் இயக்க நடவடிக்கைகள் யாவும் அங்கிருந்த படி நெறிப்படுத்தப் பட்டன. ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இந்தியா பூரண ஆதரவு வழங்கியதாக நம்பினார்கள். "இந்தியா இராணுவத்தை அனுப்பி தமிழீழம் எடுத்து தங்கள் கையில் தந்து விட்டுப் போகும்," என்று விடுதலை இயக்கப் போராளிகள் கூட அப்போதும் நம்பிக் கொண்டிருந்தனர். 1983 இனக்கலவரத்திற்குப் பின்னர், தமிழகம் முழுவதும் ஈழ ஆதரவு அலை வீசிக் கொண்டிருந்தது.

அன்று முதலமைச்சராக இருந்த MGR உம், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியும், யார் அதிகம் ஆதரவளிப்பது என்பதில் போட்டி நிலவியது. MGR புலிகள் அமைப்பிற்கு நெருக்கமானவராக இருந்தார். வேண்டிய நேரமெல்லாம் பணமும், அரச உதவிகளையும் வழங்கி வந்தார். கருணாநிதி பிற கட்சிகளை சேர்த்துக் கொண்டு TESO (தமிழீழ பாதுகாப்பு அமைப்பு) என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம் அனைத்து விடுதலை இயக்கங்களுக்கும் நிதி வழங்கினார். அன்று புலிகள் மட்டும் அந்த உதவியைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். அதற்கு முன்னர் இந்திய மத்திய அரசின் நேரடித் தொடர்பில் இருந்த டெலோ இயக்கத்திற்கு கருணாநிதி ஆதரவளித்து வந்தார்.  

MGR ஆயினும், கருணாநிதி ஆயினும், இந்திய மத்திய அரசின் அனுமதி இன்றி அவ்வாறு நடந்து கொண்டிருக்க முடியாது, என்று முன்னாள் போராளிகள் தெரிவித்தனர். இந்தியா வேண்டிய நேரத்தில் தலையிட்டு, யார் எஜமான் என்பதை நிரூபிக்கும், என்றும் கூறினார்கள். அதனை மெய்ப்பிப்பது போல சில சம்பவங்கள் நடந்தன.

இந்தியாவின் அனுசரணையின் பேரில், பூட்டானில் நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன. மிதவாத தமிழர் விடுதலைக் கூட்டணியையும் சேர்த்து, ஐந்து ஈழ விடுதலை இயக்கங்கள் கூட்டாக தமது தீர்வுகளை முன்வைத்திருந்தன. அதற்குப் பின்னர், புலிகள், டெலோ, ஈபிஆர்எல்ப், ஈரோஸ் போன்ற நான்கு இயக்கங்கள் தமக்குள்ள ஐக்கியம் கண்டன. "ஈழ தேசிய விடுதலை முன்னணி" என்ற பெயரின் கீழ் கூட்டாக அறிக்கை விட்டன. இந்தியா, ஈழ விடுதலை இயக்கங்களிடையே அத்தகைய ஐக்கியத்தை எதிர்பார்க்கவில்லை. திடீர் நடவடிக்கையாக டெலோ அமைப்பின் அரசியல் ஆலோசகர் சத்தியேந்திரா, புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், ஆகியோரை நாடு கடத்தியது.

அதை விட, இன்னொரு சம்பவம் ஈழ விடுதலை அமைப்புகளின் சுதந்திரம் எந்தளவு மட்டுப்படுத்தப் பட்டது என்பதை நிரூபித்தது. ஒரு நாள் சொல்லி வைத்தாற் போல, அனைத்து இயக்கங்களினதும் தலைமை அலுவலகங்கள் சோதனையிடப்பட்டன. திடீரென புகுந்த போலிசும், புலனாய்வுத்துறை அதிகாரிகளும், அங்கிருந்த ஆயுதங்கள், ஆவணங்கள் அனைத்தையும் அபகரித்துச் சென்றனர். போலீசார் எவ்வாறு மூலை முடுக்கெல்லாம் சல்லடை போட்டுத் தேடினார்கள், என்று இயக்க அலுவலகம் ஒன்றில் பணியாற்றிய ஒரு நண்பர் தெரிவித்தார். சிறிலங்கா போலிஸ் மட்டுமே அத்தகைய அடக்குமுறையில் ஈடுபடும் என்று நம்பிக் கொண்டிருந்த நண்பருக்கு, அந்தச் சம்பவம் மீள முடியாத அதிர்ச்சியைக் கொடுத்தது. திடீர் சோதனை நடவடிக்கைக்கு, இந்திய அரசு உத்தியோகபூர்வ விளக்கம் கொடுத்ததாக நினைவில்லை.

சிறிது காலம் யாழ் குடாநாட்டில் சிறிலங்கா இராணுவம் முன்னேறுவதற்கான எந்த அறிகுறியையும் காணவில்லை. வடமராட்சியை கைப்பற்றிய இராணுவ நடவடிக்கையின் பின்னர், படை நகர்வில் தேக்க நிலை காணப்பட்டது. புலிகள் திருப்பித் தாக்கத் தொடங்கியிருந்தனர். விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை பாதுகாப்பார்கள் என்று, அவர்களது பலத்தில் நம்பிக்கை கொண்ட அகதிகள் பலர் ஊர் திரும்பினார்கள். மீண்டும் ஒரு தடவை நண்பர்களுடன் இராமேஸ்வரம் சென்றிருந்த பொழுது, சில படகுகள் புறப்பட இருப்பதாக செய்தி வந்தது. நண்பர்களுக்கு தெரிந்தவர்கள் என்பதால், இலவசமாக ஏற்றிச் செல்ல முன்வந்தார்கள்.

சென்னையில் வசித்த நண்பர்களைப் போல, வெளிநாடு செல்லும் நோக்கம் எதுவும் எனக்கு அப்போது இருக்கவில்லை. இந்திய மண்ணில் அகதியானது போல, எங்கோ ஒரு ஐரோப்பிய நாட்டில் அகதியாக அலைய மனம் ஒப்பவில்லை. எனது குடும்பத்தை சேர்ந்தவர்களும், அந்நிய மண்ணில் அடிமையாக வாழ்வதை விட, சொந்த மண்ணில் வாழ்வதே சுதந்திரம் என்று கருதுபவர்கள். அதனால் இலங்கை செல்லும் படகில் கால் வைத்த பொழுது, ஒரு தவறைச் செய்கிறோம் என்று நினைக்கவில்லை. அன்று என்னைப் போல பலரும் ஊர் திரும்பிக் கொண்டிருந்ததது சாதாரண நிகழ்வு. ஆனால் ஒரு சில மாதங்களின் பின்னர், என்னோடு அகதி முகாமில் வசித்த ஈழ அகதிகள் அனைவரும் கப்பலில் வந்திறங்குவார்கள், என்று கனவிலும் நினைக்கவில்லை. இந்தியாவில் இருந்து சென்ற எம்மை, இந்தியாவின் நிழல் தொடரப் போகின்றது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.

(
தொடரும்)

யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்

[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 5)

சிவன் கோவில் மீது தாக்குதல் -ஈழநாடு  29.5.87

ராணுவத் தாக்குதலை நிறுத்த முடியாது- ஜெயவர்த்தனே 29.5.87 முரசொலி
மந்தமாருதம் வீசும் பிற்பகல் வேளை. நண்பர்களுடன் வயலோரம் பல்சுவைக் கதைகள் பேசிக் கொண்டிருந்த நேரம். மேற்குத் திசையில் இருந்து இரண்டு மிராஜ் விமானங்கள் மேகத்தைக் கிழித்துக் கொண்டு பறந்து வந்தன. உருவத்தையும், வேகத்தையும் பார்த்தால், அவை சிறிலங்கா விமானப் படைக்கு சொந்தமானதாக இருக்க வாய்ப்பில்லை. நிச்சயமாக வேற்று நாட்டு விமானங்கள் தான். ஏதோ ஒரு வல்லரசு நாடு, இலங்கையை கண்காணிக்கின்றது என நினைத்தோம். சில நிமிடங்களில் விமானத்தில் இருந்து பொதிகள் வீசப்பட்டன. தூரத்தில் என்ன பொதிகள் என்று தெரியவில்லை. குண்டுகளாக இருக்குமோ? அந்நிய படையெடுப்பா? ஆனால் விமானங்கள் மறைந்து அரை மனித்தியாலமானாலும் குண்டு ஏதும் வெடித்த சத்தம் கேட்கவில்லை. நாம் நின்ற இடத்தில் இருந்து பத்து மைல் தூரத்தில், சிறிலங்கா இராணுவம் நிலைகொண்டிருந்தது. சில வாரங்களுக்கு முன்னர் தான், அகோரமான ஷெல் வீச்சுடன் முன்னேறிக் கொண்டிருந்தது. இருப்பினும், நாட்கணக்காக யுத்தம் நடக்கும் அறிகுறியே இல்லை. என்ன நடக்கிறது? திடீர் அமைதிக்கு காரணம் என்ன?
 
யாழ் நகர் மீது விமானத் தாக்குதல்- நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலி. 31.5.87 ஈழநாடு
இந்திய, இலங்கை அரசுகளுக்கு நடுவில் திரை மறைவில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்ததும், அதனால் வடமராட்சி இராணுவ நடவடிக்கை இடைநிறுத்தப் பட்டதும் செய்திகளாக கசிய ஆரம்பித்தன. அப்போதெல்லாம், யாழ்ப்பாண மக்கள் இந்திய அரசின் தூர்தர்ஷன் வானொலியை செவி மடுப்பது வழக்கம். இலங்கை தேசிய வானொலி செய்தியை யாரும் நம்புவதில்லை. செய்தி சேகரிக்கும் "லங்கா புவத்" நிறுவனத்தை, "லங்கா பொறு" (சிங்களத்தில்: லங்கா பொய்) என்று கேலி செய்வது வழக்கம். இலங்கை வானொலி மறைக்கும் செய்திகளை இந்திய வானொலி தெரிவித்துக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில், போராளிக் குழுக்கள் கொடுக்கும் செய்திகளையும் ஒலிபரப்பியது. இன்னும் சில மாதங்களில், இந்த நிலைமை தலைகீழாக மாறப் போகின்றது.
 
''பட்டினியால் இறக்கும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ள யாழ் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவுப் பொருட்களை அனுப்ப இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு யாழ் வணிகர்கள் சங்கம் தந்தி'' - ஈழநாடு 16.5.67
தூர் தர்ஷன் செய்தியின் பிரகாரம், "யாழ் குடாநாடு இராணுவ முற்றுகைக்கு உள்ளாகியிருந்தது. சிறிலங்கா அரசின் பொருளாதாரத் தடை காரணமாக உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியிருந்தனர். நிலைமை மோசமாக இருந்தது." இராணுவ முற்றுகை, பொருளாதாரத் தடை, உணவுத் தட்டுப்பாடு, எதுவும் அன்று மக்களை பட்டினிச் சாவுக்கு தள்ளுமளவு மோசமாக இருக்கவில்லை. ஆனையிறவு ஊடான வணிகப் போக்குவரத்து தடைப்படவில்லை. மின்சாரம் தடையின்றி வந்து கொண்டிருந்தது. வலிகாமம் வடக்கு, வடமராட்சிப் பகுதிகளில் மட்டும் இராணுவ நடவடிக்கை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இருப்பினும் கட்டுப்படுத்த முடியாத மனிதப் பேரவலம் என்று கூற முடியாது. இந்தியா அவ்வாறான செய்திகள் மூலம் உள்நாட்டு, சர்வதேச அனுதாபத்தை ஈழத்தின் மீது திருப்பியது. அல்லலுறும் ஈழத் தமிழருக்கு உதவுவது, தனது தார்மீகக் கடமை என்று இந்திய அரசு கூறியது. 

ஈழமுரசு 2.6.87

இந்திய செஞ்சிலுவை சங்கம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவதற்கென நிவாரணப் பொருட்களை சேகரித்தது. இராமேஸ்வரத்தில் இருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு கிளம்பிய படகுகள் இலங்கை கடல் எல்லையை அடைந்தன. 


இந்திய-இலங்கை கடல் எல்லையில் வைத்து இடைமறித்த சிறிலங்கா கடற்படை, நிவாரணக் கப்பல்களை மேற்கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கவில்லை. "இந்தியாவில் அன்றாட உணவுக்கு வழியற்ற ஏழைகளுக்கு கொண்டு சென்று கொடுங்கள்." திமிராக பதிலளித்தார் கடற்படைத் தளபதி. வேறு வழியின்றி, நிவாரணக் கப்பல்கள் இந்தியாவை நோக்கி திரும்பிச் சென்றன. 

அடுத்த நாள், அதே நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து நான்கு மிராஜ் விமானங்கள் கிளம்பின. இம்முறை யாழ் குடாநாட்டின் மீது விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் வீசுவதை, சிறிலங்கா இராணுவத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எதிர்பாராத விதமாக, இலங்கை அரசை அடிபணிய வைக்க, அந்த ஒரு நடவடிக்கையே போதுமானதாக இருந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு அன்றே வித்திடப்பட்டது.

இந்திய- இலங்கை ஒப்பந்தப் பிரகாரம், வட-கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பை இந்திய அமைதிப் படை பொறுப்பேற்றது. பலாலி விமானப் படைத் தளத்தில் இந்திய இராணுவம் வந்திறங்கியது. அவர்கள் யாழ் குடாநாட்டினுள் போக முடியவில்லை. அங்கே ஒரு பிரச்சினை இருந்தது. இராணுவ முகாம்களும், போரில் கைப்பற்றிய சிறிய பிரதேசங்கள், ஆகியனவே சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. குடா நாட்டின் பிற பகுதிகளை விடுதலைப் புலிகள், தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். அவர்கள் இந்திய இராணுவத்தை வெளியேற அனுமதிக்கவில்லை. இந்தியா சிறிலங்கா அரசுடன் மட்டுமே ஒப்பந்தம் போட்டது, தங்களோடு அல்ல என்று வாதாடினார்கள். அதை விட, ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட நேரம், தலைவர் பிரபாகரன் இந்தியாவில் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருந்தார். தமது தலைவரை விடுதலை செய்தால் மட்டுமே, இந்தியப் படைகளை அனுமதிப்போம் என்றனர்.
 
புலிகள் பலாலி முகாமின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்தனர். மினிவான் அனுப்பி ஊர் ஊராக மக்களை திரட்டி அழைத்துச் சென்றனர். அன்றிருந்த முறுகல் நிலை மக்கள் மத்தியில் பதற்றத்தையும் தோற்றுவித்தது. புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் சண்டை மூளுமோ என்று மக்கள் அஞ்சினார்கள். 

இருந்தாலும், புலிகளின் அழைப்பை ஏற்று பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்றனர். பெருமளவு இளம்பெண்களும் சென்றிருந்தமை குறிப்பிடத் தக்கது. ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் நடந்த உரையாடல்களில், பலர் இந்திய படையினரை விடுப்புப் பார்க்க வந்திருந்தமை புலனானது. குறிப்பாக இளம் பெண்கள் வட இந்திய படைவீரர்களின் அழகையும், உயரத்தையும் சிலாகித்துப் பேசினார்கள். 


முற்றுகை நீண்ட காலம் நீடிக்கவில்லை. இந்திய அரசு பிரபாகரனை விடுதலை செய்ததும் முற்றுகை விலத்திக் கொள்ளப்பட்டது. இந்திய படையினர் டிரக், ஜீப் வண்டிகளில் சிறிய முகாம்களுக்கும் சென்றனர். இந்திய இராணுவம் தனக்கென முகாம் அமைக்கவில்லை. ஏற்கனவே இருந்த இலங்கை இராணுவ முகாம்களில் அரைவாசி இடத்தை பங்கு போட்டது. 

பின்வரும் காலங்களில், மிகப்பெரிய பலாலி முகாம் தவிர பிற முகாம்களில் இருந்த சிங்களப் படையினர் வெளியேறினார்கள். சுருங்கக் கூறின், ஒரு காலத்தில் சிறிலங்கா இராணுவ முகாம்களாக இருந்தவை, தற்போது இந்திய இராணுவ முகாம்களாயின. 

ஈழப்போர் ஆரம்பித்த காலத்தில் சிறிலங்கா படையினர் ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமுக்கு ரோந்து செல்வது போல, இந்தியப் படையினரும் செய்தனர்.

இந்தியப் படைகள் சென்றவிடமெல்லாம், அவர்களைக் காண வீதிகளில் மக்கள் குழுமினார்கள். ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேச்சுக் கொடுக்க விரும்பினார்கள். கடைக்காரர்கள் இலவச குளிர்பானம் அருந்தக் கொடுத்தனர். இந்திய அமைதிப் படையில் தமிழர்கள் மிக அருமையாகவே இருந்தனர். ஒரு சில மலையாளிகளும் தெலுங்கர்களும் தமிழ் பேசினார்கள். பிற மாநிலங்களை சேர்ந்த படையினரில் ஒரு சில ஆங்கிலம் தெரிந்தவர்களை தவிர, மற்றவர்களுக்கு மொழிப் பிரச்சினை ஒரு தடையாகவிருந்தது. அத்தகைய படைவீரர்களை கொண்ட இந்திய இராணுவம், சிங்கள இராணுவம் போன்று தமிழ் மக்களிடம் அந்நியப் பட்டு நின்றது. இருந்தாலும், இந்திய இராணுவத்தின் வருகையினால், தமிழ் மக்கள் தமக்கு விடிவு காலம் வந்து விட்டதாகவே நம்பினார்கள்.

சிங்கள பேரினவாத அரசின் அடக்குமுறையில் இருந்து காப்பாற்றுவதற்காக, இந்திய இராணுவத்தை அனுப்பி உதவும் என்று பல தமிழர்கள் நம்பினார்கள். பாமரர் முதல் படித்தவர் வரை அந்த நம்பிக்கை காணப்பட்டது. ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையானோர் இந்துக்கள் என்பதாலும், தென்னிந்தியாவுடனான கலாச்சார தொடர்பாலும், பலர் இந்தியாவை தமது தாயகமாக கருதினார்கள். தென்னிந்தியாவிலும் தமிழர்கள் வாழ்வதாலும், பெரும்பான்மை இந்தியர்கள் இந்துக்கள் என்பதாலும், இந்திய அரசு தம்மை கைவிடாது என்று நம்பினார்கள். அன்று தமிழகத்தில் இருந்த ஈழ ஆதரவு கட்சிகள், இந்தியா இராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழரை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தனர். "அகில உலக தமிழினத் தலைவர்" கருணாநிதி முதல், "தூய தமிழ் தேசியவாதி" நெடுமாறன் ரை அவ்வாறு குரல் கொடுத்தவர்கள் தாம். இது போன்ற காரணங்களால், ஈழத்தமிழ் மக்கள் இந்தியப் படையினரை வரவேற்று மகிழ்ந்ததில் வியப்பில்லை. சில இடங்களில் இந்தியப் படைவீரர்கள் உள்ளூர்ப் பெண்களை திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்.


புலிகள் அமைப்பினரும், இந்தியப் படையினருடன் சினேகபூர்வமாக நடந்து கொண்டனர். இனி சமாதானம் வந்து விட்டது என்பது போல, புலிகளின் தலைவர்கள் பலர் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமண சடங்குகளில், இந்தியப் படை கொமான்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதற்கு முன்னர், ஆயுதங்களை ஒப்படைக்கும் வைபவம் நடந்தது. இந்தியாவில் இருந்து விடுதலையாகி, இந்திய விமானப்படை ஹெலிகொப்டரில் சுதுமலை வந்த பிரபாகரன் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அவரது உரையைக் கேட்க பெருந்திரளான மக்கள் குழுமியிருந்தனர். அமைதியாக உரையை செவிமடுத்த பார்வையாளர்கள், பிரபாகரன் ஆயுதங்களை ஒப்படைப்பதாக அறிவித்ததும் கரகோஷம் செய்தனர். அடுத்த சில நாட்களில், புலிகளின் ஆயுதங்கள் வண்டி வண்டியாக கொண்டு வரப்பட்டு ஒப்படைக்கப்பட்டன. 

புலிகளுக்கு முன்னரே, ஈரோஸ் இயக்கம் தம்மிடம் இருந்த ஆயுதங்களை ஒப்படைத்து விட்டனர். அன்று ஈழத்தில் இயங்காத, இந்தியாவில் இருந்து வந்திருந்த புளொட், ஈபிஆர்எல்ப் போன்ற அமைப்புகள், சம்பிரதாயத்திற்காக ஆயுதங்களை ஒப்படைந்திருந்தனர். இந்த நிகழ்வுகளை எல்லாம் தொலைக்காட்சி உடனுக்குடன் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

அன்றைய சூழ்நிலை ஈழத்தமிழ் மக்கள் மனதில் நிம்மதியை தோற்றுவித்திருந்தது. இனிமேல் யுத்தம் இல்லை, சமாதானமாக வாழலாம் என்று எல்லோரும் பெருமூச்சு விட்டார்கள்.  

வட-கிழக்கு மாகாணங்களில் சமாதானம் நிலவிய நேரம், இலங்கையின் பிற பாகங்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தன. யுத்தம் தெற்கை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருந்தது. உண்மையில் வடக்கையும், தெற்கையும் ஒருசேர சமாளிக்க முடியாத காரணத்தினாலேயே, சிறிலங்கா அரசு, இந்திய- இலங்கை ஒப்பந்தத்திற்கு சம்மதித்தது. அதே நேரம், அரசு வட-கிழக்கு மாகாண நிர்வாகத்தை இந்தியாவிடம் ஒப்படைத்து விட்டதால், தென்னிலங்கையில் இந்தியாவுக்கு எதிரான அலை வீசியது. சிங்கள மக்கள் மத்தியிலும், அரசாங்கத்தின் ஒரு பகுதியிலும் இந்திய எதிர்ப்புணர்வு அதிகரித்தது. ஒரு நாள், பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகத்தினுள் கிரேனேட் குண்டு வீசப்பட்டது. அமைச்சர் படுகாயமுற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். அந்த குண்டு வெடிப்பு சம்பவம், வரப்போகும் போருக்கு கட்டியம் கூறியது.

(தொடரும்)



இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்
[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 6)



ஈழத் தமிழ் தேசியம், அண்ணாதுரையின் திராவிட இயக்கத்தில் இருந்து சித்தாந்தத்தை கடன் வாங்கியது. மிதவாதத் தலைவர்கள், தனித் தமிழ்நாடு கோரிக்கையின் நீட்சியாகவே, தமிழீழத்தை கருதினார்கள். இருப்பினும் கட்சியின் இளைஞர் அணி, ஆயுதப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. அவர்களைப் பொறுத்த வரையில், திராவிட இயக்கத்தினர் தமிழ்நாடு விடுதலைக்காக ஆயுதமேந்தி போராடாததை; ஒரு வரலாற்றுத் தவறாக கருதினார்கள்.

அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் சாத்தியமே என்று அவர்கள் நம்புவதற்கு, கண் முன்னே கண்ட நிகழ்வுகள் இருந்தன. 1971 ம் ஆண்டு, ஜேவிபி அறிவித்த சோஷலிச இலங்கையை நோக்கிய கிளர்ச்சி, இலங்கைத் தீவின் முதலாவது ஆயுதப் போராட்டமாகும். 1977 ல் இருந்து, ஆயுதபாணி தமிழ் இளைஞர்கள் போலிசை இலக்கு வைக்கத் தொடங்கினர். ஜேவிபி கிளர்ச்சி நடந்து ஐந்து வருடங்கள் கழித்து வடக்கில் வன்முறை வெடித்தமை குறிப்பிடத் தக்கது. ஆகவே ஆரம்ப கால தமிழ் தேசியப் போராளிகளின் தலைமுறை, சம காலத்தை சேர்ந்தவர்கள் என்பது புலனாகும். ஜேவிபி கிளர்ச்சி மட்டுமல்ல, யாழ் குடாநாட்டில் நடந்த சாதிய எதிர்ப்பு போராட்டமும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்திகளாக அமைந்துள்ளன.

ஜேவிபியில் சில யாழ்ப்பாணத் தமிழ் இளைஞர்களும் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். எனக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும், தொழில் நிமித்தம் கொழும்பு நகரில் வாழ்ந்தவர்கள். ஜேவிபியில் இருந்த மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை அதை விட அதிகம். 1990 இரண்டாவது ஜேவிபி கிளர்ச்சி வரையில் அதன் உறுப்பினர்களாக இருந்த மலையகத் தமிழர் சிலரை கொழும்பில் சந்தித்திருக்கிறேன். அப்போது ஜேவிபியில் இருந்து விலகி, தேநீர்க்கடை பணியாளர்களாக வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களின் தகவலின் படி, ஜேவிபியில் இருந்த தமிழ் இளைஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றாலும், சில நூறு பேராவது தேறும்.

ஜேவிபியில் இருந்து விலத்திய சிங்கள இளைஞர்கள் சிலர், தமிழீழ தேசிய இயக்கங்களிலும் சேர்ந்திருந்தனர். இடதுசாரித் தன்மை கொண்ட இயக்கங்களில் சேர்ந்திருந்த இவர்களின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. சிங்கள மொழியிலான அரசியல் பிரச்சாரத்திற்கு மட்டுமல்ல, சிங்களப் பிரதேசங்களில் தாக்குதல்கள் நடத்தவும் உதவியுள்ளனர். பிற்காலத்தில் வளர்ச்சியடைந்த வலதுசாரித் தமிழ்த்தேசியம் அவற்றை எல்லாம் மறந்து விட்டது.

ஜேவிபியினர் மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று, "இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களை, இந்திய மேலாண்மை வல்லரசின் ஐந்தாவது தூணாக கருதியமை." எதிர்காலத்தில் அவர்களைச் சாட்டியே இந்தியத் தலையீடு இடம்பெறும் என்றும் நம்பினார்கள். ஆனால் அந்தக் கருத்தியல் தவறு என்று பிற்காலத்தில் நிரூபிக்கப்பட்டது. ஜேவிபி சோஷலிசம் பேசினாலும், அதில் பெருமளவு தூய தேசியவாதக் கூறுகள் காணப்பட்டன.

அவர்களது இந்தியா மேலான வெறுப்பின் மூலவேர், இலங்கை வரலாற்றின் ஒரு பகுதி ஆகும். இலங்கையில் அரசுரிமைப் போட்டிகளும், கிளர்ச்சிகளும் தோன்றிய காலத்தில் எல்லாம் இந்தியத் தலையீடு இடம்பெற்றுள்ளது. நவீன காலத்தில் பதிவு செய்யப்பட்ட இந்திய இராணுவ நடவடிக்கை, பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இடம்பெற்றது. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளுக்கு எதிரான கிளர்ச்சியை அடக்க இந்தியப் படைகள் உதவின. 1987 ல் இந்தியப் படைகள் இலங்கையில் வந்திறங்கியமை, அதுவே முதல் தடவை அல்ல. ஏற்கனவே இரண்டு தடவைகள், இலங்கையில் எழுந்த அரச எதிர்ப்புக் கிளர்ச்சிகளை ஒடுக்க, இந்தியப் படைகள் தருவிக்கப் பட்டன.

கண்டி இராச்சியத்தை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், மன்னனைப் பிடிக்க உதவிய பிரபுக்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆங்கிலேயர்கள் ஒப்பந்தப் படி நடக்காததைக் கண்டு வெகுண்டெழுந்த கெப்பிட்டிப்பொல என்ற ஊவா மாகாணத்தை சேர்ந்த பிரபு ஒருவர் கலகம் செய்தார். விரைவிலேயே ஆங்கிலேயருக்கு எதிரான கலகம் பிற பகுதிகளுக்கும் பரவியது. கண்டி இராச்சியம் மீண்டும் சுதந்திர நாடாகி விடும் என்ற சூழ்நிலை தோன்றியது. இலங்கையில் இருந்த பிரிட்டிஷ் படைகள் கலகத்தை அடக்க முடியாமல் தடுமாறின. இதனால் ஆங்கிலேயர் காலனியான சென்னையில் இருந்து, இந்தியப் படைகளை தருவிக்க வேண்டியதாயிற்று.

இந்தியப்படைகள் கண்ணில் பட்ட பொது மக்களை கொன்று, அவர்களின் சொத்துகளை நாசம் செய்து தான் கலகத்தை அடக்கினார்கள். இந்தியாவை பிராந்திய வல்லரசாக மாற்றும் எண்ணம், அன்றே பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் மனதில் எழுந்திருக்கும். நிகழ்கால பூகோள அரசியலையும் அதன் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது. வரலாறு திரும்புகின்றது என்று கூறுவார்கள். நமது கால இந்திய-இலங்கை ஆட்சியாளர்கள் ஆங்கிலேயத் தாயின் வயிற்றுப் பிள்ளைகளாகவே நடந்து கொள்கின்றனர்.

பனிப்போர் காலத்தில் இந்திய, இலங்கை அரசுகள் சோவியத் சார்பு முகாமுடன் நெருக்கமாகவிருந்தன. எழுபதுகளில் சோவியத் சார்பு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய இடது கொள்கை கொண்ட சுதந்திரக் கட்சி அரசுடன் ஒத்துழைத்தது. ஸ்டாலினசம் குறித்த முரண்பாடுகளால் பிரிந்து சென்ற சீனா சார்பு கம்யூனிஸ்ட் கட்சியும் பாராளுமன்ற பாதையை நாடியது. இதனால் அதிலிருந்து பிரிந்த, ரோகன விஜேவீர தலைமையிலான இளைஞர்கள் மக்கள் விடுதலை முன்னணி என்ற இயக்கத்தை ஸ்தாபித்து ஆயுதமேந்திய புரட்சியை நடத்த விரும்பினர்.

இது ஒரு வகையில் இந்தியாவில் நக்சல்பாரி (மார்க்சிய லெனினிய) இயக்கங்களின் தோற்றத்தை ஒத்த வரலாறாக இருந்த போதிலும், ஜேவிபி அதிலிருந்து வேறுபட்டது. ஒரு காலத்தில் ஜேவிபி இலக்கியங்களில் பொல்பொட் புரட்சியாளராக புகழப்பட்டார். பொல்பொட்டின் க்மெர் ரூஜ் அமைப்பும், ஜேவிபியும் ஒரே தலைவிதியை பகிர்ந்து கொண்டதாலோ என்னவோ, இரண்டுமே கடும்போக்கு தேசியவாதத்தை கடைப்பிடித்தன. 1971 ம் ஆண்டு கிளர்ச்சியை அடக்குவதற்கு, சோவியத் யூனியனும், சீனாவும் இலங்கை அரசுக்கு உதவிய போதிலும், இந்தியப் படைகள் களத்தில் நின்று போரிட்டன. சுதந்திர இலங்கையின் வரலாற்றில் முதலாவது மனிதப் படுகொலை நடந்த வருடம் அது. பதினையாயிரத்திற்கும் குறையாதோர் படுகொலை செய்யப்பட்டனர்.

1977 ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த வலதுசாரி யு.என்.பி. அரசு, சிறையில் இருந்த ஜெவிபியினருக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்திருந்தது. 1983 இனக்கலவரத்தின் பின்னர், அதே அரசு மீண்டும் ஜேவிபியை தடை செய்தது. அன்று ஜேவிபி, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளே இனக்கலவரத்திற்கு காரணம் என்று தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 

ஒரு பேரினவாத அரசு கொடுத்த விளக்கத்தை சிங்கள மக்களோ, அல்லது தமிழ் மக்களோ நம்பவில்லை. இருப்பினும் சிறிலங்கா அரசானது தமிழர்களுக்கு மட்டுமல்ல, இடதுசாரிகளுக்கும் எதிரானது என்பது நிரூபிக்கப்பட்டது


தடை செய்யப்பட்டதால் தலைமறைவான ஜேவிபி உறுப்பினர்கள், நீண்ட கால கெரில்லா யுத்தத்திற்கு தயார் படுத்தினார்கள். அரசுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பிக்க தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தார்கள். இந்திய-இலங்கை ஒப்பந்தம், எதிர்பார்த்திருந்த அரிய சந்தர்ப்பத்தை வழங்கியது. சிங்கள மக்கள் இந்தியாவின் தலையீட்டை விரும்பாததால், ஜேவிபியின் இந்திய எதிர்ப்பு பிரச்சாரம் ஈடுபட்டது. யுஎன்பி அரசாங்கத்தின் உள்ளேயும் அதிருப்தி நிலவியது. வருங்கால ஜனாதிபதியாகப் போகும் பிரேமதாச தலைமையில் ஒரு குழு கட்சிக்குள் கிளர்ச்சி செய்தது. முரண்நகையாக, இந்திய எதிர்ப்பாளர்களான ஜேவிபியும், பிரேமதாச அரசும் பிற்காலத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் இரத்தக் களரியை உருவாக்கின.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்ட சில வாரங்களில், கொழும்பில் மந்திரி சபை கூட்டம் நடந்து கொண்டிருந்த வேளை இரண்டு கிரனேட் குண்டுகள் வீசப்பட்டன. பாதுகாப்பு கடமையில் இருந்த ஜேவிபியைச் சேர்ந்த காவலர்களே, அந்த குண்டுவீச்சுக்கு காரணகர்த்தாக்கள். ஜனாதிபதி ஜே.ஆர்.யும், முக்கிய அமைச்சர்களையும் கொலை செய்யும் நோக்குடன் குண்டு வீசப்பட்டாலும், பலர் காயங்களுடன் உயிர் தப்பி விட்டனர். அந்தச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் நாடு முழுவதும் உணரப்பட்டன. யாழ் குடாநாட்டில் சாதாரண மக்கள், சிறிலங்கா அரசின் மேல் வெறுப்புக் கொண்டிருந்ததால், மந்திரிசபை குண்டுவெடிப்பை வரவேற்கவே செய்தனர்.

ஜேவிபியின் கிளர்ச்சியில் நேரடியாக பங்களிக்கா விட்டாலும், பெரும்பான்மைத் தமிழர்கள் அவர்களுக்கு தமது தார்மீக ஆதரவை தெரிவிக்க தயங்கவில்லை. ஆயினும் இந்தியப் படைகளின் பிரசன்னம் குறித்து தான், ஜேவிபியின் நிலைப்பாடு தமிழ் மக்களிடம் இருந்து முரண்பட்டது. தமிழ் மக்கள், இந்தியப் படைகளை பாதுகாப்பு அரணாகக் கருதினார்கள். பிரச்சினை சுமுகமாக தீர்ந்த பின்னர், படைகள் இந்தியாவுக்கு திரும்பும் என்று நம்பினார்கள். ஜேவிபியும், சிங்கள மக்களில் ஒரு பிரிவினரும், இந்தியப் படைகளை அந்நிய ஆக்கிரமிப்பு இராணுவமாக பார்த்தனர். இன்னும் இரண்டு மாதங்களில், புலிகளும் அத்தகைய நிலைப்பாட்டை எடுக்கவிருந்தனர்.

இனப்பிரப்பிரச்சினை தீர வேண்டும், யுத்தம் முடிய வேண்டும் என்று எதிர்பார்த்த சிங்களப் பொது மக்கள், இந்தியப் படைகளின் வருகையை தவறாக கருதவில்லை. ஆளும்கட்சியான வலதுசாரி யுஎன்பி ஆதரவாளர்கள், இடதுசாரி ஜேவிபியுடன் கணக்குத் தீர்க்க இது நல்ல சந்தர்ப்பம் என்று கருதினார்கள். தமது கழுத்துக்கு கிட்டே கத்தி வந்து விட்டதை, ஜேவிபியினரும் உணர்ந்திருந்தனர். அதனால் உடனடியாக இந்தியப் படைகள் வெளியேற வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்துப் போராடினார்கள். மக்கள் இந்தியப் பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டுமென போராட்டம் நடத்தினார்கள். பகிஷ்கரிப்பினால் தென்னிலங்கையில் இந்திய உற்பத்திப் பொருட்களின் விற்பனை வீழ்ச்சியடைந்தது. விற்பனையாளர்கள் இந்தியப் பொருட்களை பதுக்கி வைத்தனர், அல்லது வேறு நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டதாக கூறி விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பகிஷ்கரிப்பை மீறி விற்ற கடைக்காரர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர், சில நேரம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிறிலங்கா அரசு நீண்டகாலமாகவே இந்திய மருந்துகளையும், பேரூந்து வண்டிகளையும் இறக்குமதி செய்து வந்தது. அந்த வர்த்தகத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. புடவை வகைகள், இரும்பு, போன்றவற்றை இறக்குமதி செய்யும் நடுத்தர இந்தியத் தமிழ் வணிகர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். இதே வேளை, இந்தியப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இந்தியப் பொருட்கள் அளவுக்கு அதிகமாகவே வந்து குவிந்து கொண்டிருந்தன. மக்கள் அதுவரை கேள்விப்பட்டிராத பொருட்கள் எல்லாம் சந்தைக்கு வந்தன. வியாபாரிகள் தமிழ்ப் பொது மக்களை மட்டுமல்ல, இந்தியப் படையினரையும் வாடிக்கையாளர்களாக பெற்று விட்ட மகிழ்ச்சியில், அவற்றை இறக்குமதி செய்து விற்றுக் கொண்டிருந்தனர்.

"இந்தியப் படையினர், இந்தியாவில் இருந்து நேராக பலாலி விமானநிலையத்தில் வந்திறங்குவது போல, இந்தியப் பொருட்கள் கொழும்பைத் தவிர்த்து இறக்குமதியாகின்றதோ," என்று மக்கள் பேசிக் கொண்டனர். வட-கிழக்கு மாகாணங்களில் கடமையில் இருந்த இந்தியப் படையினருக்கு, இந்திய ரூபாயிலேயே ஊதியம் வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இந்திய ரூபாய்களை புழக்கத்தில் விட்டனர். இந்திய ரூபாய் எந்தக் கடையிலும், இலகுவாக மாற்றக் கூடியதாக இருந்தது. இதனால் யாழ் குடாநாட்டில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது. அன்று நடந்த மாற்றங்களை இப்படியும் கூறலாம்.

"ஈழம் ஒரு இந்தியக் காலனியாக மாறிக் கொண்டிருந்தது."


(தொடரும்...)

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.