Wednesday 17 June 2020

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு: 37

நூலின் எண்ணால் குறிக்கப்பட்ட பகுதிகளுக்கு சில விளக்கங்கள்.
அடிக்குறிப்புகள் –

பாதை திறந்தது

1. ஏ9 நெடுச்சாலை- இலங்கை மத்திய மாகாணத் தலைநகர் கண்டியையும் வட மாகாணத் தலைநகர் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் 325 கிலோமீட்டர் தூரமுள்ள நெடுஞ்சாலை இது. ஏ9 பாதை புலிகளுக்கும் இலங்கை அரச படைகளுக்குமிடையிலான போரின்போது மூடப்பட்டது.

பின் 2002 சமாதான ஒப்பந்த காலகட்டத்தில் பாதை திறக்கப்பட்டது.
2006இல் மீண்டும் மூண்ட நாலாம் கட்ட ஈழப் போரின்போது பாதை மூடப்பட்டு, போரில் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் பாதை 2009இல் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததன் பிற்பாடு பாதை திறக்கப்பட்டது.

2. சுதா (தங்கன்) - விடுதலைப்புலிகளின் அரசியல்துறையின் துணைப் பொறுப்பாளர். (அரசியல்துறைப் பொறுப்பாளர் என்பது தவறு, நிர்வாகத்துக்குப் பொறுப்பாகச் செயற்பட்டவர்) யுத்த முடிவுக்குப் பிறகு பிரான்ஸிஸ் யோசப் என்ற மதகுருவின் தலைமையில் பல புலிகள் உறுப்பினர்களுடன் படையினரிடம் சரணடைந்தவர். இன்றுவரை முடிவு தெரியாது.


3. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் 2002க்குப் பின்னர் நடந்த பேச்சுகளில் முக்கியமானவராக இருந்தவர். பேச்சுகளை முன்னெடுப்பதற்கான புலிகளின் சமாதானச் செயலகத்தின் பொறுப்பாளராகச் செயற் பட்டவர்.
போரின் இறுதிநாட்களில் வெள்ளைக்கொடி ஏந்திச் சென்ற அணியில் இவரும் கொல்லப்பட்டார்.

4. மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய வடமாகாண மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி வன்னிப் பெருநிலப் பரப்பு என அழைக்கப்படுகிறது.

5. இந்திய அமைதிப்படை 1989ஆம் ஆண்டு வெளியேறிய பின் 1990இல் புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியிருந்தனர். 1995இல் இராணுவம் யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றியது.

6. தமிழ்ச்செல்வன்- பிரபாகரனின் மிக நெருங்கிய சகா. முன்னர் யாழ்ப்பாண மாவட்டத்தின் புலிகள் தரப்புச் சிறப்புத் தளபதியாக இருந்தவர். விடுதலைப்புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையாவிற்கு இயக்கம் மரணதண்டனை நிறைவேற்றிய பின்னர் தமிழ்ச்செல்வனே அரசியல்துறையின் பொறுப்பாளராகச் செயற்பட்டார். இலங்கை அரசின் விமானக்குண்டு வீச்சில் கொல்லப்பட்டார்.

7. தமிழேந்தி- புலிகளின் மூத்த போராளிகளில் ஒருவர். பிரபாகரனுக்கு நெருக்கமாக இருந்தவர். புலிகளின் நிதிப்பொறுப்பாள ராகச் செயற்பட்டவர். தனித்தமிழ் நடவடிக்கைகளை முன்னெடுத்தவர். இறுதிப்போரை அண்மித்த நாட்களில் இலங்கைப் படையின் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டார்.

8. மகேந்தி- இவருடைய மூன்று சகோதரர்களும் புலிகளின் அமைப்பில் செயற்பட்டவர்கள். மூவரும் களப்பலியானவர்கள். இளநிலைத் தளபதிகளில் முக்கியமானவர்.

9. புலிகளின் மகளிர் பிரிவின் அரசியல்துறைக்குப் பொறுப் பாக இருந்தவர். இவருக்குப் பின்னரே தமிழினி அந்தப் பொறுப்பை வகித்தார். தணிகைச்செல்வி போர்க்கள மொன்றில் கொல்லப்பட்டார்.

10. பிரபாகரனுக்கு மிகமிக நெருக்கமானவர். புலிகளின் அரசியல் ஆலோசகர். இலங்கை, இந்தியா, நோர்வே, யப்பான் உள்ளிட்ட பல நாடுகளுடன் புலிகள் நடத்திய அனைத்துப் பேச்சுகளிலும் தலைமைப்பொறுப்பை வகித்தவர்.
சர்வதேச அரசியல் இராச தந்திர வட்டாரங் களில் அதிகம் அறியப்பட்டவராக விளங்கியவர்.

11. ஈழப்புரட்சி அமைப்பு என்ற ஈரோஸ் அமைப்பின் தலைவர். 1990இல் புலிகளின் அழுத்தத்தினால் அமைப்பைக் கலைத்துவிட்டுப் புலிகளுடன் இணைந்தார். எனினும் புலிகளின் போக்கை உள்ளார்ந்த நிலையில் விமர்சித்துக் கொண்டிருந்தார். இறுதிப்போரின்போது காயமடைந்த நிலையில் படையினரிடம் சரணடைந்து காணாமற் போனார்.

12. 1996இல் முல்லைத்தீவுப் பகுதியிலிருந்த இராணுவத்தின் படைத்தளத்தைக் கைப்பற்றும் படைநகர்வு ஓயாத அலைகள் – 1 என அழைக்கப்படுகிறது.

13. இலங்கையின் வடகிழக்கிலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தி லுள்ள கடற்கரை ஆகும். முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடலுக்கும் இந்து சமுத்திரத்துக்கும் இடையில் அமைந்திருக்கிறது.
இப்பகுதியில் பிரபாகரன் கொல்லப் பட்டதாக அரசு அறிவித்தது. 14. இலங்கை இராணுவம் 1996 இறுதியில் புலிகள் வசமிருந்த பரந்தன், கிளிநொச்சி பகுதிகளைக் கைப்பற்ற மேற்கொண்ட தாக்குதல்கள் சத்ஜெய என அழைக்கப்படுகிறது.

15. ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிர்ப் பொறுப்பாளராக இருந்தவர்.

16. சிமெந்துக் கற்களைக் கொண்டு சாந்துப் பூச்சினால் கட்டப்பட்ட கிணறு.

17. சந்திரிகா குமாரதுங்க இலங்கை அரசின் அதிபராக இருந்தபோது, 1997 மே மாத அளவில் இராணுவத்தால் தொடங்கப்பட்ட நீண்டகாலத் தாக்குதல் இது. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலுமான 120 கி.மீ கி-9 பாதையைக் கைப்பற்றுவதே இப்போரின் நோக்கம்.
இரண்டாண்டுகள்வரை தொடர்ந்த இந்த நடவடிக்கையை ஓயாத அலைகள் – 2 என்ற தாக்குதல் மூலமாகப் புலிகள் முறியடித்து வெற்றியடைந்தனர்.

18. புலிகளின் மகளிர் தளபதிகளில் ஒருவராக இருந்த மேஜர் சோதியாவின் பெயரில் உருவாக்கப்பட்ட படையணி. மேஜர் சோதியா புலிகளின் பெண் போராளிகளில் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்.
இந்திய அமைதிப்படைக் காலத்தில் மணலாற்றுக்காட்டில் நோயினால் சாவடைந் திருந்தார். மருத்துவத்துறைப் போராளியாகவும் பயிற்சிப் பொறுப்பாளராகவும் செயற்பட்டவர். இவரின் நினைவாக உருவாக்கப்பட்ட படையணியே இது.

19. மட்டக்களப்பைச் சேர்ந்த ஜெயந்தன் என்ற போராளியின் நினைவாகப் பெயரிடப்பட்ட படையணி. ஜெயந்தன் ஒரு கரும்புலிப் போராளியாக சாவடைந்திருந்தார்.
இதனால், மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த போராளிகளைக் கொண்டு இந்தப் படையணி உருவாக்கப்பட்டது. வன்னிச் சமர்களில் ஜெயந்தன் படையணியின் பங்களிப்பு அதிகம்.
இந்தப் படையணிக்கு தளபதி கருணா அம்மான் பொறுப்பு வகித்தார்.

20. மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்போராளியே அன்பரசி. கரும்புலியாகி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் என்பதால், அவரின் பெயரால் இந்தப் படையணி உருவாக்கப்பட்டது.
ஜெயந்தன் படையணியைப்போல, இதுவும் மட்டக்களப்பைச் சேர்ந்த பெண் போராளிகளை அதிகமாகக் கொண்டது.

21. மணலாறு மாவட்டத்தின் தளபதியாக இருந்தவர். 1994இல் பூநகரிச் சமரில் வீரச்சாவடைந்தார். மக்களிடத்திலும் போராளிகளிடத்திலும் பெரும் மதிப்பைப் பெற்றிருந்த தளபதி.

22. புலிகளின் மிகப் புகழ்பெற்ற தளபதிகளில் ஒருவர். மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் சிறப்புத் தளபதியாக இருந்தவர். பிரபாகரனுக்கு மிக நெருக்கமாக வும் விருப்பமாகவும் இருந்தவர். கிழக்கு மாகாணம் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்.
வன்னியில் 1997இல் இலங்கை அரசு முன்னெடுத்த ஜெயசிக்குறு என்ற படைநடவடிக்கையை முறியடிப்பதில் பெரும் பங்காற்றி யவர். பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியவர்.
பின்னர் பிரபாகரனுடன் முரண்பட்டுப் புலிகள் அமைப்பி லிருந்து பிரிந்து சென்றார்.

23. பிளாஸ்டிக் விரிப்பு.
24. புலிகளின் பத்திரிகைகளில் ஒன்று
25. விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வமான அரசியல் பத்திரிகை. முதல் இதழ் 15.03.1984இல் வெளியானது.
26. புலிகளின் இளநிலைத் தளபதிகளில் குறிப்பிடத்தக்கவர்.

27. புலிகளின் தளபதிகளில் முக்கியமானவர். 1990களில் இறுதியில் இருந்து 2009வரை பல களங்களில் முன்னணித் தளபதியாகச் செயற்பட்டவர். இறுதிப் போர்க்காலத்தில் ஆனந்தபுரம் சமரில் மரணமடைந்தார்.

28. பிரபாகரன் விசேடமாக உருவாக்கிய படையணிகளில் முக்கியமானது. புலிகளின் விசேட படையணி என்று இதனைப் பிரபாகரன் திட்டமிட்டிருந்தார்.
இதனை அவர் தன்னுடைய முழுக்கவனத்தில் வைத்து வழிநடத்தினார். போர் முனைப்பை அதிகமாகக் கொண்ட இளைய வயதுப் போராளிகளே இதில் அதிகமாக இருந்தனர்.
கடுமையான பயிற்சியைப்பெற்ற போராளிகளைக் கொண்ட படையணி. இந்தப் படையணி மணலாற்றுச் சமரில் இலங்கை இராணுவத்திடம் பலத்த பின்னடைவைச் சந்தித்தது. அந்தச் சமரில் 80க்கும் மேற்பட்ட பெண் போராளிகளின் சடலங்களை இலங்கை இராணுவம் கைப்பற்றியிருந்தது.

29. புலிகளின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று கரும்புலிகள்.
தற்கொலைத் தாக்குதல்களுக்காக பிரபாகரன் உருவாக்கிய போராளி களைக் கொண்ட படையணி. முதலாவது கரும்புலியாக 1987 யுலை 05 கப்டன் மில்லர் நெல்லியடியில் வெடித்து இராணுவ முகாமைத் தகர்த்தார்.

30. 1998ஆம் ஆண்டு கிளிநொச்சி நகரைக் கைப்பற்ற புலிகளால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஓயாத அலைகள் – 2 என அழைக்கப்படுகிறது. இத்தாக்குதல் முயற்சியில் புலிகள் கிளிநொச்சி நகரைக் கைப்பற்றி வெற்றி யடைந்தனர்.

31. புலிகளின் மிகப் புகழ்வாய்ந்த தளபதி பால்ராஜ். 1990 இலிருந்து 2008 இல் மரணமடையும் வரை இலங்கைப் படைகளுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கிய தளபதி.
போராளிகளிடமும் மக்களிடமும் பெரும் செல்வாக்கைப் பெற்றவர். புலிகளுக்கு வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த பல சமர்களின் நாயகன். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற குடாரப்புத் தரையிறக்கச் சமரில் பால்ராஜ் ஒரு சிகரம் என்று குறிப்பிடும் அளவுக்கு இராணுவத்தளத்தை ஊடுருவி நுழைந்து தாக்குதல் நடத்தி வெற்றியைப் பெற்றிருந்தார்.

32. புலிகளின் பெண் தளபதிகளில் முக்கியமானவர். குடாரப்புத் தரையிறக்கச் சமரில் பால்ராஜுடன் இணைந்து கடல்வழியாகத் தரையிறங்கிச் சமரிட்டவர். அநேகமான களங்களில் பங்கேற்ற பெருமைக்குரியவர். மாலதி படையணியின் சிறப்புத்தளபதியாக விளங்கினார்.

33. 1999 நவம்பர் மாதத்தில் ஓயாத அலைகள் – மூன்று போர் ஆரம்பிக்கப்பட்டது. இந்நெடுஞ்சமர் ஜெயசிக்குறு, ரணகோச-1,2,3,4, றிவிபல நடவடிக்கைகளில் அரசுத் தரப்பு கைப்பற்றிய பகுதிகளைக் கைப்பற்றும் நோக்குடன் இச்சமர் இரண்டு கட்டங்களாக நிகழ்த்தப்பட்டது.

34. அம்பாமம் பகுதியில் 1999இல் இலங்கை இராணுவம் மேற்கொண்ட படை நடவடிக்கை.

35. ஆனையிறவு இராணுவப் படைத்தளத்தை அழிப்பதற்காக புலிகள் கடல்வழியாக மேற்கொண்ட தரையிறக்க நடவடிக்கை. கடல் வழியாகப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தரையிறங்கி, ஊடுருவித் தாக்கி, படைத்தளத்தை இரண்டாகப் பிளந்தெடுத்த நடவடிக்கை.
இரண்டாம் உலகப்போரில் நோர்மண்டித் தரையிறக்கப் பாணியில் இந்த நடவடிக்கையைப் புலிகள் மேற்கொண்டிருந்தனர். இந்த நடவடிக்கையில் கேணல் பால்ராஜ், தளபதி கேணல் விதுஷா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

36. புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும் பிரபாகரனின் ஆரம்பகாலச் சகாக்களில் முக்கியமானவருமாக இருந்த சாள்ஸ் அன்ரனியின் பெயரில் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட படையணி.
இலங்கைப் படையினருக்கு எதிரான போரில் மிகப் பலமான படையணியாகப் பல சமர்களில் பங்கேற்றது இந்தப் படையணி. புலிகளின் படையணிகளில் மிகப் பெரியதும் இதுவே. இதனுடைய தளபதியாக மிக நீண்டகாலம் கேணல் பால்ராஜ் செயற் பட்டிருக்கிறார்.

37. இது ‘தீச்சுவாலை’ நடவடிக்கை என அழைக்கப்படுகிறது. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஆனையிறவு முகாமைக் கைப்பற்றும் நோக்கத்துடன் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இது.
இச்சமரில் கிட்டத்தட்ட 20,000 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இச் சமரில் போரிட்டவர்களில் 60 சதவீதம் பெண் புலிகள் எனக் கூறப்படுகிறது. இப்படைநகர்வு அரச படை யினருக்கு முழுத் தோல்வியையே வழங்கியது.

– போருக்குள் பிறந்தேன்

38. பிரேமதாச – புலிகள் சமாதானம்: 1990இல் இந்திய இராணுவத்தை வெளியேற்ற பிரேமதாச அரசுடன் புலிகள் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கை இது.

39. புலிகளின் அரசியல் பொறுப்பாளராக 1980களில் விளங்கியவர். இலங்கை இந்திய உடன்படிக்கையின் பின்னர், உடன்படிக்கையில் வலியுறுத்தப்பட்ட விடயங் களை உள்ளடக்கிய ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து 12ஆவது நாளில் உயிர்நீத்தவர்.

இதனால் மக்களிடத்திலும் போராளிகளின் மத்தியிலும் மதிப்பான இடத்தைப் பெற்றவர். திலீபனின் மரணம் பெரும் கொந்தளிப்பையும் உணர்வலைகளையும் ஏற்படுத்தியிருந்தது.

40. யாழ் குடாநாட்டையும் வடபகுதியின் பரந்துவிரிந்த நிலப்பகுதிகளையும் மழைக்காடுகளையும் இணைக்கின்ற இடத்தில் யாழ் ஏரியின் தென்கரையில் ஆனையிறவு முகாம் அமைந்துள்ளது. இராணுவ முக்கியத்துவக் கேந்திர மாக இம்முகாம் அறியப்படுகிறது.
-ஆயுதப் பயிற்சி பெற்ற அரசியல் போராளி

41. தமிழினியின் சகோதரர் முறையானவர். புலிகளின் வன்னி மாவட்ட அரசியல் பொறுப்பாளராக விளங்கியவர். இந்திய அமைதிப்படையுடனான மோதலில் வன்னியில் இறந்தார்.

42. கோபாலபிள்ளை மகேந்திரராஜா என்ற மாத்தையா விடுதலைப் புலிகளின் பிரதித்தலைவர். பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருந்தவர். பிரபாகரனின் உறவினர். பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறையிலேயே இவரும் பிறந்தார். புலிகளின் அரசியல் பிரிவாக செயற்பட்ட மக்கள் முன்னணியின் தலைவராக மாத்தையாவே விளங்கினார்.

1994இல் இந்தியாவுடன் நெருங்கிய இரகசியத் தொடர்பை வைத்திருந்தார் என்றும் பிரபாகரனைக் கொல்வதற்குச் சதி செய்தார் எனவும் கூறப்பட்டுக் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.

43. ஈழத் தமிழர்களின் போராட்ட நியாயத்தினையும் அவர் களின் கலை பண்பாட்டு அம்சங்களையும் உலக அரங்கங்களில் முன்னெடுப்பதற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி பொங்கு தமிழ் நிகழ்வாகும்.

44. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒரே பாதையாக கிளாலிப் பகுதி இருந்தது. இப்பகுதி வன்னிப் பெருநிலத்தையும் யாழ் குடாவையும் இணைக்கும் மக்கள் பயணிக்கும் கடல்வழிப் பாதை இது.

45. தேங்காய் மட்டை.
46. வீடு பெருக்கப் பயன்படும் தேங்காய்த் தும்பால் தயார் செய்யப்பட்ட ஒரு கருவி.
47. கள்ளச்சாராயம் காய்ச்சுதல்.
48. இலங்கையின் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தீவுகள். – தமிழ் மக்களும் ஆயுதப் போராட்டமும்.

49. புலிகளின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர். பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய மூத்த தளபதி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தேடப்பட்டது பிரபாகரனும் பொட்டம்மானுமே.
மாத்தையா கொல்லப்பட்ட பின்னர், பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருந்தவர். இறுதிப் போரின் பின்னர் பொட்டு அம்மானைப் பற்றிய தகவல்கள் இல்லை. அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்று அறிவித்திருக்கிறது இலங்கை அரசு.

50. பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராக நீண்டகாலம் இருந்தவர். பின்னர் திருகோணமலை மாவட்டத்தளபதியாகச் செயற்பட்டார். சர்ச்சைக்குரிய மாவிலாறு சமரைத் தொடங்கிய இவர். இறுதிப்போரின்போது சாவடைந்தார்.

51. விடுதலைப்புலிகளின் முகாம் ஒன்று. கேப்டன் லிங்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்டது. கேப்டன் லிங்கம் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர்.
52. ஐ.சி.ஆர்.சி – International Committee of the Red Cross.

53. இலங்கை இராணுவத்தால் 1995இல் யாழ்ப்பாண நகரைக் கைப்பற்ற முன்னெடுக்கப்பட்ட போர். இப்போரில் இலங்கையின் தரைப்படை, வான் படை, கடற்படை ஆகிய முப்படைகளும் இப்போரில் கலந்துகொண்டன. போரின் இறுதியில் இராணுவம் யாழ் நகரைக் கைப்பற்றிக் கொண்டது.
-ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்

54. விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம்கள். குறித்த பெயர் களை உடைய போராளிகளின் பெயரால் உருவாக்கப் பட்டவை. பொதுவாகவே புலிகளின் முகாம்கள் அனைத்தும் சாவடைந்த ஒரு போராளியின் பெயரிலேயே குறிப்பிடப்படுவது வழமை. சில முகாம்கள் மட்டும் அவற்றின் பிரத்தியேகத் தேவை கருதி சங்கேதப்பெயரில் குறிக்கப்படுவதுண்டு.

55. விடுதலைப்புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர். தமிழ்நாட்டில் புலிகளின் பயிற்சி முகாம்களுக்குப் பொறுப்பாக இருந்தவர். 1987 இல் நாவற்குழிப்படைமுகாம் மீதான தாக்குதலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானார். புலிகளின் முக்கியஸ்தர் யோகரட்ணம் யோகியின் சகோதரர்.

56. புலிகளின் பெண் தளபதிகளில் முக்கியமானவர். இறுதிப் போர் நடைபெற்றபோது ஆனந்தபுரம் சமரில் சாவடைந்தார்.

57. விடுதலைப்புலிகளின் மகளிர் அணியின் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். பிரபாகரனின் துணைவி, மதிவதனிக்கு மிக நெருக்கமாக இருந்தவர்.
பிரபாகரனால் உருவாக்கப்பட்ட ஆதரவற்ற பெண்பிள்ளைகளுக்கான இல்லமான செஞ்சோலையின் பொறுப்பாளர். செஞ்சோலை வளாகத்தை அண்மித்த பகுதியில் பயிற்சியில் ஈடுபட்ட பாடசாலை மாணவிகள்மீது இலங்கை வான்படை தாக்குதல் நடத்தியபோது 50க்கு மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-கிழக்கு மண்ணின் நினைவுகள்

58. மறைந்திருந்து நடத்தப்படும் ஒருவகைத் தாக்குதல். 59. மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் துறைப்பொறுப்பாள ராக பின்னாட்களில் விளங்கியவர்.
மட்டக்களப்பு – அம்பாறைத் தளபதி கருணா இயக்கத்தை விட்டுப் பிரிந்த பின்னர், பிரபாகரனுக்கு ஆதரவாகவும் கருணாவுக்கு எதிராகவும் செயற்பட்ட அணியைச் சேர்ந்தவர் கௌசல்யன். கண்ணிவெடித் தாக்குதலொன்றில் கொல்லப்பட்டார்.

60. புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவர். பீரங்கிப் படையணியின் தளபதியாகவும் பணியாற்றியவர். பானு பெரும்பாலான காலமும் வடக்கில்தான் தளபதியாக இருந்தார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கருணாவின் பிரிவை அடுத்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங் களுக்கான தளபதியாக அங்கே சென்று செயற்பட்டவர். இறுதிப்போரின்போது தொடர்ச்சியாகக் களமுனையில் இருந்த தளபதி. இறுதிச் சமரில் கொல்லப்பட்டார்.

61. புலிகளுக்கு நெருக்கமான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர். கிழக்குமாகாணத்தைச் சேர்ந்தவர்.

62. தானியங்கள். 

-உண்மையற்ற சமாதானமும் உருக்குலைந்த மக்கள் வாழ்வும்

63. பிரபாகரனின் மிக நெருக்கமான தளபதிகளில் ஒருவர். கடற்புலிகள் என்ற புலிகளுடைய கடற்படையின் சிறப்புத் தளபதி. கடல்வழி ஆயுத மற்றும் பொருள் விநியோகத்தில் சூசை மிக முக்கிய பங்காற்றினார். இதனால் இயக்கத்திலும் தலைமையிடத்திலும் பெரும் மதிப்பைப் பெற்றிருந்தார்.
புலிகளின் தரையிறக்க நடவடிக்கைகளில் கடற்புலிகளின் பங்கு முக்கியமானது. அதில் சூசையே முக்கியமானவர்.

64. புலிகளின் பெண் போராளி. சிறந்த படைப்பாளி. களமுனைகளில் செயற்பட்டவர். மாலதி படையணியில் முக்கிய பொறுப்பு வகித்தார். பேச்சுவார்த்தைக் காலத்தில் ஆபிரிக்க, ஐரோப்பியப் பயணங்களைப் புலிகள் சார்பில் மேற்கொண்டவர். அன்ரன் பாலசிங்கம், பிரபாகரன் போன்றோரால் நன்கறியப்பட்டிருந்தார்.
 
65. புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் துணைவி. அவுஸ்ரேலியப் பெண். வெள்ளையினத்தவர். புலிகளுடன் நீண்டகால உறவைக்கொண்டிருந்த அடேல், பாலசிங்கத் துடன் புலிகளுக்கான செயற்பாடுகளில் இலங்கை, இந்தியா, லண்டன் ஆகிய நாடுகளில் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் ஈடுபட்டிருந்தவர்.

66. பலதரப்பட்ட அரசியல் சமூகங்களை ஒரு பொது அரச கட்டமைப்பில் சமூகங்களின் பொதுத் தேவைகளை நிறைவு செய்வதற்காக உருவாக்கப்படும் ஆட்சி முறை சமஷ்டி என அழைக்கப்படுகிறது.

67. இலங்கையின் மூத்த பெண்ணியவாதி. இனவாதத்தைக் கடந்து சிந்திக்கும் அறிஞர். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையில் 2002 இல் நடந்த பேச்சுவார்த்தையின் போது பெண்கள் கூட்டமைப்பொன்றை உருவாக்கும் பொருட்டுச் செயற்பட்டவர்.

68. யாழ்ப்பாண மாவட்டத்தின் அரசியற்துறைப் பொறுப்பாள ராகச் செயற்பட்டவர். பின்னர் அரசியற் துறையில் மூத்த போராளியாக விளங்கினார். இறுதிப்போரின் பின்னர் படையினரிடம் சரணடைந்திருந்தார். அதற்குப்பிறகு இதுவரையில் இவரைப்பற்றிய தகவல்கள் இல்லை.

69. பிரபாகரனுக்கும் கருணாவுக்குமிடையில் முரண்பாடு உண்டான பின்னர், கருணாவுடன் சென்றிருந்த சப்தகி பின்னர் அங்கிருந்து பிரபாகரனின் அணியிடம் திரும்பி வந்து சரணடைந்திருந்தார். ஆனாலும் அவருக்கு மரண தண்டனையே வழங்கப்பட்டது.

70. மாவிலாறு, வேளாண்மைக்கு நீர் வழங்கும் ஆறுகளில் ஒன்று. இவ்வாற்றின் தண்ணீர் திறந்து விடுவதற்கான நீர் விநியோகக் கதவுகள், விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்த பகுதியில் இருந்தன.
இந்தக் கதவுகள் திறந்து விடப்பட்டால் ஆற்று நீர், விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து, இலங்கை அரசின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குப் பாயும். 2006ஆம் ஆண்டு மாவிலாறு நீரை புலிகள் அடைத்ததன் பிற்பாடே புலிகளுக் கும் இராணுவத்துக்கும் இடையிலான போர் ஆரம்பித்தது.

71. புலிகளின் திருகோணமலை மாவட்டத்துக்கான அரசியற் பணிகளை மேற்கொண்டிருந்தவர். மாவிலாறு அணையைப் புலிகள் மூடியபோது எழிலனே அது தொடர்பான விவகாரங்களை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருடன் இணைந்து கையாண்டவர்.
பின்னர், புலிகளின் ஆட்சேர்ப்புக்குப் பொறுப்பாக இருந்தார். இறுதிப் போரின்பின்னர் படையினரிடம் சரணடைந்த எழிலன் காணாமற் போய்விட்டார்.
எழிலனின் மனைவி அனந்தி சசிதரன் தற்போது வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்.

-நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடுகிறோம்

72. பிரபாகரனின் மூத்த மகன். நெருங்கிய சகாவாக இருந்த சாள்ஸ் அன்ரனியின் பெயரைத் தன்னுடைய மகனுக்குச் சூட்டியிருந்தார் பிரபாகரன்.
புலிகள் இயக்கத்தின் கணினிப் பிரிவுக்கும் ஆயுத உற்பத்திப் பிரிவுக்கும் பொறுப்பாளராக இருந்தார். இறுதிப்போரின்போது கொல்லப்பட்டார்.

73. 1985ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் குமுதினி எனும் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டது குமுதினிப் படுகொலைகள் என அழைக்கப்படுகிறது. குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.

74. பிரபாகரனின் உறவினர். புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். தமிழ்ச்செல்வனின் மரணத்தை அடுத்து அரசியற்துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்டார்.
இறுதிப்போரின்போது வெள்ளைக் கொடியுடன் படையினரிடம் சரணடையச் செல்கையில் கொல்லப்பட்டார்.

75. செம்மண்.

76. புலிகளின் விமானப்படைத்தளபதி. பிரபாகரனின் உறவினர். புலிகளுக்கான விமானப்படையை உருவாக்கியவர். இவருடைய சகோதரரும் ஒரு போராளியாக இருந்து குமரப்பா, புலேந்திரன் ஆகிய தளபதிகளுடன் மரணத்தைத் தழுவிக்கொண்டவர். இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி நடத்திய கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

77. குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரண்டு வேங்கைகள்: மட்டக்களப்புத் தளபதி குமரப்பா. திருகோணமலைத் தளபதி புலேந்திரன். இருவரும் ஏனைய 10 போராளிகளுடன் இலங்கை இந்திய உடன்படிக்கைக் காலத்தில், படகுகளில் இந்தியா நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது கடலில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப் பட்டனர்.
 
இந்தக் கைது தவறு என்று புலிகள் தெரிவித்திருந்த போதும் இவர்களை இலங்கைப்படையினர் பலாலி முகாமுக்குக் கொண்டு சென்று சிறைவைத்தனர்.
பின்னர் அங்கிருந்து கொழும்பு கொண்டு செல்ல முற்பட்டது இலங்கை அரசு. இதைப் புலிகள் எதிர்த்து இந்தியத்தூதுவராக இருந்த ஜே.என். டிக்ஸிற்றிடம் முறையிட்டனர்.
எனினும் இலங்கை அரசு இவர்களை விமானம் மூலமாகக் கொழும்பு செல்ல முற்பட்டபோது 12 பேரும் சயனைற் உட்கொண்டு மரணத்தைத் தழுவிக்கொண்டனர்.

78. தமிழ்ச்செல்வனின் மெய்ப்பாதுகாவலராக இருந்த போராளி. இதனால் பிரபாகரனுடன் அறிமுகத்தைப் பெற்றிருந்தார்.

79. கிளிநொச்சி நகரத்தின் மீது 1996 இல் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கை.

80. இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டவர்கள்.

81. கடற்புலி மகளிர்ப் பொறுப்பாளர்.

82. பிரபாகரனின் பாதுகாப்புக்குப் பொறுப்பான படையணி. படையினருக்கு எதிரான தாக்குதல்களிலும் பங்கெடுத் துள்ளது. பிரபாகரனுடைய மெய்ப்பாதுகாவலர்களாக இருந்த இம்ரான், பாண்டியன் ஆகியோரின் பேரில் உருவாக்கப்பட்ட படையணி.

83. கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவர். முன்னர் புலிகளின் தொலைக்காட்சிப் பிரிவில் செயற்பட்ட போராளி. குறும் படங்களிலும் நடித்துள்ளார். இசைப்பிரியாவின் கணவர். இறுதிப்போரின்போது கொல்லப்பட்டார்.

84. விடுதலைப்புலிகளின் போராளி. புலிகளின் ஊடகத்துறை யில் பணியாற்றியவர். பலதுறை ஆற்றல் உடையவர். இவர் நடித்த குறும்படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இறுதிப்போரின்போது படையினரால் சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

சரணடைவும் சிறைச்சாலையும்:-

85. இந்தியப் படையினருடனான மோதலில் கொல்லப்பட்ட பெண்போராளி. 10.10.1987 இல் யாழ்ப்பாணம் கோப்பாய்ப் பகுதியில் பலியானார். விடுதலைப்புலிகள் அமைப்பில் முதற்பலியான பெண் போராளியும் இவரே.

86. பாராளுமன்ற உறுப்பினர். இறுதிப்போரின்போது புலிகளுடன் வன்னியில் இருந்த ஒரே பாராளுமன்ற உறுப்பினரும் இவரே. புலிகளின் வரலாற்றுப் பிரசித்திபெற்ற – பிரபாகரன் பங்குபற்றிய முதலாவது கண்ணிவெடித் தாக்குதலில் சாவடைந்த மூத்த உறுப்பினர் செல்லக்கிளியின் சகோதரர்.

87. இலங்கை அரசினால் உருவாக்கப்பட்டுள்ள தடுப்புமுகாம். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்படும் சந்தேகத்துக்குரியவர்களும் போராளிகளும் இந்த முகாமில் தான் தடுத்து வைக்கப்படுவர். இலங்கையின் தென்பகுதி யான காலி மாவட்டத்தில் உள்ளது.

88. இலங்கையின் முக்கியமான சிறைச்சாலை. இந்தச் சிறைச் சாலையில்தான் 1983இல் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன், இராசகிளி உள்ளிட்ட 52 தமிழ் அரசியற் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

89. மரத்தூளில் செய்யப்படும் ஒரு வகையான அட்டை.

90. சிங்களப்பெண்.

91. வெலிக்கடைச் சிறைச்சாலையின் ஒரு தொகுதி. அரசியற் கைதிகள் இங்கே அதிகமாக உள்ளனர்.

92. மனநோயாளர்கள் சிறப்பு மருத்துவமனை 
93. கோதுமை மாவைக் கொண்டு செய்யப்படும் உணவுப் பொருள் – ப்ரெட். -

புனர்வாழ்வு:-

94. பிரசித்திபெற்ற முருகன் கோவில். 95. கதிர்காமம் முருகன் கோவிலின் அண்மையில் செல்லக் கதிர்காமம் அமைந்துள்ளது. இங்குள்ள பிள்ளையார் கோவிலும் பிரசித்தி பெற்றது. இது கதிர்காமத்திலிருந்து மூன்று கி.மீ தூரத்திலுள்ளது

96. இலங்கை கதிர்காமத்தினூடாகப் பாயும் ஆறு மாணிக்க கங்கை.
இது 114 கி.மீ. நீளமுடையது. மாணிக்க கங்கையில் நீராடி கதிரமலை ஏறுவது கோவிலுக்குச் செல்லுபவர்களின் ஐதீகமாக உள்ளது.

முடிவுற்றது

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.