Monday 15 June 2020

1993: மாத்தையா கைது - பூநகரி தாக்குதல் - 14


ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு - 14  

நவம்பர் 10, 1993 அன்று பூநகரியில் இருந்த சிங்களப்படையின் மிகப்பெரிய கூட்டுப்படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கை தான் தவளைப் பாய்ச்சல்.!!!

பூநகரி தாக்குதலை ஆரம்பித்த முதல் மூன்று நாட்களிலும் ஐநூற்றுக்கும் அதிகமான போராளிகள் வீர மரணமடைந்திருந்தனர்.
* குறுகிய மனப்பாங்கும் வக்கிர குணங்களும் கொண்டவர்களின் கரங்களில் ஆயுதங்களும் அதிகாரமும் போய்ச் சேரும்போது எத்தகைய மோசமான அத்துமீறல்கள் நடைபெறும் என்பதற்கு அந்தப் பயிற்சி முகாமின் ஒரு சில ஆசியர்கள் உதாரணமாக இருந்தனர்.
சற்று நேரத்திற்கு முன்பு வரை தீராப் பகையுணர்ச்சியோடு எதிரும் புதிருமாக நின்று போரிட்டவர்கள் நிலத்தில் சடலங்களாக சிதறிக்கிடந்த காட்சி ஒரு தாயின் மடியில் உறக்கத்தில் புரண்டு கிடக்கும் குழந்தைகளையே நினைவுபடுத்தியது.
எல்லா வேறுபாடுகளும், முரண்பாடுகளும், பகைமைகளும் அர்த்தமிழந்து போகும் இடமும் போர்க்களம்தான் என்பதை முழுமையாக உணரக்கூடிய அறிவு உண்மையாகவே அப்போது எனக்கிருக்கவில்லை.
பூநகரி சமர் மக்கள் மத்தியில் புலிகளைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. அதேவேளை மாத்தையாவுடன் சதியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பல திறமையான மூத்த போராளிகள் கைது செய்யப்பட்டனர்
* மக்கள் மத்தியிலும் மாத்தையா விவகாரம் பயங்கரமான உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் அவர் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்றவராகவும், இயக்கத்தின் மிக நெருக்கடியான காலகட்டங்களில் அதன் வளர்ச்சிக்காக மிகக் கடினமாக உழைத்தவராகவும் அறியப்பட்டிருந்தார்.


தொடர்ந்து....
பாரிய இராணுவத் தளமொன்றின் அமைவிடத்தைச் சித்திரிக்கும் மாதிரி அமைப்புக்களுடன் கூடிய பெரிய வரைபடத்தினைச் சுற்றி வளைத்து நின்றுகொண்டிருந்தோம்.

எமக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த மாதிரி உருவைச் சுட்டிக் காட்டினார் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி. இது எந்த இடமென்று தெரிந்த ஆக்கள் சொல்லுங்கோ பாப்பம்எனக் கூறியபடி, அங்கு நின்றுகொண்டிருந்த போராளிகளை நோக்கினார்.

கடலும் கடல் சார்ந்த வெட்டைவெளிப் பிரதேசங்களும் கொண்டதான நிலப் பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமின் தோற்றத்தை விவரிப்பதாக அந்த மாதிரி வரைபடம் அமைந்திருந்தது.

ஆனையிறவு”, “முல்லைத் தீவு”, “இல்லையில்லை ஆனையிறவுதான்.
போராளிகள் தமது பல்வேறு அனுமானங்களையும் ஊகங்களையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். சற்று நேரம் மௌனமாகப் பார்த்த அனைவரையும் அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினார்.


எல்லாரும் வடிவாக் கவனிச்சுக் கொள்ளுங்கோ. இது பூநகரி இராணுவத் தளத்திற்குரிய வரைபடம்.
நாங்கள் இவ்வளவு நாளும் பயிற்சி எடுத்தது இந்தப் பூநகரி இராணுவ தளத்தைத் தாக்கியழிப்பதற்காகத்தான்.
இது கடலும் தரையும் சேர்ந்த இராணுவத் தளம். ஆகவே ஒரே நேரத்தில கடலாலும் தரையாலும் இந்த முகாமின் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டமொன்றை இயக்கம் வகுத்துள்ளது.

1993 இறுதிப் பகுதியில் அச்சுவேலிப் பகுதியில் வல்லைவெளியோடு சேர்ந்திருந்த கடல் நீரேரியில் ஒரு மாதிரி இராணுவ தளம் அமைக்கப்பட்டு எமது அணிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன.

ஆனால் அது எந்த இராணுவத் தளத்தின் மாதிரி வடிவம் என்பது இப்போதுதான் எங்களுக்குப் புரிந்தது.

நான் முதன் முதலாகப் பங்கெடுத்த பெரிய தாக்குதல் பூநகரி இராணுவ முகாம் மீதானதாகும். பதினைந்து போராளிகளைக் கொண்ட அணியொன்றுக்குப் பொறுப்பாக நான் நியமிக்கப்பட்டிருந்தேன்.

யாழ்ப்பாணக் கடல் நீரேரியில் இரவு பகல் பாராது கடினமான பயிற்சியில் எமது அணிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. திருகோண மலையைச் சேர்ந்த போராளியான மேஜர் சுமங்கலா 45 பேரைக் கொண்ட எமது அணிக்குப் பொறுப்பாக இருந்தார்.

கேணல் விதுசா
விடுதலைப் புலிகளின் மாலதி படையணியின் சிறப்புத் தளபதி கேணல் விதுசாவுடன் இந்த தாக்குதல் நடவடிக்கைக்காக விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு வருடத்திற்கும் மேலான தயார்படுத்தல்களை மேற்கொண்டிருந்தது.

வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலுமிருந்து தாக்குதல் பயிற்சி பெற்ற ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளைக் கொண்ட தாக்குதலணிகள் இந்தச் சமரில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

மகளிர் படையணிப் போராளிகள் மாத்திரம் ஆயிரம் பேர் வரை இப்போருக்காகத் தயாராகியிருந்தனர்.
பூநகரி இராணுவ முகாம் பற்றிய வேவு நடவடிக்கைகளிலும் மகளிர் அணிப் போராளிகள் ஆரம்பத்திலிருந்தே ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அது மட்டுமல்லாமல் கடல் தாக்குதல் நடவடிக்கையிலும் கடற்புலி பெண் போராளிகள் அதிக அளவு ஈடுபட்டிருந்தனர்.

மாதக் கணக்காக வழங்கப்பட்டிருந்த விசேடமான கடும் பயிற்சிகளோடு உச்சமான இரகசியப் நுழைவாயிலான ஆனையிறவிலிருந்த இராணுவ முகாமின் பலத்தைக் குன்றச் செய்வதும், வன்னிக்கும் யாழ்ப்பாணத்திற்குமான கிளாலி கடல் நீரேரிப் பாதையைப் புலிகளது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும், யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்றும் இலங்கை இராணுவத்தினருடைய திட்டத்தை முறியடிப்பதுமே புலிகளுடைய நோக்கமாக இருந்தது.

புலிகளின் தாக்குதல் வரலாற்றிலேயே முதற் தடவையாக ஒரு இராணுவ கடற்படைக் கூட்டுப் படைத்தளம் மீது நடத்தப்பட்ட ஈரூடகத் தாக்குதல் இதுவாகும்.
இதனால் இந்நடவடிக்கைக்கு ஒப்பரேசன் தவளைஎன இயக்கம் பெயர் சூட்டியிருந்தது.

இயக்கத்தின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான பொட்டு அம்மான் அந்த நடவடிக்கையை ஒருங்கிணைக்கும் பிரதான பொறுப்பை வகித்தார்.
நான் பொட்டு அம்மானைப் பல சந்தர்ப்பங்களில் நேருக்கு நேர் கண்டிருந்தாலும் அவரது நேரடியான தாக்குதல் விளக்கத்தைப் பூநகரிப் பயிற்சியின் போதே பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து எமது அணிகள் கிளாலி கடல் நீரேரி மூலமாக வன்னிக்கு நகர்த்தப்பட்டது.

இரவோடிரவாக லொறிகளில் அடைத்து ஏற்றப்பட்டு அம்பகாமம் காட்டுப் பகுதியில் அமைந்திருந்த ஒரு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டோம்.
அங்கு இரண்டு நாட்கள் வரையில் தாக்குதல்களுக்கான இறுதித்தயார்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.

அனைவருக்கும் சாக்குத் தொப்பி, துப்பாக்கிகளுக்குத் தேவையான மேலதிக ரவைகள், கைக்குண்டுகள், தொலைதொடர்புக்கான சங்கேதக் குறியீடுகள், தொலைதொடர்புச் சாதனங்களுக்கான மேலதிக பற்றரிகள், உலர் உணவுப் பொதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டன.

பல போராளிகள் தமது குடும்பத்தவர்களுக்குத் தமது இறுதி மடல்களையும் எழுதிக்கொண்டிருந்தனர்.

எனது நெருங்கிய பல நண்பிகளும் இத்தாக்குதலில் பங்கெடுத்தனர்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள், நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், உயிர்மீதான உத்தரவாதமின்மை, வெளிப்படுத்த முடியாத விரக்தி என, நிச்சயிக்கப்பட்ட யுத்தமொன்றில் பங்குபெறும் போராளிகளின் இறுதிக் கணங்களில் அவர்களுடைய கண்களில் தேங்கியிருக்கும் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. எவராலும் மீண்டுமொரு யுத்தத்தைப் பற்றிப் பேசவோ அல்லது நினைத்துப் பார்க்கவோ முடியாது. 

பூநகரியின் வயல்வெளிகளும், கார்த்திகை மாதத்துத் தொடர் மழையும், 1993இன் செப்டெம்பர் 11இல் ஆரம்பித்த அந்த யுத்தத்தை மிகவும் உக்கிரமானதாக மாற்றியமைத்திருந்தன.

தாக்குதலை ஆரம்பித்த முதல் மூன்று நாட்களிலும் ஐநூற்றுக்கும் அதிகமான போராளிகள் வீர மரணமடைந்திருந்தனர்.

இயக்கத்தின் தாக்குதல் வரலாற்றில் முதன்முதலாக இலங்கைப் படையினரின் யுத்த டாங்கி ஒன்று புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.

அந்த டாங்கியைப் பூநகரியிலிருந்து புலிகளின் பிரதேசத்திற்குள் கொண்டுவரும் பாதைகளில் அமைந்திருந்த பதுங்குக் குழிகளையும் முட்கம்பிச் சுருள்களையும் அகற்றி உடனடியாகப் பாதையைச் செப்பனிடும்படி எனது அணிக்கு உத்தரவிடப் பட்டிருந்தது.

நானும் என்னோடு பல போராளிகளும் இணைந்து துரித கதியில் இயங்கிப் பாதையைச் செப்பனிட்டு முடித்த ஓரிரு நிமிடங்களில் பெரும் உறுமலுடன் யுத்த டாங்கி எம்மைக் கடந்து சென்றது.

புலிக் கொடியை விரித்துப் பிடித்தவாறு ஆண் போராளிகள் பலர் அந்த டாங்கியின்மீது ஏறி நின்று பெரும் சத்தமிட்டுக்கொண்டு சென்றனர். அக்காட்சியைக் கண்ட எமது மனமும் வெற்றிப் பெருமிதத்தில் குதூகலித்தது.

இறுதியாக நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட பின்னர், வாட்டர்லூ போர்க்களத்தைப் பார்வையிட்ட வெலிங்டன் பிரபு கூறியது, “தோல்வியுற்ற ஒரு போர் தரும் துயரத்திற்கு அடுத்ததாகப் பெரும் துயரம் தருவது போரில் ஈட்டிய வெற்றியே” (Next to a battle lost, the saddest thing is a battle won.) எனது வாழ்விலும் முதன்முதலாக இத்துயரத்தை நான் அனுபவித்தேன்.

வீட்டை விட்டு வெளியேறி இயக்கத்தில் இணைந்த பின்னர், என்னுடன் உயிருக்குயிராகப் பழகிய எனது நெருங்கிய நண்பிகளில் பலரை அந்தச் சமரில் எனது கண்ணெதிரிலேயே நான் இழந்துபோனேன்.

அவர்களில் சாம்பவி எனக்கு மிக நெருக்கமான தோழி. யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் திறமை மிக்க மாணவிகளில் ஒருத்தியாக இருந்து, பல ஆசிரியைகளின் கவலை தோய்ந்த முகங்களையும் தாண்டி, 1991இல் இயக்கத்தில் இணைந்துகொண்டவள்.

மேஜர் சோதியா முகாமில் 23ஆவது அணியில் போராளியாக ஆயுதப் பயிற்சி பெற்றவள். மிகச் சிறந்த தலைமைத்துவப் பண்புகளும், சிறுவயதிலேயே அபாரமான சிந்தனைத் தெளிவும், திறமையும் கொண்ட அவளது பயிற்சி முகாம் அனுபவங்கள் கண்ணீரை வரவழைப்பவை.

குறுகிய மனப்பாங்கும் வக்கிர குணங்களும் கொண்டவர்களின் கரங்களில் ஆயுதங்களும் அதிகாரமும் போய்ச் சேரும்போது எத்தகைய மோசமான அத்துமீறல்கள் நடைபெறும் என்பதற்கு அந்தப் பயிற்சி முகாமின் ஒரு சில ஆசியர்கள் உதாரணமாக இருந்தனர்.

அரசியல் போராளிகளாகப் பணியாற்றிய பின்னர் ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக வந்தார்கள் என்ற காரணத்திற்காக வயது வித்தியாசமின்றி அங்கே கொடூரமான முறையில் பயிலுநர்கள் நடத்தப்பட்டிருந்தனர்.

இரத்தக் காயங்கள் ஏற்படுமளவுக்கு அடியுதைகளும், மனதை நோகடிக்கும் குரூரமான வார்த்தைகளும், தனிப்பட்ட பழிவாங்கல்களும் என அந்த மகளிர் பயிற்சி முகாமில் அரங்கேறிய சம்பவங்கள் ஒட்டுமொத்தமான பெண் போராளிகளுக்கும் மிகத் தவறான முன்னுதாரணங்களாகவே இருந்தன.

வயல்வெளிகளுக்கூடாக நானும் சாம்பவியும் தவழ்ந்தபடி முன்னேறிக் கொண்டிருந்தோம். மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் வெள்ளம் தேங்கிக்கிடந்தது.

தூரத்தே உயரமான நிலை ஒன்றிலிருந்து தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த இராணுவத்தின் குறிபார்த்துச் சுடுபவனின் இலக்குத் தவறாத ரவைகள் அந்த வயல்வெளியில் பல போராளிகளின் உயிர்களைக் குடித்துக்கொண்டிருந்தன.
சிறிதாகக்கூடத் தலையை நிமிர்த்திப் பார்க்க முடியாத நிலையில் சேற்று வயல்களுக்கூடாக நாம் தவழ்ந்துகொண்டிருந்தோம்.

எனது பக்கவாட்டில் ஊர்ந்துகொண்டிருந்த சாம்பவியிடமிருந்து திடீரென ஹக்என வினோதமான சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன்.
அவளது முகம் சேற்றுக்குள் புதைந்துபோய்க் கிடந்தது. நான் அவளது தலையை நிமிர்த்திப் பார்த்தபோது கடைவாயில் இரத்தம் கசிந்துகொண்டிருந்தது.
ஒரேயொரு ரவை சாம்பவியின் மார்பைத் துளைத்து வெளியேறாமல் அவளது இதயப் பகுதியில் தங்கியிருந்தது.

குளிரத் தொடங்கியிருந்த அவளது உடலில் ஒட்டியிருந்த இறுதி உயிர்ச் சூட்டை எனது கைகளில் கடைசியாக உணர்ந்தேன். இந்தச் சமரில் தனக்கு மரணம் ஏற்படுமெனச் சாம்பவி கொஞ்சமேனும் நினைத்திருக்கவில்லை.

இந்தச் சண்டை முடிய உன்னுடன் வந்து வன்னியில் இடங்களைச் சுற்றிப்பார்க்க வேண்டும். எமது அனுபவங்களைப் புத்தகமாக எழுதவேணும்இப்படியான நிறையக் கனவுகளும் விருப்பங்களும் அவளிடம் இருந்தன.

அதே வயல்வெளியில் தலையில் சூடுபட்டு உயிரிழந்து போன இன்னொரு தோழி தாமரை. அதிகமாகப் பேசாமல் அமைதியாகவே இருந்து அனைவரையும் கவர்ந்துவிடும் அவளது கண்களில் இடையறாத சோகம் குடியிருப்பதாக எனக்குப் படுவதுண்டு.

யுத்தம் தொடங்குவதற்கு முதல் நாள் இரவு பூநகரியின் நாலாம்கட்டைப் பகுதியில் எமது அணிகள் இறுதியாகத் தங்கியிருந்த இரவு.

இராணுவ முகாமின் பாரிய தேடொளி (focus) விளக்குகள் வழமைபோலச் சுழன்று சுழன்று அப்பிரதேசத்தையே பகலாக்கிக் கொண்டிருந்தன.

பரா விளக்குகளும் உயரத்தில் எழுந்து பிரகாசித்துக்கொண்டிருந்தன.
எமது சிறிய அணியில் ஒரு போராளி மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்தாள். 

 உங்கள் ஆவி பிரிந்திடும் அக்கணப் பொழுதில் யாரை நினைத்தீரோஎன்ற வரிகளை கடந்து சென்றபோது எனது மனதில் அம்மாவுடைய முகம் வந்து போனது.

எனது பக்கத்தில் அமர்ந்திருந்த தாமரையிடம் கேட்டேன்; “நீ யாரை நினைப்பாய் தாமரை?” வழமையான அவளின் சோக விழிகள் ஒரு தடவை மின்னியது. காய்ந்து போயிருந்த உதடுகளில் மெல்லிய புன்னகை நெளிந்தது. நான் விரும்பியிருந்தவரைத்தான் நினைப்பேன்.

அவள் சொன்ன பெயர் எனக்கு ஞாபகமில்லை. ஆனால் அவளுக்குள் ஆழப் புதைந்து கிடந்த காதலின் இரகசியக் காயத்தை அப்போதுதான் எனக்குத் திறந்து காட்டியிருந்தாள்.

ஏதோ ஒரு யுத்தத்தில் அவளுடைய போராளிக் காதலன் ஏற்கனவே உயிரிழந்திருந்தான்.

இப்படியாக நீளும் எண்ணுக் கணக்கற்ற கண்ணீர்க் கதைகளோடு பூநகரி யுத்தம் புலிகள் இயக்கத்திற்குப் பாரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருந்தது.

அதிவேக நீருந்து விசைப் படகுகள் கைப்பற்றப்பட்டதும், பல கனரக ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதும் பெரும் வெற்றிகளாகப் புலிகளால் கொண்டாடப்பட்டது.

இராணுவத்தினரதும் புலிகளினதும் உயிரற்ற உடல்கள் மழைத் தண்ணீரில் ஊறிப்போய் ஆங்காங்கு விறைத்துக் கிடந்தன. மழையில் கரைந்து கரைந்து சிவப்புக் குருதி தண்ணீரோடு கலந்து ஓடிக்கொண்டிருந்தது.

ற்று நேரத்திற்கு முன்பு வரை தீராப் பகையுணர்ச்சியோடு எதிரும் புதிருமாக நின்று போரிட்டவர்கள் நிலத்தில் சடலங்களாக சிதறிக்கிடந்த காட்சி ஒரு தாயின் மடியில் உறக்கத்தில் புரண்டு கிடக்கும் குழந்தைகளையே நினைவுபடுத்தியது.
 
எல்லா வேறுபாடுகளும், முரண்பாடுகளும், பகைமைகளும் அர்த்தமிழந்து போகும் இடமும் போர்க்களம்தான் என்பதை முழுமையாக உணரக்கூடிய அறிவு உண்மையாகவே அப்போது எனக்கிருக்கவில்லை.

அரசியல்துறைப் பொறுப்பாளரான தமிழ்ச்செல்வன், தளபதி சொர்ணம் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் காயமடைந்திருந்தனர்.

மூன்று நாட்களின் பின் எமது அணிகள் பூநகரியிலிருந்து பின்வாங்கியிருந்தன. இந்தத் தாக்குதலில் பங்கு பெற்ற அனைத்துப் போராளிகளுக்கும் ஒரு வாரம் விடுமுறை தரப்பட்டிருந்தது.

இயக்கத்தில் இணைந்ததன் பின்பு முதன்முதலாக நான் வீட்டிற்கு விடுமுறையில் சென்றிருந்தேன். சரியாக மூன்று வருடங்களில் குடும்பத்தில் பல மாற்றங்கள் உருவாகியிருந்தாலும் எனது குடும்பத்தினர் என்னை அரவணைத்து அன்பு மழை பொழிந்தார்கள்.

விடுமுறை முடிந்து மீண்டும் முகாமுக்குத் திரும்பியபோது எவருமே என்னுடன் பேசாது கண்ணீருடன் விலகிச் சென்றனர். மீண்டும் உறவுகளைப் பிரிந்து செல்வது துன்பமாக இருந்த போதிலும், உயிரைக் கொடுத்த தோழியரின் நினைவுகள் என்னை மீண்டும் போராட்டப் பாதைக்கே இழுத்துச் சென்றன.

கொக்குவில் பகுதியில் மாத்தையாவால் அமைக்கப்பட்டிருந்த மக்கள் முன்னணிக்குரிய லிங்கம்முகாம் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் அரசியல்துறைச் செயலகமாக மாற்றப்பட்டிருந்தது.

அதன் வளாகத்திலேயே இன்னொரு பகுதியில் அரசியல் கல்லூரியும் அமைக்கப்பட்டது. ஆண், பெண் போராளிகளுக்கான தனித்தனி வீடுகளும் இருந்தன.

அதன் சுற்றுவட்டாரத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகமும் அமைந்திருந்த காரணத்தால், கைலாசபதி கலையரங்கில் நிகழும் பல பெறுமதியான கல்விசார்ப் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன.

1993இன் நடுப்பகுதியில் அங்கு நடைபெற்ற இதழியல் பயிற்சிப் பட்டறையிலும் கலந்து கொண்டு ஊடகத்துறை பற்றிய பல பெறுமதியான விடயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது.

இயக்கத்தின் முக்கியஸ்தர்களாலும் இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பேராசிரியர்களாலும் பல புதிய விடயங்கள் கல்விக் குழுப் போராளிகளுக்குக் கற்பிக்கப்பட்டன.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வரலாறு, உலக விடுதலைப் போராட்டங்களின் வரலாறுகள், சமூகவியல், பொது அறிவு போன்ற பல வ ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டாலும் எதுவுமே தொடர்ச்சியாக அமையவில்லை.
ஏனெனில் இயக்கத்தின் பரப்புரைப் பணிகளில் கல்விக் குழுப் போராளிகள் சிறப்பு அணிகளாகப் பயன்படுத்தப்பட்டனர். ஆகவே அடிக்கடி வகுப்புகள் குழம்பிவிடும். 1994 புலிகள் இயக்கம் யாழ் மாவட்டத்தில் பெரிய அளவு பரப்புரை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

பூநகரி சமர் மக்கள் மத்தியில் புலிகளைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. அதேவேளை மாத்தையாவுடன் சதியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பல திறமையான மூத்த போராளிகள் கைது செய்யப்பட்டனர்.
அரசியல் பிரிவிலும் அனேகமான பொறுப்பு மாற்றங்கள் இடம்பெற்றன.

இப்படியான சந்தர்ப்பத்தில் இருபாலை அரசியல் கல்லூரியில் இயக்கத்தின் இடைநிலைப் பொறுப்பாளர்களுக்கும், மூத்த பொறுப்பாளர்கள் மற்றும் தளபதிகளுக்குமான ஒரு கூட்டம் இயக்கத்தின் புலனாய்வுத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அக்கூட்டத்தில் கல்விக் குழுப் போராளிகளும் பங்குபெற்றிருந்தோம். கையில் விலங்கு போடப்பட்டிருந்த நிலையில் வரிசையாகப் பலர் மேடையில் இருத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

எனக்கு அவர்களில் ஒருவரைத் தவிர வேறொருவரையும் தெரிந்திருக்கவில்லை. நான் சிறு வகுப்பு படித்த காலத்தில், எமது ஊரில் சாரத்தோடு சைக்கிளில் உலவித் திரிந்த சுசீலன் அண்ணா என்று அழைக்கப்படும் போராளியை மட்டுமே எனக்குத் தெரிந்திருந்தது. சிவந்த நிறமும் உயர்ந்த தோற்றமும் கொண்டவர்.

இவர்தான் பூநகரி சமரில் புலிகள் கைப்பற்றிய யுத்த டாங்கியை எவ்வித முன் அனுபவமும் இன்றித் திறமையுடன் செலுத்திக்கொண்டு வந்தவர் எனப் போராளிகள் மட்டத்தில் பேசிக்கொண்டதைக் கேள்விப்பட்டிருந்தேன்.

அவர் மிகவும் திறமையான ஒரு போராளியென அனைவராலும் அறியப்பட்டிருந்தவர். அவர் அப்படியான ஒரு தவறைச் செய்திருப்பாரென்பதை என்னால் நம்ப முடியாமலிருந்தது.

அந்தக் கூட்டத்தில் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு பொறுப்பாளர் அவர்கள் மீதான குற்ற அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார்.

' இயக்கத்தின் பிரதித் தலைவர் நிலையில் இருந்த இந்தியாவின் உளவு அமைப்பான றோவின் முகவராக மாறி, இயக்கத்தின் தலைவருக்கு எதிராகச் செயற்பட்டதாகவும், அந்த நடவடிக்கைக்கு இவர்கள் துணை போனதாகவும் கூறப்பட்டது.

அதாவது இந்தியாவின் சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை றோதனது திட்டத்திற்குப் பயன்படுத்தியதாகவும் அவர் இந்தியச் சிறையிலிருந்து தப்பி வந்ததாகக் கூறினாலும் உண்மையாகவே அவர் றொஅமைப்பினால் தலைவரை அழிக்கும் சதித் திட்டத்திற்காக அனுப்பிவைக்கப்பட்ட ஒருவரே எனவும், மீண்டும் இயக்கத்துடன் இணைந்து செயற்படுவதன் ஊடாக இயக்கத்தின் நம்பிக்கையைப் பெற்று அதன் மூலம் தனது திட்டத்தை அவர் நிறைவேற்றிக்கொள்ள இருந்தார் எனவும் கூறப்பட்டது.

தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது...

ஆனையிறவு போரில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூருமுகமாகக் கொடிகாமத்தில் அமைக்கப்பட்ட நினைவாலயத்தைத் திறந்து வைப்பதற்காகத் தலைவர் வருகை தரும்போது, அவரை அங்கே கொல்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டிருந்ததாகவும், அதற்காக ஆயுதங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் திடீரென அந்த நிகழ்வுக்குத் தலைவர் சமூகமளிக்காத காரணத்தால் அத்திட்டம் செயற்படுத்தப்படவில்லை எனவும் கூறப்பட்டது.

கொடிகாமம் நினைவாலயம் திறப்பு விழாவுக்கு அண்ணை வரப்போறார்எனப் போராளிகள் மட்டத்தில் குதூகலமாகப் பேசிக்கொள்ளப்பட்டதும், என்ன காரணத்தாலோ இறுதிக் கணத்தில் பொட்டம்மான் வந்து திறந்து வைத்ததும் எனது நினைவுக்கு வந்தது.

அந்தக் காலகட்டத்தில் மாத்தையா மட்டுமே தனது பிஸ்டலுடன் தலைவருக்கு முன்பாகச் செல்லக் கூடியதான அதிகாரத்தைக் கொண்டிருந்தார்.
எனவே எதிர்பாராதவொரு தருணத்தில் மாத்தையா தனது கைத்துப்பாக்கியால் தலைவரைச் சுட்டுக்கொல்லுவார் எனவும், ஆத்திரமுற்ற கிருபன் உடனடியாகவே மாத்தையாவைச் சுட்டுக் கொல்லுவார் எனவும், தலைவர் மேலிருந்த பக்தி விசுவாசத்தால் துரோகியான மாத்தையாவைக் கிருபன் அழித்ததாக நம்பும் போராளிகள் கிருபனையே தலைவராக ஏற்றுக்கொண்டு அவரின் கீழ் செயற்படுவதற்கு முன்வருவார்கள் என்பதுதான் றோவின் உண்மையான திட்டம் எனவும் கூறப்பட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை றோவின் கைப்பொம்மையாக்குவதற்குப் போடப்பட்ட திட்டம் முறியடிக்கப்பட்டுவிட்டதாக '' அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இயக்கத்தில் போராளிகளுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்தன.
பண மோசடி செய்தல், பாலியல் குற்றங்களை இழைத்தல் இப்படியான தவறுகளுக்கு அதி உச்சக்கட்ட தண்டனையாக மரண தண்டனையே வழங்கப்பட்டது. ஆனால் இயக்கத்தின் பிரதித் தலைவராக இருந்த மாத்தையா தனது பொறுப்பின் கீழிருந்த போராளிகள் இத்தகைய தவறுகளில் ஈடுபடும்போது தண்டனை எதுவும் வழங்காத அதேவேளை, உங்களது தவறுகளைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினால் என்ன தண்டனை கிடைக்குமென்று தெரியும்தானே, நான் உங்களைப் பாதுகாக்கிறேன், நீங்கள் எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர்களைத் தனது கையாட்களாகப் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் கைதிகளாகக் கைவிலங்கிடப் பட்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக எழுந்து நின்று தாம் செய்த குற்றச் செயல்களைத் தாமே ஒப்புக்கொண்டனர்.
அந்தக் கூட்டத்தில் கூடியிருந்த போராளிகள் அனைவரும் அசையாது சிலைபோல அமர்ந்திருந்தனர். என்னைப் பொறுத்த அளவில் இலட்சியத்தால் ஒன்றிணைந்த உணர்வு ரீதியான குடும்பமாகவே இயக்கத்தைக் கருதியிருந்தேன். ஆனால் இப்படியான விடயங்களை அறிந்த போது மூச்சுக்கூட விடமுடியாத அளவுக்குப் பயமும் கலக்கமும் ஏற்பட்டது.

என்னைப் போலவே பல போராளிகளும் உறைந்து போயிருந்ததை என்னால் உணர முடிந்தது. தமது உணர்ச்சி களைத் தாங்கிக்கொள்ள முடியாத சில போராளிகள் இரகசிய மாக அழுதுகொண்டிருந்தார்கள், வேறு சிலர் எழுந்து நின்று குற்றம்சாட்டப் பட்டிருந்தவர்களை நோக்கி ஆக்ரோசமாக ஏசத் தொடங்கினார்கள்.

அன்றைய காலகட்டத்தில் இயக்கப் போராளிகளை மிகுந்த மனப் பாதிப்படையச் செய்த நிகழ்வாக அது அமைந்திருந்தது.

பொதுமக்கள் மத்தியிலும் மாத்தையா விவகாரம் பயங்கரமான உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் அவர் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்றவராகவும், இயக்கத்தின் மிக நெருக்கடியான காலகட்டங்களில் அதன் வளர்ச்சிக்காக மிகக் கடினமாக உழைத்தவராகவும் அறியப்பட்டிருந்தார்.

அரசியல்துறையினரால் நடாத்தப்படும் சமகால அரசியல் கருத்தரங்குகளில் மாத்தையா தொடர்பான பிரச்சனை பற்றிப் பல கேள்விகள் மக்களால் எழுப்பப்பட்டன. பல இடங்களில் மாத்தையா எங்கே?’ எனக் கேட்டு மக்கள் கோபத்துடன் வாதிட்டார்கள்.

தலைவருக்கெதிரான சதி நடவடிக்கையொன்றின் சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுவதாக மக்களுக்குக் கூறும்படி எமக்கு விளக்கம் தரப்பட்டிருந்தது.

தமிழினி
தொடரும்
நன்றி : இணையதளம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.