Thursday 11 June 2020

இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்; பாகம் 10 to 12

ஈழத் தமிழருக்கு இந்தியர்களும் அடக்குமுறையாளர்கள் (பகுதி - 10)

* பிரேமதாசா, அரசியலில் தன்னை ஒரு சிங்கள கடும்போக்கு இனவாதியாக காட்டிக் கொண்டவர். அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் எதிரிகளையும், நண்பர்களையும் வியக்க வைத்தார். பிரேமதாசாவின் நம்பிக்கைக்குரிய அந்தரங்க ஆலோசகர் ஒரு தமிழர். பிரேமதாச அரசுடன், புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் கொழும்பில் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள். முக்கிய அரசியல் தலைவர்களான யோகி, தினேஷ்(தமிழ்ச்செல்வன்),ஆகியோர் கொழும்பு நகரில் தங்கியிருந்தனர். அரச செலவில் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க வைத்ததை, எதிர்க்கட்சி அடிக்கடி சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தது. இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட எதிர்பாராத நட்புறவு பல பரிமாணங்களைக் கொண்டிருந்தது.

* "
வட-கிழக்கு மாகாணங்களில் இந்தியப் படைகளின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், கொழும்பில் அரசியல் தஞ்சம் கோரலாம்," என்று அரசே அறிவித்தது! அவ்வாறு வரும் அரசியல் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்குவதற்காக, "சரஸ்வதி மண்டபம்" அகதி முகாமாக மாற்றியமைக்கப் பட்டது!! கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் அருகில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில், புலிகளும், அவர்களது குடும்பத்தினரும் அகதிகளாக பதிந்து கொண்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை சிறிலங்கா அரசு செய்து கொடுத்தது.

தொடர்ச்சி..

இந்திய இராணுவம், சிங்கள இராணுவம் போன்று கடுமையாக நடந்து கொள்ளாது என்று தான் பெரும்பான்மை ஈழத் தமிழர்கள் நம்பினார்கள். இந்தியா தமிழரின் தாய்நாடு என்று நம்பும் ஒரு பிரிவினர் இன்றும் உள்ளனர். ஆனால் போர் தொடங்கியவுடன் அத்தகைய கற்பனைகள் எல்லாம் தூள் தூளாக நொறுங்கிப் போயின. சிறிலங்கா இராணுவம் கைது செய்யும் சந்தேக நபர்களை எவ்வாறு சித்திரவதை செய்ததோ, அதற்கு சிறிதும் குறையாமல் இந்திய இராணுவம் நடந்து கொண்டது. ஆனால் ஒரேயொரு வித்தியாசம் இருந்தது. கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் என்று தெரிந்தாலும், அவர்கள் தமிழர்கள் என்ற காரணத்தால் சிங்கள படையினர் வதைத்தனர். நிரந்தர சிறைச்சாலைக்கு மாற்றி விடும் வரையில் சித்திரவதை செய்வார்கள். இந்திய இராணுவத்திற்கு புலி உறுப்பினர்கள் மீது மட்டுமே வெறுப்பிருந்தது. மற்றவர்கள் மீதான சந்தேகம் தீர்ந்து விட்டால் விடுதலை செய்தார்கள்.

ஒரு முறை முல்லைத்தீவு நகரில் ஈரோஸ் உறுப்பினர்களை, புலிச் சந்தேகநபர்களாக கருதி கைது செய்தார்கள். உறவினர்கள் என்ன சொல்லியும் விடாததால், ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் நேரடியாக சென்று பேச வேண்டியிருந்தது. எதிர்பாராதாவிதமாக அங்கு நடந்த "பேச்சுவார்த்தையில்" நானும் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. பாலகுமாரை இரண்டாம் முறை சந்திக்கும் சந்தர்ப்பம் அது. ஏற்கனவே யாழ்ப்பாணம் கொக்குவிலில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுங்கு செய்த கலந்துரையாடலில் சந்தித்திருக்கிறேன். இரு வருடங்களின் பின்னர், முல்லைத்தீவில் என்னை அடையாளம் கண்ட பாலகுமாரின் நினைவாற்றல் வியக்க வைத்தது. முல்லைத்தீவு இராணுவ முகாமில், பாலகுமாரின் தலையீட்டின் பின்னர் கைது செய்யப்பட்ட ஈரோஸ் உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்தியப் படையினர் நிலை கொடிருந்த காலம் முழுவதும் ஈரோஸ் அமைப்பு போர்நிறுத்த விதிகளை மீறாததால் அவர்களை யாரும் சீண்டவில்லை. மோதலில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருடனும் நல்லுறவைப் பேணி வந்ததால் மக்களின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்கள்.

துரதிர்ஷ்டவசமாக எல்லோருக்கும் அத்தகைய மேலிடத்து செல்வாக்கு கிடைப்பதில்லை. இந்தியப் படையினர் என்னை இரண்டு தடவைகள் என்னைக் கைது செய்து கொண்டு சென்ற பொழுது யாரும் மீட்க வரவில்லை. முதலாவது தடவை வழமையான வீதிச் சோதனையில் தடுத்து நிறுத்தப் பட்டேன். வழக்கம் போல மன்மூட்டைகளுக்கு பின்னால் பாதுகாப்பு அரணுக்குள் மறைந்திருந்த "தலையாட்டி" காட்டிக் கொடுத்ததால் பிடிபட்டேன். முன்னாள் புலி உறுப்பினரான அந்த நபர், என்னை தன்னுடைய முகாமில் இருந்ததாக பொய் கூறியிருந்தார். ஒவ்வொரு சோதனை நடவடிக்கையின் போதும், யாராவது ஒருவரைக் காட்டிக் கொடுக்க வேண்டுமென தலையாட்டிகளுக்கு நிர்ப்பந்தம் இருந்தது. அதனால் சில நேரம் வேண்டுமென்றே கண்ணில் படும் அப்பாவிகளை எல்லாம் பிடித்துக் கொடுத்தார்கள். அவ்வாறு குறைந்தது ஒருவரையாவது காட்டிக் கொடுக்கா விட்டால், அடிவிழும் என்று பின்னர் கேள்விப் பட்டேன்.

அன்று நடந்த சோதனையில், "ஒரு புலியை" பிடித்து விட்ட சந்தோஷத்தில் படையினர் என்னை முகாமுக்கு கொண்டு சென்றார்கள். அங்கிருந்த மேலதிகாரி விசாரணைகளை நடத்தினார். புலிகள் அமைப்பில் எனது பொறுப்பென்ன? எந்த முகாமில் இருந்தேன்? என்றெல்லாம் விசாரித்தார்கள். புலிகள் அமைப்பிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று சொன்னதை நம்ப மறுத்தார்கள். அவர்களைப் பொறுத்த வரையில், தலையாட்டி காட்டிக் கொடுத்தால் அது புலி தான். விசாரணை செய்த அதிகாரி புலிகள் அமைப்பினர் குறித்த விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்தார். அதனால், புலிகளைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று சாதிக்க முடியாது. அனைத்து மக்களுக்கும் பகிரங்கமாக தெரிந்த விஷயங்களை தெரியாது என்று சொன்னால், வேண்டுமென்றே மறைப்பதாக சந்தேகப் பட்டார்கள். தம்மிடம் இருந்த புலி உறுப்பினர்களின் புகைப்படங்களை கொண்டு வந்து காட்டினார்கள்


இந்தியப் படையுடன் யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் கொல்லப்பட்ட சில தலைவர்களும், வேறு சில இனந் தெரியாத உறுப்பினர்களும் அந்தப் புகைப் படங்களில் இருந்தனர். அவற்றைக் காட்டி, யார் யாரை எனக்குத் தெரியும் என்று கேட்டார்கள். "சில மரணமடைந்த தலைவர்களை தெரியும்," என்றேன். "எப்படித் தெரியும்?" என்று கேட்டார்கள். "அவர்களின் படங்கள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன, போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார்கள்," என்று பதில் கூறினேன். எனது பதில் அப்பாவித்தனமாக தெரிந்திருக்க வேண்டும். உயிருடன் இருக்கும் போராளிகளில் யாரைத் தெரியும் என்று கேட்டார்கள். உண்மையிலேயே அவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது. விசாரணை செய்த அதிகாரி என்னை நம்பினாரா, நம்பவில்லையா என்று தெரியவில்லை. என்னைக் கொண்டு சென்று அடைத்து வைக்குமாறு சொல்லி விட்டு சென்று விட்டார்.

நல்லூர் நகரத்திற்கு அண்மையில் இருந்த பிரபல பாடசாலையில் ஒரு பகுதியை இந்திய இராணுவத்தினர் முகாமாக பயன்படுத்தினார்கள். மேலே வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. கீழே படிகளுக்கு பின்னால் இருக்கும் அறை ஒன்றில் எங்களை அடைத்து வைத்திருந்தார்கள். என்னோடு ஐந்து, ஆறு கைதிகள் அந்த குட்டிச் சிறைக்குள் அடைக்கப் பட்டிருந்தனர். உணவோ, குடிநீரோ எதுவும் தரப்படவில்லை. கைதிகளைப் பார்க்க வருபவர்கள் கொண்டு வந்து கொடுப்பதை பகிர்ந்துண்ண வேண்டியிருந்தது. இருந்திருந்து அந்தப் பக்கம் வரும் சிப்பாய்கள் பீடி மட்டும் தருவார்கள். பாடசாலை மாணவர்களும் பார்க்கக் கூடிய இடத்தில் தான் சிறை வைக்கப் பட்டிருந்தோம். அவர்கள் எங்களை ஏதோ மிருகக்காட்சிசாலையில் வைக்கப் பட்ட மிருகங்களைப் போல பார்த்து விட்டு நகர்ந்தார்கள். அன்றிரவு ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. இராணுவத்தினர் வீதி ரோந்து சென்ற சமயம், மூக்கு முட்டக் குடித்து விட்டு விழுந்து கிடந்த ஒருவரைக் கொண்டு வந்து எங்கள் சிறையில் போட்டார்கள். இரவு ஊரடங்கு சட்டம் என்பதால், அங்கே படுத்து விட்டு விடிய எழுந்து போகலாம் என்று கூறியிருக்கிறார்கள். இதற்கிடையே என்னைக் காட்டிக் கொடுத்த தலையாட்டியை இராணுவத்தினர் நம்பவில்லை என்று கேள்விப்பட்டேன். எனது நல்ல காலம், அந்தப் பாடசாலையின் அதிபர் எனது உறவினர் என்பதால், அடுத்த நாளே விடுதலை செய்தார்கள்.

அதிர்ஷ்டக் காற்று எப்போதும் எம்பக்கம் வீசுவதில்லை. சந்தர்ப்பம், சூழ்நிலை எமக்கு பாதகமாக அமைந்தால், ஆண்டவனே வந்து சாட்சி சொன்னாலும் காப்பாற்ற முடியாது. எனது வீட்டுக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்று, திடீரென படையினரால் சுற்றி வளைக்கப் பட்டது. குறிப்பாக ஓரிடத்தில் வந்து சந்திக்கும் மூன்று பாதைகளில் மறைந்திருந்தார்கள். அந்தப் பாதையில், அந்த நேரத்தில் சென்ற இளம் வயதினர் அனைவரையும் தடுத்து நிறுத்தினார்கள். எனது கஷ்ட காலம், நான் தான் முதலில் அகப்பட்டேன். என்னை விசாரித்து, சோதனை போட்டும் எந்த தடயமும் கிடைக்கா விட்டாலும் தடுத்து வைத்திருந்தார்கள். அயல் கிராமங்களில் நிதி சேகரிக்கும் புலி உறுப்பினர்கள் அந்தப் பாதையைப் பயன்படுத்துவது வழக்கம் என்று யாரோ தகவல் கொடுத்திருந்தனர். பத்து நிமிடங்களுக்குப் பின்னர், இரண்டு சைக்கிள்களில் மூன்று புலி உறுப்பினர்கள் அந்த வழியால் வந்தார்கள். முன்னாள் வந்தவனைக் கண்டதும் அதிர்ச்சியாகவிருந்தது. பாடசாலையில் ஒரே வகுப்பில் படித்த மாணவன். அவன் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருப்பது அப்போது தான் தெரியும். பின்னால் வந்த இரண்டு பெரும் அயல் கிராமத்தை சேர்ந்த விடலைப் பையன்கள். அவர்களை சோதனையிட்ட படையினர் மடியில் இருந்து கிரனேட்டை கண்டெடுத்தார்கள். உடனே "எல்.டி.டி.ஈ.... எல்.டி.டி.ஈ...." என்று கத்தினார்கள்

ஒரு நிமிடத்திற்குள் அங்கே என்னென்னவோ எல்லாம் நடந்தன. சற்று தூரம் முன்னோக்கி சென்றிருந்த, எனது பள்ளித் தோழன் சயனைட் குப்பியை கடித்து விட்டான். அவனது உயிரற்ற உடல் சரிந்து விழுவதை கண் முன்னால் கண்டேன். அவன் தான் இயக்கத்தின் மூத்த உறுப்பினன். அதனால் முக்கியமான ஆவணங்கள் எல்லாம் வைத்திருந்தான். ஆரம்பத்தில் படையினருக்கு அவன் மேல் சந்தேகம் எழவில்லை. சயனைட் உட்கொண்ட பிறகு தான் அவனும் புலி என்பது படையினருக்கு உறுதியானது. இப்போது படையினரின் ஆத்திரம் என் பக்கம் திரும்பியது. ஒருவன் தனது துப்பாக்கியை சுழற்றி தலையில் பலமாகத் தாக்கினான். நான் மூர்ச்சையாகி விழுந்தேன். பலர் சுற்றி வர நின்று உதைத்தார்கள். கைகளை முதுகுக்குப் பின்னால் வளைத்துக் கட்டினார்கள். ஒரு டிரக் வண்டியில் தூக்கிப் போட்டார்கள். கிரேனேட்டுடன் அகப்பட்ட புலி உறுப்பினர்களையும் அதே டிரக் வண்டியில் கொண்டு வந்து போட்டார்கள். "இவனும் உங்கள் இயக்க உறுப்பினனா?" என்று என்னைக் காட்டிக் கேட்டார்கள். அவர்கள் இதற்கு முன்னர் என்னைப் பார்த்ததே இல்லை என்று தலையாட்டினார்கள். சிறிது நேரத்தில் சயனைட் உட்கொண்டு இறந்த பள்ளித் தோழனின் உயிரற்ற உடலை எனக்கு மேலே தூக்கிப் போட்டார்கள். எம்மை ஏற்றிக் கொண்டு அந்த டிரக் வண்டி இராணுவ முகாமை நோக்கிப் புறப்பட்டது.

(தொடரும்...)

யாழ் குடாநாடெங்கும் ஆயுதப் புதையல்கள்

[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 11)



பிற்பகலில் கைது செய்யப்பட்டு முகாமுக்கு கொண்டு செல்லும் வரையில் மயக்கமாகக் கிடந்திருக்கிறேன். கண்ணைக் கட்டி விட்டிருந்ததால், எல்லாமே இருட்டாகத் தான் இருந்தது. கைகளைக் கட்ட பயன்படுத்தப் பட்ட பிளாஸ்டிக் கயிறு நூதனமானது. கையை சிறிது அசைத்தால் போதும், இறுக்கிக் கொண்டே போகும். அதனால் கையை ஆடாமல், அசையாமல் அப்படியே வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம். முகாம் சிறைக்குள் விட்ட பின்னர் தான், கைக்கட்டையும், கண்கட்டையும் அவிழ்த்து விட்டார்கள். கண் விழித்துப் பார்த்த பொழுது நான்கு சுவர்களுக்குள் சிறை வைக்கப் பட்டிருப்பதை உணர்ந்தேன். மேலே ஒரு மின்குமிழ் கண்ணைப் பறிக்கும் ஒளியைப் பாய்ச்சிக் கொண்டிருந்தது. அந்த அறைக்குள் என்னைப் போன்ற பல துரதிர்ஷ்டசாலிகள் ஆளுக்கொரு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடம்பெல்லாம் வலித்தது. கையில் மசமசவென்று ஏதோ ஒட்டியது. என்னவென்று பார்த்தால், காயங்களில் இருந்து இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. அடித்த அடியில் வலப்பக்க காது வெடித்து விட்டது. தலையில் விண் விண் என்று வலித்தது. சுய நினைவு வந்த பின்னர் தான் வலி தெரிந்தது. எழும்பி உட்காரவும் முடியவில்லை. படுக்கவும் முடியவில்லை.

அங்கிருந்த யாரும் யாருடனும் பேச்சுக் கொடுக்கவில்லை. எழுவதற்கு, இருப்பதற்கு என சிறு உதவிகள் மட்டுமே செய்தார்கள். கைதிகள் படையினரின் கண்காணிப்புக்குள் இருந்ததால் எல்லோரும் மௌனமாகவே இருந்தனர். அன்றும் அடுத்த நாளும் பட்டினி கிடக்க வைத்தார்கள். தண்ணீரைத் தவிர வேறு எதையும் ஆகாரமாகத் தரவில்லை. எனது காயங்களில் இருந்து வடிந்து கொண்டிருந்த குருதி தானாகவே காய்ந்து போனது. அப்படி இருந்தும் காயம் ஆறவில்லை. அவற்றிற்கு மருந்து கட்டும் அக்கறையே அவர்களுக்கு இருக்கவில்லை. மலசல கூடம் செல்லும் போதும் ஒரு சிப்பாய் துப்பாக்கியுடன் கூட வந்தான். ஐந்து நிமிடங்களுக்கு மேல் தாமதித்தால் அவசரப்படுத்தி கூட்டிச் சென்றான். சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த பின்னர் தான் உணவென்ற பெயரில் ஏதோ தந்தார்கள். எமக்கு கிடைத்த காய்ந்து போன சப்பாத்தியை நாய்க்கு போட்டாலும் சாப்பிடாது. ஊற்றிய சாம்பாரில் நீச்சலடித்துப் பார்த்தாலும் ஒன்றும் கிடைக்காது

நான் சிறையிருந்த நாட்களில், எனைப் பற்றி தீர விசாரித்திருக்கிறார்கள். இந்த தடவையும் அதிர்ஷ்டம் கைகொடுத்தது. எனது சொந்தக் கிராமத்திலேயே கைது செய்யப் பட்டதால், படையினர் என்னைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு அதிக சிரமப் படவில்லை. ஊர்ப் பெரியவர்களும் சாட்சியமளித்தார்கள். ஒரு வாரத்திற்குப் பின்னர் என்னை விடுதலை செய்வதாக அறிவித்தார்கள். அன்று மட்டும் எனது காயங்களுக்கு மருந்து கட்டினார்கள். என்னை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர், ஊர்ப் பெரியவர்களிடம் முகாம் கமாண்டர் என்னை ஒப்படைத்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கமாண்டர் ஒரு நீண்ட விரிவுரை ஆற்றினார். "தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கும், அவர்களை பாதுகாக்கவும் இந்திய அரசு எம்மை அனுப்பியது. எல்.டி.டி.யினர் மட்டும் குழப்புகிறார்கள்...." என்று கூறிச் சென்றார். புலி உறுப்பினர்களை கைது செய்த நிகழ்வில் சயனைட் கடித்து இறந்த மாணவன் குறித்தும் விசனப் படுவது போலப் பேசினார். "நன்றாகப் படித்து உத்தியோகம் பார்க்க வேண்டியவன் அநியாயமாக உயிரை மாய்த்துக் கொண்டான்...ச்சோ...ச்சோ..."

போர் தொடங்கிய நாளில் இருந்து இந்திய இராணுவத்திற்கு புலிகள் மீது அளவு கடந்த வெறுப்பிருந்தது. அகப்பட்ட உறுப்பினர்கள் சிறுவர்களாக இருந்தாலும் ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்தார்கள். சம்பவ தினத்தன்று என்னோடு பிடிபட்ட இரண்டு புலி உறுப்பினர்களுக்கும் வயது 15 இருக்கும். அப்போது தான் புதிதாக இயக்கத்தில் சேர்ந்திருந்தனர். அவர்களை தனியாக அழைத்துச் சென்று சித்திரவதை செய்தார்கள். சித்திரவதை நடந்த இடம் என்னை சிறை வைத்திருந்த அறைக்கு அருகில் இருந்திருக்க வேண்டும். "ஐயோ... அம்மா..." என்று அலறும் சத்தம் பக்கத்தில் இருந்து வருவதைப் போலக் கேட்டது. பிடிபட்ட அன்று இரவிரவாக, அடுத்த நாளும் சித்திரவதை தொடர்ந்தது. எமக்கு ஒரு பக்கம் உறங்க முடியாத தடங்கல் ஏற்பட்ட போதிலும், மறுபக்கம் அவர்களின் நிலையெண்ணி பரிதாபப் பட வைத்தது. அடுத்தடுத்த நாட்கள் அடியால் அலறும் சத்தம் கேட்கவில்லை. வேறு இடத்திற்கு மாற்றி விட்டதாக நினைத்தோம். ஆனால் அதற்குப் பிறகு நடந்த விஷயங்களை வீட்டுக்கு வந்த பின்னர், ஊரார் சொல்லித் தெரிந்து கொண்டேன்

போர் நிறுத்த ஒப்பந்தப் படி, இந்திய இராணுவத்திடம் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டியிருந்தது. புதிய ஆயுதங்களை ஒளித்து வைத்து விட்டு, பழைய, அல்லது பாவிக்க முடியாத ஆயுதங்களை ஒப்படைப்பதாக போக்குக் காட்டினார்கள். பின்னொரு காலத்தில் பாவிக்க தேவையான ஆயுதங்களை, தண்ணீர் புக முடியாத படி பொலித்தீன் பைகளால் கட்டி, நிலத்தின் கீழ் புதைத்து வைத்தார்கள். காட்டுப்பகுதி, யாரும் நடமாடாத தரிசான நிலம், இப்படியான இடங்களில் புதைத்து வைத்தார்கள். இந்த விடயம் இந்திய இராணுவத்திற்கும் தெரியும். அதனால் போர் மூண்ட பின்னர், புலிகள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்வதில் குறியாகவிருந்தனர். பிடிபடும் புலி உறுப்பினர்களை சித்திரவதை செய்து விசாரிப்பது, அதற்கு ஒரே வழி.

அன்றைய தினம் சித்திரவதை செய்யப்பட்ட புலி உறுப்பினர்கள், தாம் புதைத்து வைத்த ஆயுதங்களை படையினருக்கு காட்டிக் கொடுத்தனர். ஊருக்கு ஒதுக்குப் புறமாக காட்டுப் பகுதியில் ஆயுதங்களை படையினர் கிண்டி எடுத்தனர். எல்லாவற்றையும் கொண்டு செல்ல இரண்டு டிரக் வண்டிகள் வந்ததாக, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் விபரித்தனர். அந்தளவு ஆயுதங்கள் நிலத்தின் கீழ் மறைந்திருந்தன. ஆயுதங்களின் மறைவிடங்களை இரகசியமாக வைத்திருப்பதற்காக, மிகக் குறைந்தளவு உறுப்பினர்களிடமே பொறுப்பை ஒப்படைத்திருந்தனர். பிற உறுப்பினர்களுக்கு அது தெரியாது. சில இடங்களில் தனியார் நிலங்களில், காணிச் சொந்தக்காரருக்கு அறிவிக்காமலே புதைத்து வைத்தார்கள். அவ்வாறு புதைக்கப்பட்ட ஆயுதங்கள், காணிச் சொந்தக்காரர்களின் கண்களில் அகப்பட்டால், அவர்கள் இராணுவத்திற்கு தகவல் வழங்கினார்கள். அத்தகைய சந்தர்ப்பங்கள், சில நேரம் அவர்களுக்கே ஆபத்தாக முடிந்துள்ளது. இராணுவம் தானாகவே ஆயுதங்களை கண்டுபிடித்தால், காணிச் சொந்தக்காரரும் உடந்தை எனக் கருதி கைது செய்வார்கள். அதே நேரம், ஆயுதங்களை இராணுவத்திற்கு காட்டிக் கொடுத்தால், புலிகளின் கொலைப் பட்டியலில் இடம்பெற வேண்டியேற்படும்.

அன்றைய காலகட்டத்தில், அங்கிருந்த மக்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 
(1) புலிகளுக்கு ஆதரவானவர்கள். 
(2) இராணுவத்திற்கு ஆதரவானவர்கள். 
(3) இரண்டு பக்கமும் சாராமல் ஒதுங்கி இருப்பவர்கள். 

எந்தப் பக்கமும் சாயாது ஒதுங்கி வாழ்ந்தவர்களே அதிகம். அன்றைய சூழ்நிலை அமைதியாக தோன்றினாலும், மிகவும் ஆபத்தானது. தினசரி வேலைக்குப் போய் வரும் மக்கள் இராணுவக் காவலரண்களைக் கடந்து செல்ல வேண்டும். இதனால் அடிக்கடி சந்திக்கும் நபர்களுடன், காவலுக்கு நின்ற இராணுவத்தினர் நட்புடன் பழகினார்கள். அவ்வாறு யாராவது காவலரணில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தால், அந்தச் செய்தி புலிகளின் காதுகளுக்கு எட்டி விடும். அதே போல, யாருடைய வீட்டிற்காவது புலிகள் வந்து சென்றால், அந்தச் செய்தி இராணுவத்திற்கு போய் விடும். இரண்டு பக்கமும் புதினம் காவித் திரிவதற்கு ஆட்கள் இருந்தார்கள். அதனால், நமக்கேன் வம்பு என்று, இரண்டு பக்கமும் சாராமல் ஒதுங்கியிருந்த மக்களே அதிகம்.

ஆயுதப் புதையல்கள் பல அடுத்தடுத்து கண்டுபிடிக்கப் பட்டதால், புலிகளின் முதுகெலும்பை உடைத்து விட்டதாக இந்திய இராணுவம் நம்பியது. இறுதியான ஈழப்போர் காலத்தில் இருந்தளவு ஆட்பலம், அன்றிருந்த புலிகள் அமைப்பில் இருக்கவில்லை. அதனால் வெகு விரைவில் புலிகளை அழித்து விடுவோம் என்று இந்திய இராணுவம் கருதியது. இந்திய இராணுவம் உண்மையிலேயே புலிகளை அழிக்க விரும்பியதா என்பது கேள்விக்குறி தான். 

பல வருடங்களின் பின்னர் வெளிநாடொன்றில் தற்செயலாக சந்தித்த, தமிழகத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர் இவ்வாறு கூறினார். "ஈழத்தில் நிலை கொண்டிருந்த இந்திய இராணுவம் ஒரு கையை பின்னால் கட்டிக் கொண்டு யுத்தம் செய்ய வேண்டியிருந்தது. வன்னிக் காட்டினுள் இரண்டு தடவைகள் பிரபாகரனை பிடிக்கும் சந்தர்ப்பம் வாய்த்த போதிலும், மேலிடத்து உத்தரவு காரணமாக பின் வாங்கினோம்." அவரது கூற்று மிகைப் படுத்தப் பட்டதாக தோன்றியது. இதே போன்ற கருத்துப் பட, வேறு பலரும் கூறியுள்ளனர். இந்திய இராணுவத்துடனான யுத்தம் பல மர்ம முடிச்சுகளைக் கொண்டது. பல கேள்விகளுக்கான விடைகள் இன்று வரை வெளிவரவில்லை.


(தொடரும்...) 

ஈழ அகதிகளுக்கு தஞ்சம் அளித்த சிங்கள அரசு!

[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 12)

சிக்கலான ஈழத்தமிழர் பிரச்சினையின் அடிப்படை தமிழகத்திலும், வெளியிலும் அரிதாகவே புரிந்து கொள்ளப் படுகின்றது. ஈழப்போராட்டத்தின் கொள்கைகள் அதனை முன்னெடுக்கும் அமைப்புகளால் அடிக்கடி மாறுபட்டு வந்துள்ளன. ஒரு காலத்தில் இந்திய இராணுவத் தலையீட்டைக் கோருபவர்கள் தமிழ் தேசிய உணர்வாளர்களாக கருதப் பட்டார்கள். இன்னொரு காலத்தில் அவர்கள் துரோகிகளாக கருதப்பட்டனர். இந்திய இராணுவம் யாழ் நகரைக் கைப்பற்றியவுடன், புலிகளின் ஊடகமான "நிதர்சனம்" தொலைக்காட்சி நிலையத்தின் அண்டெனா கோபுரத்தை குண்டு வைத்து தகர்த்தனர். அதற்கு அவர்கள் விளக்கம் எதுவும் தெரிவிக்கவில்லை. அதே போல, புலிகள் அமைப்பினரால் கைப்பற்றப் பட்டு, ஏறத்தாள உத்தியோகபூர்வ பத்திரிகையான ஈழமுரசும் முடக்கப்பட்டது. அதன் ஆசிரியர் சிறை வைக்கப் பட்டார். போரின் முடிவில் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்த யாழ்ப்பாணத்தில் "ஈழநாடு" மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தது.

ஈழநாடு, யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சிடப்பட்ட முதலாவது பிராந்தியப் பத்திரிகை. அன்றைய யாழ் குடாட்டில், இந்தியத் தினசரியான தினமணி அடுத்த நாளே கடைகளில் கிடைத்தது. பிரபல இந்திய நாளேடுகளான தினத்தந்தி, தினமணி "யாழ் பதிப்பை" வெளியிடாத குறை மட்டுமே எஞ்சியிருந்தது. அத்தகைய சூழ்நிலையில், ஈழநாடும் இந்திய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்து வந்தது. பொதுவாகவே ஆறுமுக நாவலரின் சித்தாந்த வழிவந்த யாழ் மக்கள் இந்தியாவை தமது தாய்நாடாக கருதி வந்தனர். ஈழநாடு ஆசிரிய பீடமும் அத்தகைய மாயையில் இருந்து மீள முடியாமல் இருந்தது. இருப்பினும் அந்த எண்ணமே அவர்களுக்கு எமனாகிப் போனது. ஈழநாடு பத்திரிகை அச்சகத்தை புலிகள் குண்டு வைத்து தகர்த்தார்கள். அதற்கு உரிமை கோரும் துண்டுப் பிரசுரங்கள் யாழ் நகரெங்கும் ஒட்டப் பட்டிருந்தன. "இந்திய செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்த, இந்திய நலன் பேணிய..." காரணங்களுக்காக ஈழநாடு காரியாலயம் தாக்கப் பட்டதாக புலிகள் அறிவித்திருந்தனர்.

யாழ் நகரில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த வாராந்த செய்தி இதழ்களில் "Saturday Review " குறிப்பிடத் தக்கது. தமிழரின் இனப்பிரச்சினையின் பால் பரிவு கொண்ட சிங்கள இடதுசாரிகள் யாழ் நகரில் இருந்து வெளியிட்டுக் கொண்டிருந்தனர். இந்திய இராணுவத்துடனான போரை அவர்கள் ஆதரித்தனர். "ஈழம் இந்தியாவின் வியட்நாமாக மாறும்" என்பன போன்ற ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தனர். இதனால் அடிக்கடி இந்திய இராணுவத்தின் தொல்லைகளுக்கு முகம் கொடுத்தனர். "திசை" என்ற தமிழ் வாராந்த பத்திரிகை கொழும்பில் இருந்து பிரசுரமானது.

முதன் முதலாக எனது கவிதை ஒன்றை, திசை வெளியிட்டிருந்தது. அந்தக் கவிதையில் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் கீழான அவலங்களை பதிவு செய்திருந்தேன். மேற்குறிப்பிட்ட இடதுசாரி ஊடகங்கள், புலிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போரில் ஈடுபட்டிருப்பதாக நம்பின. புலிகளும் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை மக்கள் மனதில் வளர்ப்பதை குறிக்கோளாக கொண்டிருந்தனர். போரின் பின்னர் மீள உயிர்த்தெழுந்த சாவகச்சேரி நகர சந்தையில், காந்தித் தாத்தா A .K .47 துப்பாக்கியுடன் காணப்படும் "கட் அவுட்" ஒன்று வைக்கப் பட்டிருந்தது. இந்திய படையினர், அதைக் காணாதது போல நடந்து கொண்டனர். புலிகளின் ஆட்சி நடந்த காலத்தில் கட்டப்பட்ட சிலைகளை, போராளிகளின் 'கட் அவுட்' களை உடைப்பதிலேயே அவர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

யாழ் நகரில் இந்திய இராணுவத்துடன் யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், யாழ் பல்கலைக் கழகத்திற்கு அருகில் பிரபாகரன் மறைந்திருந்ததாக இந்திய இராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. ஒரு நாளிரவு, பாரசூட் படையினர் பலகலைக்கழக வளாகத்தை நோக்கி தரையிறக்கப் பட்டனர். இதனை எதிர்பார்த்துக் காத்திருந்த புலிகள், பரசூட் இறங்கும் பொழுது சுட்டனர். இறக்கப்பட்ட அத்தனை படையினரும் கொல்லப் பட்டனர்.
இந்திய இராணுவத் தலைமையின் அவமானகரமான தோல்வியாக அந்தச் சம்பவம் கருதப் படுகின்றது. அங்கிருந்து தப்பிய பிரபாகரன், வன்னிக்கு செல்லும் வழியில் தென்மராட்சிப் பகுதியில் மறைந்திருந்தார். அப்போது ஆதரவாளர்களைக் கூப்பிட்டு எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

இந்திய இராணுவத்துடனான போருக்கு பெரும்பான்மை தமிழ் மக்கள் ஆதரவளிக்கவில்லை என்ற உண்மையை புலிகள் உணர்ந்திருந்தனர். இந்திய இராணுவ ஒடுக்குமுறை ஆட்சி நீடித்தால், மக்கள் புலிகளை ஆதரிப்பார்கள் என்று எடை போட்டனர். 

எனது உறவினர்கள் சிலரும் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்ததால், ஒரு பொறுப்பாளரை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. போரின் போக்குக் குறித்து அவரின் கருத்துகளை கேட்ட எமக்கு அதிர்ச்சியாகவிருந்தது. ஈழப்போராட்டம் தொடங்கிய நாள் முதல், இந்தியா இராணுவப் பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கியிருந்தது. அது மட்டுமல்ல, இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மன்றம் வரையில் பேசக் கூடிய நட்பு நாடாகவே இந்தியாவை கருதி வந்தோம்.

அத்தகைய இந்தியாவை பகைப்பதால், ஈழத்தமிழருக்கு நன்மை ஏற்படுமா? என்பதே பலரின் கேள்வியாகவிருந்தது. "போர் தொடர்ந்தால் இந்தியாவின் எதிரியான பாகிஸ்தானுடன் நட்புறவை ஏற்படுத்துவோம். முன்னாள் எதிரியான சிறிலங்கா இராணுவத்துடனும் கூட்டுச் சேருவோம். எமக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும், அந்நிய இராணுவத்தை வெளியேற்றுவதில் ஒன்று பட்டு செயற்படுவோம்." என்று அந்தப் பொறுப்பாளர் கூறினார். பல வருடங்களுக்குப் பின்னர், தமிழகத்தில் சந்தித்த இடதுசாரி பதிப்பாசிரியர் ஒருவரும் அத்தகைய கருத்துகளை உதிர்த்தார். நக்சல்பாரி பாரம்பரியத்தில் வந்த அந்தப் பதிப்பாசிரியர், "உதாரணத்திற்கு, இந்தியா மீது அமெரிக்கா படையெடுத்தால், நாம் (இந்து பாசிச)ஆர்.எஸ்.எஸ். உடனும் கூட்டுச் சேர்ந்து எதிர்ப்போம்." என்றார்.

இந்திய இராணுவத்துடனான போரானது, ஈழப்போராட்ட வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. அது வரை காலமும் இந்தியாவை தளமாக வைத்திருந்த தேவை அற்றுப் போனது. மேற்கத்திய நாடுகளை தளமாகப் பயன்படுத்தினார்கள். சோவியத்-ஆப்கான் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், பாகிஸ்தானில் ஆயுதங்கள் கறுப்புச் சந்தையில் விற்கப் பட்டன. பாகிஸ்தானில் அமெரிக்க ஆயுதங்களை வாங்கி, கப்பல் மூலம் கடத்தும் திட்டம் அதற்கு முன்னரே ஆரம்பிக்கப் பட்டிருக்கலாம். இதற்கிடையே இந்திய எதிர்ப்பாளரான பிரேமதாசா, இலங்கையின் ஜனாதிபதியானார். இந்திய படைகளை வெளியேற்றுவதை இலட்சியமாக கொண்டிருந்த பிரேமதாசா, புலிகளுக்கு ஆயுதங்களை வழங்க முன்வந்தார். வவுனியாவில் சிறிலங்கா இராணுவம் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை மிக இரகசியமாக வைக்கப் பட்டிருந்தாலும், புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்தது.


பிரேமதாசா, அரசியலில் தன்னை ஒரு சிங்கள கடும்போக்கு இனவாதியாக காட்டிக் கொண்டவர். அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் எதிரிகளையும், நண்பர்களையும் வியக்க வைத்தார். பிரேமதாசாவின் நம்பிக்கைக்குரிய அந்தரங்க ஆலோசகர் ஒரு தமிழர். பிரேமதாச அரசுடன், புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் கொழும்பில் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள். முக்கிய அரசியல் தலைவர்களான யோகி, தினேஷ்(தமிழ்ச்செல்வன்),ஆகியோர் கொழும்பு நகரில் தங்கியிருந்தனர். அரச செலவில் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க வைத்ததை, எதிர்க்கட்சி அடிக்கடி சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தது. இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட எதிர்பாராத நட்புறவு பல பரிமாணங்களைக் கொண்டிருந்தது.
 

"வட-கிழக்கு மாகாணங்களில் இந்தியப் படைகளின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், கொழும்பில் அரசியல் தஞ்சம் கோரலாம்," என்று அரசே அறிவித்தது! அவ்வாறு வரும் அரசியல் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்குவதற்காக, "சரஸ்வதி மண்டபம்" அகதி முகாமாக மாற்றியமைக்கப் பட்டது!! கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் அருகில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில், புலிகளும், அவர்களது குடும்பத்தினரும் அகதிகளாக பதிந்து கொண்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை சிறிலங்கா அரசு செய்து கொடுத்தது.

யாழ் குடாநாட்டில் பெரியளவு தாக்குதல்கள் நடக்கா விட்டாலும், புலிகள் குறைந்த பட்சம் இயல்பு வாழ்வை சீர்குலைக்க விரும்பினார்கள். இராணுவக் காவலரன்களுக்கு கிரனேட் வீசி விட்டுப் போவது அடிக்கடி நடந்து கொண்டிருந்தது. புலிகள் அமைப்பின் தலைவர்கள் வன்னிக் காட்டுக்குள் மறைந்திருந்ததால், இந்திய இராணுவமும் காடுகளுக்குள் போர் நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. இதனால் வியட்நாமில் நடந்ததைப் போன்ற கெரில்லா யுத்தத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டது. மரங்களில் வெடி குண்டு பொருத்தி வைப்பது போன்ற, கெரில்லா போர்த் தந்திரங்களால் இந்தியப் படையினர் நிலை குலைந்து போயினர்.

இதே நேரம், தமிழகத்தில் புலிகளின் போராட்டத்தை சித்தரிக்கும் பிரச்சார ஒலிப்பேழை ஒன்று தயாரிக்கப் பட்டது. எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுசீலா போன்ற பிரபல பின்னணிப் பாடகர்களின் குரலில், மெல்லிசையில் இசையமைக்கப்பட்ட பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகின. யாழ்ப்பாணத்தில் மக்கள் இரகசியமாக கேட்டு மகிழ்ந்தனர். புலிகளை ஆதரிக்காதவர்களையும் அந்தப் பாடல்கள் முணுமுணுக்க வைத்தன. நான் கொழும்பில் நின்ற காலத்தில், வெள்ளவத்தையில் இருந்த தமிழ் தேநீர்க் கடைகள் எங்கும் அந்தப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத்தால் தடை செய்யப்பட்ட ஒலிப்பேழை, கொழும்பில் கடைகளில் பகிரங்கமாக விற்பனையானது.

"புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான தேனிலவு" தென்னிலங்கை பத்திரிகைகள் குறிப்பிட்டு எழுதின. அரச தொலைக்காட்சியும், வானொலியும் புலிகளை விடுதலைப் போராளிகள் என்று அழைத்தன. அதிகம் பேசுவானேன்? ஜனாதிபதி கூட அப்படித் தான் அழைத்தார். அரசியலில் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை, நலன்கள் மட்டுமே நிரந்தரம். அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாத மக்கள் தான், ஒருவர் மற்றவரை எதிரியாகப் பார்க்கின்றனர்.

அன்று யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் ஒரு பயணி, வவுனியா வரை பல சோதனைச் சாவடிகளை கடந்து வர வேண்டும். இந்திய இராணுவம் சந்தேகப்படும் நபரை தடுத்து வைத்தது. வவுனியாவில் இருந்து, கொழும்பு வரையில் சிங்கள இராணுவத்தின் சோதனைச் சாவடிகள் காணப்பட்டன. இப்போது கேட்டால் நம்ப முடியாமல் இருக்கும். அடையாள அட்டையில் யாழ்ப்பாணம் என்றிருந்தால், சிங்களப் படையினர் எந்த சோதனையுமின்றி போக விட்டனர். ஜே.வி.பி.யினரின் போராட்டம் நடந்து கொண்டிருந்ததால், சிங்களவர்களை மட்டும் தனியாக பிரித்து சோதனை செய்தார்கள். "அரசு என்ற ஸ்தாபனத்தின் அதிகார நலன்களே இனப்பிரச்சினைக்கும் மூல காரணம்." இது பல தடவை மீண்டும் மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது.

(தொடரும்...)


Courtesy - Kalaiyarasan



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.