Thursday 4 June 2020

கருப்பு ஓக்டோபர் எனும் ஈழப்போராட்டத்தில் கரைபடிந்த வரலாறு - பாகம்- 4 to 6


கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட இந்த எதிர்பாராத திருப்பம் புலிகளின் தமிழீழக் கனவை சிதைத்திருந்தது. இந்த நிலமையை மாற்ற  மாற்றுத் திட்டமொன்று வகுக்கப்பட்டது. அதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை பல்வேறு இடங்களில் வைத்து படுகொலை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இந்த தாக்குதல்களின் மூலம் முஸ்லிம்களை பயமுறுத்தி கிழக்கிலிருந்து வெளியேற்றலாம் என கருதப்பட்டது. அத்துடன் கொழும்பு முஸ்லிம்களை ஆத்திரமடைய வைத்து அவர்கள் மூலம் பழிவாங்கலாக கொழும்புத் தமிழர்களை பலி கொடுக்கத் திட்டமிடப்பட்டது. இந்த கொழும்புத் தமிழர்களின் படுகொலையை வைத்து சர்வதேச ரீதியில் அனுதாபம் பெற்று தமிழீழத்தை பெற்றுக்கொள்வது இறுதித் திட்டமாகவிருந்தது. புலிகளின் இனச்சுத்திகரிப்புத் திட்டத்தின் பிரகாரம் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் கொல்லப்பட்டிருந்தனர்.

இதேபோன்று  1990 செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் விமானப்படையின் அவ்ரோ விமானம் பரல் குண்டுகளை வீசுவதற்காக வானத்தில் வட்டமிட்டுக்கொண்டிnருந்தது. அவ்வேளை திடீரென முஸ்லிம் பகுதிக்கு வந்த பிக்கப்; வாகனத்திலிருந்த புலிகள் 50 கலிபர் மூலம் விமானத்தை நோக்கிச் சுட்டனர். குண்டுபாய்ந்த திசையை நோக்கி அவ்ரோவும் பரல் குண்டொன்றை போட்டது. வாகனத்திலிருந்து தாக்குதல் நடத்திய இடத்துக்கு முன்னாலிருந்த மாடிக்கட்டிடம் மீது குண்டு விழுந்தது. 9 முஸ்லிம்கள் ஆண்கள் பெண்கள் சிறுவர் உட்பட  பலியாகினர். இவர்கள் யாழ்ப்பாணத்தில் பிரபள்யமான எல்.கே.எஸ். அப்துல் அஸீஸ் ஹாஜியார் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். இந்த முஸ்லிம் குடும்பங்களும் மரணத்தின் பின்னர் மேற்கொள்ளப்படும் இத்தா அனுஷ்டானங்களை செய்யமுடியாமல் 1990 ஒக்டோபர் 30ஆம் திகதி வெளியேற்றப்பட்டனர். இவர்கள் தம்மில் சிலர் காயப்பட்டுள்ளதாக கூறியும் விடுதலைப்புலிகள் கருணை காட்டவேயில்லை.

தாக்குதல் நடந்து  15 நாட்களில் இக்குடும்பத்தைச் சேர்ந்த நபரொருவர் கப்பம் கேட்டு புலிகளால் கடத்தப்பட்டிருந்தார். கடத்தப்பட்ட நபர் 35 இலட்சம் ரூபா கட்டிய பின்னரே ஒன்றரை வருடத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டார். ஒரு புறம் 9 பேரின் மரணம். மறுபுறம் காயப்பட்ட குடும்ப உறுப்பினர்கள். இன்னொரு புறம் அதிர்;ச்சியல் உடற்செயற்பாட்டையிழந்த இரண்டு குழந்தைகள். மற்றொரு புறம் காசுக்காக ஒருவர் கடத்தப்பட்ட நிலை. இந்நிலையில் சொத்துக்கள் பணம் நகை மாற்றுடைகள் என்பன பறிக்கப்பட்ட நிலையில் திடீர் வெளியேற்றம். அகதியாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்ட அந்த குடும்பங்கள் என்ன பாடுபட்டிருக்கும். இவர்களில் ஒரு சிலர் 1990 ஒக்ரோபர் 23ஆம் திகதி கேரதீவு சங்குப்பிட்டி பாதையூடாக வெளியேறியிருந்தனர். அவர்களின் கதியும் யாழ்ப்பாணத்தில் எஞ்சியிருந்த அவர்களின் குடும்பத்தவர்களுக்குத் தெரியாது.

கிழக்கில் புலிகளுக்கு செயற்பட முடியாத நிலையேற்பட்டதால் புலிகளின் கிழக்குத் தலைவர்கள் வடக்குக்கு தப்பியோடினர். தமது தோல்வியை மறைக்க வன்னித் தலைமைக்கு பொய்களைக் கூறினர். கிழக்கில் நாளொன்றுக்கு பத்து தமிழ் யுவதிகள் முஸ்லிம்களால் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று எடுத்துறைக்கப்பட்டது. அத்துடன் வடக்கிலுள்ள முஸ்லிம்களில் பெண்களை மானபங்கப்படுத்தி ஆண்களனைவரையும் கொலை செய்ய வேண்டுமென கரிகாலன் போன்றவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த முடிவு ஏதோ ஒரு காரணத்தால் பின்தள்ளிப் போடப்பட்டது. அதேவேளை கிழக்கில் இராணுவம் பல பிரதேசங்களைப் கைப்பற்றிக் கொண்டதால் கிழக்கிலிருந்த புலிகள் வடக்குக்கு தப்பிச் சென்றனர். கரிகாலன் போன்றவர்கள் முஸ்லிம்களை அழிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்ததால்  வடக்கு முஸ்லிம்கள் மீது ஒரு கண் வைத்திருந்தனர். ஆனால் வன்னிப்புலிகள் முஸ்லிம்களிடம் உள்ள சொத்துக்களை முதலில் சூறையாட திட்டமிட்டு அதன் பிரகாரம் 23 முஸ்லிம் செல்வந்தர்கள் கடத்தப்பட்டனர். அவர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்கள் கப்பமாக பெற்றுக்கொண்டனர். ஏனைய முஸ்லிம்களிடம் பணம் சொத்துக்கள் இருக்குமென்ற ஆசையில் இறுதியாக முஸ்லிம்களை வெளியேற்றத் திட்டமிடப்பட்டது.திட்டத்தை ஒரேயடியாக நடைமுறைப்படுத்தாமல் கட்டம் கட்டமாகவும் வெளியேற்றவும் முடிவெடுக்கப்பட்டது.

இதன் பிரகாரம் 1990 ஓக்டோபர் 16 அன்று சாவகச்சேரியை சுற்றி வளைத்த புலிகள் முஸ்லிம்களை வெளியேறுமாறு பணித்தனர். அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு முஸ்லிம்களை 23ஆம் திகதி வெளியேறுமாறு பணித்தனர். 24ஆம் திகதி மன்னார் மாவட்ட முஸ்லிம்களை வெளியேறுமாறு கட்டளையிடப்பட்டது. வீதிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் கடலினாலேயே முஸ்லிம்கள் வெளியேற வேண்டியிருந்தது.முதலில் இரண்டு வள்ளங்களில்  எரிக்கலம் பிட்டியைச் சேர்ந்த சிலர்  வெளியேற்றினர். இவர்கள் அளித்த தகவல்களின் பிரகாரம் கொழும்பிலிருந்த சென்ற மன்னார் முஸ்லிம்களின் வள்ளங்களும் கற்பிட்டி முஸ்லிம்களின் வள்ளங்களும் மன்னாரைச் சேர்ந்த ஏறக்குறைய 45 ஆயிரம் மக்களை கற்பிட்டி கடற்கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இந்த பிரயாணத்தின் போது பெண்ணொருவர் தனது கைவிரைத்ததனால் பிள்ளையை கடலுக்குள் கைநழுவ விட்டுவிட்டார். எவ்வளவு தேடியும் பிள்ளையை மீட்க முடியவில்லை. உடலும் கிடைக்கவில்லை. இதன் போது முஸ்லிம்கள் உடையைத் தவிற வேறெந்த பொருட்களையும் எடுத்துவர அனுமதிக்கவில்லை. இதையறிந்த ஏனைய  பிரதேச முஸ்லிம்கள் வள்ளங்கள் மூலமாக தப்பி வந்தனர். அவர்கள் தம்முடன் கையில் எடுக்கக்கூடிய பொருட்களை எடுத்து வந்தனர். மன்னார் வெளியேற்றம் 24ஆம் திகதி முதல் 29 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் இடம்பெற்றது.

இறுதியாக 1990 ஒக்டோபர் 30ஆம் நாள் சோனகத் தெரு சுற்றிவளைக்கப்பட்டது. சகல முஸ்லிம்களும் ஜின்னா மைதானம் வருமாறு ஒலிபெருக்கிகளில் அறிவித்தனர். அங்கு சென்ற முஸ்லிம்களுக்கு ஆஞ்சநேயர் என்றழைக்கப்படும் இளம்பருதி புலிகளின் தலைமையின் முடிவு என்பதாகக்கூறி ஒரு அறிவித்தலை வாசித்தான். அது தான் யாழ்ப்பாண முஸ்லிம்கள் இரண்டு மணித்தியாளத்துக்குள் இங்கிருந்து வெளியேறிச் செல்ல வேண்டுமென்ற புலிகளின் கட்டளை.

நிராயுதபாணியான ஒரு சமூகத்தின் மீது புலிகள் தமது வேட்டைப் பற்களை பதித்து வந்த வரலாற்றுத் தொடர்ச்சியில் நிகழ்ந்தேறிய அவமானமான நடவடிக்கை இது. ஏனைய பிரதேசங்கள் போலல்லாது  யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது 600இக்கும் மேற்பட்ட புலிகள் கனரக ஆயுதங்கள் தரித்தவாறு சோனகத் தெருவை சுற்றி வளைத்துக் கொண்டிருந்த நிலையிலேயே வெளியேற்றும் அறிவிப்பு விடுக்கப்பட்டது. யாழ்ப்பாண முஸ்லிம்கள் தம்மை எதிர்த்து தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சமும் புலிகளுக்கு இருந்தது.

கோடீஸ்வரர்கள் இரண்டு மணித்தியாளத்தில் அகதியானார்கள். பெண்கள் வயோதிபர் கர்ப்பிணிகள் நோயாளிகள் எல்லோரும் லொறிகளில் ஆடு மாடுகள் போல அடைக்கப்பட்டு வவுனியா தாண்டிக்குளத்தில் கொண்டுவந்து இறக்கப்பட்டனர். சந்திக்கு ஒரு பரிசோதனை நிலையத்தை  அமைத்து முஸ்லிம்களின் சகல பொருட்கள் நகைகள் பணம் என்பன பறிக்கப்பட்டன. தலைக்கு 200ரூபாய் மட்டும் கொண்டு செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.  ஏற்கனவே கரிகாலன் தலைமையிலான புலிகள் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிக்கத் தொடங்கியிருந்தனர். இவ்வாறு மூட்டை மூட்டையாக முஸ்லிம்களின் பணமும் நகைகளும் உடைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த அநாகரீகச் செயற்பாடுகளின் பின் விளைவுகள் தான் முள்ளிவாய்க்கால் பேரவலமாக முடிந்தது. இந்த முஸ்லிம்களின் வெளியேற்றமே கருப்பு ஒக்டோபராக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
 
தொடரும்..

கருப்பு ஓக்டோபர் எனும் ஈழப்போராட்டத்தில் கரைபடிந்த வரலாறு (இறுதிப் பாகம்-6)

இதே போன்று ஒக்டோபரில் பொலநறுவையில் அப்பாவி ஏழை விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்தக் தாக்குதல்களின் இழப்புக்களையும் அதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளையும் முஹமட் சரீப் அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார். 1992.10.15 அன்று  பொலநறுவையிலுள்ள நான்கு முஸ்லிம் கிராமங்கள் குறி வைக்கப்பட்டன. பள்ளியகொடல்ல அக்போபுர அஹமட்புரம் பம்புரான போன்ற கிராமங்களில் நடுநிசியில் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 171 முஸ்லிம்களும் 12 படையினரும் கொல்லப்பட்டனர். 83 பேர் காயமடைந்திருந்தனர். இச்செய்தியை கேள்விப்பட்ட கொழும்பு முஸ்லிம்கள் கொதித்தெழுந்தனர். அதேவேளை கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்த மாணவர்கள்  இதற்கெதிராக ஏதாவது செய்ய வேண்டுமென திட்டமிட்டு சகமாணவர்களின் உதவியை நாடினர். இறுதியில் அன்று பின்நேரம் இடம்பெற்ற கூட்டத்தில் ஆர்ப்பாட்டமொன்று செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது.

உடனடியான மாணவர்கள் தம்மாலான பணத்தை வழங்கினர். போஸ்டர்கள் பதாதைகள் தயாராகின. ஒக்டோபர் 18 அன்று ஆர்ப்பாட்டம் கொழும்பு பல்கலைக்கழக வளாகத்தில் இடம் பெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களும் கலந்து கொண்டதால் 2000 பேருக்கு மேற்பட்ட மாணவர் கூட்டம் சேர்ந்திருந்தது. ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பி.பி.சி.இ சி.என்.என். போன்ற செய்தித் தாபனங்களும் கலந்து கொண்டிருந்தன. எல்.ரீ.ரீ.ஈ. யின் இனப்படுகொலைக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் என்ற தலையங்கத்துடன் அவர்களுடைய தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பாகியது. அதனால் மனித உரிமை அமைப்புகள் புலிகளின் சர்வதேச தொடர்பாளர்களை கேள்வி கேட்டு பின்னியிருந்தன.

இத்தகைய ஒரு நெருக்குதலின் பின்னனியில் இவ்வாறான கொலைகள் தொடரும் பட்சத்தில் தமது ஆதரவை இழக்க நேரிடும் என்று புலிகளுக்கு அந்நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இதனால் முஸ்லிம்களை பாரியளவிலும் சிறிதளவிலும் கொல்லும் நடவடிக்கைகளை புலிகள் நிறுத்த வேண்டியேற்பட்டது.  2006 ஆம் ஆண்டு மூதூரிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்படும் வரை புலிகள் பெரிதாக எதையும் செய்ய துணியவில்லை. ஆனால் உடன்படிக்கை கைச்சாத்தான 2002 ஆம் ஆண்டு வாழைச்சேனையில் வைத்து பத்து முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட மாதம் ஒக்டோபராகும். அதே போன்று புலிகளால் பொலநறுவ முஸ்லிம்கள் கொல்லப்பட்ட மாதமும் ஒக்டோபராகும். அந்த வகையில் இனச்சுத்;திகரிப்பும் இனப்படுகொலையும் சேர்ந்து நிகழ்ந்த ஒரு மாதம் இந்த ஒக்டோபராகும். இதை கருப்பு ஒக்டோபர் என பெயரிட்டதன் மூலம்; தமிழ் புலிகள் முஸ்லிம்கள் மீது இழைத்த அடக்குமுறைகளையும் அநீதிகளையும் அட்டூழியங்களையும் ஞாபகப்படுத்துவது ஒரு நோக்கமாகும். இவ்வாறு ஞாபகப்படுத்துவதால் என்ன இலாபம் என்று கேட்கலாம். அல்குர்ஆன் யூதர்கள் செய்த அநீதி அட்டகாசங்கள் கொலைகள் என்பவற்றைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் யூதர்கள் விடயத்தில் அவதானம் தேவை என்பதை சுட்டிக்காட்டுகின்றது.

அதே போன்று இலங்கையில் தமிழர்களால் முஸ்லிம்கள் பல்வேறு காலங்களில் வெளியேற்றப்பட்டுள்ளார்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். 1480களில் சாவகச்சேரி முஸ்லிம்கள் கனகசூரிய சிங்கையாரியனால் வெளியேற்றப்பட்டார்கள். 1744இல் நல்லூரில் வாழ்ந்த முஸ்லிம்களின் கிணறுகளில்  பன்றிகளை வெட்டிப்போட்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். 1990இல் மன்னார் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து முஸ்லிம்கள் தமிழ் புலிகளால் வெளியேற்றப்பட்டனர். 2002இல் திருகோணமலை குரங்குப்பாஞ்சானிலிருந்து முஸ்லிம்கள் தமிழ் புலிகளால் வெளியேற்றப்பட்டனர். 2006இல் திருகோணமலை மூதூரிலிருந்து முஸ்லிம்கள் தமிழ் புலிகளால் வெளியேற்றப்பட்டனர். அங்கு வெளியேற்றத்தின் போது 60 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு தமிழரின் வரலாறு எங்கும் முஸ்லிம் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதையே காட்டுகின்றது.

வரலாறு எமது வழிகாட்டி. எனவே கடந்த காலங்களில் நிகழ்ந்த  அவலங்கள் எமக்கு படிப்பினையைத் தர வேண்டும். 

அப்துல்லாஹ்
Sunday, October 30, 2011
 Courtesy - jaffnamuslim