Tuesday 12 March 2024

2004-2024 கிழக்குப் பிளவின் இருபதாண்டு நினைவுகள்

M R Stalin Gnanam
அன்றொருகாலம் தமிழீழ விடுதலைப் புலிகள் யாராலும் 'அசைக்க முடியாத' சக்திகளாய் இருந்தனர். 1976ம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி உருவாக்கப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவரான 'திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன்' எவராலும் வெல்லப்பட முடியாத 'அமானுஷ' சக்தி படைத்தவர் என்கின்ற ஒளிவட்டங்களின் சொந்தக்காரராய் இருந்தார். இந்தப் புலிகள் அமைப்பு  உருவாகியதிலிருந்து 2004ஆம் ஆண்டு வரையான 27 வருடகால வரலாற்றில் அது கடந்து வந்த சவால்களும், நெருக்கடிகளும் எண்ணற்றவை. ஆனாலும் அவையனைத்தையும் தமது மூர்க்கத்தனமான இராணுவ பலத்தின் மூலம் வெற்றிகொண்டு நின்றவர்கள்தான் புலிகள். ஆனால் 2004ம் ஆண்டில் புலிகள் அமைப்பும் அதன் தலைவர் பிரபாகரனும் எதிர்கொள்ள நேர்ந்த 'கிழக்கு பிளவு' அவர்களுக்கு வரலாறு காணாத சவாலொன்றை விடுத்தது. அதனை அவர்கள் வெற்றிகொண்டு தாண்டிச் செல்ல முடியவில்லை. காரணம் அது இராணுவ ரீதியாக மட்டுமன்றி அரசியல் கோட்பாட்டு ரீதியான சவாலாகவும் எழுந்து நின்றது.

புலிகள் அமைப்பில் 20 வருடகால அனுபவம் மிக்க மூத்த தளபதிகளில் ஒருவராகவும்  மட்/அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட தளபதியாகவும்  இருந்தவர் கேர்ணல் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் ஆகும். அவர் தலைமையில் 2004ஆம் ஆண்டில் புலிகளுக்குள் இருந்து வெளிக்கிளம்பிய நெருக்கடியேஅந்தக் கிழக்குப் பிளவுக்கு காரணமாயிற்று. வரலாற்றையே புரட்டிபோடும் வல்லமை கொண்டிருந்த அப்பிளவின் பின்னால் பல்வேறுவிதமான அரசியல்,சமூக,வரலாற்று மற்றும் பொருளாதார காரணிகள் இருந்தன. 

குறிப்பாக ஈழத்தமிழரிடையே அதாவது வடக்கு, கிழக்கு அரசியல் வரலாற்றில்  நீண்ட காலமாக கோலோச்சி வந்த யாழ்-மேலாதிக்க கருத்து நிலையே அதன் அடிப்படையாகும்.  இத்தகைய யாழ் மேலாதிக்க மனநிலையில் இருந்து புலிகள் அமைப்பாலும் வெளிவர முடியவில்லை. இம்மேலாதிக்க கருத்தியலானது புலிகள் அமைப்புக்குள்ளும் மெல்ல மெல்ல வியாபிக்கத் தொடங்கியது. அப்போதிருந்தே புலிகளுக்குள் இந்தக் கிழக்கு பிளவுக்கான 'கரு' கட்டத் தொடங்கி விட்டிருந்தது எனலாம். 

இறுதியாக  2002ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சமாதான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து புலிகள் உருவாக்கிய நிர்வாக கட்டமைப்பினுடைய  32 துறைசார் செயலாளர்களாகவும்  வடக்கு மாகாணத்தையே சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டனர். இத்தகைய எதேச்சயதிகார முடிவுகள் யாழ்-மேலாதிக்க கருத்தியலின் பிரதிநிதிகளாகவே தமிழீழ விடுதலைப் புலிகளும் இருப்பதை பட்டவர்த்தனமாக வெளிக்காட்டியது.

வடக்குப் போர் முனைகள்  

நீண்டகாலமாக இடம்பெற்றுவந்த தொடர்ச்சியான யுத்தம்  காரணமாக வடக்கு மாகாணத்திலிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி புலம் பெயர்ந்தமை காரணமாக புலிகளின் 'ஆட்சேர்ப்பு'என்பது 1990ஆம் ஆண்டின் பின்னர் கிழக்கு மாகாணப் போராளிகளையே  நம்பியிருக்கவேண்டிய நிலைக்கு உள்ளானது.  

இவ்வாறாக 'தமிழ்' மண்ணைக்காக்க கிழக்கிலிருந்து சென்று வடக்கு போர் நிலைகளில் களமாடிய 4000 போராளிகளின் உடலங்கள் வடக்கு மண்ணிலேயே புதைக்கப்பட்டன. ஆனால் போராட்டக்களத்திலும் பொது இடங்களிலும் வடக்கு மண்ணின் சாதிய மனோநிலை காரணமாக கிழக்குப் போராளிகள் பராபட்சத்துக்குள்ளாக்கப்பட்டு வந்தமை தொடர்ந்தது. யுத்த முன்னரங்குகளில் பலியிடப்படுவதற்காக கிழக்கு போராளிகளே அதிகளவில் நிறுத்தப்பட்டார்கள். மறுபுறம் ஜெயந்தன் படையணி போன்ற கிழக்கு வீரர்களின் யுத்த வெற்றிகளுக்கு உரிய கெளரவத்தை வழங்குவதில் வடக்குத்தளபதிகளும் ஒரவஞ்சனை காட்டிவந்தனர். 
 
1997 ஆம் ஆண்டில் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் குறிவைத்து மிகப்பெரிய தாக்குதலொன்றை ஜெயசிக்குறு என்னும் பெயரில் இலங்கை இராணுவம் முன்னெடுத்தது. அத்தாக்குதலை முறியடிப்பதில் புலிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அந்த யுத்தமானது  மாதக்கணக்காக தொடர்ந்தது.அப்போதுதான்  கிழக்கிலிருந்து ஆயிரக்கணக்கான போராளிகளுடன் வந்த கருணாம்மான் அந்த யுத்தத்தின் புதிய கட்டளைத்தளபதியாக பொறுப்பேற்கின்றார். உக்கிரமான அந்த யுத்தம் கிழக்குப் போராளிகளின் அபரீதமான இழப்புகளின் பலனாக வெற்றிகொள்ளப்படுகின்றது. அது மட்டுமன்றி கெரில்லா யுத்த பாணியிலிருந்து விலகி மரபார்ந்த நேரடிச்சமர் புரியவல்லமை  கொண்டவர்கள் புலிகள் என்னும் செய்தியை உலகுக்குச் சொல்லியது அவ்வெற்றியேயாகும். அன்றிலிருந்து கருணாம்மான் மீதான காழ்ப்புகளும் அவருக்கெதிராக குழிபறிப்புகளும் புலிகளின் வடக்கைச்சேர்ந்த மூத்த தளபதிகளுக்குள் உருவாகத் தொடங்கின. 

அதனைத் தொடர்ந்து வந்த காலங்களில் இடம்பெற்ற ஆனையிறவு மீட்பு  யுத்தத்திலும் வெற்றியின் நாயகர்களாக இருந்தவர்கள் கருணாம்மான் தலைமையிலான ஜெயந்தன் படையணியினரேயாகும். ஜெயந்தன் படையணியின் தளபதிகளில் ஒருவரான றோபட் தலைமையிலான  போராளிகளே ஆனையிறவு முகாமின் இறுதி வெற்றியை அறிவித்தனர். ஆனால் அவர்கள்  சார்பாக ஆனையிறவு முகாமில் வெற்றிக்கொடியை ஏற்றும் 'கெளரவம்' கருணாம்மானுக்கு வழங்கப்படவில்லை.  இது கிழக்குப் போராளிகளிடையே பாரிய விரக்தியையும் கோபக்கனலையும் உருவாக்கிய வரலாற்றுச்சம்பவமாகும்.  புலிகளின் பிரச்சர வெளியீடான நிதர்சனம் போன்ற வீடியோக்களில் கிழக்குப் போராளிகளின் வெற்றிச்சமர்கள் குறுக்கப்பட்டும் தணிக்கைக்குள்ளாகியும் வெளியிடப்பட்டன. களமுனையில் முக்கிய பாத்திரம் வகிக்கும் கிழக்குத் தளபதிகளின் குரல்களுக்கு மாற்றாக  வடக்குத்தளபதிகளின் வீரபிரதாபங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன. இவற்றையெல்லாம் பெரிதுபடுத்தவேண்டாம் என்று கிழக்குப் போராளிகளுக்கு கருணாம்மான் போன்றவர்கள் வருடக்கணக்காக சமாதானம் சொல்லிக்கொண்டே வந்தனர்.

ஆரம்ப காலங்களில் தங்கள் மீது காட்டப்பட்டுவந்த  இத்தகைய மாற்றான்தாய் மனப்பான்மைகளை கிழக்குப்போராளிகள் மெளனமாகவே கடந்து வந்துகொண்டிருந்தனர். ஆனால்  மெல்ல மெல்ல புலிகள் அமைப்புக்குள் கிழக்குப்போராளிகளின் எண்ணிக்கையும் அவர்களின் முக்கியத்துவமும்  பெரும்பான்மையடையத் தொடங்கியது. அவ்வேளையில்  தமது பலமே புலிகளின் முதுகெலும்பாக இருப்பதனை அவர்கள் உணரத்தொடங்கியபோது மேற்படி பாரபட்ச அணுகுமுறைகளுக்கெதிராக சிறு சிறு எதிர்ப்புணர்வுகளை  அவர்கள் வெளிக்காட்டத் தொடங்கினர்.

இதன் காரணமாக யாழ் குடா நோக்கிய நகர்வுக்கான தாக்குதல்களில்  கிழக்குப்போராளிகளின் படையணிகளுக்கும் வடக்கு படையணிகளுக்கும் இடையே சிறு சிறு உரசல்கள் தொடங்கி விட்டிருந்தன. யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதில் கிழக்குப் போராளிகள் முன்னணி பாத்திரம் வகித்துவிடக்கூடாது என்பதில் வடக்குத்தளபதிகள் கவனமான காய்களை நகர்த்தினார். அவ்வாறு நடத்து விட்டால் யாழ்ப்பாண நகரில் கருணாம்மானால் புலிக்கொடி ஏற்றப்படும் நிகழ்வை யாராலும் தடுக்க முடியாது போகும் என்பதனால் ஜெயந்தன் படையணிகளுக்குரிய களமுனை ஆயுத,மற்றும் உணவு வளங்கல்களில் திட்டமிட்ட தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டன. ஜெயந்தன் படையினர் நிலைகொண்டிருந்த ஒரு காவலரனில்  கட்டளையை மீறி தடை தாண்டிச்செல்ல முற்பட்ட பொட்டம்மானுடைய ஜீப் வண்டிக்கு துப்பாக்கிச் சூடு நடத்துமளவுக்கு நிலைமை  மோசமடைந்திருந்தது. 

இதுபோன்ற பல காரணங்களால் யாழ்  குடாவை கைப்பற்றும் நகர்வுகளிலிருந்து மெது மெதுவாக ஜெயந்தன் படையணியினர் பின்வாங்கத்தொடங்கினர். இறுதியாக யாழ் குடாவைக் கைப்பற்றும்  அத்திட்டம் புலிகளால் கைவிடப்பட்டது. சுருங்கச் சொன்னால் ஜெயசிக்குறு வெற்றி,ஆனையிறவு வெற்றி போன்று  யாழ்ப்பாணத்தை கைப்பற்றியதில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர்கள்  மட்டக்களப்பு போராளிகள்தான் என்கின்ற  வரலாறு எழுதப்படக்கூடாது என்பதற்காகவே அம்முயற்சி கைவிடப்பட்டது.

கருணம்மானின் கிழக்கு நோக்கிய நெடுந்தூர நடை 

இந்நிலையில்தான் 2001ஆம் ஆண்டு வரை வடக்கில் பல்வேறு யுத்தங்களை வெற்றி கொண்ட கருணாம்மான் மீண்டும் கிழக்குமாகாணத்துக்கு திரும்புகின்றார். சுமார் 4500 கிழக்குப் போராளிகளில்  4000 பேரை  பலிகொடுத்தநிலையில் அவருடன் திரும்பியவர்கள் வெறும் 600 பேரேயாகும். மணலாற்றில் இருந்த ஜெயந்தன் படையணியின் முகாமிலிருந்து  கிழக்கு நோக்கிய அப்பயணம் தொடங்குகின்றது. பிரபாகரனின் உரிய அனுமதி பெறப்படாமலேயே கருணாம்மான் இம்முடிவினை எடுத்திருந்தார்.  பல நாட்களைக்  கடந்த நெடுந்தூர நடை பயணத்தின்போது போராளிகளது யுத்த அனுபவங்களைக் காவியமாக்கும் நோக்கில் புலிகளின் ஆஸ்தான எழுத்தாளர் மணலாறு விஜயன் அவர்களுடனேயே பயணிக்கின்றார்.   

ஜெயசிக்குறு, ஆனையிறவு மீட்புச் சமர், யாழ்குடா நோக்கிய நகர்வு போன்ற ஓயாத அலைகள் ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய பல்வேறுபட்ட களமுனைகளைக் கடந்துவந்த அந்தப் போராளிகளின் அனுபவங்கள்,சாகஸங்கள், அவர்கள் எதிர்கொண்ட சவால்கள், திகில்கள்,இழப்புகள்,சிரமங்கள், படிப்பினைகள்  என்று அனைத்தையும் ஆவணப்படுத்துவதே அவரது நோக்கம். ஆனால் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகிய கதைபோல அவர் எதிர்பார்த்த விடயங்களை விட வடக்கு போர்முனைகளில் 'மட்டக்களப்பார்' என்பதற்காக சக போராளிகளிடமும் தளபதிகளிடமும் தாம் எதிர்கொள்ள நேர்ந்த பாகுபாடுகளும், ஒதுக்கல்களும்,ஒரவஞ்சனைகளும், அவமானங்களும் ஏளனங்களும் பற்றியே போராளிகள் தமது  மனக்குமுறல்களை கொட்டித்தீர்த்தனர். அவற்றையெல்லாம் ஒரு எழுத்தாளனாக அவர் தொகுத்துக்கொண்டாலும் அவை நூலாகத் தொகுக்கப்பட்டபோது  'திறீலும் திகிலும்' என்னும் அந்நூலை  வெளியிடுவதற்கு புலிகளின் அரசியல்துறை தடைவிதித்து பறிமுதல் செய்தது. 

கருணாம்மான் கிழக்குக்கு சென்றபின்னர் எதிர்காலத்தில்  புலிகளின் பிரதான கட்டளைத் தலைமையகத்தை மட்டக்களப்பு நோக்கி நகர்த்தவேண்டிய அவசியம் உள்ளமையால்  முழு கிழக்கு மாகாணத்தையும் புலிகளின் கட்டுப்பாடில் கொண்டுவருவதற்கான படைத்துறை கட்டுமானங்களை தயார் செய்யுமாறும் பிரபாகரன் கருணாம்மானுக்கு கட்டளையிட்டார். அதன்படி 1995-2000 வரையான காலப்பகுதியில் வடக்கு போர்முனைகளில் இழக்கநேர்ந்த படைபலத்தை மீளக் கட்டியெழுப்புமாறும் கேட்டுக்கொண்டார். 

அதன்பொருட்டு  கிழக்கில் ஆயுதமுனையில் 'ஆள்பிடி படலம்' தொடங்கியது. பின்னர் அது  'வீட்டுக்கொரு போராளி' என்னும் கட்டாய 'ஆட்சேர்ப்பு திட்டம்' என அறிமுகப்படுத்தப்பட்டது. புலிகளது கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு மாகாணத்தின் மூன்றின் இரு பகுதி நிலப்பரப்பு முழுவதும்  இத்திட்டம்  அமுலாக்கப்பட்டது. அத்திட்டத்துக்கு 'ஒப்படைப்பு' பெயரிடப்பட்டது. அதாவது  ஒவ்வொரு குடும்பமும் தம் சார்பில் ஒருவரை நாட்டுக்காக போராடுவதற்காக தியாகம் செய்து ஒப்படைக்க  வேண்டும் என்னும் நிலை உருவாக்கப்பட்டது. இவ்வாறாக ஆயிரமாயிரமாய் சிறுவர்களும் இளைஞர்களும் பாலின வேறுபாடின்றி புலிகளுடன் இணைக்கப்பட்டனர். படுவான்கரைப் பெருநிலப்பரப்பின் ஒவ்வொரு குக்கிராமங்களிலும் தினமொரு இடங்களை குறித்து ஒப்படைப்பு நிகழ்வுகள் அறிவிப்புச் செய்யப்பட்டன. பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை அங்கு  கூட்டிச்சென்று  புலித் தளபதிகளின் கரங்களில் அவர்களை ஒப்படைத்தனர். வெருகல்,கோராவெளி,தாந்தாமலை போன்ற கோவில் திருவிழாக்களில் பங்குபெறும் இளைஞர்களைக் குறிவைத்து தினம் தினம் ஆட்சேர்ப்புகள் இடம்பெற்றன. இவ்வாறாக பருவமடையாத பெண்குழந்தைகள் கூட நூற்றுக்கணக்கில் பயிற்சி பாசறைகளுக்கு கவர்ந்து கொண்டு செல்லப்பட்டனர். மட்டு-அம்பாறை படையணிகள் தொகை சுமார் ஏழாயிரத்தைத் தாண்டுகின்றது.  ஜெயந்தன் படையணி,விநோதன் படையணி,விசாலகன் படையணி,அன்பரசிப் படையணி,மதனா படையணி,ஜோன்சன் மோட்டார் படையணி என்று பாசறைகள் பெருகுகின்றன.  ஆயிரக்கணக்கான படையணிகளை  ஒரே வேளையில் வைத்து பராமரிக்கக்கூடியளவு வசதி வாய்ப்புக்களைக்கொண்ட நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்றன. 

இத்தகைய கட்டாய  ஆட்சேர்ப்பு குறித்த செய்திகளை கிழக்கில் அன்றிருந்த ஊடகவியலாளர்கள் எவரும் வெளிக்கொணரவில்லை. அதற்கும் மேலாக  'தராக்கி சிவராம்' போன்ற கிழக்கின் பிரபல ஊடகவியலாளர்கள் பொது மக்களே தமது குழந்தைகளை தாமாக விரும்பி முன்வந்து 'மகிழ்ச்சியுடன் புலிகளிடம் ஒப்படைக்கின்றார்கள்' என்று செய்திகளை வெளியிட்டனர்.   'குழந்தைப்போராளிகள்' என்கின்ற வார்த்தையைக்கூட மனித உரிமை அமைப்புகள் மறந்தேனும் உச்சரிக்க முன்வரவில்லை.

ஆனால் யாழ்-பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி போன்ற ஒரு சில அமைப்புகளே இவை பற்றிய செய்திகளை வெளிக்கொணர்ந்தன. புலிகளின் ஆட்சேர்ப்பு,மற்றும் அதன் காரணமாக படுவான்கரை பகுதியில் பெரும்பான்மையான பாடசாலைகள் (மாணவர்களின் போதிய வரவின்மை காரணமாக) செயலிழந்து காணப்பட்டமை என்பவற்றையிட்டு ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி வெளியிட்ட அறிக்கை தினகரன் பத்திரிகையில் 18/11/2001 அன்று  வெளிவந்திருந்தது. அவ்வறிக்கையில் கிழக்கில் இடப்பெற்ற கட்டாய  ஆட்சேர்ப்பு குறித்த விடயங்களை பகிரங்கம் செய்ததோடு இந்நிலை தொடருமானால் கிழக்குவாழ் மக்கள் தமிழீழ கோரிக்கையிலிருந்து விலகி 'சுதந்திர கிழக்கு' ஒன்றுக்கான கோரிக்கை ஒன்றை முன்வைக்கவேண்டி வரும் என்றும் முன்னெச்சரிக்கை செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிளவுபட்ட பொட்டம்மானின் புலனாய்வுப்பிரிவு

புலிகளின் புலனாய்வுத்துறையைப் பொறுத்தவரையில் அது இரண்டு வகையாகச் செயற்பட்டது. தேசியப் புலனாய்வுத்துறை,இராணுவப் புலனாய்வுத்துறை என அவை அழைக்கப்பட்டன.  கிழக்கில் இயங்கிய தேசிய புலனாய்வுத்துறை பொட்டம்மானின் வழிகாட்டலில் தளபதி ரெஜினோல்ட் தலைமையிலும் இராணுவப் புலனாய்வுத்துறையானது  கருணாம்மானின் வழிகாட்டலில் தளபதி ரமணன் தலைமையிலும் இயங்கிவந்தன. 
  
அதேவேளை வடக்கு களமுனைகளில் பொட்டம்மான் தலைமையிலான  புலனாய்வுத்துறையினருக்கும் ஜெயந்தன் படையினருக்கும் இடம்பெற்ற முறுகல் நிலை கிழக்கு மாகாணத்திலும் தொடர ஆரம்பித்தது.முதலில்  கிழக்கில் இயங்கிய இருவகையான புலனாய்வுத்துறைகளுக்கும் இடையே முறுகல் நிலை உருவானது. பொட்டம்மான் மற்றும் கருணாம்மான் போன்றோரிடையேயான அதிகாரப்போட்டிகளே அதன் பின்னணியில் இருந்தன. இப்பூசல்கள் தேசிய புலனாய்வுத்துறை வடக்கு /கிழக்கு என இரண்டாகப் பிளவுபடும் நிலைக்கு இட்டுச்சென்றது. அதன் விளைவாக கிழக்கில் தேசிய புலனாய்வுத்துறை பொறுப்பாளரான ரெஜினோல்ட் உட்பட்ட  சுமார் 30 வரையான போராளிகள் பொட்டம்மானின் தலைமையின் கீழ் செயற்பட முடியாதென கருணம்மானிடம் சரணடைந்தனர்.  

2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  கிழக்கில் மாவீரர் தினம் மிக பிரமாண்டமான முறையில் நடைபெறுகின்றது. நீண்டகாலத்துக்குப் பின்னர் கருணாம்மானின் பங்குபெற்றுதலோடு நடைபெறும் மாவீரர்தினம் என்பதால் வெகு விமர்சையாக ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது. அன்றைய தினம் மாலைப் பொழுதில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான அம்பிளாந்துறை கிராமத்தில் வைத்து புலனாய்வுத்துறையைச் சேர்ந்த முக்கியஸ்தரான யாழ்-நெல்லியடியைச் சேர்ந்த அற்புதம் மாஸ்டர் பயணித்த வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதலில் அவர் உயிர் பிழைத்தபோதும் தனது காலை இழக்கவேண்டிவந்தது. இச்சம்பவமானது கிழக்கு மாகாணத்திலுள்ள புலிகளின் கட்டமைப்புகளை வடக்குப்  பொறுப்பாளர்கள் வழிநடாத்துவதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சிகள் கிழக்கில் தொடங்கிவிட்டமையை உணர்த்தியது.

அதேபோன்று 2001 ஆம் ஆண்டு  மட்டக்களப்பில் இருந்து வெளிவந்த தினக்கதிர் பத்திரிகைக் காரியாலயம் மீதான இனந்தெரியாதோரின் தாக்குதலும் கூட  இத்தகைய புலிகளின் உள்ளக முரண்பாட்டு பின்னணியில் இடம்பெற்றதாகவே அறியப்பட்டது. அதன்காரணமாக அதனைத் தொடர்ந்து வந்த காலங்களில் அப்பத்திரிகை நின்று போக நேர்ந்தது.

இவ்வித சம்பவங்களை விசாரிப்பதற்கோ ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ வன்னியிலிருந்த பிரபாகரனாலோ பொட்டம்மானாலோ முடியவில்லை.

ரணில்-பிரபா போர் நிறுத்த ஒப்பந்தம் 

2002ஆம் ஆண்டு நோர்வே நாட்டின் மத்தியஸ்தம் ஊடாக  ஏற்பட்ட புலிகள்-இலங்கையரசு சமாதான ஒப்பந்தம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளுக்காக  புலிகளின் பிரதிநிதிகளாக அரசியல் ஆலோசகர் பாலசிங்கம்,அரசியற் துறை பொறுப்பாளராகிய தமிழ் செல்வன் மற்றும் கருணாம்மான் போன்றவர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்காரணமாக அவர்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வரத்தொடங்கினர். 

அது மட்டுமன்றி சமாதான பேச்சுகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று வந்த கருணாம்மான் ஐரோப்பாவில் வாழும் தமிழர்களின் அமைதியான வாழ்வையும் அவர்களின் வாரிசுகள் தேவையான உலகத்தரம் மிக்க கல்வியையும் பெரும் வாய்ப்பை பெற்றிருக்கும் நிலையில் தாங்கள் ஆயிரமாயிரமாய் ஏழை எளிய மக்களின் குழந்தைகளை யுத்தத்தில் பலியிட்டுக்கொண்டிருப்பதனை எண்ணிப்பார்க்கின்றார்.  புலிகளின் பொறுப்பாளர்களாகவும் பிரச்சாரகர்களாகவும் வெளிநாடுகளில் வாழ்பவர்கள் போராட்டத்தின் பெயரால் கோடீஸ்வரர்களாக மாறிவருவதையும் அவதானிக்கும் சந்தர்ப்பம் அவருக்கு கிடைக்கின்றது. 

2002ஆம் ஆண்டில் முதலாம் மற்றும் இரண்டாம்  கட்ட பேச்சு வார்த்தைகள் தாய்லாந்திலும் மூன்றாம் கட்ட  பேச்சுவார்த்தை நோர்வேயிலும் இடம்பெறுகின்றது. இந்த மூன்றாம்  கட்டப் பேச்சுவார்த்தையின் போது அரசியல் தீர்வு ஒன்றுக்குரிய முன்வரைபுகளில் கையெழுத்துடுவது குறித்த இழுபறி நிலை ஏற்படுகின்றது. இறுதியாக கையெழுத்திட்டு விட்டு இலங்கைக்கு திரும்புகின்றனர் தமிழ்ச்செல்வனும் கருணாம்மானும். அந்த கையெழுத்திட்ட வரைபுகளை தலைவரிடம் காட்டுகின்றனர். உங்களை கையெழுத்திடவா அனுப்பினேன்? என்று குமுறிய பிரபாகரன் அப்பிரதிகளை கிழித்து கருணாம்மானின் முகத்திலே வீசுகின்றார். இச்சம்பவமானது 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இடம்பெறுகின்றது.

ஒவ்வொரு தடவையும்  வெளிநாடுகளுக்கு சென்று பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்துவிட்டு கொழும்பு வந்திறங்கும் கருணாம்மானும் தமிழ்ச்செல்லவனும் கட்டுநாயக்காவிலிருந்து இலங்கை விமானப்படையினரின்  ஹெலிக்கொப்டர்களில் நேரடியாக வன்னிக்கு பயணமாவார்கள். அங்கு பிரபாகரனிடம் பேச்சுவார்த்தை விபரங்களை முழுமையாக ஒப்புவித்தபின்னரே கருணாம்மான் வன்னியிலிருந்து மட்டக்களப்புக்கு வந்து சேருவது வழக்கமாயிருந்தது. ஆனால் மேற்படி சம்பவத்தின் பின்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டு விட்டு வெளிநாடுகளில் இருந்து கொழும்பு வந்து சேர்ந்தவுடன் தமிழ்ச்செல்வனை வன்னிக்கு தனியாக அனுப்பிவிட்டு கட்டுநாயக்காவிலிருந்து  ஹெலிக்கொப்டர் மூலம் நேரடியாக மட்டக்களப்புக்கு  வரத்தொடங்கினர் கருணாம்மான்.  இது  பிரபாகரனுக்கு பெரும் விசனத்தை ஏற்படுத்தியது. 

அதன்காரணமாக இறுதியாக 2003ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் யப்பானில் இடம்பெற்ற ஆறாம் கட்டப் பேச்சு வார்த்தைக்குரிய குழுவிலிருந்து  கருணாம்மானின் பெயர் நீக்கப்பட்டது. அந்தப் பேச்சு வார்த்தையோடு புலிகளுக்கும் இலங்கையரசுக்குமான உறவு கிட்டத்தட்ட முறிவடையும் நிலைக்கு வந்துவிட்டது எனலாம். அடுத்த யுத்தத்தை ஆரம்பிக்கும் திட்டத்தில் பிரபாகரன் மூழ்கின்றார். 

இதற்கிடையே சமாதான காலத்தை தொடர்ந்து நிதி,நீதி,நிர்வாகம்,அரசியல்,காவல்,கல்வி  என்று சகல துறைகள் சார்ந்தும் புதிய கட்டமைப்புக்களை புலிகள்  உருவாக்குகின்றனர். அத்தோடு அவற்றுக்கான தனித்தனி துறைச் செயலாளர்கள் 32 பேர் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களாய் இருந்தனர். இந்நிலையானது கிழக்குப் போராளிகளிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் உருவாக்குகின்றது. ஏற்கனவே பொட்டம்மானின் கட்டுப்பாட்டில் இயங்கிய புலனாய்வுத்துறை கருணம்மானின் கட்டுப்படின் கீழ் இயங்குகின்றது. அதனைத் தவிர ஏனைய துறைசார் பணியாளர்கள் வடக்கில் இருந்து கிழக்கில் பணியாற்றுவதற்காக வந்திறங்குகின்றனர். குறிப்பாக தமிழீழக்  காவல்துறையினரின் செயற்பாடுகள் கிழக்கில் முடுக்கிவிடப்படுகின்றன. சட்டம் ஒழுங்கு என்னும் பெயரில் கிழக்கிலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வடக்கு மாகாண காவல்துறைப் பொறுப்பாளர்கள் மேலாண்மை செலுத்தத் தொடங்கினர். இது கிழக்குப் போராளிகளிடையே பலத்த விமர்சனங்களுக்கு உள்ளானது. 

'வடக்கு வாழ்வதற்காக நாம் அங்கு சென்று மடிந்தோம். அவர்களோ கிழக்கை ஆள்வதற்காக இங்கு வந்திருக்கின்றார்கள்.'என்கின்ற கோபக்கணைகள் கிழக்குப் போராளிகளிடத்தில் அனல் கொண்டு வீசத்தொடங்கின. வடக்கில் இருந்து வரும் துறைசார்ந்த பொறுப்பாளர்களுக்கு கட்டுப்பட முடியாதென பல போராளிகள் குரலெழுப்பித்தொடங்கினர். மட்/பழுகாமத்தில் தமிழீழ காவற்துறையினருடன் முரண்பட்டு கைகலப்பில் ஈடுபட்ட மூன்று போராளிகள் களுவாஞ்சிக்குடி இராணுவ முகாமில் சரணடையுமளவுக்கு நிலைமைகள் மோசமடையத் தொடங்கின. கிழக்கில் புலிகளின் நிர்வாகம் எதிர்கொள்ளும் குழப்பநிலைமைகளை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமானால் வன்னியிலிருந்து தலைமைப்பீட உறுப்பினர்கள் கிழக்குமாகாணத்துக்கு நேரடியாக களமிறங்கவேண்டிய அவசியம் உணரப்படுகின்றது.  
 

மட்டக்களப்புக்கு வந்த பொட்டம்மான்
 
ஏறக்குறைய 2003ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் யப்பானில் இடம்பெற்ற பேச்சுக்கள் முறிவடைந்ததிலிருந்து சமாதானத்துக்கான வாய்ப்புகள் அருகத் தொடங்கி விட்டன. புலிகளைப் பொறுத்தவரையில்  கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பநிலைமைகளை விரைவாகத் தீர்க்காவிடின் அடுத்த யுத்தத் தயாரிப்புக்கள் பற்றி எண்ணிப்பார்க்க முடியாது. 
எனவே பிரபாகரன்  பொட்டம்மானை மட்டக்களப்புக்கு அனுப்ப முடிவெடுக்கின்றார். அதன்படிஅங்குள்ள குழப்பநிலைகளை தீர்க்க முயலுமாறும் படையணிகளைப் பார்வையிட்டு தேசிய புலனாய்வுத்துறையை மீளக் கட்டியெழுப்புமாறு அறிவுறுத்தியும் பொட்டம்மானை 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மட்டக்களப்புக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன். 

மட்டக்களப்புக்கு வந்த பொட்டம்மான் கிழக்கின் நிலைமைகள் குறித்து கருணாம்மானுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்துகின்றார். பிரச்சனைகளின் அடிப்படையை விளக்கிய கருணாம்மான் யுத்த நிறுத்த  காலத்தில் சமாதானச் செயலகம் ஊடாக வழங்கப்பட்ட  நிதியொதுக்கீடுகள் பெரும்பான்மையாக வடக்குக்கே செலவு செய்யப்படுவது பற்றியும் அங்குள்ள தளபதிகள் அனைவரும் கொக்ககோலா,பால்மா, மற்றும் இரும்பு, சீமெந்து, போன்ற வியாபாரங்களில் ஈடுபடும் சர்வதேச கம்பெனிகளின் தொழில்சார் முகவர்களாக மாறிவருவது  பற்றியும் தனது விசனத்தைத் தெரிவித்தார். சர்வதேச தரத்திலான சொகுசு வாகனங்கள்  கொழும்பின் அரசியல் தலைவர்களுக்கு கிடைக்க முன்பே வன்னியிலுள்ள புலிகளின் தளபதிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் கிடைத்து விடுகின்றது. மீள் கட்டுமானப்பணிகள் வடக்கில் மிக அசுர வேகத்தில்  முடுக்கி விடப்பட்டுள்ளன ஆனால் கிழக்கில் யுத்த இடிபாடுகளுக்குள்ளேதான் மக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்."

இந்நிலையில் வடக்கிலிருந்து வந்த காவல்துறையினரும் ஏனைய பொறுப்பாளர்களும் நடந்து கொள்ளுகின்ற விதங்கள் போராளிகளிடையே பெரும் அதிருப்தி அலையொன்றை தோற்றுவித்துள்ளது என்பதை இலாவகமாக எடுத்துச் சொல்லுகின்றார்.

அனைத்தையும் கேட்டுக்கொண்ட பொட்டம்மான்  செவிடன் காதில் ஊதிய சங்குபோல தான் வந்த வேலையை கச்சிதமாக செய்து முடித்துக்கொண்டு வடக்கு நோக்கி புறப்பட்டார். அதாவது கீர்த்தி தலைமையில் நீலன் இளங்கோ போன்றவர்களை இணைத்து புதிய புலனாய்வுத்துறையை உருவாக்கி விட்டு வன்னிக்கு புறப்படுகின்றார். அது கருணாம்மானுக்கு பலத்த கோபத்தினை உருவாக்குகின்றது.

மட்டக்களப்பிலிருந்து திரும்பிய பொட்டம்மானால் பிரபாகரனுக்கு  வழங்கப்பட்ட  அறிக்கையில்  மட்டு-அம்பாறை படைக்கட்டுமானங்களினதும் அவற்றின் நிர்வாகம், கட்டமைப்பு,வழங்கல்கள் பற்றிய சிறப்புகளை எடுத்துச்சொல்லியிருந்ததோடு அத்தகைய படைத்துறைக் கட்டுமானம்  ஒன்று கருணம்மானின் முழுக்கட்டுப்பாடில் இருப்பதன் ஆபத்தையும்  சுட்டிக்காட்டியிருந்தது. இதன்காரணமாக அதன் பெரும்பகுதியை உடனடியாக வன்னிப்பெருநிலப்பரப்புக்கு இடமாற்றம் செய்யுமாறும் பரிந்துரைத்திருந்தது.

பிரபாகரனிடம் வந்த அவசரச்செய்தி 

இந்நிலையில்தான் 2004ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி பிரபாகரனிடமிருந்து அவசரத் செய்தியொன்று  கருணாம்மானுக்கு வருகின்றது. அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வனுடைய 'செட்' மூலமாக கருணாம்மானுடைய 'செட்' க்கு அச்செய்தி வருகின்றது. அம்மானின் 'செட்' பொறுப்பாளர்  மாதங்கன் அச்செய்தியை வாசித்து அம்மானின் பிரதான மெய்ப்பாதுகாவலரான காஸ்ரோவிடம் ஒப்புவிக்கிறார். அதனை காஸ்ட்ரோ அம்மானின் உதவியாளர் லத்திப்பிடம் சொல்லுகின்றார். "கருணாம்மானை வன்னிக்கு வருமாறும் வரும்போது  2000 படையணிகளை நகர்த்திக்கொண்டு வருமாறும்  தலைவர் சொல்லியிருக்கிறார்". அதற்கான பதிலாக  "இப்போது வரமுடியாது" என பதிலிறுக்கப்படுகின்றது.

மீண்டும் அரை மணி நேரத்தில் ஒரு செய்தி வருகின்றது. அதுவும் மாதங்கன் - காஸ்ட்ரோ-லத்திப் என்று அம்மானுக்கு செய்தி சொல்லப்படுகின்றது. "ஹெலிக்கொப்டர் அனுப்புகின்றேன் உடனே கருணாம்மான் வன்னிக்கு வரவும்." என தலைவர் அழைத்துள்ளார். 

அதற்கு பதில் இவ்வாறு சொல்லப்படுகின்றது. "ஹெலிக்கொப்டர் அல்ல 
ஃபிளைட் அனுப்பினாலும் வரமாட்டேன்."  ஆனால் லத்திப் அந்த பதிலை செய்தித்தொடர்பாளர் மாதங்கனுக்கு சொல்லவில்லை.  

மீண்டும் நான்கு நாட்கள் கடந்த பின்னர் அதாவது பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி வன்னியிலிருந்து அழைப்புவருகின்றது. "தலைவர் அவசரமாகப் கருணாம்மானுடன் பேசவேண்டும் உடனடியாக வன்னிக்கு வரவும்" 

இச்செய்தி வந்தவுடன் கருணாம்மான் வன்னிக்கு செல்லவில்லை.சென்றால் அவர் திரும்பி வரப்போவதுமில்லை. பிரபாகரனுக்கு பக்கத்தில் இருபது வருடங்கள் இருந்த கருணாம்மான் இது புரியாதா? எனவே அதற்கு பதிலும் அளிக்கவில்லை.  ஆனால் அன்றைய தினமே கருணாம்மானின் மனைவியும் குழந்தைகளும் அவரது உதவியாளரான லத்தீப் என்னும் சிறுவனும் குகனேசனின் உதவியுடன் இந்தியாவுக்கு செல்வதற்காக கொழும்பு நோக்கிப் அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
உடனடியாக மட்டக்களப்பு-அம்பாறை பிரதேசங்களில் இருந்த முக்கிய தளபதிகள் கருணாம்மானால் அழைக்கப்படுகின்றனர். பெப்ரவரி 29ஆம் திகதி நிலைமைகளை சக தளபதிகளுக்கு விளக்குகின்றார் கருணாம்மான். மீண்டும் யுத்தத்துக்கு 2000 போராளிகளை வன்னிக்களமுனைக்கு அழைத்துச்செல்வது குறித்து அனைவருமே அதிருப்தி தெரிவிக்கின்றனர். கரிகாலன், பிரபா,ரமேஷ்,
என்று மூத்த தளபதிகள் அனைவரும் இதில் பங்கெடுக்கின்றனர். 

இறுதியாக 'தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கிழக்குப் போராளிகள் 6000 பேரும் கருணாம்மான் தலைமையில் பிளவுபட்டு நிற்கின்றோம்' என்னும் செய்தி மட்டு-அம்பாறை  அரசியல் துறைப் பொறுப்பாளர் கரிகாலன் அவர்களின் கையெழுத்துடன் 2004 ஆம் ஆண்டு மார்ச் 03நாள் பகிரங்கப்படுத்தப்பட்டது.

ஜோர்ஜ் குருஷேவ் அவர்களின் 'அபத்தம்' மின்னிதழில் வெளியாகிய கட்டுரை 

M R Stalin Gnanam 

Sunday 12 February 2023

Road to Nandikadal


By Maj. Gen. Kamal Gunaratne

தமிழில் Rajh Selvapathi                             (முன்னாள் ஐ. நா. சபை     உத்தியோகத்தர், கிளிநொச்சி)

800x800 சதுர மீற்றர் நிலப்பரப்புக்குள் மூன்றுபக்கமும் இராணுவத்தினரால் சூழப்பட்ட நிலையில் தப்பிப்பதற்காக மூர்க்கத்தனமாக முயன்று கொண்டிருந்த பயங்கரவாதிகளின் கடைசி மணித்துளிகளை மீட்டி பார்ப்பது முக்கியமானது என நான் நம்புகின்றேன். முன்பே கூறியது போல் மே 17 விடிகாலை பொழுதில் நந்திகடல் நீரேரியின் மேற்கு கரையோரத்தில் இருந்த முன்னரங்க நிலைகள் மீதுகடற்புலிகளின் 06 தற்கொலை படகுகளின் உதவியுடன் அவர்கள் தாக்குதலை தொடங்கினார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் முல்லைத்தீவு காடுகளுக்குள் அவர்களால் சென்றிருக்க முடியும். அங்க மறைத்து வைக்கப்பட்டிருந்த உணவு, வெடிபொருட்கள், ஆயுதங்களின் துணையுடன் பல மாதங்கள் தாக்குபிடித்திருக்க முடியும். போரும் தொடர்ந்து கொண்டிருக்கும். எப்படியிருந்தாலும் தைரியமும் தளம்பல் இல்லா போராடும் உத்வேகத்தையும் கொண்ட எமது படையினர் அவர்களின் முயற்சியை நாசமாக்கிவிட்டனர். ஆகையால் அவர்கள் வேறு ஒரு திட்டடம் போட வேண்டி இருந்தது.

அந்த சதுர நிலப்பரப்புக்குள் அடுத்த நாள் வரை அகப்பட்டிருதால் அவர்களின் முடிவை நெருங்குவாரகள் என்பது தெள்ளத்தெளிவாகவே இருந்தது. சுவரை தள்ளுவதுபோன்று தப்பிப்பதற்காக அதி உச்சளவிலான மூர்க்கதனமான முயற்சித்தனர், மரணபுள்ளியில் உள்ள அவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள எதையும் செய்ய்பும் நிலையில் இருந்தனர். நந்திக்கடல் நீரேரியின் ஓவ்வொரு மூலையும் படையினரால் சூழ்ப்பட்ட நிலையிலும் கூட அவர்கள் ஏதாவது ஒன்றை செய்தேயாக வேண்டும் என்கின்ற கட்டயத்தில் இருந்தனர். எதுவும் செய்யாமல் இருப்பதை விட ஏதாவது செய்வது நல்லதுதான். இருந்தாலும் இந்த முயற்சிகள் தெளிவில்லாமல் ஒரு முறையான திட்டம் இல்லாமலும் செய்யப்பட்டதாகவே நான் உணர்கின்றேன்.


அந்த சதுர நிலத்தினுள் அண்ணளவாக 700 பயங்கரவாதிகள் இருந்திருக்ககூடும். பிரபாகரன், சூசை, பொட்டு அம்மான், பாணு, ஜெயம், சாள்ஸ் அண்டனி, ரட்ணம் மாஸ்டர் போன்ற மேல் நிலை தலைவர்களும் அவர்கள் மத்தியில் இருந்தனர். மே 17ல் சூசை தலைமையிலான அவர்களின் பெரும் முயற்சி தோல்வியில் முடிந்து பின் அடுத்ததாக அவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்துகொண்டனர். முதல் குழு யாரோ ஒரு மூத்த தலைவரால் தலைமை தாங்கப்பட்டது. இரண்டாவது குழுவை ரட்ணம் மாஸ்டரும் சாள்ஸ் அண்டனியும் தலைமை தாங்க மூன்றாவது குழு பிரபாகரன் தலைமையில் எஞ்சியுள்ள ஏனைய புலி தலைமைத்துவமாக இருந்தது. முதலாவது குழு அந்த நிலப்பகுதியிலேயே தங்கியிருக்க தீர்மாணித்திருந்தது. பெரும்பாலான பயங்கரவாதிகள் இன்னும் அந்த பகுதியிலேயே இருக்கின்றனர் என எம்மை நம்பவைத்து ஏனையவர்களை தேடபிடிக்க முடியாத வகையில் தப்பிசெல்ல வைக்கும் ஒரு தந்திரோபாய புகைதிரையாகவே அதனை நான் பார்கிறேன். இருள தொடங்கியபடியால் இரண்டாவது, மூன்றாவது குழுக்கள் கிழக்கு கரை வழியாக கடல் நீரேரிக்குள் இறங்கிவிட்டனர். கிட்டதட்ட 1 ½ கிலோ மீற்றர் தூரம் மேற்கு நோக்கி நடந்து பின் வடக்கு நோக்கி 4 கிலோமீற்றர் தூரம் நடந்து பொதுமக்கள் தப்பிவருவதற்க்காக படையினரால் அமைக்கப்பட்டிருந்த இராணுவ நிலைக்கு அருகில் வந்துவிட்டார்கள். இரண்டாவது குழுவை சேர்த சிலர் சாள்ஸ் அண்டனி தலைமையில் இராணுவ நிலையை அணுகி தாங்கள் பொதுமக்கள் எனக்கூறி தங்களை உள்ளே அனுமதிக்குமாறு கேட்டார்கள். முதல் தடவை நிராகரிக்கப்பட்ட போது மீண்டும் கடல் நீரேரிக்கே திரும்பி சென்றவர்கள் ஒரு மணித்தியாலத்தின் பின் மீண்டும் அதே கோரிக்கையுடன் வந்தனர். அவர்கள் எங்களிடம் வருவதற்கு முன்பாகவே அநத இராணுவ நிலைக்கு அருகே கிழக்கு கரையில் ஒரு பெரும் குழு தாக்குதலுக்கு தயார் நிலையில் கூடியிருதது. கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கிருந்த அதிகாரி வானை நோக்கி சுடவே கரையோரமாக நீருக்குள் நிலைபடுத்தப்பட்டிருந்த எதிரிகள் படையினரை நோக்கி சுடத்தொடங்கினர். இது எதிர்பாக்கப்படாத மோசமானதாக்குதலாக இருந்தது. இரண்டாவது குழுவை சேர்ந்த கிட்டதட்ட 350 பயங்கரவாதிகள் முன்னரங்க நிலைகளை உடைத்துக்கொண்டு எமது பகுதிகளுக்குள் ஊடுறுவிட்டார்கள். உடனடியாகவே ஆட்லறி, மோட்டார் தாக்குதலை நடத்துமாறு நான் உத்தரவிட்டேன். இதனால் உள்நுழைய தாயாகாக சற்று தொலைவில் இருந்த பிரபகரனுடன் இருந்த மூன்றவது குழு வடக்கு பக்கமாக தள்ளப்பட்டு அடர்ந்த கண்டல் காட்டினுள் மெதுவாக நகர்ந்து தப்பி சென்றுவிட்டனர்.


மூன்றாவது குழு கண்டல் பற்றைகளுக்குள் தப்பி சென்றதற்காக அறிகுறிகள் எதுவும் எமக்கு தென்படவில்லை. அதே நேரம் இரண்டாவது குழுவுடன் கடும் சண்டை மூண்டது. அதிகாலை 2.30 மணியளவில் தொடங்கிய சண்டை முற்பகல் 11.00 மணிவரை தொடர்ந்து. அடுத்தநாள் சாள்ஸ் அண்டனி, ரட்ணம் மாஸ்டர் உட்பட 350 பயங்கரவாதிகள் கடைசியாக கொல்லப்பட்டிருந்தனர். இதற்கிடையே அந்த 800x800 சதுர மீட்டர் நிலபகுதியின் மீது காலை 10.00 மணியளவில் தாக்குதலை தொடங்கப்பட்டு முழுமையாக எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. முதலாவது குழுவை சேர்ந்த கிட்டதட்ட 150 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அன்று மாலைவரை முதலாவது, இரண்ண்டாவது குழுக்களை சேர்ந்த 500 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

மதியம் 12.30 மணியளவில் சூசையுடன் சேர்ந்த குழு ஒன்று கண்டல் காடுகளுக்குள் பதுங்கி இருப்பதாக எமக்கு கிடைத்த தகவல் படி மூன்றாவது குழுவினர் மீதான தாக்குதலை ஆரம்பித்தோம். மாலை 6.30 மணியளவில் சண்டை ஓய்ந்தது. உயர் நிலை புலி தலைவர்கள் உட்பட150 மேற்பட்ட பயங்கரவாதிகள் செத்துக்கொண்டிருந்தார்கள். எப்படியிருந்தாலும் சிறு சிறு மோதல்களுக்கு மத்தியில் பிரபாகரன், சூசை உடபட மேலும் 50 பேர்கள் எனது படையினருக்கு அகப்படாமல் கண்டல் பற்றைக்குள்ளேயே மறைந்து கொண்டிருந்தனர். அடுத்த நாள் காலை வரை நான் எனது படைகளை அவ்விடத்தை விட்டு நகர்த்தாத படியால் 19ம் திகதி காலை பிரபாகரனும் சூசையும் ஏனைய 50 பேரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என சண்டை உறுதிபடுத்தியது வரை அவர்களால் தொடர்ந்து பதுங்கியே இருப்பதை தவிர அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதி தோட்டா இருக்கும் வரை, கடைசி பயங்கரவாதி இருக்கும்வரை அந்த கடைசி குழு போராடிக்கொண்டிருந்ததை நான் கூறியே ஆக வேண்டும். அவர்கள் எங்கள் எதிரியாக இருந்தாலும் அவர்கள் உண்மையான சண்டை வீரர்கள்

நிஜக்கதை


மாலை 6.00 மணிவரை நீடித்த சண்டையில் இப்போது துப்பாக்கி சத்தங்கள் ஓய்ந்திருந்தன. தாங்கள் பெரும் எண்ணிக்கையில் பயங்கரவாதிகளை கொன்றுவிட்டதாகவும் இறந்த உடல்களை ஒரு இடத்தில் கொண்டுவந்து போட்டுக்கொண்டிருப்பதாகவும் கொமாண்டோ படை கட்டளை அதிகாரி கேணல் ரால்ஃப் நுகேரா எனக்கு அறிவித்திருந்தார். அவர்கள் சேகரித்து கொண்டிருக்கும் இறந்த உடல்களை பார்வையிட சென்றிருந்தேன். வரிப்புலி உடையில் இருந்த இறந்த உடல்களை சதுப்பு நில கண்டல் பற்றைக்காடுகளுக்குள் இருந்து கண்டுபிடிப்பது கடினமானதாகவே இருந்தது. 150 பயங்கரவாதிகளின் உடல்களும் பெரும் எண்ணிக்கையான ஆயுதங்களும் படையினரால் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

                   மாதவன் மாஸ்ரர்




ஏற்கனவே முழு நாடுமே கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டிருந்தது. கொழும்பு, கண்டி, காலி, மாத்தறை, அனுராதபுரம், போன்ற பெரும் நகரங்கள், இலங்கையின் தொலைதூர கிராமங்கள் வரை எல்லோரும் வீதிகளில் இறங்கிவிட்டனர். தேசியக்கொடியை காற்றில் அசைய விட்டு ஆட்டமும் , பாட்டமும் கொண்டாட்டமுமாக இருந்தனர். பால்சோறு சமைத்து தமது மகிழ்ச்சியை தடையின்றி கொண்டாடிக்கொண்டிருந்தனர். மிக நீண்ட கடினமான போரில் ஈடுபட்டதால் எனக்கும், எனது அதிகாரிகளுக்கும், படையினருக்கும் கொண்டாட்டங்களுக்கு முன் சிறிதளவு ஓய்வு தேவையாக இருந்தது. முன்கூட்டியே ஊகிக்க முடியாதளவுக்கு நாடு முழுவதிலும், உலகம் முழுவதிலும் இருந்து நண்பர்களும் நலன் விரும்பிகளும் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துக்களை கூறினார்கள். ஒவ்வொரு அழைப்பும் ” பிரபாகரன் எங்கே?” என்கின்ற கேளவியுடனேயே முடிந்தது. ” எங்களுக்கு தெரியவில்லை” என்பதே அவர்களுக்கான எனது உடனடியான பதிலாக இருந்தது. பல மாதங்களுக்கு பின் அன்று இரவு நான் வசதியாக நித்திரைகொள்ள முடிந்தது. ஆனாலும் எனது உறக்கம் “பிரபாகரன் எங்கே?” என்கின்ற தொடர்ச்சியான கேள்வியினால் வேட்டையாடப்பட்டு கொண்டிருந்தது. வார்த்தைகளால் விபரிக்க முடியாத துயரங்களை ஏற்படுத்திய, பல்லாயிரக்கணக்கான இந்நாட்டு மக்களின் சாவுக்கு காரணமான கொலைகாரன் பிரபாகரனின் பெரும் பலமாகவும் தூணாகவும் இருந்த அனைவரும் இன்று கொல்லப்பட்டுவிட்டனர். ஆனால் அவர்களுக்கு கட்டளையிட்டு கொலை செய்வதற்கும் குற்றங்கள் புரியவும் ஆக்கமும் ஊக்கமும் அளித்த அவர்களின் தலைவன் பிரபாகரன் இன்னும் இருக்கின்றான். அவனுடைய கொலைதிட்டத்துக்கு வடிவம் கொடுத்தது ஈழக்கனவுக்கு ஊகம் கொடுத்த பொட்டு அம்மானும், சூசையும் கூட இன்னும் சுதந்திரமாக இருக்கின்றனர். அப்படியென்றால் இன்று சுதந்திரமாகவும் சந்தோசமாகவும் கொண்டாட்டங்களின் ஈடுபடும் அந்த மக்களின் மகிழ்ச்சி எவ்வளவு காலத்துக்கு நீடிக்க போகின்றது? அவர்களால் எப்படி அமைதியாக வாழமுடியும்? ஒருவேளை சந்தர்ப்பம் கிடைத்து பிரபாகரன் மீளவும் போரை தொடக்கிவிட்டால் “ நீங்கள் போரை முழுமையாக முடிக்கவில்லை” என இந்த மக்கள் எங்களை நோக்கி விரலை நீட்டுவார்களே? அப்படி நடந்தால் அவர்களை என்னால் குறை கூற முடியாதே?. பிரபாகரன் வேட்டையாடப்பட்டிருந்தால் இங்கே இந்த மண்ணில்தான் எங்கோ இறந்து கிடக்க வேண்டும். அப்படியென்றால் தானே இந்த நாட்டின் ஓவ்வொரு அங்குல நிலமும் எமக்கு சொந்தமானதாகும். ஆனால் “பிரபாகரன் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லையே? இந்த மனவோட்டங்கள் என்னை சீண்டிக்கொண்டும் பலமணி நேரத்துக்கு புரட்டிப்போட்டுக்கொணடும் இருந்தன. இறுதியாக அதிகாலை நேரத்தில் ஆழ்ந்து உறங்கிப்போனேன்.


இல்லாமலேயே போனது. 

வெற்றிக்களிப்புடனும் பதட்டத்துடனும் இருந்த படையியினர் அந்த தாக்குதலை 45 நிமிடங்களுக்குள்ளாகவே முறியடித்திருந்தனர்.  இருந்தாலும் வேறு ஒரு திசையில் இருந்து மற்றுமொரு தாக்குதல் எம்மீது நடாத்தப்பட்டது. சிறிது நேரத்துக்கள்ளாகவே அந்த தாக்குதல் உக்கிரமான நிலையை எட்டிவிட்டது. பயங்கரவாதிகளின் ஒரு சிறிய அணியினர் விடாமல் தாக்கிக்கொண்டிருந்தனர். இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் அவர்கள் மறைந்திருந்த அந்த இடத்தின் மீது தரைப்படையினரை தாக்குதலில் ஈடுபடுத்த வேண்டும் என நான் புரிந்துகொண்டேன். அதற்கேற்ப 4வது விஜயபாகு படைபிரிவின் கட்டளை அதிகாரியை அழைத்து தலா 8 பேர் கொண்ட இரண்டு படை அணிகளை தாக்குதலில் இறக்குமாறு அறிவுறுத்தினேன். அதி சிறப்பு தகமையும் துணிச்சலும் கொண்ட இந்த படையணிகளை கோப்ரல்களான விஜயசிங்க, முத்துபண்டா ஆகியோர் வழிநடத்தினர். அடுத்து வந்த 10 நிமிடங்களுக்குள்ளாகவே சண்டையை அவர்கள் முடித்துவிட்டனர்.  என்னுடைய வாழ்நாளில் நான் முன்பு எப்போதுமே கேள்வி பட்டிருக்காத அந்த அற்புதமான, முக்கியமான, மகிழ்ச்சியான செய்தியை கேள்விப்பட்டேன்,


சேர், இப்போது நடந்த இந்த கடைசி சண்டையில் நாங்கள் பிரபாகரனை கொன்றுவிட்டோம்.” 

கேணல் ரவிபிரிய இதனை கூறினார்.  அப்போது கண்டல் பற்றைக்காட்டின் ஓரத்தில் கேணல் ரவிபிரிய, கேணல் சுத்தா பெரேரா, லெப்.கேணல் லாலந்த கமகே, லெப்.கேணல் திலக் ஹங்கிலிபொல ஆகியோர் நின்றுகொண்டிருந்தோம். மகிழ்ச்சி ததும்பிய இனிப்பான ஆனால் நம்பவே முடியாத அந்த செய்தியை ரவிப்பிரியவுக்கு தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து கூறியவர் மேஜர் ரோஹித அலுவிஹார.

 “ அது பிரபாகரன்தானா? நன்றாக பாருங்கள்” 

என நான் அவர்களுக்கு கூறினேன். 

 ”சூரியன் சந்திரன் இருப்பது எவ்வளவு உறுதியான தகவலோ அதே போன்றதுதான் பிரபாகரனை நாம் கொன்றதும் சேர்.” 

என மறு முனையில் இருந்து எனக்கு பதில் வந்தது.  இருந்தாலும் அந்த செய்தியை மேலும் உறுத்திபடுத்திக்கொள்ள விரும்பினேன்.  CDMA தொலைபேசியை எடுத்துக்கொண்டு கேணல் லாலந்த கமகேயை அந்த இடத்துக்கு சென்று செய்தியை உறுதிபடுத்துமாறு கூறினேன்.  அடுத்த 10வது நிமிடத்தில் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது.

“ சேர், அவர்கள் கூறியது சரி. அது பிரபாகரனேதான்.” 

செய்தியை உறுதிபடுத்தினார்.

 “ உறுதியாக கூறுகின்றீர்களா?” 

நான் மீண்டும் கேட்டேன்.  இவ்வாறு நான் இரண்டாவது தடவையாக கேட்டபோது அவர் உண்மையிலேயே உறுதியாக.

” எந்த மாற்றமும் இல்லை. இது பிரபாகரனேதான்” என்றார். 

“ சேர் விரைவாகவே இராணுவதளபதிக்கு அழைப்பு எடுத்து நாங்கள் பிரபாகரனை கொன்றுவிட்டோம் என்று கூறுங்கள்” 

என அவர் உட்சாகமாக எனக்கு கூறினார். நான் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து சதுப்பு பற்றைகளுக்குள் 200-300மீட்டர் தொலைவில் அவரது உடல் கிடந்தது.  இருந்தாலும் இந்த பெறுமதிமிக்க, எனது வாழ் நாளிலேயே மிக நம்பக்கூடிய இந்த செய்தியை  நானே நேரில் உறுதிபடுத்திக்கொள்ளாமல் இராணுவதளபதிக்கு கூற விரும்பவில்லை. அவசரப்பட்டு இராணுவ தளபதிக்கு நான் இந்த செய்தியை கூறினால் அவர் பாதுகாப்பு செயலாளரருக்கு அறிவிப்பார். பாதுகாப்பு செயலாளர் இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு செய்தியை கூறுவார். இவர்களில் யாரவது” எங்களுடைய வீரதீரமிக்க படையினர் பிரபாகரனை கொன்றுவிட்டனர்” என ஊடகங்களுக்கு கூறக்கூடும். ஒருவேளை அங்கே கொல்லப்பட்டு கிடப்பது பிரபாகரன் இல்லை எனறால் என்னாவது? 

எனவேதான் அந்த உடலை நான் நின்ற இடத்துக்கு கொண்டுவரும்படி லாலந்தவுக்கு கட்டளையிட்டேன். 




பிரபாகரனின் சடலம் கொணரப்பட்ட என்னிடத்தில்   அதிகாரிகளும் படையினரும் கூடத்தொடங்கிவிட்டனர். ஏறக்குறைய 5000 பேர் வரை அங்கே குழுமி இருக்கலாம் என ஊகிக்கின்றேன். நூற்றுக்கணக்கான படையினர் நாலாதிசைகளிலும் இருந்து எம்மை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தனர். பல்வேறு ஊடகங்களில் இருந்தும் செய்தியளர்கள்கூட அங்கே வந்து விட்டனர்.  10 நிமிடம் கழித்து 4வது விஜயபாகு படையினர் லாலந்த கமகே ரோஹித் அலுவிகார ஆகியோர் தலைமையில ITN செய்தியாளர் சுஜித் விதான பத்திரன மற்றும் ஒளிப்பதிவாளர் சாமல் ஆணந்த ஆகியோர் புடை சூழ சதுப்பு பற்றைகளுக்குள் இருந்து அந்த அரக்கனின் உடலை சுமந்தபடி வெளிப்பட்டு எனது திசை நோக்கி வந்தனர். பற்றை காட்டுக்குள் இருந்து 4வது விஜயபாகு படையினர் வெளிப்பட்ட உடனேயே என்னை சூழ நின்று கொண்டிருந்த கிட்டதட்ட 5000 படையினரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். எங்கள் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் எல்லைகளே இல்லை என நான் அந்த நொடியில் உணர்ந்தேன்.  துரோகியின் உடலை 4விஜயபாகு படையினர் கொண்டுவருவதை கண்ட படையினர் தன்னிலை மறந்து பரவசமாகி வானை நோக்கி வேட்டுகளை தீர்க்க தொடங்கிவிட்டனர். அவர்களின் T56  ரக துப்பாக்கியில் மாத்திரமல்லாமல் கனரக இயந்திர துப்பாக்கிகளில் இருந்தும் தோட்டாக்கள் மழையாக பொழிந்தன.  அதிகாரிகள் சிலர் அதனை நிறுத்த முயன்றனர். ஆனாலும் தங்கள் மகிழச்சியை கொண்டாட அவர்களை அனுமதிக்குமாறு நான்  அந்த அதிகாரிகளுக்கு சைகை காட்டினேன்.  இவர்கள் இந்தநாட்டின் புதல்வர்கள். திகதியிடப்படாத மரண சான்றிதழை கைகளில் வைத்துக்கொண்டு அவர்களுடைய நாட்டுக்காக போராடியவர்கள். இந்த அசுரனின் மரணத்துடன் அவர்களுக்கிருந்த மரண அழுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்ப்பதன் மூலம் அவர்கள் தங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றால் நாம் அதனை தடுக்க கூடாது என உணர்ந்தேன். துப்பாக்கி வேட்டுக்களின் பெரும் சத்தம் நந்தி கடல்நீரேரியெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. இப்போது நான் இதை எழுதும் போது பெருமை பொங்கிய அந்த முகங்களில் இருந்து பெரும் கௌரவத்தையும் பெரும் மதிப்பையும் உணர்ந்து கொள்கின்றேன்.

வீரர்கள் அந்த உடலை எனது காலடியில் கொண்டு வந்து போட்ட அடுத்த நொடியே அது பிரபாகரன்தான் என்பதை கண்டுகொண்டேன்.  இன்று கூட நான் இதை மிகைப்படுத்தி கூறவில்லை. அந்த தருணத்தை நினைக்கும் போதெல்லாம் இப்போதும் கூட எனது உடல் சிலிர்க்கும். அந்த உடலையும் தலையில் இருந்த ஆழமான வெட்டுக்காயத்தை அகழத்திறந்த கண்களுடன் வெறுமனே பார்த்துக்கொண்டேயிருந்தேன். நிச்சயமாக இது பிரபாகரன்தான். எங்கள் தேசத்தின் மீது மூன்று தசாப்தங்களாக பெருத்த நாசத்தை கட்டவிழ்த்து விட்டு வலியை தந்து கொண்டிருந்த அதே பிரபாகரன்தான். வயது, பால், இனம், மதம் என எதனையுமே கனக்கில் கொள்ளாது அப்பாவி பொதுமக்களை இரத்தம் தோயத் தோய கொன்று குவித்த, சிங்கள மக்களையும் இந்த நாட்டையும் இனவெறிபிடித்தவர்கள் என கூறித்திரிந்த, இந்த நாட்டை பீடித்திருந்த தசாப்த கால சாபமான கசாப்பு கடைக்காரனான அதே பிரபாகரன்தான் இது. 



ஆனால் அவன் தப்பித்திருந்தால்? உன்னை நம்பி ஒரு வேலையை ஒப்படைத்திருந்தேன். நீ உன்னுடைய வேலையை சரியாக செய்யவில்லை.

நான்: சேர் அவன் தப்பித்திருந்தால் நான் மிக மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டிருப்பேன். ஆனால் அவன் தப்பிக்கவில்லையே சேர். அவன் தப்பிசெல்வதற்கு முன்பாகவே நாங்கள்தான் கொன்றுவிட்டோமே.

.தளபதி: ஆம், உண்மைதான். நீங்கள் அவனை கொன்றுவிட்டீர்கள். ஆனால் அவன் தப்பித்திருந்தால்?

நான்: சேர், ஆனால் அவன்தான் தப்பிக்கவில்லையே. நாங்கள் அவனை கொன்றுவிட்டோம். அவனது உடல் இதோ என்னிடம் இருக்கின்றது.

கோபத்தின் உச்சிக்கே சென்ற அவர் என்னை பயங்கரமாக திட்டி கவனயீனம் மீதான நடவடிக்கை எடுத்தார். எனது இராணுவ வாழ்க்கையில் அவர் என்னிடம் இவ்வாறு நடந்துகொள்வது இது இரண்டாவது தடவையாகும். பிரபாகரனை கொன்று பெரும் சாதனையை செய்திருந்தாலும் தளபதி இவ்வாறு திட்டியது எனக்கு பெருந்த ஏமாற்றத்தையும் மனச்சோர்வையும் தந்தது. நான் மௌனமாக அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தேன். விசாரணை தொடர்ந்து.

தளபதி: இதோபார் அவன் தனியாக இருந்திருக்க மாட்டான். கூடவே ஏழெட்டு பேர்களாவது இருந்திருக்க வேண்டும். அப்படித்தானே?

நான்: அதைவிட அதிகமாகவே இருந்தார்கள் சேர்

தளபதி: எத்தனை பேர் பத்து பதினைந்து பேர்கள்?

நான்: இல்லை சேர். எல்லாமாக 52 பேர் இருந்திருக்கின்றனர். நாங்கள் 52 இறந்த உடல்களை கைப்பற்றியுள்ளோம்.

தளபதி: என்ன? 52 சூத்தடிக்கிற நாய்கள் நேற்று தப்பி இருந்திருக்கின்றான்களா?

நான்: இயஸ் சேர், அவன்கள் எல்லோரும் இங்கே எங்களிடம் செத்து கிடக்கின்றான்கள். யாரும் உயிருடன் இல்லை.

தளபதி: அப்படியென்றால் நீ உனது கடமையை எப்படி செய்திருக்கின்றாய்? உன்னிடம் எவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைத்திருந்தோம் தெரியுமா?

சூடுதணிந்தபின் பொஸ் உன்னை மீண்டும் அழைப்பார்” 

என நேசத்துடன் கூறினார். அவர்கூறியது போன்றே 15 நிமிடங்கள் கழித்து இராணுவ தளபதி என்னை அழைத்தார்.

“கமால்” 

அவருடைய குரல் தணிந்திருந்தது, இராணுவ புலனாய்வை சேர்ந்த பிரிகேடியர் அமல் கருணாசேகர அங்கே கருணா அம்மானையும் தயா மாஸ்டரையும் அழைத்துக்கொண்டு வருகின்றார். பிரபாகரனை முறையாக அடையாளம் காண்பதற்கான ஏற்பாடுகளை செய் என கூறினார். வசை மழையால் இன்னும் ஏமாற்றத்துடனேயே இருந்த நான் அது நிச்சயமாக பிரபாகரந்தான் மேலதிகமான அடையாளம் காணல் தேவையில்லை என கூறினேன். 

” நான் என்ன உனக்கு கூறுகின்றேனோ அதை நீ செய்” 

என கோபத்துடன் கடுந்தொணியில் கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்துவிட்டார்.

இதற்கிடையே கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் உடல்கள் எடுத்துவரப்பட்டு குவிக்கப்பட்டன. ஓரளவு உயரமான நல்ல உடல்வாகுடன் ஒரு உடலும் அங்கு கொண்டுவரப்பட்டது. அதனை மேலும் ஆராய்ந்ததில் ஒரு நல்ல செய்தி கிடைத்தது. அது கடற்புலிகளின் தலைவர் சூசையினுடையது. இந்த குற்றவாளிதான் கடற்படையின் துன்பங்களுக்கு காரணமானவன். நல்லகாலம் அவன் கொல்லப்பட்டுவிட்டான், அதுவும் எனது படையணி வீரர்களால்.

பிரபாகரன் உட்பட அனேகமாக புலிகளின் மேல்நிலை தலைவரகள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர். இன்னும் நாங்கள் கண்டுபிடிக்காமல் இருப்பது பிரபாகரனின் நெருங்கிய சகாவும் புலிகளின் புலனாய்வு தலைவருமான பொட்டு அம்மானைத்தான். எங்களுக்கு கிடைத்த தகவல்படி எங்களுடைய தாக்குதல் ஒன்றில் புலிகள் சிலருடன் பொட்டு அம்மானும் அவருடைய மனைவி மற்றும் இரு மகன்களும் கொல்லப்பட்டுவிட்டனர். நந்திக்கடல் நீரேரியில் அவருடைய மனைவி , இரண்டு மகன்களின் உடல்களை நாம் கண்டெடுத்திருந்தாலும் நந்திகடல் நீரேரியில் பொட்டு அம்மானின் உடலை எங்களால் காணமுடியவில்லை.


அன்று மதியம் அந்த உடலை முறையாக அடையாளம் காண்பதற்காக இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த பிரிகேடியர் அமல் கருணாசேகர கருணா அம்மான் மற்றும் தயா மாஸ்டருடன் ஒரு ஹெலிகொபடரில் வந்தடைந்தார். அடையாளம் காணும் பணி பிரிகேடியர் சவீந்திர சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆகையால் நானும் மேஜர் ஜெனரல் ஜகத் டயசும் சற்று ஒதுங்கி நின்று நடப்பதை கவணித்துகொண்டிருந்தோம். கருணா அம்மான் எங்களை கடந்து சென்றபோது அருகே நின்றிருந்த விசேட படையணியை சேர்ந்த கோப்ரல் ஒருவர் 

“ இவன் முதலிலேயே வெளியேறிய இருக்காவிட்டால் இவனுடைய உடலும் இங்கேதான் கிடந்திருக்கும்” 

என்றவாறே சுற்றி பார்த்தார். அவருக்கு நாங்கள் நிற்பது சட்டென்று நினைவுக்கு வந்தவுடன் அப்படி கூறியதற்காக அவசர அவரசரமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். மூத்த புலிதலைவர் என்ற வகையில் கருணா அம்மான் கூட இராணுவத்துக்கு அதிக சேதத்தை கொடுத்தவர்தான்.அதனால் வெற்றி மயக்கத்தில் படையினர் எதிர்வினையாற்றலாம் என்பதை கருத்தில் கொண்டு கொமாண்டோக்களின் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் அவர்களை இராணுவ தலைமயகம் நந்திக்கடலுக்கு அனுப்பி இருந்தது.

பிரபாகரனின் உடலை பார்த்த உடனேயே கருணா அம்மானின் முகம் பெரிய புன்னகையால் பின்னப்பட்டது. ஒருகாலத்தில் நண்பனாகவும் பின் எதிரியாகவும் ஆகிய பிரபாகரனின் இறந்த உடலை பார்பதே கருணா அம்மானின் மகிழ்ச்சிக்கும் பெரும் ஆறுதலுக்கும் காரணமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. கடைசி வரைக்கும் ஆதரவாளராகவும் விசுவாசியாகவும் இருந்த தயாமாஸ்டர் மிகுந்த துக்கமடைந்தார். இந்த கொடூரமான மனிதனின் உடலை உற்று பார்த்தபோது கண்ணீரில் அவரின் கண்கள் கலங்கின. அடையாளம் காணப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட பின் எங்களிடம் வந்த கருணா அம்மான் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக கைகுலுக்கினார். ஊடகங்களுக்கும் புகைப்படங்கள் எடுக்க போஸ் கொடுத்தார். அதன் பின் கொக்கா கோலா ஒரு கோப்பை பருகினார். மகிழ்ச்சியில் இன்னும் பல்லிளித்துக்கொண்டிருந்த அவர் ஊடகங்களுக்கு அறிக்கை விட்டு புறப்பட்டு சென்றுவிட்டார். இந்த பூமியில் எங்கேயாவது ஒரு இடத்தில் பிரபாகரனின் உடலை நாம் புதைத்தால் அந்த துட்டகைமுனு மன்னன் காலத்தில் எல்லாளனின் புதைகுழி புனித பூமியாகியது போல் ஒரு தசாப்தகாலத்தின் பின் அவருடைய ஆதரவாளர்களால் வழிபாட்டிடமாக மாற்றப்பட்டுவிடும். ஆகையால் அன்றே அவருடைய இறுதி கிரிகைகளுக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டோம்.


பிரபாகரனின் மரணத்தை தொடர்ந்து பல்வேறுவிதமான வதந்திகள் நாடுமுழுவதும் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தன. எந்த படையணி பிரபாகரனை கொன்றது எனபது விவாதத்துக்கான எலும்புதுண்டாகியது. எங்களுடைய சில அதிகாரிகளும் படையினரும் அதற்கான உரிமை கோரியதுதான் இந்த குழப்பங்களுக்கான மூல காரணம். சிலர் தாங்கள் முதல் நாளே பிரபாகரனை கொன்றுவிட்டு அவருடைய பிஸ்டலை எடுத்துவந்து விட்டதாகவும் அவரது உடல் 4வது விஜயபாகு படையினரால் பின்னர் மீட்கப்பட்டது எனவும் கோரினர். இந்த வதந்திகளை கேள்விப்பட நான் முற்றாகவே மனமுடைந்து போனேன். பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டு மே 18ம் திகதியே கொழும்புக்கு கொண்டு செல்லப்படதாகவும் அங்கே ஜனாதிபதிக்கு முன்பாக நிறுத்தியபோது, ஜனாதிபதி அவரை அறைந்து முழங்காலில் மண்டியிட செய்ததாகவும் பின்னர் 19ம் திகதி நந்தி கடல் நீரேரிக்கு கொண்டு சென்று பிரபாகரனை கொலை செய்ததாகவும் மற்றும் ஒரு வதந்தியும் எழுந்தது. சிலர் அவர் சினைப்பர் தாக்குதல் கொல்லப்பட்டதாகவும் வேறு சிலர் பிரபாகரன் கொமாண்டோ தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் கூறினார்கள். யார் இந்த பச்சை பொய்- பிரட்டு கதைகளை பரப்பினார்கள் என்று என்னால் கற்பனைகூட செய்ய முடியாமலிருக்கின்றது. மே 19 காலை வரை பிரபாகரன் எங்கே என்று யாருக்கும் தெரியாது. 4வது விஜயபாகு படைபிரிவை சேர்ந்த தலா 8 பேர்கள் அடங்கிய இரண்டு குழுக்கள் மேஜர் ரோஹித் அலுவிகார தலைமையில் நடத்திய தாக்குதலில்தான் பிரபாகரன் மே 19 காலை 9.45 மணியளவில் கொல்லப்பட்டுருக்கின்றார் என இராணுவ நடவடிக்கைக்கு பொறுப்பான படையணியின் தளபதி என்கின்ற வகையில் அனைத்து ஊகங்களைளுக்கு இஅயம் திரிபுற கூறுக்கொள்ள விருபுகின்றேன். ஏனைய அத்தனை கதைகளும், ஊகங்களும், வதந்திகளும், முற்றிலும் பொய்யானவையாகும்.

அடுத்த சில நாட்களில் கடல் நீரேரிய மேலும் சோதனையிட்டபோது அழுகிக்கொண்டிருக்கும் இறந்த உடல்களையும் பெருந்தொகையில் ஆயுத தளபாடங்களையும் கைப்பற்றினோம். புதுமாத்தளனின் முழு பகுதியும் பூலோக நரகம் போன்று காட்சியளித்தது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அந்த பகுதியில் குழுமியிருந்ததால் அதனை அந்த ஒடுங்கிய நீளமான பகுதியால் கொள்ள முடியாமல் இருந்தது. கோடிக்கணக்கில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. ஆயிரக்கணக்கான வாகனங்கள் அந்த மெல்லிய நீண்ட நிலப்பகுதியில் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை நிறுத்தப்பட்டு எரியூட்டப்பட்டு சட்டங்களாக காட்சியளித்தன. இருந்தாலும் கடைசி போர்க்களமான புதுமாத்தளனும் நந்திக்கடல் நீரேரி பகுதியும் வெற்றி நிலமாகவே இன்னும் எங்களால் மரியாதையுடன் கருதப்படுகின்றது.



ஈழத்தின் வலி (2014) - பேராசிரியர் உமாகாந்

"ஈழத்தின் வலி" எனும் நூலின் ஆசிரியர் வைத்திய துறையைச் சார்ந்தவராக இருந்து கொண்டு இந்த தலைப்பில் பயன்
 மிக்க நூலினை எழுதியுள்ளமை பாரட்டதக்கது. இந்நூலினை ஈழத்தின் அனைத்து பொது மக்களுக்கும் சாதி-மத பேதமின்றி சமர்ப்பணம் செய்துள்ளமை நூலை முனைப்புடன் படிக்க தூண்டுகின்றது.

நூலாசிரியர் ஒரு அரச (சம்பளம் பெறும்) வைத்தியராக இருந்த போதிலும் தான் வைத்திய மாணவராக இருந்த காலத்திலும், அரச வைத்திய சாலையில் கடமையாற்றிய காலத்திலும் புலிகள் இயக்கத்திற்கு பல உதவிகள் புரிந்துள்ளமையை வெளிப்படையாக எழுதியுள்ளமையும் , தனது மூத்த சகோதரன் கண்ணப்பன் புலிகள் இயக்கத்தின் புலனாய்ப் பிரிவு உயர் அங்கத்தவராக இருந்தார் என்பதையும் (பக் -155) , பிரபாகரன் போர்க் குணம் கொண்டவர் என்பதையும் (பக் - 198) , இறுதிக் காலங்களில் விடுதலைப் புலிகள் மிருகங்கள் போன்று நடந்து கொண்டார்கள் (பக்- 93) என்பதையும் , இறுதி நேரத்தில் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்டனி " அப்பாவுக்கு ஒன்று நடந்தால் உங்களை சும்மா விடமாட்டேன் " எனக் கூறினார் (பக் - 152) என்பதையும் , 2006.08.14ம் திகதி புலிகளின் செஞ்சோலை பகுதியில் விமானப்படையின் குண்டு தாக்குதலுக்கு பலியான மாணவிகள் ஆயுதப் பயிற்சி பெற்று கொண்டிருக்கும் போதே கொல்லப்பட்டனர் (பக்-178) என்பதையும் , இறுதிக் காலப்பகுதியில் அங்கவீனமடைந்த நூற்றுக்கணக்கான தமது சொந்த போறாளிகளைக்கூட இரண்டு பஸ் வண்டிகளில் ஏற்றி புலிகள் வெடி வைத்து கொன்றளித்தனர் (பக்-142) என்பதையும், பிரபாகரன் நீர்மூழ்கியின் உதவியுடன் பெருங்கடல் சென்று தப்பித்தார் எனக் கூறுவது வேடிக்கையானது (பக்-147) என்பதையும் , பிரபாகரன் இறந்துவிட்டார் (பக்-170) என்பதையும் வெளிப்படையாக எழுதியுள்ளதன் மூலம் ஆசிரியர் புலிகள் இயக்கம் பற்றிய பல உண்மைகளை நிதர்சனமாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளமை வரவேற்கத்தக்கது.

ஈழத்தின் வலியை மாவில் ஆற்றில் இருந்து நந்திக் கடல் வரை எழுத முனைந்த ஆசிரியர் பல இடங்களில் (அவசியம் கருதி) அந்தக் கால கட்டத்திற்கு முன்னரான சம்பவங்களையும் தொட்டுக் காட்டியுள்ள போதிலும் தமிழ் ஈழப் போராட்டத்தின் போது முஸ்லிம் மக்கள் ஈழப் போராளிகளால் கொல்லபட்டது  தொடர்பில் ஒரு வாசனமேனும் எழுதாமல் விட்டிருப்பது வருத்தத்திற்குரிய விடயமாகும்.

விடுதலைப் புலிகளின் பல செயற்பாடுகள் பல இடங்களில் கண்டித்துள்ள ஆசிரியர் , குறைந்தது " புலிகள் ஏன் தோற்றார்கள் " (அத்தி - 33) அல்லது "புலிகளின் வரலாற்று தவறுகள்" (அத்தி-36) என்ற தலைப்புக்களில் எழுதப்பட்டுள்ள அத்தியாயங்களிலாவது முஸ்லிம் மக்கள் 1990ம் ஆண்டில் உடுத்த உடையுடன் தமது பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டதையோ, அல்லது பள்ளிவாசல்களில் வணக்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டதையோ ஓரிடத்தில் கூட குறிப்பிடத்தவறியமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

"யார் துரோகிகள்" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள 39வது அத்தியாயத்தில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இருந்த முஸ்லிம் போராளிகள் துரோகிகளாக பார்க்கப்பட்டு இயக்கத்தில் இருந்து விலக்கப்பட்டனர் என எழுதப்படுள்ளது. இது விடுதலைப் புலிகளை பூசி மெழுகும் ஒரு முயற்சியாகும்.  விடுதலைப் புலிகள் தங்கள் இயக்கத்திலிருந்த முஸ்லிம் போராளிகளைக் கூட கொன்று குவித்தனர் என்பதே அனைவரும் அறிந்த  உண்மையான தகவலாகும். இவ்விடயத்தை திரித்து ஆசிரியர் புலிகளுக்கு வக்காலத்து வாங்கி , அவர்கள் முஸ்லிம் போராளிகளை இயக்கத்தில் இருந்து விலக்கியதுடன் மாத்திரம் நின்றுவிட்டார்கள் எனகூறியுள்ளார்.தங்களின் இயக்கத்திலிருந்த மத்தையா மற்றும் யோகி போன்ற பெரும் பெரும் முக்கிய (தமிழ்) தலைவர்களை கூடக் கொன்றளித்த புலித் தலைவர் தனது இயக்கத்திலிருந்த முஸ்லிம்களை விலக்கியதுடன் நின்றுவிட்டார் எனக் கூறுவது தர்க்க ரீதியாகக் கூட ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும். 

ஈழப்போராட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட வலியை எழுதத் தவறிய ஆசிரியர் " மாவிலாறு அணைக்கட்டு விவகாரம்" எனும் தலைப்பில் எழுதியுள்ளது 12வது அத்தியாயத்தில் 2007ம் ஆண்டு விடுதலைப் புலிகள் மூதூரைத் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்த போது அங்கிருந்த முஸ்லிம் மக்கள் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் சில முஸ்லிம் இளைஞர்கள் சிறைப்பிடிக்கபட்டனர். இவர்கள் "ஜிஹாத்" எனும் அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படுகின்றது என எழுதியிருப்பது முஸ்லிம்களுக்கிடையில் ஒரு போதும் இருக்காததும், முஸ்லிம்களுக்கு மிகவும் வருத்தத்தை தரக்கூடியதுமான ஒரு கருத்தை ஆசிரியர் அது தனது கருத்து அன்றி-கூறப்பட்ட ஒரு விடயம் என்பது போல எழுதியிருப்பது முஸ்லிம்களை மேலும் வருத்தத்திற்கு உள்ளாக்கும் ஒரு செயலாகும்.

1990ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்களை விரட்டியடித்தமையும் விடுதலை புலிகளின் வரலாற்று தவறுகளில் ஒரு மோசமான தவறாகும் என்பது பல ஈழத் தமிழர்களாலும் , சர்வதேச தமிழர்களாலும் மற்றும் அரசியல் விமர்சகர்களாலும் வெளிப்படையாக கூறப்பட்டது. 2002ம் ஆண்டில் பிரபாகரன் ஊடகவியலார்கள் முன்பு முதல் முறையாகவும் இறுதியாகவும் தோன்றிய போது அவ்விடயத்தை பிரபாகரனும் அன்ரன் பாலசிங்கமும் " அது ஒரு துன்பியல் சம்பவம் அது பற்றி மீண்டும் மீண்டும் பேச வேண்டாம்" எனக் கூறினர். இருந்தும் 16 வருடங்களிற்கு பின்னரும் புலிகள் அவர்களுக்கு கிடைத்த முதல் சந்தர்பத்திலேயே முஸ்லிம்களை மூதூர் பிரதேசத்திலிருந்து விரட்டியடித்தனர். இந்தச் சம்பவம் விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்கள் அற்ற முழுக்க முழுக்க தமிழர்களை மாத்திரம் கொண்ட தமிழ் ஈழம் ஒன்றையே அமைக்க விரும்பினர் என்பதையே உறுதிப்படுத்துகின்றது.

விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் பல செயற்பாடுகளை விமர்சித்துக் கண்டித்துள்ள ஆசிரியர் தான் பிரபாகரனின் பக்தர் அல்லது பிரபாகரனின் விசிறி என்பதை புத்தகத்தில் பல இடங்களில் வெளிப்படுத்த தவறவில்லை - என்பது மிகை இல்லை .

இனி நூலின் நீதிக்கு வருவோம், ஆசிரியர் நூலின் நீதிக்கு எந்தவிதமான பங்கமும் இளைக்காமல் வாசிப்பு ஓட்டத்திலும், தகவல் கோர்வையிலும் மற்றும் சுவாரசியத்திலும் நடுநிலையினை பேணியுள்ளார் என்பது உறுதி. வரலாற்று படைப்பு கருதியும், தகவல் உள்ளடக்கம் கருதியும் நிச்சயமாக உங்கள் வரிசையில் இடம் பிடிக்க கூடியதொரு நூல் தான்.

ஆசிரியர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறைகளையும் , பாரபட்சங்களையும் களையும் இடத்து இதை ஒரு முழுமைபெற்ற ஆக்கம் என்றே கூறமுடியும். ஏன் முடிந்தால் போற்றவும் முடியும்.

யாழ்ப்பாணம் விசிட்- அண்ணாமலை

அண்ணாமலை IPS,  பலாலி என்ற இடப்பெயருக்கு கொடுத்த நகைக்கத்தக்க வேர்ச்சொல் ஆய்வு இவர் உண்மையிலேயே நியாயமான தேர்வு எழுதித்தானா IPS ஆனார் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

ஆனால் இப்பிரச்சனையை
ஆழமாகப்பார்த்தால் மேலுஞ்சில கசப்பான உண்மைகள் வெளிவரும். 
ஈழம் சிங்களவர்களதோ தமிழர்களதோ நிலம் அல்ல. அதன் ஆதிக்குடிகள் இயக்கர் நாகர் முதலியோர். (தொல்காப்பிய ஆதாரம்: வடவேங்கடம் முதல் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகு) ஆக இன்றைய பெரும்பாலான   யாழ்ப்பாண இடப்பெயர்களின் வேர் ஆதி இயக்கர் நாகர் மொழியிலிருந்தோ அம்மொழிகளிலிருந்தும் பிராகிருதம், சமஸ்கிருதம், பாளி, தமிழ்  முதலிய மொழிகளிலிருந்தும் பிறந்த சிங்கள மொழியிலிருந்தோ தான் தோன்றியது. இன்றைய சிங்களவர்களும் தமிழர்களைப்போல இந்தியாவிலிருந்து வந்தவர்களே. அவர்களது மொழியான சிங்களம் ஆதி இயக்கர் நாகர் மொழிகளிலிருந்தும் இந்திய  பிராகிருதம் சமஸ்கிருதம், பாளி, தமிழ் ஆகிய  மொழிகளிலிருந்தும் ஈழத்தில் பிறந்தது.
மனந்திறந்து பேசினால் யாழ்ப்பாணம் என்ற சொல்லுக்கு தமிழர்கள் இன்று வழங்குகிற யாழிசைக்கருவி, யாழ்ப்பாடி அடியொற்றிய வேர்ச்சொல் விளக்கமே வரலாற்று ஆதாரமற்ற கட்டுக்கதையே. யாப்பா பட்டுண என்ற சொற்களிலிருந்து வந்ததே
 யாழ்ப்பாணம். இச்சொற்கள் சிங்களமா? ஆதி இயக்கர் நாகர் மொழியா?  என்பதையறியும் திறமை எனக்கு கிடையாது. 

ஆனால் யாழ்ப்பாணத்தின் பல இடப்பெயர்கள் “சிங்களத்திலிருந்து” ( அதாவது இயக்கர் நாகர் மொழி+  பிராகிருதம்+ சமஸ்கிருதம் முதலியவற்றிலிருந்து)  வந்தது என்பது தமிழர்களுக்கு கசப்பான உண்மை. மிரிசுவில், கொற்றாவத்தை, வாதிரிவத்தை  முதலியன மிக எளிய உதாரணங்கள். 
சிங்களம் தமிழ்ச்சொற்களையும் உள்வாங்கி உருவான மொழி ஆனாலும் பெரும்பாலான  யாழ்ப்பாண இடப்பெயர்கள் தமிழ் வேர்ச்சொல் அடிப்படையிலிருந்து வந்தவை அல்ல . 

கடலூர், காரைக்கால், காநாடுகாத்தான் முதலிய அழகிய தூய தமிழ்  ஆதிப்பூர்வீக தமிழூர்கள் யாழ்ப்பாண ஈழத்திலில்லை.  ஆதி யாழ்ப்பாண ஊர்களான பலாலி, தெல்லிப்பளை, பளை, புலோப்பளை( கவனிக்க கொம்பு  “ள” . ழ அல்ல) ‘சிங்கள’ வாடை அடிக்கும்.  சிங்களமே ஒரு Hybrid மொழிதான். ஆகவே ஈழத்தமிழ் தேசிய வாதிகள் இவ்வரலாற்று உண்மையை “ ரேக் இற் ஈசியாக’ எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் தேசியக் கோட்பாட்டுக்கு இது பாதகமாகாது. 

ஆனால் பிற்கால ஈழத்தமிழ் தேசியவாதிகள் அண்ணாமலை IPS அதிகாரிக்கு முதலே அவசரப்பட்டு வரலாற்றை திரித்தார்கள். ஈழப்போர் முடிந்ததும்  பழை, தெல்லிப்பழை, புலோப்பழை என்று மவ் ழ போட்டு வரலாற்றைத் திரித்தார்கள். 
அண்ணாமலை IPS அதிகாரி வந்தார்.  மோட்டு சிங்களவனே  எழுதிய  யாழ்ப்பாண வேர்ச்சொல் ஆய்வை ஆங்கிலத்தில்  பலாலி விமான நிலைய  Tourist Guide பிரசுரத்தில் படிச்சார். யாழ்ப்பாணம். யாழ். யாழ்பாடி.  அட நாம் புகுந்து விளையாடலாமே என்று அடிச்சு விட்டார். பாலாலாலயம். பலாலி.

Dear Sir Annamalai, IPS 
I am terribly Sorry. Palaly Mission Failed.
- Your Secret Agent 
(நட்சத்திரன் செவ்விந்தியன் 007)

Tuesday 5 October 2021

வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு : - சிவராசா கருணாகரன்

 ஈழப்போரின் இறுதி நாட்கள்


இக்கட்டுரை 2009 ஆகஸ்டு மாத காலச்சுவடு இதழில் பிரசுரமானது. இக்கட்டுரையாளர் சிவராசா கருணாகரன் கவிஞரும் எழுத்தாளரும் பத்திரிகையாளருமாவார். விடுதலைப்புலிகளின் வெளிச்சம் இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்தவர். பிரபாகரனை பல தடவைகள் சந்தித்தவர். பிரபாகரனை நேர்காணல் கண்டவர். புதுவை ரத்னதுரையினதும் EROS பாலகுமாரினதும் நெருங்கிய நண்பர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே வசித்த இவர் யுத்தத்தின் இறுதி மாதத்தில் தனது குடும்பத்தோடு கடல் வழியாக யாழ்ப்பாணத்திற்கு தப்பிச்சென்று எழுதிய கட்டுரையே இது


அன்புள்ள கண்ணன்,

உங்களுடன் கதைத்ததில் நிறைய மகிழ்ச்சி. பேசுவதற்கு எவ்வளவோ விசயங்கள் உள்ளன. ஆனால் சூழலும் நிலைமையும் அதற்கு வாய்ப்பாக இல்லை. தவிர கைபேசி மூலமான உரையாடல் அதற்குரியதும் இல்லை. பிற வழிகளில் பேசுவதற்கு வாய்ப்பும் இல்லை.

வன்னி நிலைமைகள் - வன்னியில் என்ன நடந்தது என்பதைச் சாட்சி நிலையில் நின்று எழுத வேண்டும். ஈழப்போராட்டத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள் 
என்ன? எப்படி இந்த வீழ்ச்சி ஏற்பட்டது? இந்த வீழ்ச்சிக்கு 
யார் யார் காரணம் ? 

Monday 12 October 2020

ஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை! - என்.சரவணன்

பண்டாரநாயக்க இந்திய வம்சாவளியினரை நாடு கடத்த வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்து வந்த சூழ்நிலையில் தான்  1939ஆம் ஆண்டு நாவலப்பிட்டி கலவரம் நிகழ்ந்தது. இலங்கையின் முதலாவது தமிழ் சிங்கள இனக்கலவரமாக இதைக் கொள்வது வழக்கம். சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாச்சலம் போன்றோர் இலங்கைக்கான தேசியம், இலங்கைக்கான தேசிய ஒருமைப்பாடு என உழைத்து களைத்து, தோற்று அவ்வொருமைப்பாடு காலாவதியாகியாகி வந்த காலம் 1930கள் எனலாம். அவர்களின் சகாப்தமும் முடிவுற்று சிங்களத் தேசியவாதத்திலிருந்து தற்காத்துக்கொள்ள தமிழர்களுக்கான தனித்தேசிய அடையாளத்தின் தேவை உணரப்படத் தொடங்கிய காலம் 1930கள் எனலாம்.
 
இலங்கையின் முதலாவது இனக்கலவரம் என்று அழைக்கப்படுகிற நாவலப்பிட்டி கலவரம் கூட இதன் நடுப்பகுதியில் இன்னும் சொல்லப்போனால் 1939 இல் தான் நிகழ்ந்தது. 1939 இல் கலவரத்துக்கு காரணமாக நாம் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் மகாவம்சம் பற்றிய உரையைக் காரணமாககே கொள்வது வழக்கம். ஆனால் அதேவேளை. அந்த உரைக்குத் தள்ளிய வேறு சில நிகழ்வுகளையும் இங்கு நாம் நினைவுக்கு கொண்டு வருவது முக்கியம்.

ராஜீவ் காந்தி படுகொலை

1991-ம் ஆண்டு மே 21
இன்று ராஜீவ் காந்தி  படுகொலை செய்யப்பட்ட தினம். 

நேருவின் பேரனை, இந்திராவின் மகனை, இந்தியாவின் முன்னாள் பிரதமரை, இந்தியாவை அதிகமுறை ஆண்ட கட்சியின் தலைவனை இன்றய நாளில் கொன்றொழித்தார்கள் புலிகள் .

ராஜீவ் காந்தியை புலிகள் மே 1991 இல் கொன்றார்கள் , ராஜீவ் காந்தியின் ஆன்மா புலிகளை மே 2009 இல் முள்ளிவாய்க்காலில் நின்று கொன்றது, அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும், ஆம் கொலையை தவிர வேறெதுவும் தெரியாத புலித்தலைமைகளை 
தெய்வம் முள்ளிவாய்க்காலில் நின்று கொன்றது, இதில் அகப்பட்டுக்கொண்டு இறந்தது அப்பாவிப் பொதுமக்களும் , கட்டாயப்பயிற்சி கொடுத்து மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவிபப் புலிகளுமே .

16 வயதில் லண்டனுக்கு வந்த ராஜிவ், தாத்தா போலவே ஐரோப்பியனாகவே வாழ்ந்தார், படித்தார், ஒரு சிறந்த விமானியாகவும் மாறினார், சிரியா போல வல்லரசுகள் குதற இருந்த இலங்கையினை அவர் 1986ல் காக்க சென்றார்,படுபாவிகளால் கொல்லபட்டார்,அவர் இல்லாத இலங்கை என்னாகும் என 2009ல் அனுபவபூர்வமாக கண்டது உலகம்.

ராஜீவ்காந்தி அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு உதவுவதற்காக 1987 ஜூன் 3ம் தேதி படகுகளில் உணவுப் பொருட்களை அனுப்பிய போது அதை இலங்கை ராணுவம் தடுத்து திருப்பி அனுப்பியது. அதை தொடர்ந்து அடுத்த நாள் ஜூன்4 தேதி போர் விமானங்களின் துணையுடன் இலங்கை வான்வெளிக்குள் நுழைந்து விமானங்கள் மூலம் பாராசூட்டில் உணவுப் பொருட்களும் மருந்துகளும் கிடைக்க உதவி செய்து ,ஈழத்தமிழர்களில் சிங்கள அரசு கை வைத்தால் உணவுப் பொருட்களை போட்ட விமானத்தில் இருந்து ஜெயவர்த்தனா அரசு மீது ஒரு குண்டையும் போட முடியும் என்று சொல்லாமல் சொல்லி தட்டி வைத்தார் ராஜீவ் காந்தி.

வடமராட்ச்சியில் இலங்கை ராணுவத்தினரிடம் இருந்து  உயிரை காப்பாற்றிய ராஜீவ் காந்தியையும், மணலாற்றில் இந்திய அமைதிப் படையிடம் இருந்து உயிரைக் காப்பாற்றிய பிரேமா தாசவையும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி கொன்றனர் புலிகள்.,ராஜிவ் கொலையினை அடுத்து நடந்த விசாரணையில் புலிகள் நாங்கள் நாங்கள் இந்த கொலையை செய்யவில்லை  என்றனர், அப்படி ஒரு வெடிகுண்டு எங்களுக்கு செய்யவே தெரியாது என்றனர்,சில மாதங்களில் பிரேமதாசாவினை அதே வெடிகுண்டால் கொல்லும்பொழுது உலகம் புலிகளை நோக்கி வாய்விட்டு சிரித்தது.
ஆனால் இதற்க்கு எல்லாம் மூல காரணமாக இருந்த கிளி மூக்கன் ஜெயவர்தனாவை புலிகளால் கொல்ல முடியவில்லை , ஏன் கிட்ட நெருங்கவே முடியவில்லை அவ்வளவுக்கு கிழட்டின் நரி மூளை. ராஜீவ் காந்தியையும் புலிகளையும் சண்டையில் இழுத்துவிட்டதே அந்த கிழட்டு நரி மூக்கன் தான் .

புலிகள்  தோல்விக்கு ராஜீவ் காந்தி கொலையும்   ஒரு காரணமே.புலிகள் சகோதரபடுகொலைகளை
செய்தது மட்டுமன்றி ,இன்னுமொரு படி மேலே போய்  ஆசியாவிலேயே பெரிய தலைவன் என்று சொல்லப்பட்ட ராஜீவ் காந்தியையும் போட்டு தள்ளினார்கள்.

*காந்தியினை வணங்கி சுட்டான் கோட்சே, இந்திராவினை வணங்கி சுட்டான் பியாந்சிங், ராஜிவினையும் வணங்கியே கொன்றாள் தனு.
மனித குல விரோதிகளாலும், சொந்த இன மக்களை கொன்ற இனபடுகொலையாளிகளான புலிகளால் இந்தியாவின் பெரும் தலைவர் கொல்லட்ட நாள் இன்று.

* இனம் மானம் என்று உணர்வை தூண்டி ஆயுதம் ஏந்திய போராளிகளால் 20ஆம் நூற்றாண்டில் எந்த சமூகத்திற்கும் எந்த நன்மையும் நடக்கப் போவதில்லை என்பதைத் தீவிரமாக உணரவைத்த நாள் இன்று .

* புரட்சி என்று ஆயுதம் ஏந்திய கூட்டம் அது மக்களையும் அழிக்கும், அதோடு உடன்படாதவரையும் அழிக்கும், அதன் தவற்றைச் சுட்டிக் காட்டியவர்களையும் அழிக்கும், அனைத்தையும் நாசம் செய்துவிட்டு இறுதியில் தானும் அழியும். பேரழிவு மட்டுமே மிச்சம். இதைத் தெள்ளத் தெளிவாகக் காலம் உணர்த்திய நாள் இன்று.

*இந்தியாவின் மீது பெரும் தீவிரவாத தாக்குதல் நடத்தபட்ட நாள் இன்று .                                             

*அமைதி பூங்காவாக அறியப்பட்ட தமிழ்நாட்டில், 
ராஜிவ் படுகொலை என்கிற பயங்கரவாத செயல் நிகழ்த்தப்பட்ட கருப்பு நாள் இன்று!

*இராஜிவ் காந்தியை படுகொலை செய்ததனால், விடுதலைப் புலிகள் தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்ட நாள் இன்று .

*பாம்புக்கு பால்வார்த்தல் என்றால் என்ன என்பதற்கும், நன்றிகெட்ட தனம் என்றால் என்ன என்பதற்கும் இந்தியா அர்த்தம் கண்டு கொண்டநாள் இன்று ,

*அவர்களின் ஏக திமிரான காரியங்களையும், அந்த நன்றிகெட்ட தனத்தையும் கண்டு நாணத்தால் தமிழராய் நாம் தலைகுனிந்த நாள் இன்று.

*ஈழமக்களின் போராட்டத்தை ஒரு கட்டபஞ்சாயத்து கும்பல் குழு ஒரே ஒரு குண்டுவெடிப்பு மூலம் தகர்த்த நாள் இன்று .

இதை எல்லாம் செய்தது  மட்டுமல்லாமல் ,ஒரு வல்லரசு நாட்டையே அடித்து துரத்தினோம் என்று வேற பெருமை , உங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது இந்தியாவின் உதவியை நாடுவதற்கு ? இதில் உலகறிந்த உண்மையை சொல்லப்போனால் , இந்தியன் அதிகாரிகள் கூறிய மாதிரி ஒரு சிகரட்டை பத்தி முடிப்பதற்குள் 
அந்த குழுக்களையே அவர்களால் அளித்திருக்க முடியும் ஆனால் அவர்களுக்கு அது தேவையில்லை,
இதில ஆக தமாசான விசியம் என்னவென்றால் ராஜீவை கொன்றது ஒரு துன்பியல் சம்பவம் 
என்று கூறி விட்டு இன்னும் அவர்களின் உதவியை எதிர்பார்த்து இருப்பது ,இதை இந்திய மக்கள் மறந்தாலும் ராஜீவ் காந்தியின் குடும்பம் இவர்களை ஒரு போதும் மன்னிக்கவோ மறக்கவோ மாட்டார்கள்.

இதுகுறித்த ராஜீவ் காந்தி மகள் பிரியங்கா அவருடைய ட்விட்டர் பதிவில், இப்படி கூறுகிறார் , 
உங்களிடம் அன்பாக இல்லாதவர்களிடமும் அன்பாக இருங்கள். வாழ்கை நியாயமானது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கை எவ்வளவு நியாயமற்றதாக இருக்கிறது என்று நீங்கள் கற்பனை செய்தாலும் அதுகுறித்து பிரச்னையில்லை. வானம் எத்தனை கறுப்பாக இருந்தாலும் பிரச்னையில்லை. இதயத்தை வலிமையாக்கிக் கொள்ளுங்கள். அதனை அன்பு கொண்டு நிரப்புங்கள். அது எவ்வளவு சோகமானதாக இருந்தாலும் பிரச்னையில்லை. இதுதான் என்னுடைய அப்பாவின் வாழ்கையிலிருந்து கிடைத்த பரிசுகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி புலிகளாள் கொலை செய்யப்படாமல்   இருந்திருந்தால், வெறும் 700 ற்கும் உட்பட்ட போராளிகள் மாத்திரம் தான் இறந்திருப்பார்கள்.

அவைகள் மட்டும் அல்ல 90ம் ஆண்டு முதற்கொண்டு 2009 மே 18 வரை லட்சக்கணக்கான மக்கள் இறந்திருக்க மாட்டார்கள்.

50,000 ற்கு மேற்பட்ட இளைஞர்கள்,யுவதிகள்,சிறுவர்,சிறுமியர் புதைகுழிக்குள் சென்றிருக்க மாட்டார்கள்.

தமிழ்நாடில் இலங்கைத் தமிழ் அகதிகளின் சித்திரவதை முகாம் உருவாகியிருக்காது.

இராணுவ உயர்பாதுகாப்பு  வலயங்கள்  உருவாக சந்தர்ப்பம் இருந்திருக்காது..

இந்திய இராணுவத்திடம் தமிழ்ப் பெண்கள் தங்கள் மானத்தைப் பறிகொடுத்தீருக்க வேண்டி வந்திருக்காது.

வட பகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேறவேண்டி வந்திருக்காது.

அரசியல் கைதிகள் என்று யாரும் சிறையில் இருந்திருக்க மாட்டார்கள்.

வன்னிக்காடுகள் எங்கும் இராணுவப் பிரசன்னம் வந்திருக்காது.

புத்திஜீவிகள்  கல்விமான்கள், தொழிலதிபர்கள்  இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

கூட்டமைப்பு என்ற கூத்தாடிகள் உருவாகியிருக்க மாட்டார்கள்.

வி வாண்ட் டமில் ஈழம் என்று வெளிநாட்டு உண்டியல் குலுக்கிகள் கத்தி இருக்க மாட்டார்கள்.

முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் ஒருவர் கூட மாண்டிருக்க வாய்ப்பே இருந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. 

பாரதப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

பெரியாரும் பிரபாகரனும் நேரெதிர் துருவங்கள்!

இந்தியாவிலிருந்து "பரதேசியாய்" மலையகம் போனவர்களுக்கு வாக்குரிமையோ, குடியுரிமையோ கொடுக்கக்கூடாது என்று இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பே வெள்ளைக்காரனிடம் முதன் முதலில் கோரியது சிங்களவனல்ல. யாழ்ப்பாணத்தமிழன்! 

அதே யாழ்ப்பாண வெள்ளாள தமிழ்தேசியத்தலைமைதான் 10 லட்சம் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை நாடற்றவர்களாக்க ஆதரவளித்தது. காரணம் யாழ்ப்பாணத்தான் பார்வையில் மலயகத் தமிழன் மனிதனே அல்ல. அப்புறமெப்படி தமிழனாவான்?

"வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன்", என்ற வள்ளலாரின் அதிஉயர் அருட்பாவை எதிர்த்து அது அருட்பாவல்ல மருட்பா என்று நீதிமன்றம் போய் வழக்காடியவன் அதே யாழ்ப்பாணத்தமிழன்!

தமிழ்நாட்டில் இருக்கும் பூணூலை களைந்து மனிதர் அனைவரையும் சமமாக்க  பெரியார் தலைமையில் பெரும் போராட்டங்கள் நடந்தபோது, யாழ்ப்பாணத்தில் சைவத்தின் பேரால் ஜாதிய படிநிலையை காப்பதற்கு பூணூல் பொடுவது அவசியம் என்று பூணூல் கல்யாணங்கள் இயக்கமாக பரப்பப்பட்டன.

அதன் தொடர்ச்சியே பிரபாகரன் பிராண்ட் பேசும் இன்றைய தமிழ்த்தேசியங்கள்.

மானுடத்தை மேம்படுத்த போராடியது திராவிடம்!

மரபு என்கிற பெயரில் மனுவை காப்பாற்றத் துடித்தது யாழ்ப்பாண பிராண்ட் வெள்ளாள தமிழ்தேசியம்.

இந்த அடிப்படை மட்டும் சரியாக புரிந்தால் மற்ற அனைத்துமே முறையாக விளங்கும்.

அப்படி விளங்கினால் பெரியாரும் பிரபாகரனும் நேரெதிர் துருவங்கள் என்கிற அதி முக்கிய தெளிவு பிறக்கும்

அந்த தெளிவு மட்டும் பிறந்துவிட்டால் பலப்பல தோற்ற மயக்கங்கள் விலகும்!

தமிழர் அரசியல் மேம்படும். அவர்தம் வாழ்வும் வளப்படும்

 நன்றி - ஊர்சுற்றி

Friday 28 August 2020

வடக்கு கிழக்கு இணைப்பை இந்தியா தான் செய்யவேண்டும்!?

அண்மையில் இணையத்தளம் ஒன்றிற்கு வட மாகாண சபை முதல்வர் கொடுத்த பேட்டியில், வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர், தற்சமயம் அது சாத்தியம் இல்லை. இந்தியா தலையிட்டு ஸ்ரீலங்கா வை சம்மதிக்க வைத்தால் அது சாத்தியம் என கூறினார். 1987ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்த பிரதேசங்கள், என்ற விடயம் பந்தி 1-4 ல் உள்ளது. அதனை உள்ளடக்க ஜே ஆர் சம்மதம் பெற இந்தியா செய்த விட்டுக் கொடுப்பே, பந்தி 2.3ல் உள்ள 31-12-19988 க்கு முன் வடக்குடன் தொடர்ந்தும் இணைந்து இருக்க வேண்டுமா என, கிழக்கில் மட்டும் அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தும் விடயம். அதுவரை அவை இரண்டும் ஜே ஆர் ஆல் தற்காலிகமாக இணைக்கப்பட்டன.

கபூர் - ரவீந்திரன் சகோதரப் படுகொலை

 இந்திய இராணுவத்தின் வருகைக்கு முன்னரே புலிகளின் பாசிச வெறிக்கு ஏனைய இயக்க உறுப்பினர்கள் பலியாகினர். கபூர் 83 இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு வடக்கில் வந்து வாழ்ந்தவர், கபூர் ஒரு உன்னதமான போராளி. முற்போக்கு சிந்தனை கொண்டவர். கபூரின் குடும்பமே அப்படித்தான். கபூரின் இயற்பெயர் பாலசுப்பிரமணியம். ஈ பி ஆர் எல் எஃப் தடை செய்யப்பட்ட வேளையில் தோழர் கபூர் புலிகள் இயக்கத்தால் கடத்திச் செல்லப்பட்டார்.

பாலநடராஜா ‘சின்ன பாலா’ ஐயர்:

 

எத்தனை நல்ல மனிதர்களை,எழுத்தாளர்களை, கல்விமான்களை . மனித நேயம் கொண்டவர்களை இழந்துவிட்டோம். போராட்டம் என்ற பெயரில் எல்லோரையும் புலிப் பாசிசம் அழித்துவிட்டது. துரோகிகள் பட்டம் சூட்டி அவர்களை அழித்த புலிப்பாசிசம் தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்தது? யாராவது சொல்லுங்கள்? சின்னபாலாவை எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியும். தோழர் நக்கீரன் வீட்டில் பலதடவை அவரைச் சந்தித்திருக்கிறேன். பால நடராஜ ஐயர். ஊருக்குள் பாலா ஐயா என்றுதான் அவரை அழைப்பார்கள். அவருக்கு சின்ன பாலா என்று பெயர் வரக் காரணம் அவர் ஈரோஸ் இயக்க உறுப்பினராக இருந்தவர். பாலகுமாரும் இருந்த காரணத்தால் இவரைச் சின்னபாலா என்று அழைத்தனர்.

Friday 14 August 2020

Oberoi Devan இன் கொலை!! அரசியல் பிண்ணணி!! 14ம் திகதி 1983

1983ம் ஆண்டு July கலவரத்தாலும், இலங்கையின் நடவடிக்கைகளாலும் அதிருப்பியடைந்த இந்திய அரசாங்கத்தின் பார்வை விடுதலைப் போராட்ட இயக்கங்களின் பக்கம் சாய்ந்தது.

 

இலங்கையை கட்டுபடுத்தி, தமக்கு சார்பாக மாற்றும் அதே நேரம் சர்வதேச பார்வையில் ஆக்கிரமிப்பு என்ற பதத்தை தவிர்க்க, அன்றய எமது சிறு எழுச்சி இந்திய அரசாங்கத்திற்கு உதவியது. கலவரத்தின் பின்னர், இந்திய அரசு போராட்ட இயகங்களின் தலைவர்களை சந்திக்க முடிவு செய்து சந்திரகாசனூடாக செய்திகள் அன்றய TELO தலைவர் சிறீ அண்ணாவிடம் அறிவிக்கப்பட்டது. அதேபோல் பிரபாகரன், உமா, பதமநாபா, பாலகுமாருக்கும் அறிவிக்கப்பட்டது.

 

Thursday 13 August 2020

Smuggling, Shipping and the Narcotics Trade in the History of the LTTE, 1970s-2015: - Gerald H. Peiris

 According to a report published in the 10 June 2015 issue of The Island, the Hon. C. V. Wigneswaran, Chief Minister (CM) of the Northern Province, has asserted that the presence of Sri Lanka’s army in Jaffna (peninsula) has contributed to a rapid spread of narcotics in the area, and that narcotics was never a problem during the war when the LTTE was around.

Tuesday 11 August 2020

மக்கள் மனதில் உறைந்து கிடந்த நெருப்பின் வெளிப்பாடு: - சீவகன் பூபாலரட்ணம்

சிவநேசதுரை சந்திரகாந்தன
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றி அப்படியானது, இப்படியானது’... என்றெல்லாம் மட்டக்களப்பில் வாழும் பலர் பேசித்தள்ளி விட்டார்கள். ஆகவே நான் இங்கு அதனைப்பற்றி பேசப்போவதில்லை.

ஆனால், இந்த வெற்றி எதனைக் காண்பிக்கின்றது என்பதை கொஞ்சம் உள்ளே சென்று பார்க்க வேண்டிய தேவை இங்கு இருக்கின்றது. 

Monday 3 August 2020

அந்த நாலு பேருக்கு நன்றி: - குவார்னிகா

''மன்னன் மக்களைக் காப்பாறிறியதாகச் சொன்ன காலம் போய் மன்னனைக் காக்க மக்கள் பலியெடுக்கப்படுகிறார்கள். எத்தனை மக்களைக் கொன்றாவது மன்னனைக் காப்பாற்றிவிட நமது சமூகம் முயன்று கொண்டிருக்கிறது. ஆனால் எப்படியாவது மன்னனை விட்டுவிடக்;கூடாது என்று அந்த நாலு பேர்கள் காத்திருக்கிறார்கள்.''

முஸ்லிம் மக்களும் தேசிய இனப் பிரச்சினையும் - ஒரு வரலாற்றுப் புரிதலை நோக்கி: - எஸ். எம். எம். பஷீர்

முஸ்லிம் மக்கள் என்று சொல்லுகின்ற பொழுது இவர்கள் ஒரு தேசிய இனமா? அல்லது தமிழ் மக்களும் சிங்கள மக்களும் மாத்திரம்தான் ஒரு தேசிய இனமா? அல்லது முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுக்குட்பட்ட வெறும் குழுவா? ஸ்டாலினியத் தத்துவத்துக்குட்பட்டு தேச வரையறைக்குட்பட்ட வரைவிலக்கணங்களுக்குள் தமிழர்களாக கருதப்பட வேண்டியவர்களா? என்ற ஒரு கேள்வி இருக்கின்றது. இது என்றுமே சர்ச்சைக்கு ரியதாக இருந்து வருகின்றது.